Skip to main content

தமிழீழத் தேசியக் கொடியை கீழ்மைப்படுத்துவதா?  -சீமானுக்கு எதிரான சீற்றங்கள்!

Published on 04/04/2018 | Edited on 04/04/2018

2010-இல், நாம் தமிழர் கட்சியை துவக்கியபோது “புலிச் சின்னம் சோழர்களின் சின்னம். அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சின்னமும் அதுவே. எனவேதான் நாம் அதனை வரித்துக் கொண்டுள்ளோம்.” என்று விளக்கம் தந்தார் சீமான்.   

 

Nam tamilar



ஆனால், ஆண்டிபட்டியில் மதிமுக பொதுச்செயலாளர்  வைகோவிடமிருந்து  இன்று வெளிப்பட்ட ஆதங்கம் இது:  “பிரபாகரன் உயிருடன் இல்லை என நினைத்து அவரது கொடியை சீமான் பயன்படுத்தி வருகிறார்” 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, ‘பிரின்சு என் ஆர் சமா’ என்பவர் ‘கொடித் திருடர்களை வேரறுப்போம்! தமிழீழ இலச்சினைகளை மீட்டெடுப்போம்!’ என்னும் தலைப்பில், தன் குமுறலை இவ்வாறு  கொட்டியிருக்கிறார்:

"இந்தக் கொடிக்குரிய மரியாதை எத்தகையது தெரியுமா? தமிழீழத் தேசியக் கொடியை எப்படி பயன்படுத்துவது என்பதற்கே ஒரு பயன்பாட்டுக் கோவையை உருவாக்கி, அதன்படி மதிப்பளித்து வந்தனர் புலிகள். அத்தகைய கொடியைத் தான் கீழ்மைப்படுத்தி வருகின்றனர் இந்தச் சிறுமதியாளர்கள்.

தமிழீழம் என்னும் கனவைச் சுமந்தும், புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் நேசித்தும் வருவோர்க்கு தமிழீழக் கொடி தரும் உணர்வு எத்தகையது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. ஈழத் தமிழர்க்கென்றொரு நாடு அமைவதை, நாடு கடந்தும் தன் நாடாகப் பார்க்கும் மனம் அது. துப்பாக்கித் தோட்டாக்கள் தெறிக்க, முன்னங்கால் பறக்க கூண்டை விட்டுப் பாயும் புலியின் உருவம் தரும் சிலிர்ப்பும், எழுப்பும் உணர்வலையும் நம் உயிர் அடங்கும் வரை ஓயாதது.

அத்தகைய உயர் சின்னத்தை, உயிர்க் கொடியை, உலுத்தர் கூட்டம் பயன்படுத்துவதையும், அதனால் அது கீழ்மையுறுவதையும் காணச் சகிக்கவில்லை. சிந்தை பொறுக்கவில்லை. புலிகள் தங்களை மௌனித்துக் கொண்டபிறகு முளைத்த காளான்களெல்லாம் புதிது புதிதாய் கதையளந்துகொண்டும், புலி வேஷம் கட்டிக் கொண்டும் அலைந்து கொண்டிருப்பதும் காலத்தின் கொடுமை.

இந்தக் கொடி கேடர்களின் திருட்டுச் செயலால், இவர்களின் செயல் பொறுக்காமல், ஜாதி வெறி பிடிக்காமல் இந்தக் கும்பலிலிருந்து வெளியேறும் நபர்கள் நாம் தமிழரை எதிர்க்கிறேன் என்று இவர்களால் திருடி வெளியிடப்பட்ட உயரிய புலிக் கொடியினைக் காலால் மிதித்து ஒளிப்படங்களை வெளியிடும் கொடுமை நடக்கிறது.

 

Nam tamilar original flag

நாம் தமிழர் கட்சி தொடங்கிய பொழுது இருந்த கொடி 
 

Nam tamilar current flag

தற்போதைய நாம் தமிழர் கட்சி கொடி 

நாம் தமிழர் என்று ஆதித்தனாரின் கட்சிப் பெயரைத் திருடி இவர்கள் அமைப்புத் தொடங்கியது, புலிகளும், தலைவர் பிரபாகரனும் வெளிநாடுகளுக்குத் தப்பியிருக்கக் கூடும் என்று கருதப்பட்ட காலத்தில்!

