Skip to main content

’இந்தியாவில் புற்றுநோய் தாக்கம் அதிகரித்துள்ளது! ’-கனிமொழியின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

Published on 21/12/2018 | Edited on 21/12/2018

 


 “இந்தியாவில் புற்று நோய் தாக்கம், கடந்த ஆறு வருடங்களில் 15.7% அதிகரித்திருப்பதாக  தகவல்கள்  வருகின்றன. இதுபற்றி அரசு கவனத்தில் கொண்டுள்ளதா? அப்படியெனில் கடந்த மூன்று வருடங்களாக  மாநில வாரியாக புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை அரசு தருமா? புற்றுநோயை தடுப்பதற்காக ,  புற்று நோய்க்கான சிகிச்சை செலவுகளை குறைப்பதற்காக அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் என்ன? மாநில, யூனியன் பிரதேச அளவிலான புற்றுநோய் மருத்துவ மையங்களின் செயல்பாடு  எவ்வாறு உள்ளது. புற்று நோய் மருத்துவமனைகள், ஆய்வு மையங்கள், சிகிச்சை மையங்களுக்கு  அரசு ஒதுக்கியுள்ள நிதி எவ்வளவு?” என்று மாநிலங்களவை 
உறுப்பினர் கனிமொழி எழுத்து பூர்வமாக கேள்வி கேட்டார். 

 

k

 

இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை குடும்ப நலத்துறை இணை அமைச்சர்
அனுபிரியா பட்டேல்,

 “இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய புற்று நோய் ஆராய்ச்சிகளின் முடிவாக, ‘ மூன்றாண்டுகளில் (2012-14) மக்கள் தொகை அடிப்படையிலான புற்று நோய் பதிவேடுகள், பெங்களூரு’ என்ற அறிக்கை 2016இல் வெளியிடப்பட்டது. இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் குறிப்பிடத் தக்க அளவு புற்று நோய் தாக்கம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. புற்றுநோய் தாக்கத்தின் வருடாந்திர சதவிகித மாற்றமென்பது பெங்களூருவில் 0.39%  முதல் 0.93%  ஆக இருக்கிறது. சென்னையில் ஆண்களிடம் புற்றுநோய் தாக்கம் 0.38% அதிகரித்துள்ளது.

 

அரசிடம் உள்ள புள்ளி விவரங்களின்படி தமிழ்நாட்டில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை 2025, 16, 17 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில்  78,512  பேர், 2016 ஆம் ஆண்டில்  80,999  பேர் என இருந்தனர். 2017 ஆம் ஆண்டு 83,554 பேர் புற்றுநோயாளிகளாக   அதிகரித்துள்ளனர்.

 

புற்றுநோய்க்கான சிகிச்சைகள் மத்திய, மாநில மருத்துவ நிறுவனங்களால் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு மானிய விலையிலும் வழங்கப்படுகிறது. மேலும் மாநில அரசுகள் நடத்தும் புற்று நோய் தடுப்பு, விழிப்புணர்வு, கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முழு உதவி செய்கிறது.

 

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் தேசிய அளவில் புற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்து வதற்கான தேசிய அளவிலான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதய நோய், பக்கவாத நோய்கள் ரீதியாகவும் இவை நடத்தப்படுகின்றன. இதன்படி மாவட்ட அளவில் புற்றுநோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் புற்றுநோய்க்கான அறிகுறிகள், அதை  தாமதமின்றி அறிந்துகொள்ளுதல்,  உறுதி செய்தல், படிநிலை தொடர்பான உரிய சிகிச்சை அளிக்கும் நிறுவனங்களை மக்களுக்கு பரிந்துரை செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்று நோய், வாய் புற்றுநோய் ஆகியவற்றுக்கு முன்னுரிமை தரப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றன.

 

a

 

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் ஆரம்ப சுகாதார நடவடிக்கைகளின் மூலமாக நாடுமுழுவதும் 215 மாவட்டங்களில் மக்களிடம் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் தொடர்பான தடுப்பு, விழிப்புணர்வு, கண்டறிதல் ஆகியவற்றுக்கான முன்னெடுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநில புற்றுநோய் நிலையங்கள், யூனியன் பிரதேசங்களில் இருக்கும் யூனியன் பிரதேச புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைப்பதற்கு  தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு செய்து தருகிறது. மாநில புற்றுநோய் நிலையங்களுக்கு அதிகபட்சமாக 120  கோடி ரூபாயும், யூனியன் பிரதேச புற்றுநோய் சிகிச்சை மையங்களுக்கு அதிகபட்சமாக 45 கோடி ரூபாய் நிதியும் மத்திய அரசு வழங்குகிறது. இதில் மாநில அரசுகளின் பங்கு 40% ஆக இருக்கும்.

