Skip to main content

எமோஜிக்கள் சூழ் உலகு...  ஆதியை நோக்கித் திரும்பும் மனிதன்?   

Published on 17/07/2018 | Edited on 17/07/2018

இந்த உலகம் தோன்றி, மொழிகள் பிறப்பதற்கு முன், கண் ஜாடை, கை ஜாடை மொழிகளை பேசிய மனித இனம் எந்த எழுத்துக்களைப் பயன்படுத்தி வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் என்ற கேள்விக்கு அறிவியல் சொல்கிறது 'பிக்ட்டோக்ராம்' (Pictogram) எனப்படும் சித்திர எழுத்துக்களைத்தான் முதலில் பயன்படுத்தினர் என்று.

 

emojees



மாயன்களின் நாட்காட்டியும், எகிப்திலும், சுமேரியாவிலும் ,வட அமெரிக்காவிலும் 1500களில் பயன்படுத்தப்பட்ட சித்திர எழுத்துக்களால் ஆன சான்றுகள் இன்று வரை உள்ளது. பிறகு நாகரிக வளர்ச்சியால் மனிதன் பல மொழிகளை உருவாக்கி அதில் மாற்றங்களைக் கொண்டுவந்து எழுத்துருக்களைத் தோற்றுவித்து செழுமைப் படுத்தினான் என்பது நாம் அறிந்ததே.

இத்தனை மொழிகள், இத்தனை நாகரிகம், இத்தனை பண்பாடு என அத்தனையும் வளர்ந்த பின் மீண்டும் காலச்சக்கரத்தின் சுழற்சியில் அதே ஆதி மொழியான சித்திர மொழிகள் மீண்டும் புதுப்பொலிவுடன் 'எமோஜி' எனும் பெயர் தாங்கி இன்றைய இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த எமோஜிக்கள் நம் உணர்வுகளை உருமாற்றம் செய்யாமல் அப்படியே காட்டுவதால் உலகம் முழுவதும் உள்ள பல மொழிகளில் குறுஞ்செய்தி அனுப்பும் மக்களுக்கான பொது மொழியாக எமோஜிக்கள் உள்ளன.


இந்த நவீன எமோஜிக்களின் பிறப்பிடம் ஜப்பான். ஜப்பான் நாட்டில் 1998ம் ஆண்டு NTT DOCOMO எனும் செல்போன் நிறுவனத்திற்காக ஷிகேடிகா குரிடா (shigetaka kurita) என்னும் தொழில்நுட்ப விஞ்ஞானியின் உழைப்பில் பிறந்ததுதான் இந்த எமோஜிக்கள். சீன எழுத்துக்களாகவும் குறியீடுகளாகவும் உருவான எமோஜிக்கள் காலப்போக்கில், மனித உணர்வுகளைக் குறிக்கும் சித்திரமாகவும், பல்வேறு காலநிலை, பழங்கள், ஹார்ட்டின்கள், என பல வடிவங்களில் எமோஜிக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

  emoji finder



இந்த எமோஜிக்கள் யுனிகோட் வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டு எல்லா மென்பொருள் இயங்குதளத்திலும் பயன்படுகிறது.எமோஜிக்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ததில் ஆப்பிள் நிறுவனத்திற்கு முக்கிய பங்கு உண்டு.ஆப்பிள் நிறுவனம் தனது MAC இயங்குதளத்திற்கு வடிவமைத்த நாள்காட்டி எமோஜியில் அது வெளியிடப்பட்ட நாளான ஜுலை 17 2002 என்ற நாளைக் காட்டும்படி வடிவமைத்தது. அதனால் ஆண்டு தோறும் ஜுலை 17ம் நாள் உலக எமோஜி தினமாகக் கொண்டாடப்படுகிறது. மைக்ரோசாப்ட், பேஸ்புக் ,வாட்ஸ் அப் போன்ற நிறுவனங்களும் தன் பங்கிற்கு பல புதிய எமோஜிக்களை யுனிகோட் வடிவில் வெளியிட்டுள்ளது.


பல எமோஜிக்கள் இருந்தாலும் சிரித்துக் கொண்டே அழும் எமோஜிதான் உலக அளவில் மிகப் பிரபலம், அதற்கு சான்றாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தனது அகராதியில் இந்த எமோஜிக்கான வார்த்தையாக "Face of joy with tears" என்பதை 2015ம் ஆண்டுக்கான புதிய வார்த்தையாக வெளியிட்டது. கடந்த ஆண்டு மிச்சிகன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் உலகம் முழுவதும் 1.2 பில்லியன் குறுஞ்செய்திகள் எமோஜிக்களைக் கொண்டு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கிறது.

  emoji



மேலும் அதிகம் பயன்படுத்தும் எமோஜிக்களாக  'சிரித்துக்கொண்டே அழும் ஸ்மைலியும்' 'ஹார்ட்டின் ஸ்மைலியும்' 'கண்களில் ஹார்ட்டின் உள்ள ஸ்மைலியும்' முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது. இன்னமும் எமோஜிக்களைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் பல தகவல்களை விக்கிப்பீடியா தெரிவிக்கிறது. மிக நீண்ட நேரம் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டிய செய்தியை ஒரே புகைப்படத்தில் சொல்லிவிடும் இந்த எமோஜிக்கள் ஆங்கிலம் தெரியாதவர்களுக்கும், நேரத்தை மிச்சப்படுத்த நினைப்பவர்களுக்கும் கிடைத்த வரம் என்றே சொல்லலாம்.