அப்போது இவர்கள் பயன்படுத்திய கொடி சூரியன் போல் தோன்றும் கம்பி வளையத்திலிருந்து இடுப்பு வளைந்து வெளியேறும் புலி சின்னம் பொறித்ததாகும். ஆனால், புலிகளும், தலைவரும் தப்பியிருக்க வாய்ப்பில்லை என்று இவர்களுக்கு உறுதியானபின், நேரடியாக புலிகளின் கொடியும், தமிழீழக் கொடியுமாய் பயன்படுத்தப்பட்ட புலியின் ஓவியத்தையே பயன்படுத்தி, சிவப்புப் பின்புலத்தில் கால்களை மட்டும் நீக்கிவிட்டு கம்பி விட்டுப் புலி பாய்ந்து வரும் கொடியையே நாம் தமிழர் கொடி என்று திரித்துப் பயன்படுத்துகின்றனர்.

ஈழத்தைக் காட்சிப் பொருளாக்கி, தமிழர் உரிமையையும், உணர்வையும் விற்பனைப் பொருளாக்கி கல்லா கட்டும் நாம் தமிழர் கும்பலிடமிருந்து தமிழீழ கொடி, இலச்சினை, பாடல் போன்றவற்றை மீட்க வேண்டியது அவசியமாகிறது. எத்தனை மாற்றுக் கருத்து இருந்தாலும், தமிழின உணர்வாளர்களுக்கு இந்த கும்பலின் துரோகம் ஏற்பாயிருக்க முடியாது."

வைகோ மற்றும் பிரின்சு என்.ஆர்.சமா போல அனேகர் இருக்கிறார்கள்.  விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனால் 1990-இல் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழீழத் தேசியக்கொடி குறித்த பெருமிதமான பலரது பதிவுகளையும், அவர்களது உணர்ச்சிப் பெருக்கினையும் வலைத்தளங்களில் காணமுடிகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

ஈழத் தமிழர்கள் குடியுரிமை; “மக்கள் கேள்வியாக மாற்றியது மஜக..” - தமிமுன் அன்சாரி   

Published on 30/08/2021 | Edited on 30/08/2021

 

Citizenship of Eelam Tamils; "MJK changed it as People question" - Tamimun Ansari

 

தமிழகத்தில் அகதிகளாக வாழும் இலங்கை ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கக் கோரி கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இது தொடர்பான காணொளி வழி கருத்தரங்குகளை இராசன் காந்தி, அருள், மோகன்தாஸ் போன்றோர்கள் முன்னெடுத்து வருகின்றனர். அதன் 34-வது அமர்வில் நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று பேசினார். 

 

அவர் பேசியதாவது; “தாய் மண்ணை துறந்து, புலம் பெயர்ந்து, இன்னொரு நாட்டில் அகதிகளாக வாழ்வது எவ்வளவு கொடுமையானது என்பதை நான் அறிவேன். வட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களும், பர்மாவின் ரோஹிங்யாக்களும் அன்று நீங்கள் அடைந்த துயரை இன்று அனுபவிக்கிறார்கள். உள்நாட்டு போர்கள், உரிமை போர்கள் காரணமாக அப்பாவி மக்கள் அகதிகளாக அடையும் துன்பங்கள் அளவிட முடியாதவை. நான் சிறுவயதிலிருந்தே  ஈழத்தமிழர்களின் போராட்டங்களை உன்னிப்பாக கவனித்து வருபவன். ஏனெனில் எனது ஊர் தோப்புத்துறை இலங்கைக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ளது. அரை மணி நேரத்தில் விரைவு படகில் இலங்கை கரைக்கு  சென்றுவிட முடியும். வேதாரண்யத்தில் யாழ்ப்பாண வீதி என ஒன்று இருக்கிறது. இலங்கையின் இயல்பான இயற்கை அமைப்பை எனது பகுதியில் பார்க்க முடியும். 

 

நான் சிறுவயது மாணவனாக இருந்தபோது ஈழ ஆதரவு நிகழ்வுகளில் பார்வையாளராக பங்கேற்றிருக்கிறேன். 1980-களின் மத்தியில் விடுதலைப் புலிகள், டெலோ, EPRLF, ப்ளாட், ஈரோஸ் என தமிழ் போராளி அமைப்புகளின்  நடமாட்டம் எங்கள் பகுதிகளில் இருந்தது. போரில் பாதிப்படைந்து படகுகளில் ஆபத்தான முறையில் உயிர் தப்பி குடும்பம், குடும்பமாக கண்ணீரோடு, பசியோடு வேதாரண்யம் வரும் அகதிகளை நான் நேரில் கண்டுள்ளேன். அவர்கள் காவல் நிலையங்களுக்கு அழைத்து வரப்பட்டு, வருகைப் பதிவு செய்யப்பட்டு பேருந்துகளில் அகதி முகாம்களுக்கு அனுப்பப்படுவர். அப்படி ஒரு முகாம் புஷ்பவனம் கிராமத்தில் அப்போது இருந்தது. ஈழப் போரை கேட்பதற்காகவே BBC வானொலியின்  தமிழோசையை கேட்பதுண்டு. இன்று 30 ஆண்டுகளை கடந்தும் இந்தியாவில் வாழும் ஈழ அகதிகளின் நிலை கேள்விக்குறியாகவே இருக்கிறது. 

