Skip to main content

ரஜினியால் பலன் இல்லை என நினைக்கும் பாஜக... லாக்டவுனால் அரசியலில் பிரேக்டவுனா? வெளிவந்த களநிலவரம்! 

Published on 20/05/2020 | Edited on 20/05/2020

 

rajini



மார்ச் 12-ஆம் தேதி சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி. ’நான் கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன். ஆட்சித் தலைமைக்கு ஒரு நியாயவானை நியமிப்பேன்'' என அந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் புதுவித அரசியல் பாணியை அறிவித்தார். இது அவரது மன்றத்தினரையே கொஞ்சம் அதிர வைத்தாலும், தலைவர் சொன்னா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்’ என தங்களை சமாதானப்படுத்திக்கொண்டனர். ரஜினியின் நியூ பாலிடிக்ஸ் பாலிஸியை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழகமெங்கும் போஸ்டர்களை ஒட்டித் தள்ளினார்கள். மறுபுறமோ ‘ரஜினி முதல்வராகியே தீருவார், தாழ்ந்து கிடக்கும் தமிழகம் தலை நிமிரும்’ என்றெல்லாம் ஆசைக் குரல் எழும்பிக்கொண்டிருந்தன. ராஜகுருக்கள்களும் அரசியல் ஆலோசகர்களும் அட்செட்டானார்கள். மீடியாக்களில், ‘ஏப்ரலில் ரஜினி கட்சி தொடங்குகிறார். ஆகஸ்ட்டில் மதுரையில் மாநாடு நடத்துகிறார். டிசம்பரில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கிறார். ஜனவரியில் அறிவிக்கிறார். 2021 மே மாதம் ஆட்சியைப் பிடிக்கிறார் என்றெல்லாம் நியூஸ்களை தெறிக்கவிட்டார்கள்.


இப்படியெல்லாம் நிலைமை போய்க்கொண்டிருந்தபோதுதான் கரோனா லாக்டவுன் வந்து இந்திய மக்களையும் அரசியல் நடவடிக்கைகளையும் முடக்கியது. அகில இந்திய அரசியலைப் பொறுத்தவரை பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ், காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.க. என்பதுதான் எதார்த்தம். பெரும்பான்மையான மாநிலங்களிலும் இதே நிலைமைதான்.

 

 

dmk



தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க.விற்கு எதிராக அ.தி.மு.க., அ.தி.மு.க.விற்கு எதிராக தி.மு.க. என்பதுதான் முதல்நிலை அரசியல். மற்ற கட்சிகளின் அரசியலெல்லாம் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என்பதுதான் உண்மை. இப்போது கரோனா காலத்தில்கூட ஆளும்கட்சியான அ.தி.மு.க.வுக்கும் எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கும் இடையேதான் வார்த்தைப் போர்களும் அறிக்கைப் போர்களும் நடந்து கொண்டிருக்கின்றன. ஏழைகளுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் ஆளுங்கட்சி என்ற முறையில் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துகிறது அ.தி.மு.க. அதேநேரத்தில், எதிர்க்கட்சியான தி.மு.க.வோ ஒன்றிணைவோம் வா எனும் பெயரில் உணவு, உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை மாவட்டவாரியாக வீடுதேடிச் சென்று வழங்கியதுடன், தங்களின் ஹெல்ப்லைனுக்கு வந்த கோரிக்கைகளில் நிறை வேற்ற முடியாதவற்றை கோரிக்கை மனுக்களாக அந்தந்த மாவட்டக் கலெக்டர்களிடம் வழங்கியுள்ளது. அதனால், கரோனா யுத்தத்திலும் அ.தி.மு.க-தி.மு.க. என்றே அரசியல் களம் வரிந்துகட்டி நிற்கிறது.

கட்சியே ஆரம்பிக்காத ரஜினியும், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து இரண்டு தேர்தல் களம் கண்ட கமலும் தாங்கள் சார்ந்த திரைத் துறைக்கு உதவி செய்திருக்கிறார்களே தவிர, பொது மக்களுக்கு பெரிதாக எந்த உதவியும் நேரடியாக செய்யவில்லை. இருவரது அமைப்பைச் சேர்ந்த மா.செ.க்களும் ஒ.செ.க்களும் தங்களது சொந்தக் காசில் உதவி செய்து, மக்களிடம் ஓரளவு நெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப் பட்டு, இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பினாலும் “குறைந்தது இன்னும் இரண்டு வருடங்களுக்காவது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

 

mnm



“இந்த எச்சரிக்கை அனைத்து அரசியல் நடவடிக்கைகளிலும் எதிரொலிக்கும். அதாவது தேர்தல்கால பிரம்மாண்ட பொதுக்கூட்டம், நெருக்கியடிக்கும் தெருமுனைக் கூட்டம், வேனில் பிரச்சாரம் இவற்றிலெல்லாம் பெரிய மாற்றத்தை உருவாக்கும். இன்னும் சொல்லப்போனால் வாக்குப்பதிவு முறைகளிலேயே மிகப்பெரிய மாற்றம் நடக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இப்படிப்பட்ட சூழலில் ரஜினியின் ‘நியூ பொலிடிக்கல் பாலிஸி’ டிரெண்ட்டிங் ஆகுமா- பிரேக் டவுன் ஆகுமா? என்பதை அறிய அண்ணா காலத்து அரசியல் வாதியும் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக இருந்த எழுத்தாளர் சோலையின் நெருங்கிய நண்பருமான திண்டுக்கல் தம்பிதுரையை தொடர்புகொண்டோம். 90 வயதிலும் மிகத்தெளிவாக கணீர்க் குரலில் நம்மிடம் பேச ஆரம்பித்தார் தம்பிதுரை.


