Skip to main content

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் போராட்டம்

Published on 18/02/2018 | Edited on 18/02/2018


 

neduvasal

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், இதுபற்றி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும் வலியுறுத்தினர். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில், மக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. தொடர்ந்து 174 நாட்கள் நடந்தது. போராட்டம் தொடங்கி கடந்த பிப்ரவரி 15ஆம் தேதியோடு ஒரு வருடம் ஆகிவிட்டதால் இன்று நெடுவாசலில் போராட்டம் நடத்தினர்.  
 

மத்திய அரசு உடனடியாக இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி வழங்கக் கூடாது. மாவட்ட நிர்வாகம் அளிதத வாக்குறுதியின்படி ஓஎன்ஜிசி-ஆல் அமைக்கப்பட்ட சோதனை குழாய் அனைத்தையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.


நெடுவாசல் போராட்டம் - 100 கிராம மக்கள் பங்கேற்பு

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்க கர்நாடகாவைச் சேர்ந்த ஜெம் என்ற தனியார் நிறுவனத்திற்கு மத்திய பெட்ரோலிய துறை கடந்த ஆண்டு பிப்ரவரி 15 ந் தேதி ஒப்பந்தம் வழங்கியது. இந்த திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியானதும் அடுத்த நாள் நெடுவாசல் கடைவீதியில் திரண்ட விவசாயிகள், மாணவர்கள், திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் கையெழுத்து இயக்கம் நடத்தி மாவட்ட ஆட்சியத் தலைவரிடம் மனு கொடுத்தனர்.
 

    ஆனால் மத்திய, மாநில அரசுகள் திட்டத்தை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிடாத நிலையில் போராட்டம் வலுவடைந்து நெடுவாசல் நாடியம்மன் கோயில் திடலில் போராட்டத்தை திருவிழாவாக நடத்தினார்கள். இந்த முதல்கட்ட போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து மாணவர்கள், பல்வேறு சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சிகள், திரைத்துறையினர் என்று தினம் தினம் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதனால் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்தது. அதே பொல நெடுவாசலை சுற்றியுள்ள புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 100 கிராம விவசாயிகள் விவசாய கருவிகள், விளை பயிர்களுடன் வந்து கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு வந்த அனைவரையும் நெடுவாசல் கிராமத்தார்கள் வரவேற்று உணவும் வழங்கினார்கள். 

    
தொடர்ந்து 22 நாட்கள் போராட்டம் நடந்த நிலையில் மத்திய, மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் நடத்திய பேச்சுவார்த்தையாலும் மாணவர்களின் படிப்பை கருத்தில் கொண்டும் தற்காலிகமாக போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து போட்டதால் மீண்டும் இரண்டாம் கட்ட போராட்டம் தொடங்கி 174 நாட்கள் நடந்தது. 
 

    நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவாகவும், தங்கள் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணறுகளை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வடகாடு, நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு கிராமத்திலும் தொடர் போராட்டங்கள் நடந்தது. அங்கு சென்ற மாவட்ட ஆட்சியர் கணேஷ் 2017 டிசம்பர் இறுதிக்குள் அனைத்து ஆழ்குழாய் கிணறுகளும் அகற்றப்பட்டு விவசாயிகளிடம் நிலம் ஒப்படைக்கப்படும் என்று உறுதிமொழி கடிதம் கொடுத்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
 

    மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் முடிந்த நிலையிலும் திட்டத்தை ரத்து செய்யாமல் தமிழக அரசு மற்றும் சுற்றுசூழல் அனுமதி கிடைத்த உடன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளதால் நெடுவாசல் சுற்றியுள்ள கிராம மக்கள் மறு போராட்டத்திற்கு தயாராகி வந்தனர்.
 

இந்த நிலையில் நெடுவாசல் நாடியம்மன் கோயில் திடலில் கூடிய விவசாயிகள்.. நெடுவாசல் திட்டத்தை ரத்து செய்து மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்து அரசாரண வெளியிட வேண்டும். தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.  மாவட்ட நிர்வாகம் எழுதிக் கொடுத்தது போல அனைத்து ஒ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணறுகளையும் அகற்றி விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று (18 ந் தேதி ஞாயிற்றுக் கிழமை) மாலை முதல் கட்ட போராட்டம் போல சுமார் 100 கிராம மக்களும், முதல் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், திரை துறையினரும் கலந்து கொள்ளும் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
 

    போராட்டம் குறித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள விவசாயி சுப்பிரமணியன் கூறும் போது.. என் நிலத்தை சுற்றியுள்ள சில விவசாயிகளின் நிலத்தை குத்தகைக்கு வாங்கிக் கொண்டு என் நிலத்தையும் கேட்டார்கள். கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டேன். அதன் பிறகு நிறை பணம் தருவதாக சில தரகர்கள் மூலம் பேசினார்கள் விவசாயம் செய்யும் நிலத்தை உயிர் இருக்கும் வரை கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்ட பிறகும் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது கூட சிலர் நிலம் கேட்டார்கள் கொடுக்க மறுத்துவிட்டேன். எவ்வளவு பணம் கொடுத்தாலும் நிலத்தடி நீரை, விவசாயத்தை அளிக்கும் திட்டத்திற்கு இடம் கொடுக்க மாட்டேன். மீண்டும் போராட்டம் நடத்த கிராமம் கூடி முடிவெடுத்துள்ளது என்றார்.
 

