Skip to main content

கலைஞருக்காக நாங்கள் இருந்த உண்ணும் விரதம்! - வைகோ பகிர்ந்த சுவாரசிய நினைவு  

Published on 29/07/2018 | Edited on 29/07/2018

மதிமுக தலைவர் வைகோ, முன்பு ஒரு மேடையில் கலைஞருக்கும் தனக்குமான உறவைப் பற்றி பகிர்ந்து கொண்டது...
 

vaiko with kalaingar



"ஒரு பாசறையின் போர் வீரனாக, ஒரு உலைக் களத்திலே வார்ப்பிக்கப்பட்ட ஆயுதமாக, நான் திராவிட முன்னேற்ற கழகத்தில் தயாரிக்கப்பட்டவன். என்னை வார்ப்பித்தவர், ஆருயிர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள். அண்ணன் கலைஞரும் நானும், அண்ணனும் தம்பியாக பழகிய சம்பவங்கள் இவை. நான் பேரறிஞர் அண்ணா அவர்களின் முன்னிலையில் 1964 ஆகஸ்ட் 21ஆம் தேதி கோகலே மண்டபத்தில் உரையாற்றி நுங்கம்பாக்கத்தில் அவரை சந்தித்து அவரது அன்பைப் பெற்றவன். அதே ஆண்டில் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களை சந்தித்தேன். பாளையங்கோட்டை தனிமைச் சிறைச் சாலையிலே, இந்தி எதிர்ப்பு மொழி புரட்சிக்கு காரணகர்த்தா என்று அடைக்கப்பட்ட அவர் மீண்டு வந்தார். அதே 65வது ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மாநில கல்லூரியின் தமிழ் மன்ற தலைவராக நான் அவரை அழைத்துச் சென்று புதிய புறநானூறு என்ற தலைப்பிலே, என்னுடைய தலைமையிலே அவர் உரையாற்றினார்.

 

vaiko young



சட்டக்கல்லூரி மாணவர் பேரவை தலைவர் தேர்தலில் நான்தான் போட்டியிட வேண்டும் என்ற என் இனிய சகோதரர் முரசொலி செல்வம் அவர்கள் வற்புறுத்தலால் நான் போட்டியிட்டு, குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் நான் தோற்றுப்போன பொழுது, நுங்கம்பாக்கம் அண்ணா இல்லத்திற்கு சென்றேன். அவர் என்னை ஆசுவாசப்படுத்தி அவர் 'உனக்கு எந்த ஊர்' என்று கேட்க நான் பதில் சொல்லி பேசிவிட்டு வந்தேன். அங்கிருந்து எழும்பூர் ரயிலடிக்கு ஓடி வந்து அண்ணன் கலைஞர் அவர்களை அவசர அவசரமாக 'புறப்படுவதற்கு முன் பார்த்துவிட வேண்டும்' என்று விரைந்து வந்த வேளையிலே அவர் ரயில் படிக்கட்டுக்கு மேல் ஏறி நிற்கிறார், அருகில் சென்றவுடன் தேர்தல் முடிவுகளைக் கேட்டார். தோளைத்தட்டிக்  கொடுத்து 'இதை பற்றியெல்லாம் நீ கவலைப்படாதே' என்று சொல்லிவிட்டுப் போனார்.

அந்தத் தேர்தலுக்கு சில நாட்களுக்குப் பிறகு, பேரறிஞர் அண்ணா மறைந்தார். அவரது சிலையை சட்டகல்லூரியிலே நாங்கள் அமைக்கிறோம். அண்ணா சிலை திறப்பு விழாவுக்கு முதலமைச்சர் கலைஞரை அழைக்கிறோம். கலைஞர், அண்ணா சிலையை திறக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி மாணவர்கள் சட்டக் கல்லூரி வாசலிலே உண்ணாவிரதம் இருந்தார்கள். நானும் தோழர்களும் அவர்களுக்கு நேர் எதிரே 'உண்ணும் விரதம்' என்ற பெயரில் பல்வேறு தின்பண்டங்களை, அவர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அவர்கள் மிகுந்த எரிச்சலடைந்தார்கள், நாங்கள் விழாவுக்கான வேலைகளைத் தொடர்ந்தோம்.

