Skip to main content

தலைமைச் செயலகத்தைப் பதறவைக்கும் கரோனா!

Published on 29/05/2020 | Edited on 29/05/2020

 

tamil nadu assembly


தமிழக அரசின் நிர்வாகத்துக்கான 'மூளை' இயங்கும் இடம் என்றால் அது தலைமைச் செயலகம்தான். அப்படிப்பட்ட தலைமைச் செயலகத்திலேயே இப்போது கரோனா தொற்று தன் தீவிரத்தைக் காட்ட ஆரம்பித்திருக்கிறது. 
 


இரண்டு வாரங்களுக்கு முன் தலைமைச் செயலகமான நாமக்கல் மாளிகையின் பத்தாவது மாடியில் முதன்முதலாக தலைமைச்செயலகப் பணியாளர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அது இரண்டே வாரத்தில் கிடுகிடுவென இப்போது மூன்றாவது தளம், ஐந்தாவது தளம், ஏழாவது தளம் மற்றும் பழைய கட்டிடம் என்று பரவி, அங்கு பகீர் நிலையை ஏற்படுத்தி வருகிறது.
 

குறிப்பாக வனத்துறை, சமூக நலத்துறை, பொதுப்பணித்துறை, பொதுக் கணக்குக் குழு என பலதுறை ஊழியர்களும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் 50 சத ஊழியர்களுடன் இயங்கும் தலைமைச் செயலகத்தின்  லிஃப்ட்டில், சமூக விலகலைக் கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு நெரிசல் நிலவுகிறதாம். 
 


இதுகுறித்து அங்குள்ள பணியாளர்களிடம் நாம் கேட்டபோது, ”தலைமைச் செயலக ஊழியர்களான எங்களுக்கு மட்டும் கபசுர குடிநீர், மல்டி விட்டமின் மற்றும் ஜின்ங் மாத்திரைகளைக் கொடுத்து வேலைக்கு வரச்சொல்லும் அரசு, எங்கள் குடும்பத்தினருக்கு இவற்றைத் தரமறுக்கிறது. இதனால் பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பும் எங்களைக் கண்டு, எங்கள் குடும்பத்தினரே, அச்சத்தோடு விலகி நிற்கும் சூழல் நிலவுகிறது. 

கோட்டையில் இருக்கும் பெரிய அதிகாரிகளின் அறைகளைத் தவிர மற்ற பகுதிகளில் உள்ள ஏ.சி. நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாஸ்க் உள்ளிட்ட கவசங்கள் அணியும் நாங்கள் அடிக்கும் வெயிலில் வாடி வதங்கிக்கொண்டிருக்கிறோம். பலர் அங்கே மயங்கி விழுவதையும் பார்க்க முடிகிறது. அங்கே குடிநீரும் பல இடங்களில் வருவதில்லை. இதனால் தொற்று அச்சத்திலும் இறுக்கத்திலும் அல்லாடிக் கொண்டிருக்கிறோம்” என்கிறார்கள் பரிதாபமாக.

இப்படித் தலைமைச் செயலகமே பரிதாபத்தில் இருப்பது கொடுமையிலும் கொடுமை. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குத் தமிழக சட்டப்பேரவை செயலாளர் கடிதம்!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
TN Legislative Assembly Secretary's letter to the Election Commission of India

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி மற்றும் மணிவண்ணன் உள்ளிட்ட மூவரும் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மூவரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து 2016 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு வழங்கப்பட்ட தண்டனை உத்தரவில், பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

அதே சமயம் தண்டனை விதிக்கப்பட்டதால், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை பொன்முடி இழந்திருந்தார். இதனையடுத்து சொத்துக் குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து பொன்முடி மற்றும் அவரது மனைவி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவில், “இந்த வழக்கை பொறுத்தவரையில் சென்னை உயர்நீதிமன்றம் சரியாக விசாரணை செய்யவில்லை. ஒருதலைபட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி நீதிபதி சதீஷ் சுந்தர வர்மா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் சரணடைவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு அளித்ததுடன், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இத்தகைய சூழலில், சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு பொன்முடி போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியை காலி என அறிவிக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சி. விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம் ஆகியோர் அ.தி.மு.க. சார்பில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனை சந்தித்து மனு அளித்திருந்தனர்.

TN Legislative Assembly Secretary's letter to the Election Commission of India

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பொன்முடி சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்குத் தமிழக சட்டப்பேரவை அலுவலகத்தின் சார்பாக சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக காங்கிரஸ் கட்சி சார்பில் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயதாரணி பா.ஜ.க.வில் இனைந்ததைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனால் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கடிதம் எழுதி இருந்தார். இதன் மூலம் இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன், திருக்கோவிலூர் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Adjournment of TN Legislative Assembly without specifying a date

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். சட்டப்பேரவையின் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்து உரையாற்றத் தொடங்கிய 4 நிமிடங்களில் உரையை முடித்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். அப்போது, “மழை வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து 50 கோடியை ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமென்று நாங்கள் கேட்கலாம். சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றே குறைந்தவர்கள் அல்ல... ஜன கன மன இனிமேல்தான் பாடுவோம்” என சபாநாயகர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தார். இதனையடுத்து இரண்டாவது நாளாக கடந்த 13 ஆம் தேதி சட்டப்பேரவை கூடியபோது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கிடரமணன், புகழ்பெற்ற கண் மருத்துவர் எஸ்.எஸ். பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் எம். பாத்திமா பீவி, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம். இராஜேந்திரன், தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் ஆகியோருக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர். அதனைத் தொடர்ந்து 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 19 ஆம் தேதி (19.02.2024) தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவித்தார். மேலும் கடந்த 20 ஆம் தேதி (20.02.2024) 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் கூட்டுறவு, பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட விவசாயிகள் தொடர்புடைய திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. அதே சமயம் பொது நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்துள்ளார்.