"கண்ணோடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் 
என்ன பயனும் இல"
என்பதைப்போல எமோஜிக்கள் வந்த பிறகு எழுத்துகள் அதிகம் பயன்படுவதில்லை. புன்னகை நிறைந்த உலகத்தை உருவாக்குவதில் இந்த ஸ்மைலிக்களுக்கும்  ஒரு சிறிய இடம் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.



 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

காவலாளி டூ கரீபியன் ஹீரோ; உத்வேகம் அளிக்கும் சமர் ஜோஸப் கிரிக்கெட் பயணம்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
shamar joseph cricket journey

காபாவில் ஆஸ்திரேலிய அணியைக் காலி செய்த சமர் ஜோஸப், முதல் பந்திலேயே ஸ்மித் விக்கெட் எடுத்து சாதித்த ஜோஸப், மேற்கு இந்திய தீவுகளின் அடுத்த வால்ஸா இந்த ஜோஸப் என கடந்த இரண்டு வாரமாக கிரிக்கெட் உலகம், சமூக வலைத்தளங்கள்  முழுவதும் என  சமர் ஜோஸப் பேச்சு தான். யார் இந்த சமர் ஜோஸப் ?

மேற்கு இந்திய தீவுகளில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தாலும் தன்னுடைய பொருளாதார சூழ்நிலையால் தொழில் முறை கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை. படிக்கவும் முடியாத சமர் ஜோஸப் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆகப் பணிபுரிந்து கொண்டே கிரிக்கெட் மீது கொண்ட தீராப் பற்றால் விடாமுயற்சியால் கயானா அணிக்கு நெட் பவுலராக தேர்வாகிறார். செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டே நெட் பவுலராகச் சேர்ந்து அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்ப தேவைக்காக பயன்படுத்துகிறார்.

இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி என்னும் ஒரு அணி உள்ளது. அதன் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் உள்ளார். அந்த அணிக்கு அனலிஸ்ட் ஆக, கிரிக்கெட் வீரர் அஸ்வின் நண்பரான பிரசன்னா உள்ளார். கடந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளின் பயிற்சிக்காக நெட் பவுலிங் செய்த சமர் ஜோஸப் திறமையை பார்த்த பிரசன்னா, ஜோஸப்பை கூடுதல் வேகமாக பந்து வீச சொன்னபோது, அப்படியே செய்து அசத்த, கேப்டன் இம்ரானிடம், இவரை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார். அன்று தான் தொழில் முறை கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த போட்டியிலேயே கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக களமிறங்கினார். கடந்த வருடம் கயானா அணியும் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முதல் தர போட்டிகளில் பங்குபெற்று சிறப்பாக ஆடி, தேசிய அணியில் இடம் பிடித்தார். தன் அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே உலகின் மிக்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின் விக்கெட்டை தனது கிரிக்கெட் கேரியரின் முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். அந்த முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தாலும் பரபரப்பான இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்கு 217 ரன்கள் என்ற  இலக்கு. எளிதாக வென்று விடுவார்கள் என்று நினைத்த போது, சமர் ஜோஸப்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய சமர் ஜோஸப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிக்கு முக்கிய காரண்மாக அமைந்தார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்த போது ஸ்டார்க் வீசிய பந்து சமர் ஜோஸப் பாதத்தை பதம் பார்த்து வெளியேறிய போதும், பதறாமல் பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை காபா மைதானத்தில் வீழ்த்த உறுதுணையாக இருந்தார். காபாவில் ஆஸியை வீழ்த்த முடியாது என்ற மாயையை இந்திய அணி முதலில் தகர்த்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி இனி டி 20 அணி மட்டுமே என்று விமர்சித்தவர்களே வியக்கும் வண்ணம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

வால்ஸ், மார்ஷல், ஆம்ப்ரோஸ், மைக்கேல் ஹோல்டிங் என வேகப்பந்து வீச்சுக்கு புகழ் பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு அப்படி பெயர் சொல்ல ஒரு வீரர் இல்லையே என்ற ஏக்கத்தைத் தீர்க்க இந்த சமர் ஜோஸப் இருக்கிறார் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரசிகர்களும், உலக கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள், அவர் வாழும் பராகரா என்ற கிராமத்தில் 2018 வரை இண்டர்நெட் இல்லை, ஆனால் தற்போது இண்டர்நெட் முழுவதும் அவர் பேச்சு தான் எனவும், காவலாளி டூ கரீபியன் ஹீரோ எனவும் சமர் ஜோஸப் பற்றி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

- வெ.அருண்குமார்