 


இந்த வகையில் தமிழ்நாட்டில் இருக்கும் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்துக்கு மத்திய அரசு 67.38கோடி ரூபாய் வழங்கியிருக்கிறது  இதுதவிர வட
கிழக்கு மாநிலங்களில் புற்றுநோய் தடுப்பு மையங்கள் அமைப்பதற்கு மத்திய
அரசே 90% சதவிகித மானியத்தை வழங்குகிறது. ஹரியானாவில்  தேசிய புற்று நோய் ஆய்வு நிலையம் அமைக்கவும், கொல்கத்தாவில் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்தின் இரண்டாவது வளாகத்தை அமைக்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைகள் மூலமாகவும், பிரதம மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்‌ஷா யோஜனா திட்டத்தின் மூலமும்  புற்றுநோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.   

 

வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் மக்களில் உயிருக்கு அச்சுறுத்தலான நோய்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள  தேசிய ஆரோக்கிய நிதி திட்டத்தின் கீழ் நிதி உதவி அளிக்கப்படுகிறது.   சுகாதாரத்துறை அமைச்சரின் புற்றுநோய் நிதியம், மாநில நோய் சிகிச்சை நிதியம் உள்ளிட்ட  அமைப்புகளில் இருந்து நிதி உதவிகள் அளிக்கப்படுகின்றன.    

 

அமிர்த் திட்டத்தின் கீழ் மலிவு விலை மருந்து விற்பனையகங்கள் 23 மாநிலங்களில் 145 இடங்களில் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் புற்றுநோய், இதய நோய்  தொடர்பான மருந்துகள்  தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

 

மக்கள் மருந்தகங்களிலும் மலிவு விலை மருந்துகள் விற்கப்படுகின்றன. இந்திய மருத்துவ  ஆராய்ச்சி கவுன்சில், தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை     www.cancerindia.org.in  என்ற வலைத்தளத்தைத் தொடங்கியுள்ளன. ‘புற்றுநோய்க்கு எதிராக இந்தியா’ என்ற ஒற்றை  நோக்கத்தில் செயல்படும் இந்த வலைத் தளத்தில்  இந்தியாவில் அதிகம் தாக்கும் புற்றுநோய் வகைகள், அதுபற்றிய விழிப்புணர்வு, தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகள் பற்றி விரிவான வகையில் விளக்கப்பட்டிருக்கின்றன” என்று  விரிவான பதில் அளித்துள்ளார் மத்திய அமைச்சர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜனநாயகமா? சர்வாதிகாரமா?” - கனிமொழி ஆவேசம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி, நேற்று (16/04/2024) ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, “அம்மையார் ஜெயலலிதா ஒருமுறை சொன்னது போல் பரம்பரை பகைக்கான தேர்தல் தான் இது. சமூக நீதிக்கும் சமூகத்தின் அநீதிக்கும் இடையே நடக்கும் தேர்தல். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் மீது பா.ஜ.க.விற்கோ நரேந்திர மோடிக்கோ துளியும் நம்பிக்கை கிடையாது. 

பாராளுமன்றத்திற்கே வராத பிரதமர் என்ற பெருமை இருக்கிறது என்றால் பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். என்றாவது ஒருநாள் அவர் பாராளுமன்றத்தில் பேசுகிறார் என்றால் அவரது சாதனைகளையும் எதிர்க்கட்சிகளின் குறைகளையோ பேசுவதில்லை. யார் என்ன கேள்வி கேட்டாலும், முதலில் பிரதமர் மோடி, ஜவஹர்லால் நேரு கிட்ட சண்டை போடுவார். பெட்ரோல் விலை ஏன் ஏறியது எனக் கேட்டாலும், என்ன கேள்வி கேட்டாலும் ஜவஹர்லால் நேருவிடமிருந்து ஆரம்பிப்பார். எதிர்க்கட்சியினர் அவரை எதிர்த்து கேள்வி கேட்டதால், அனைவரும் வெளியேற்றப்பட்டோம்.

Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

எந்த விவாதத்திலும் அவருக்கு நம்பிக்கை கிடையாது. பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதில்லை. சமூக செயல்பாட்டாளர்கள் கேட்டால் அவர்கள் மீது வழக்கு. மலைவாழ் மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்த 92 வயது முதியவரைத் தீவிரவாதி என வழக்குப் போட்டு சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பெயில் கிடையாது. பா.ஜ.க.வில் உள்ள வாஷிங்மெஷினில் அக்கட்சியில் சேருபவர்கள் சுத்தம் செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சியினரை சிறையில் போடுவார்கள்.