 

நான் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று சென்ற போது, இலங்கையின் வடகிழக்கில் ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சட்டசபையில் பேசினேன். ஈழத் தமிழர்களின் நலனுக்காக வெளிநடப்பும் செய்துள்ளேன். 2017-ல் சென்னையில் புயல் அடித்த போது, திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதி முகாம்களுக்கு மஜக-வினருடன் சென்று நிவாரண உதவிகளை செய்திருக்கிறேன். ஈழத் தமிழர்கள் விஷயத்தில் மனிதாபிமானத்தோடு எங்கள் அணுகுமுறைகள் இருக்கிறது.

 

1983 முதல் 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 பேர் ஈழ அகதிகளாக இங்கு  வந்துள்ளனர். இவர்களில் 18 ஆயிரத்து 944 குடும்பங்களை சேர்ந்த 58 ஆயிரத்து 822 பேர் 29 மாவட்டங்களில் உள்ள 108 முகாம்களில் உள்ளனர். மேலும் 13 ஆயிரத்து 540 குடும்பங்களை சேர்ந்த 34 ஆயிரத்து 87 பேர் காவல் நிலையங்களில் பதிவு செய்து விட்டு வெளியில் தங்கியுள்ளனர் என புள்ளி விபரம் கூறுகிறது. அவர்கள் அனைவரும் பிள்ளைகள் பெற்று இரு தலைமுறைகளாக இங்கேயே வாழ்கின்றனர். அவர்களின் பேச்சு நடை, ஈழ பேச்சு நடையிலிருந்து மாறி தமிழக மக்கள் பேசும் பேச்சு நடைக்கு மாறிவிடும் அளவுக்கு இங்கு ஐக்கியமாகி விட்டார்கள். அவர்கள் சட்டம் - ஒழுங்குக்கு சேதம் ஏற்படுத்துவதில்லை. கட்டுப்பாட்டோடு வாழ்கிறார்கள். இவர்களின் உரிமைகளுக்காகவும், குடியுரிமைக்காகவும் கோரிக்கை வைத்து முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்கள் சமீபத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, 15 பேர் சிகிச்சையில்  இருப்பது வேதனை அளிக்கிறது. உயிரையே இழக்க ஒருவர் முடிவு செய்கிறார் எனில் அவரது கோரிக்கை எந்த அளவு முக்கியமானது என்பதை உணர வேண்டும்.

 

தற்போது தமிழக முதல்வர், ரூ.317 கோடியே 40 லட்சத்தில் இவர்களின் மேம்பாட்டுக்காக திட்டங்களை அறிவித்து, இனி இலங்கை அகதிகள் முகாம்கள் என்பது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் இலங்கை தமிழர்கள் அனாதைகள் அல்ல என்றும் கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக அவருக்கு நம் சார்பில் நன்றிகளை, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

 

ஈழத் தமிழர்களில் வசதியானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் அகதிகளாக சென்றார்கள். அந்நாடுகள் குடியுரிமை வழங்கியதால், இன்று அங்கேயே வாழ்ந்து, வளர்ந்து அந்நாடுகளின் வளர்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்கள். ஆனால் ஈழத் தமிழர்களுக்கு நெருக்கமான, தந்தை நாடாக அவர்கள் கருதும் இந்தியாவில் அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது அநீதியாகும். சி.ஏ.ஏ. குடியுரிமை சட்டத்தில் ஆப்கான், பாகிஸ்தான், பங்ளாதேஷ் நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு குடியுரிமை கொடுப்பார்களாம். இலங்கை தமிழர்களுக்கு கொடுக்க மாட்டார்களாம். இது என்ன நியாயம்? என நான்  தொலைக்காட்சி விவாதங்களிலும், பொதுக் கூட்டங்களிலும், போராட்டங்களிலும் கேட்டேன். மனிதநேய ஜனநாயக கட்சியினர் இதை மக்கள் கேள்வியாக மாற்றினர். அந்த வகையில் மஜக உங்களோடு என்றும் துணை நிற்கும். இந்திய ஒன்றிய அரசுக்கு, பிரதமர் மோடிக்கு இதை நாம் மீண்டும், மீண்டும் கோரிக்கையாக வைக்கிறோம்” இவ்வாறு அவர் பேசினார்.