 

vaiko with kalaingar2



குறிப்பிட்ட நாள் வந்தது அண்ணா சிலை திறக்க  முதலமைச்சர் கலைஞர் வந்துகொண்டு இருக்கிறார் கோபாலபுரத்தில் இருந்து. கறுப்புக்கொடி காட்டுவோம் என்று அறிவித்த அந்த தோழர்கள் மாணவர்கள் ஒரு நாற்பது ஐம்பது பேர் கறுப்புக்கொடியோடு வந்து கலைஞருக்கு எதிராக முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் கெல்லிஸ் விடுதியிலே இருந்தோம். என்னோடு வந்தவர்கள் மட்டும் ஐம்பது பேர், தெற்குச் சீமைக்காரர்கள், நாங்களும் கரங்களில் கொடிகளை ஏந்தி வந்தோம். வலுவான கம்புகளில் கட்டப்பட்ட கொடிகள். அவர்கள் கறுப்புக்  கொடி காட்டத் தொடங்கிய அடுத்த நிமிடதில் சிலம்பமாக சுழன்றன  எங்கள் தடிகள். அவர்கள் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடினார்கள்.

 

 


காவல் துறையினர் கலகம் நடக்கிறது என்று சொன்னவுடன் அண்ணன் கலைஞர் அவர்கள் இல்லம் திரும்பிவிட்டார், பதறிப்போன நான் காவல்துறை அதிகாரிகளிடம், 'அவர்கள்தான் ஓடி மறைந்து விட்டார்களே, முதலமைச்சரை அழைத்து வாருங்கள், இங்கே ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டிருக்கிறோம் என்று கூறினேன்.

கலைஞர் வந்தார். அந்த மேடையில் ஏறி உரையாற்றினார். "அந்நியர் வந்து புகுந்து வாலாட்டினால் உதை விழுங் காண்" என்ற பாடல் வரிகளை பொருத்தமான இடத்திலே சொன்னார். வெற்றிபெற்ற மாணவர் பேரவைத் தலைவர் வரவேற்பு பத்திரம் வாசிக்க வேண்டும். அவர் வரமாட்டேன் என்று தெரிவித்து விட்டார். அப்படியானால் வரவேற்பு பத்திரம் வாசிப்பது யார்? தேர்தலில் தோற்றுப் போன வைகோ வரவேற்பு பத்திரத்தைத் தயாரித்துக் கொண்டு வரட்டும் என்று கூறிவிட்டார்கள். நான் அந்த வரவேற்பு பத்திரத்தை ஆங்கிலத்தில் தயாரித்தேன். 'K... ஸ்டேன்ட்ஸ் ஃபார் கைண்ட் ஹார்ட், A ஸ்டேன்ட்ஸ் ஃபார் அட்மினிஸ்ட்ரேட்டர், R... ரைட் திங்கிங், I... இன்விசிபில் ஃபோர்ஸ் என வரிசையாக கருணாநிதி (KARUNANIDHI) என்னும் பெயரின்  ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வாக்கியத்தை ஆங்கிலத்தில் தயாரித்து, அந்த வாழ்த்து மடலை வாசித்து முதலமைச்சர் கலைஞரிடம் கொடுத்தேன்.

 

 


மறுநாள் காலை தமிழ்நாடு பூராகவும் தினத்தந்தி ஏட்டில் முதல் பக்கத்தில் 'முதலமைச்சருக்கு சட்டக்கல்லூரியிலே அண்ணா சிலை திறக்கின்ற பொழுது வரவேற்பு' என்று நான் அவரிடம் அந்தப் பத்திரத்தைக் கொடுப்பது போன்ற புகைப்படம் வந்தது. அந்தப் புகைப்படத்தைத்தான் இன்றும் வீட்டில் மாட்டி வைத்திருக்கிறேன். 1961 முதல் 89 இறுதிவரை அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் அகில இந்திய தலைவர்களையும் உலகத் தலைவர்களையும் கழகத்தின் கடைசி தொண்டனையும் சந்திக்கின்ற அந்த முதல் மாடி அறையில் ஒரே ஒரு வரவேற்பு மடலைத்தான் மாட்டிவைத்திருந்தார் அது நான் கொடுத்த மடல்." 


 

 

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது” - வைகோ

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
"BJP's election ,manifesto will not be taken in Tamil Nadu says Vaiko

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் சென்று கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி இருவரும் ஆறுதல் கூறினர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் எனப் பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து, புதிதாக (டெஸ்ட்)சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபாடாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்தபோது எட்டிக் கூட பார்க்காத பிரதமர்  எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் எனத் தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க மாநில தலைவர்  வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரச்சாரம் செய்து வருகிறார்‌. இதற்கு தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.