"ஏழைகள், அடித்தட்டு மக்களின் அவலத்தையும் ஏக்கத்தையும் தனது சினிமாவில் எதிரொலித்தவர் எம்.ஜி.ஆர். அவரது முக்கால்வாசி சினிமாக்கள் தாயின் பெருமை பேசும். நான் ஆணையிட்டால்... ஏழைகள் வேதனைப்படமாட்டார்கள் என சினிமாவில் வெளிப்படுத்திய நடிப்பை அரசியலிலும் வெளிப்படுத்தியதுதான் எம்.ஜி.ஆரின் மாபெரும் பலம். தனக்கு கிட்னி கொடுத்து உதவிய தனது அண்ணன் மகள் லீலா வதிக்கு பணம் கொடுத்தாரே தவிர, பதவி எதுவும் கொடுக்க வில்லை. தனது அரசியல் வாரிசாக யாரையும் அடையாளம் காட்டவில்லை எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, அ.தி.மு.க.வுக்குள் நுழைந்த கதை வேறு, வீழ்ந்த கதை வேறு. எம்.ஜி.ஆர். தனது சொத்துகளை ஏழைகளுக்கு எழுதிவைத்து அரசியல் நடிப்பை உறுதி செய்தார்.

ரஜினி, கமல் இருவரின் சினிமாக்கள் எல்லாமே விசில் அடிச்சு ரசிக்கும் ரகங்கள் மட்டுமே. மேற்படி இருவருமே அரசியலில் தாராளம் காட்டி தங்களது பொருளாதார இழப்புக்கு தயாரில்லாதவர்கள். இதன் அடிப்படையிலும் இத்தனை ஆண்டுகால தமிழக அரசியலை நான் கவனித்துவரும் நிலையிலும் எனது கணிப்பு ரஜினி கட்சி தொடங்கமாட்டார் என்பதுதான். அதை மீறி கட்சி ஆரம்பித்தாலும் பலன் இருக்காது என்பது பி.ஜே.பி. மேலிடத்திற்கு நன்றாகத் தெரியும்.

கமலைப் பொறுத்தவரை 20 எம்.எல்.ஏ. சீட்டுகளை வாங்குவதற்கேற்ப அரசியல் நடத்துவார். ஆனால் அதை எந்த அணியிடம் வாங்குவார் என்பதுதான் பிரச்சினையே. இன்னொரு முக்கியமான விஷயம்… தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் பணபலம், படைபலத்தால் தமிழக வாக்காளர்களில் சரி பாதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன. இதை தகர்ப்பதென்பது ரஜினிக்கும் கமலுக்கும் பெரும் சவால்'' என்கிறார் ஆணித்தரமாக.

இந்த ஊரடங்கு நேரத்தில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் தவியாய் தவித்துக்கொண்டிருக்கும்போதுகூட, மத்திய பா.ஜ.க அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட்டைத் திறந்து சுங்க கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது, வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிய வங்கிக் கொள்ளையர்களின் 68 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. இப்படி மக்கள் வயிறெரியும் செயல்களையெல்லாம் மகிழ்ச்சியுடன் செய்யும் மோடியின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சிக்கிறார் கமல். ஆனால் ரஜினியோ அந்த அரசியலுக்குள் நுழைய விரும்பவில்லை. அதே நேரத்தில், எடப்பாடி அரசின் டாஸ்மாக் திறப்பிற்கு எதிராக கோபம் காண்பிக்கிறார். கஜானாவை நிரப்ப நல்ல வழியை பாருங்கள், இல்லையென்றால் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற கனவு பலிக்காது என ட்விட்டரில் எடப்பாடியை எச்சரிக்கிறார்.

அவரது ரசிகர்களோ,“கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு சொல்றவரு மீண்டும் எடப்பாடி ஆட்சின்னு ஏன் சொல்லணும்? எப்போது கட்சி ஆரம்பிப்பார்? தேர்தல் வியூகம் என்னவாக இருக்கும்?’’என ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள். அதேநேரத்தில், ரஜினியோ அரசியல் உயர்மட்டக் குழு அமைப்பதிலும் கட்சி தொடங்குவதற்கான சில முன்னெடுப்பு வேலைகளை ஆரம்பித்துவிட்டார் என்கிறது ரஜினியின் நெருக்கமான நட்பு வட்டம்.
 

y



கமலின் மக்கள் நீதி மய்யத்திலோ கிருஷ்ண அய்யர் என்பவர் அரசியல் கொள்கை வகுப்பாளராகவும், கமலுக்கு ஆலோசகராகவும் உள்ளாராம். மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் ம.நீ.ம.வுக்கு ஆன்லைனில் 1000 உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் எனச் சொல்லியுள்ளாராம். கட்சியின் மேல்மட்டப் புள்ளிகளான மகேந்திரன், கமீலா நாசர், சினேகன் ஆகியோரின் ஆதரவாளர்கள் தங்களுக்கு வேண்டிய பதவிகளை வாங்கி சாதித்துக் கொள்கிறார்களாம்.

இதற்கெல்லாம் விளக்கம் பெற பொதுச்செயலாளர்களான ஏ.ஜி.மௌரியாவையும் உமாதேவியையும் செல்போனில் தொடர்புகொண்டோம். நமது அழைப்பை அவர்கள் அட்டெண்ட் பண்ணவில்லை.

ஊரடங்கு முழுமையாக தளர்ந்தபின், ரஜினி-கமல் இருவரின் அரசியல் காய்நகர்த்தல்கள் வெளிப்படையாகத் தெரியவரும். லாக்டவுன் என்பது சரியான வியூகத்திற்கு வழிவகுத்துள்ளதா? அரசியலுக்கு பிரேக்டவுன் நிலையை உருவாக்கியுள்ளதா என்பதும் புரிந்துவிடும்.


 

 

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.