 

 

Next Story

“கோத்தபய அரசையே நீதிபதியாக்கும் வேலையை ஐ.நா மேற்கொள்ளுவது ஏற்புடையதல்ல” - சண் மாஸ்டர்

Published on 30/08/2021 | Edited on 30/08/2021

 

"It is not appropriate for the UN to make the Gotabhaya government as judge" - Sun Master

 

இறுதி யுத்தம் முடிவுக்கு வந்தபோது, சர்வதேச போர்விதிகளுக்கு அமைவாக ஸ்ரீலங்கா இராணுவத்திடம் தமது பெற்றோருடன் சரணடைந்த குழந்தைகள், சிறுவர்களை என்ன செய்தார்கள் என்று அன்று பாதுகாப்பு அமைச்சராக இருந்து யுத்தத்தை வழிநடத்திய தற்போதைய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச பதிலளிக்க வேண்டும் என்று ஆவணி-30 அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் நாளை முன்னிட்டு மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் வலியுறுத்தியுள்ளார். இந்த விஷயம் குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

அதில் அவர், “ஆகஸ்ட்-30 அனைத்துலக காணமலாக்கப்பட்டோர் தினமாக நினைவு கூறப்படுவது, உலகில் நிகழ்ந்த காணமலாக்கப்பட்டோரின் குமுறல்களுக்கு நீதி அவசியம் என்பதை அனைத்துலக நாடுகளும் உணர வேண்டும் என்ற நோக்கிலேயாகும். எனினும் ஈழத்தமிழர் தங்கள் உறவுகளை முள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் இராணுவ காடையர்களிடம் ஒப்படைத்த சாட்சியங்களுடன் இன்று சிங்கள பேரினவாத அரசாங்கத்தினாலேயே காணமலாக்கப்பட்ட தம் உறவுகளை தேடி நீதி கோரி ஒரு தசாப்தங்களாய் உள்நாட்டிலும் புலத்திலும் போராடி வருகின்றனர். 

 

எம் உறவுகளை காணாமலாக்கிய சிங்கள பேரினவாத அரசாங்கம், என்றும் நீதியை அளிக்காது என்ற விரக்தியிலேயே சர்வதேசத்திடம் நீதிக்கான கோரிக்கையை முன்வைக்கிறோம். சர்வதேசத்தின் இழுத்தடிப்பு மீளவும் ஈழமக்களை யாருமற்ற அநாதைகளாய் பின்தள்ளுகிறது. ஒரு தசாப்தங்களை கடந்து காணமலாக்கப்பட்ட உறவுகளிற்கான நீதிக்காக போராடும் ஈழத்தமிழர்களை சர்வதேசம் கண்டுகொள்ள தவறுமாயின் சர்வதேச காணமலாக்கப்பட்டோர் தினம் நினைவு கூறப்படுவதன் தார்ப்பரியம் யாதென்ற கேள்வி ஈழத்தமிழர்களிடம் எழுகிறது. 

 

ஈழத்தமிழர்களின் இன்றைய போராட்டங்கள் முள்ளிவாய்க்கால் இனவழிப்பினை மையப்படுத்தி எழுகின்ற போதும், ஈழத்தைப் பொறுத்தவரையில் காணாமலாக்கப்படுதல் என்பது முள்ளிவாய்க்காலிலோ, அதற்கு முந்தைய சில ஆண்டுகளிலோ தொடங்கிய நிகழ்வும் அல்ல. ஈழத்தமிழ் மக்கள் தமது உரிமைகளைக் கோரிப் போராடத் துவங்கிய காலத்தில் இருந்தே காணாமலாக்கப்படுதல் என்பது இன ஒடுக்குமுறையின் ஒரு ஆயுதமாக கையாளப்பட்டு வந்துள்ளது. 

 

1996ஆம் ஆண்டு ஐ.நா அறிக்கையின்படி, 1980-1996 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 11,513பேர் காணாமல் போயிருப்பதாகவும்; 1996ஆம் ஆண்டு ‘ஆசிய மனித உரிமை ஆணையத்தின்’ அறிக்கைப்படி, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் 16,742 என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக இருக்கலாம் என்றே இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். 

