Skip to main content

இரண்டு மாதங்களாக வேலையில்லை; சொந்த ஊருக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யுங்கள்; கேரளாவில் கண்ணீர் விடும் தமிழக தொழிலாளர்கள்!

Published on 05/05/2020 | Edited on 05/05/2020

 

dh


பெருமழை வந்தாலும், புயல் வீசினாலும், வறட்சி ஏற்பட்டாலும், கொடிய நோய் வந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான். அப்படிப் பஞ்சம் பிழைக்க கேரளாவில் உள்ள செங்கல் சூலைக்கு வேலைக்குச் சென்ற 10 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குழந்தைகளோடு உணவுக்குக் கூட வழியின்றி தவிக்கிறோம், எப்படியாவது சொந்த ஊருக்கு அனுப்ப உதவுங்கள் எனக் கண்ணீரோடு கூறும் வீடியோ வைரலாகி பலரையும் கலங்க செய்துள்ளது.
 

கேரள மாநிலம் பாலக்காடு பகுதிக்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து செங்கல் அறுக்கும் கூலி வேலைக்கு ஏஜெண்டுகள் மூலம் அழைத்துச் சென்று விடப்படுவது வழக்கமாக இருக்கிறது. செங்கல் அறுக்கும் தொழிலாளர்களை அழைத்துச்சென்று விடும் ஏஜெண்டுகள் தாங்கள் வங்கிய பணத்தையும் தொழிலாளிகளின் தலையில் கட்டிவிடுவதால் கடனை அடைக்க முடியாமல் கொத்தடிமைகளாக வருடக்கணக்கில் வேலை பார்க்கும் அவலமான சூழல் தொடர்கதையாகவே தான் இருந்து வருகிறது.
 

அந்தவகையில் கடந்த நான்காம் தேதி காலை கேரளா மாநிலம் பாலக்காடு கிழக்காஞ்சேரி பக்கத்தில் இருந்து ஒரு வீடியோ ஒன்று சீர்காழி அருகே உள்ள எடமனல் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மூலம் நமக்கு கிடைத்தது. அந்த வீடியோவில் பேசும் அந்த நபர்களில் சிலர் எடமணல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெரிந்துகொண்டோம்.
 

அதன் பிறகு அந்த வீடியோவை நான்காம் தேதி காலை பதினோரு மணிக்கு சீர்காழி எம்.எல்.ஏ. பாரதிக்கும், நாகை மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பிவைத்தோம். சீர்காழி எம்.எல்.ஏ. பாரதி வீடியோவைப் பார்த்துவிட்டு, என்னால் முடிந்த அளவிற்கு அவர்களுக்கு உதவி செய்கிறேன் என ஆர்வத்துடன் கூறினார். 
 

அந்த வீடியோவில் உள்ள அனைவரும் மாற்று உடைகூட இல்லாத நிலமையில் கை கூப்பி வணங்கியபடி, "இங்கு ஆறு மாதத்திற்கு முன்பு செங்கல் அறுக்கும் வேலைக்கு வந்தோம். கரோனாவால் இரண்டு மாதங்களாக வேலை இல்லை. உணவுக்கு வழியில்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறோம். காட்டுப்பகுதியில் இருப்பதால் எந்த உதவியும் எங்களுக்குக் கிடைப்பதுமில்லை. செங்கல் அறுப்பதற்கு அழைத்து வந்து விட்ட ஏஜென்டுகளைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டால், எங்களைக் கண்டுகொள்ளவில்லை. அதேபோல் செங்கல் உரிமையாளரும் எங்களை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. ஏற்கனவே நாங்க வாங்கிய கடன், எங்களை இங்கு கொண்டுவந்து விட்டவர்கள் வாங்கிய கடன் என இவற்றை அடைக்கவே கொத்தடிமைகளாக மாடா உழைக்கிறோம், இப்போ இரண்டு மாதமாக வேலையே இல்லாமல் மேலும் கடனை வாங்கி வயிற்றைக்கழுவும் நிலமையே ஏற்பட்டிருக்கு, இந்த வீடியோவைப் பார்க்குற யாராவது எங்க ஊர் எம்.எல்.ஏ.விற்கும் கலெக்டருக்கும் தகவல் கொடுத்து எப்படியாவது எங்களை ஊருக்கு அழைக்க ஏற்பாடு செய்யுங்கள்" என்று கூறி கெஞ்சுகின்றனர்.
 

http://onelink.to/nknapp

 

அவர்களை சீர்காழி எம்.எல்.ஏ.வும், மயிலாடுதுறை எம்.எல்.ஏ.வும், நாகை ஆட்சியரும் மீட்டுக் கொண்டுவருவார்கள் என்று பலரும் எதிர்ப்பார்க்கின்றனர்.
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.