Skip to main content

திருவண்ணாமலை சிப்காட் விவகாரத்தில் நடந்தது என்ன?

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

What happened in the Tiruvannamalai chipcat case?

 

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய சிப்காட் தொழிற்பூங்கா திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் – காஞ்சிபுரம் அருகே 2,937 ஏக்கர் பரப்பளவில் இரு அலகுகள் செயல்பட்டு வருகிறது. பல்லாயிரக் கணக்கானோர் இங்குள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது மேல்மா, குரும்பூர், வட ஆளப்பிறந்தான், தேத்துறை, இளநீர்குன்றம், அத்தி, காட்டுக்குடிசை, நர்மாபள்ளம், வீரம்பாக்கம் உட்பட 11 கிராமங்கள். இங்கு சிப்காட் மூன்றாவது அலகை அமைப்பதற்காக அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில், 2018 ஆம் ஆண்டு 3174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலேயே அரசாணை வெளியிடப்பட்டது.

 

திமுக ஆட்சி அமைந்ததும் தொழில்துறையை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. செய்யார் சிப்காட் தொழிற்பூங்காவில் மேல்மா சிப்காட் விரிவாக்கப் பணிகள் 54 அலகுகளாகப் பிரித்து 20 அலகுகள் வரை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்ட இடத்தினை கையகப்படுத்தி பணிகளைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டது. இதனை எதிர்த்து மேல்மா கிராமத்தை மையமாக வைத்து 13 கிராம மக்கள் அமைதிப் போராட்டம் நடத்தத் துவங்கினர். ஜூலை 2 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் தொடர்ச்சியாக நடந்து வந்தது. சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகேயும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தினர். கடந்த மாதம், அரசாணை பிறப்பித்த அதிமுகவும், நிலங்களைக் கையகப்படுத்தக்கூடாது என முரணாகப் போராட்டம் நடத்தியது.

 

What happened in the Tiruvannamalai chipcat case?
மக்கள் போராட்டம்

 

இந்நிலையில் நவம்பர் 2 ஆம் தேதி தங்களது நிலத்தைக் கையகப்படுத்தக்கூடாது, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்கிற தங்களது கோரிக்கையை, போராட்டத்தை கண்டுகொள்ளாத அரசாங்கத்தை கண்டித்து தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை செய்யாறு உதவி கலெக்டர் அனாமிகாவிடம் ஒப்படைக்க, செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முகப்பு வாயிலிலிருந்து விவசாயிகள் ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். அனுமதியின்றி ஒன்றுகூடி ஊர்வலமாகச் செல்ல முயன்றதாக 96 பெண்கள் உள்பட 147 விவசாயிகளைக் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்த போலீஸார், செய்யாறு நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். வழக்குப் பதிவு செய்த போலீஸார் அன்றிரவு சொந்த ஜாமீனில் விடுவித்தும் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்யாறு சப் கலெக்டர் அனாமிகா வந்து, அவர்களது கோரிக்கை மனுவினை வாங்கிக் கொண்டார்.

 

What happened in the Tiruvannamalai chipcat case?
செய்யாறு சப் கலெக்டர் அனாமிகா

 

நவம்பர் 4 ஆம் தேதி விடியற்காலை போராட்டத்தில் முன்னின்ற 20 பேரைக் கைது செய்து ஒரே சிறையில் அடைக்காமல் வேலூர், கடலூர், புழல் எனப் பிரித்து சிறையில் அடைத்தனர். மேல்மா கூட்டுச் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எஸ்.பி கார்த்திகேயன் தலைமையிலான 500 அதிரடிப்படை போலீஸார் போராட்டப் பந்தலைப் பிரித்து அவர்களைப் பலவந்தமாகப் போராட்டத்தைக் கைவிடச் செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த பேருந்து கண்ணாடி அடித்து உடைக்கப்பட்டது. அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

What happened in the Tiruvannamalai chipcat case?
கலெக்டர் பா. முருகேஷ்

 

இந்நிலையில் நவம்பர் 15 ஆம் தேதி, திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் எஸ்.பி. கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் பா. முருகேஷ், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா அத்திப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான அருள், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா தேத்துறை கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன், எருமைவெட்டி தேவன், மணிப்புரம் சோழன், மேல்மா திருமால், நர்மாபள்ளம் மாசிலாமணி, குறும்பூர் பாக்யராஜ் ஆகியோருக்கு குண்டர் தடுப்பு காவலில் வைப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. 

 

விவசாயிகள் தங்களது வாழ்வுரிமைக்காகப் போராடுகிறார்கள். அவர்களைக் குண்டர்கள்போல் கைது செய்வது எந்த விதத்திலும் சரியானதல்ல என எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி சீமான், அ.ம.மு.க. டிடிவி தினகரன், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ஆளும் கட்சி கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.வும் வாழ்வுரிமை கட்சித் தலைவருமான வேல்முருகன், திருமுருகன் காந்தி உட்பட அனைவரும் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

What happened in the Tiruvannamalai chipcat case?
முதல்வர் மு.க. ஸ்டாலின்

 

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ. வேலு, “கிருஷ்ணகிரியில் இருந்து இங்கு போராட்டம் நடத்துகின்றனர்” என்று தெரிவித்திருந்தார். மேலும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தார் தமிழ்நாடு அரசிடம், வெளியாட்களின் தூண்டுதலின் பேரில் இத்தகைய தவறை செய்யமாட்டோம் எனக் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து நேற்று (17ம் தேதி) மாலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கைதான 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.

 

 

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.