 

இதற்குப் பிந்தைய காலத்தில் இன்றைய இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவின் வெள்ளைவேன் கடத்தல் வாயிலாக மாத்திரம் வடக்கு கிழக்கில் மாத்திரமின்றி தென்னிலங்கையிலும் வசித்த பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர். 

 

அதாவது முள்ளிவாய்க்காலுக்கு முந்தைய காலத்தில்கூட தமிழ் இளைஞர்களை அடக்கி ஒடுக்கவும் ஆயுதப் போராட்டத்தின்மீது அச்சத்தை ஏற்படுத்தவும் இளைஞர் சக்தியை இல்லாமல் செய்யவும் ஈழத்தில் காணாமலாக்கப்படுதல் என்பது கட்டமைக்கப்பட்ட ரீதியில் சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் இயந்திர நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரின் போது சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் ஒரு இலட்சம் பேரளவில் இறுதிப்போரில் இனவழிப்பு செய்யப்பட்டவர்களாக கருதப்படுகின்றது. இப்போரில் சுமார் ஐம்பதாயிரம் பேர் காணாமலாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 21ஆயிரம் பேர் சரணடைந்தும் கையளிக்கப்பட்டும் காணாமலாக்கப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்டு தமிழ் மக்கள் அழிக்கப்பட்டதைப் போன்றே இன்னொரு போர் உபாயமாக காணாமலாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. 

 

ஈழ இறுதிப் போரில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள், சிறுவர்கள் ஸ்ரீலங்கா அரசிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள், சிறுவர்கள் முள்ளிவாய்க்காலில் கொன்றழிக்கப்பட்ட நிலையில் 21ஆயிரம் பேருடன் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள், சிறுவர்கள் சரணடைந்துள்ளனர். இவர்களுக்கும் என்ன நடந்தது என்பதை அன்று பாதுகாப்பு அமைச்சராக இருந்து யுத்தத்தை வழிநடத்திய தற்போதைய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச கூறவேண்டும்.

 

இன்று ஊடகங்களை ஆப்கான் சிறுமி ஒருத்தியின் புகைப்படம் ஆக்கிரமித்துள்ளது. ஆப்கானை விட்டு பெல்ஜியத்துக்கு அகதியாய் சென்றுள்ள ஒரு சிறுமி தாம் அகதியாய் செல்கிறோம் என்ற கவலையின்றி மகிழ்ச்சியில் துள்ளி குதித்து செல்கிறார். அவ்வாறே ஈழத்திலும் பல சிறுவர்கள் தந்தை தாயின் சுவடுகளை பின்தொடர்ந்து யாதுமறியாதவகளாய் புது இடம் செல்லும் குதுகலிப்பில் சென்று சிங்கள இராணுவத்திடம் சரணடைந்துள்ளனர். அவ்வாறு சரணடைந்த குழந்தைகள் தொடர்பிலும் கடந்த ஒரு தசாப்த காலங்களில் தீர்வில்லை. சிங்கள பேரினவாத அரசு 59 குழந்தைகளை காணாமலாக்கியதன் மூலம் உலகில் குழந்தைகளை காணாமலாக்குவதில் முதல் தர நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. குழந்தைகளின் உரிமை தொடர்பிலும் இனவழிப்பு தொடர்பிலும் வரைவிலக்கணங்களை கூறுகின்ற ஐக்கிய நாடுகள் சபையும் இன்ன பிற நிறுவனங்களும் சிங்கள இனவழிப்பு அரசை மயிலிறகால் தடவுவதே உலக மக்களுக்கு வேதனை தருகின்ற விடயமாகும். புகைப்படங்களை பார்த்து மாத்திரம்  துயருற்று  செல்லும் நிலையிலேயா சர்வதேசம் உள்ளது.

 

ஈழப் போர் முடிவடைந்து 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்னமும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சிங்கள அரசு பொறுப்புக் கூறலை மேற்கொள்ளாதிருக்கின்றது. இந்த நிலையில் உள்ளக விசாரணையை ஐ.நா அவை அறிக்கையில் பரிந்துரை செய்வதன் வாயிலாக காணாமல் ஆக்கிய கோத்தபய அரசையே நீதிபதியாக்கும் வேலையை ஐ.நா மேற்கொள்ளுவது ஏற்புடையதல்ல என்பதுடன் அது பலத்த கண்டனத்திற்கும் விசனத்திற்கும் உரியதாகும்” என்று தெரிவித்துள்ளார்.