    அதே போல பெண் விவசாயி ஜெயந்தி.. எங்களுக்கு வாழ்வாதாரம் விவசாயம். அந்த விவசாயத்தை அழிக்க வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எங்கள் கிராமத்தில் அனுமதிக்கமாட்டோம். முதலில் நடந்த எல்லா போராட்டதிலும் கலந்து கொண்டோம். மறுபடியும் நடக்கும் போராட்டத்திலும் கலந்து கொள்வோம் என்றார்.


-பகத்சிங்

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை விதிக்க வேண்டும்’ - விவசாயிகள் கோரிக்கை!

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

‘Hydrocarbon extraction should be banned’ - Farmers demand

 

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படாது என மாவட்ட நிர்வாகமும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரும் அண்மையில் உறுதியளித்திருந்த நிலையில், மீண்டும் மத்திய மாநில அரசுகளின் அனுமதி பெறப்பட்டுள்ளது என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அரியலூர் மாவட்டம் என்பது டெல்டா பகுதிகளில் வருகிறது. மேலும், அங்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைக்கப்பட்டால், புதுக்குடி குருவாலப்பர் கோயில் உள்ளிட்ட இடங்களில் வேளாண் நிலங்களும் அருகில் கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட புராதன சின்னங்களும், கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இராசேந்திர சோழனின் பெரும் முயற்சியால் உருவாக்கப்பட்ட சோழகங்கம் எனும் பொன்னேரி உட்பட பல்வேறு நீர்நிலைகள் வரண்டுவிடும் நிலை ஏற்படும்.

 

புதுக்குடி கிராமங்களில் ஆயிரக்கணக்கான கிணறுகள் உள்ளன. அவற்றில் தண்ணீர், தேன் போன்ற அருமையான சுனை நீர் ஆகியவை உள்ளன. அத்தகைய தண்ணீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்துவருகின்றனர் விவசாயிகள். ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்தால், புதுக்குடி கிராமங்களில் நீரூற்றுகள் அழிக்கப்படும் நிலை உருவாகி, விவசாயிகள் விவசாயம் செய்வதை விடுத்து ஊரைக் காலி செய்யும் நிலை உருவாகும். எனவே தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டினை அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அனைத்து விவசாயிகள் சார்பில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் அறிக்கை மூலமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

Next Story

“தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் பணிகள் நடைபெறவில்லை” - கனிமொழி எம்பிக்கு மத்திய அமைச்சர் பதில்!

Published on 03/08/2021 | Edited on 03/08/2021

 

"Hydrocarbon works are not taking place in Tamil Nadu" - Union Minister's reply to Kanimozhi MP

 

தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பாதுகாப்பு சட்டம் 2020 நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் உறிஞ்சும் பணிகளுக்கான ஏலத்தை தமிழ்நாடு அரசின் வேண்டுகோளுக்கிணங்க ரத்து செய்ய ஒன்றிய அரசு பரிசீலிக்கிறதா? என்று மக்களவையில் திமுக மகளிரணிச் செயலாளரும், மக்களவை குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி. எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் ரமேஷ் தெலி, ஆகஸ்ட் 2ஆம் தேதி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

 

அந்தப் பதிலில், “இந்திய அரசாங்கம் 2021 ஜூன் 10ஆம் தேதி, கண்டுபிடிக்கப்பட்ட சிறிய அளவிலான நிலப்பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுத்தல் பணிக்காக மூன்றாவது சுற்று ஏலத்தை அறிவித்தது. இந்தியா முழுவதும் 75 இடங்களில் 13,204 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கான 35 ஒப்பந்தங்களைக் கோரி இந்த ஏலம் அறிவிக்கப்பட்டது. இவற்றில் இரு பெட்ரோலிய  சுரங்க குத்தகையை உள்ளடக்கிய ஒரு ஒப்பந்தம்  தமிழ்நாட்டில் ராமநாதபுரம், புதுக்கோட்டை வடத்தெரு ஆகிய பகுதிகளில் போடப்பட்டிருக்கிறது. இந்த இரு பெட்ரோலிய சுரங்க குத்தகைகளும் 2007 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது. எண்ணெய் வயல்கள் முறைப்படுத்துதல் விரிவாக்கல் சட்டம் 1948 , பெட்ரோலிய இயற்கை எரிவாயு விதிகள் 1959 ஆகியவற்றின் கீழ் இவை வழங்கப்பட்டன. இப்போது தமிழ்நாட்டில் எந்த ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுத்தல் பணியும் நடைபெறவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார் அமைச்சர் ரமேஷ் தெலி.