விவசாயிகள் டெல்லிக்குள் வந்து விடக்கூடாது என்று ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டு, ரோட்டில் ஆணியை பதித்துக் கொண்டு விவசாயிகளைத் தடுக்கும் ஆட்சிதான் நரேந்திர மோடி ஆட்சி. மதத்தை வைத்து, ஜாதியை வைத்து மக்களை பிரிக்கக் கூடிய ஆட்சி. ஜிஎஸ்டி போட்டு சின்ன சின்ன கடைகள், சின்ன சின்ன வியாபாரிகள், சிறு, குறு தொழில்கள் என எல்லாத்தையும் நாசமாக்கி பலரைக் கடையை மூட வைத்த ஆட்சி பா.ஜ.க ஆட்சி.

தமிழகத்தில் ஜிஎஸ்டி வரியை எல்லாம் கொண்டு போய் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது. ஆனால், பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் முதல் 7 ரூபாய் என வழங்கப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்து எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. வெள்ளத்தில் வீடுகள் இடிந்த போது கவலைப்படவில்லை. ஆனால், கோவிலில் உண்டியலில் காசு போடாதீர்கள் தட்டில் போடுங்கள் என அறிவுரை வழங்குகிறார்.

தமிழகத்திற்கு வஞ்சனை செய்யக்கூடிய ஆட்சி பா.ஜ.க ஆட்சி. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது இங்கு வராத மோடி, தேர்தல் வந்ததும் தமிழகத்தை சுற்றிச் சுற்றி வருகிறார். பா.ஜ.கவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டுப் போட்டுவிடக்கூடாது. பா.ஜ.க கொண்டு வந்த சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க.விற்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

பெண்களுக்கு எதிராக குற்றங்களைப் புரியும் 44 பேர் எம்.பி.யாக பா.ஜ.க.வில் உள்ளனர்.  பா.ஜ.க எம்.பிக்கு எதிராகப் போராடிய மல்யுத்த வீராங்கனைகள் மீது வழக்குகள் போடப்பட்டது. தவறு புரிந்த அவர் மீது எந்த வழக்கும் போடவில்லை. ஹிந்தி படிக்க வேண்டும் என்று சொன்ன மோடி, தேர்தல் வந்ததும் தமிழ் படிக்க வேண்டும் என்கிறார்.  மக்களுக்கு எதிராக ஆட்சி செய்யக்கூடிய பாஜக புறக்கணிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த நாட்டுக்கு அவர்கள் தேவையில்லை என்பதை மக்கள் புரிய வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Next Story

'திமுக ஆட்சிபோல் மத்தியிலும் வரவேண்டும்' - தீவிர பரப்புரையில் கனிமொழி

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
'DMK must come to the center as a government' - Kanimozhi in intense lobbying

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி, அங்குள்ள பசுவந்தனை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''பெரும்பான்மையான இந்து மக்களை ஏமாற்றி நாங்கள் தான் உங்களுக்கு எல்லா உதவியும் செய்வோம் என்று சொல்கிறார்களே தவிர, அந்த மக்களுக்கு வேலை கூட கிடைப்பதில்லை. 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி மோடி ஆட்சிக்கு வந்தார். போய் கேட்டால் பக்கோடா போடுங்க அதுவும் வேலை தான் என்கிறார். இப்படிப்பட்ட ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். எல்லா மக்களையும் அரவணைத்து நடக்கக்கூடிய ஆட்சி நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. அதே போன்ற ஒரு ஆட்சியை ஒன்றியத்தில் உருவாக வேண்டும்.

இந்தியா கூட்டணி ஆட்சி என்ற ஒன்றுதான் இந்த நாட்டின் மக்களை பாதுகாக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி பாதுகாக்கக் கூடிய ஆட்சியை நாம் அங்கே உருவாக்க வேண்டும். நம்முடைய ஆட்சி ஒன்றியத்தில் வந்தவுடன் கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய். அதேபோல பெட்ரோல் 75 ரூபாய்க்கு வழங்கப்படும். அதேபோல் டீசல் 65 ரூபாய்க்கு வழங்கப்படும். விவசாயக் கடன்,கல்விக் கடன் ரத்து செய்யப்படும். டோல்கேட் எல்லாம் அகற்றப்படும். இதெல்லாம் நம்முடைய முதலமைச்சர் தந்திருக்கும் வாக்குறுதி. இவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் ஓட்டு போட வேண்டும். வெயிலாக இருக்கிறது என வீட்டில் உட்கார்ந்து இருக்கக் கூடாது. நம்முடைய ஜனநாயக கடமையாக ஓட்டு போட வேண்டும். அதேபோல் தூத்துக்குடியில் உங்களுக்காக மீண்டும் பணியாற்றக்கூடிய வாய்ப்பை எனக்கு நீங்கள் அளிக்க வேண்டும்''என்றார்.