Skip to main content

போராட்டம்.. போராட்டம்ன்னு போய்ட்டா தமிழ்நாடு சுடுகாடாக மாறும்: கோபமடைந்த ரஜினிகாந்த்!

Published on 30/05/2018 | Edited on 31/05/2018
raj

 

 


தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தூத்துக்குடி போராட்டத்தின்போது சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர். உளவுத்துறையின் தோல்வியே போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவக் காரணம். தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம், போலீஸ் குடியிருப்புகளுக்கு தீ வைத்தது எல்லாம் பொதுமக்கள் அல்ல. சமூக விரோதிகள் மற்றும் விஷக் கிருமிகள். அவர்கள்தான் இந்த வேலையை செய்துள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர்.

தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துள்ளனர். ஜெயலலிதா சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கியிருந்தார். தற்போதைய அரசு அதனைப் பின்பற்ற வேண்டும். சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்களை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

தூத்துக்குடி போராட்டத்தின்போது சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர் என்ற ரஜினியின் இந்த கருத்து அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ரஜினிகாந்த் தூத்துக்குடி போராட்டத்தை கொச்சப்படுத்தியதாக பலரும் குற்றம்சாட்டி அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

 


இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்பிய அவர், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம்,

செய்தியாளர்: தூத்துக்குடி போராட்டத்தை நீங்கள் கொச்சைப்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன?

ரஜினி: யார்? யார் குற்றம்சாட்டியுள்ளனர்?

செய்தியாளர்: எதிர்கட்சியான திமுக, கம்யூனிஸ்ட், திருமாவளவன் உட்பட பலரிடம் இருந்து போராட்டத்தின்போது சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர் என்று நீங்கள் சொன்ன கருத்துக்கு பலத்த எதிர்ப்பு வந்துள்ளது. யார் சமூக விரோதிகள் என மக்களை குற்றம்சாட்டுகிறாரா?

ரஜினி: சரிங்க.. மக்கள் இல்லைங்க. போராட்டத்தில் கடைசியில் வந்துவிட்டு ஏதோ சமூக விரோதிகள் உள்ளே புகுந்துவிட்டு தான் அதை கெடுத்தது. ஜல்லிக்கட்டில் கடைசி நேரத்தில் எப்படி கெடுத்தார்களோ...அதேபோல் இப்போதும் செய்துள்ளார்கள். அங்கு இருந்தவர்கள் அப்பாவி மக்கள். மீனவர்கள் அவர்கள் தான் இருந்தார்கள். சமூக விரோதிகள் தான் வந்து கெடுத்துவிட்டு போலீசை அடித்ததும் அவர்கள்தான்.. கலெக்டர் அலுவலகத்தை தாக்கியதும் அவர்கள் தான்.. குடியிருப்பு பகுதியை ஏறித்ததும் அவர்கள்தான்..

செய்தியாளர்: இது உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேள்வி எழுப்புகின்றனர்?

ரஜினி: அது எப்படி தெரியும் என்று கேட்க வேண்டாம்.. அது தெரியும்..

செய்தியாளர்: 10 நாள் ஆகிறது, ஏன் காவல்துறையும், தமிழக அரசும் அந்த சமூகவிரோதிகள் யார் என்று நடவடிக்கை எடுக்கவில்லை?

ரஜினி: அது தான் சீக்கிரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. வெளியே கொண்டுவந்து எல்லோருக்கும் காட்ட வேண்டும்..

செய்தியாளர்: போலீசுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கிறீர்கள்....

ரஜினி: இந்த பிரச்சனை தொடங்கியதே போலீசை அடித்த பின்பு தான்... சமூகவிரோதிகள் போலீசை தாக்கினர். அப்போது தான் பிரச்சனை தொடங்கியது.. காவல்துறையை யூனிபார்முடன் யார் அடித்தாலும் எப்போதும் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று ஆவேசமடைந்தார்...

ஹேய் வேறு எதாவது கேள்வி இருக்கா?... என சுற்றி நின்ற பத்திரிகையாளர்களை பார்த்து வரிசையாக கையை நீட்டி ஆக்ரோஷமாக கேட்டார்...

செய்தியாளர்: மக்கள் போராட்டத்தை தமிழக அரசு மதிக்கவில்லை என்கிற கருத்து...

ரஜினி: மக்கள் போராட்டம், போராட்டம், போராட்டம்ன்னு சொல்லி போய்விட்டால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் என்று கூறி ஆவேசமாக கிளம்பிவிட்டார்.

சார்ந்த செய்திகள்