Skip to main content

பாரதிதாசன் பல்கலைக்கழக துறை தலைவர் மீது சி.பி.ஐ. விசாரணை 

Published on 11/03/2018 | Edited on 11/03/2018
anandan

 

சமீபத்தில் கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் கணபதி மீது பல்கலைகழக பேராசிரியர் பணி பதவி உயர்வுக்கு இலட்சம் கேட்டதாக பிடிப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலை அடங்குவதற்குள் அடுத்து திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக பேராசிரியர் கல்வியல் கல்லூரி ஆய்வுக்கு சென்ற இடத்திற்கு லஞ்சம் வாங்கியதாக சி.பி.ஐ. விசாரணை செய்வது அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

தேசிய ஆசிரியர் கல்வி வாரியம் மூலம், கல்வியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி புதிதாக தொடங்கப்படும் கல்வியியல் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்கவும், ஏற்கனவே செயல்பட்டு வரும் கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை புதுப்பிக்கவும் 2 பேர் கொண்ட குழு கல்வி வாரியம் சார்பில் நியமிக்கப்பட்டு உள்ளது.

 

இந்த குழுவில் பல்கலைக்கழக அளவில் உள்ள துறைத்தலைவர்கள் அல்லது பேராசிரியர்கள் இடம்பெற்று இருப்பார்கள். இவர்கள் புதிதாக தொடங்கப்படும் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று கல்லூரிகளில் தேவையான பாடத்திட்டங்கள் முறையாக உள்ளதா?. மாணவ-மாணவிகளுக்கு போதுமான கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கிறதா? என்று ஆய்வு செய்து, அதன் அறிக்கையை தேசிய ஆசிரியர் கல்வி வாரியத்திற்கு அனுப்பி வைப்பார்கள்.

 

இந்த அறிக்கையின் படி தான் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய அங்கீகாரம் வழங்கப்படும். ஏற்கனவே செயல்பட்டு வரும் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் புதுப்பித்து வழங்கப்படும். அதன்படி தேசிய ஆசிரியர் கல்வி வாரியத்தால் அமைக்கப்பட்டு இருந்த 2 பேர் குழுவில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையின் தலைவர் ஆனந்தன் என்பவரும் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு பேராசிரியரும் இடம்பெற்று இருந்தனர். இவர்கள் இந்தியாவில் பல்வேறு கல்வியியல் கல்லூரிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

 

இந்தநிலையில் கட்டுமானம், மாணவ-மாணவிகளுக்கு போதுமான அடிப்படை வசதி மற்றும் தகுதி இல்லாத பல்வேறு கல்லூரிகளுக்கு, கல்லூரி நிர்வாகத்திற்கு சாதகமாக அறிக்கை தாக்கல் செய்ததாகவும், அதன் மூலம் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் தேசிய ஆசிரியர் கல்வி வாரியத்திற்கு அவர்கள் மீது புகார் சென்றது. அந்த புகாரின் பேரில் இருவர் மீதும் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டது.

 

இந்த விசாரணையில் இருவர் மீதும் கூறப்பட்ட புகார் உண்மை என்றும், அவர்கள் இருவரும் பல கல்லூரிகளுக்கு சாதகமான அறிக்கை தாக்கல் செய்ய கோடி கணக்கில் லஞ்சம் பெற்று இருப்பதும் தெரிந்தது. இதைத்தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வியியல் துறையின் தலைவர் பேராசிரியர் ஆனந்தன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோரி தேசிய ஆசிரியர் கல்வி வாரியம் பரிந்துரை செய்தது. அதன்படி சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது பல்கலைக்கழகம் சார்பில் விசாரணை கமிட்டி அமைத்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வடமாநில பல்கலைக்கழக பேராசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இதுகுறித்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வட்டாரத்தில் விசாரித்த போது, “கடந்த 2016-ம் ஆண்டில் இந்த முறைகேடு நடந்து உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை விரைவில் முடிவடையும். அதன் பிறகு தான் நடவடிக்கை எடுப்பது குறித்த விவரம் தெரிய தெரியவரும்’’ என்கிறார்கள். 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பத்திர முறைகேடு; எஸ்.ஐ.டி. விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Electoral bond SIT A case in the Supreme Court for investigation

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கி மூலம் தேர்தல் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் தேர்தல் பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி, இந்த நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது ஆகிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது. அந்த தனிநபரோ அல்லது கார்ப்பரேட் நிறுவனமோ இந்த பத்திரங்களை கொண்டு தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்குத் தேர்தல் நிதியாக வழங்கலாம். மேலும், அந்த கட்சிகள் 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுப்பாடுமின்றி இதனை நிதியாக மாற்றிக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால், அந்தத் தேர்தல் பத்திரத் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என்று அந்தத் திட்டத்தில் கூறப்பட்டது.

இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி (15.02.2024) தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதம் என தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் தேர்தல் பத்திர முறைகேடுகள் குறித்து சிறப்பு புலானாய்வு குழு (S.I.T. - Special Investigation Team) அமைத்து விசாரணை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது. பொதுநல வழக்குகள் மற்றும் பொதுநலன் ஆகிய அமைப்புகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், “அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை விசாரணையில் சிக்கிய பல நிறுவனஙகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்துள்ளதால் விரிவான விசாரணை தேவை. முக்கிய விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை ஊழலுக்கு துணை போயிருக்கின்றன. எனவே இது தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.