Skip to main content

டாஸ்மாக் விஷயத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வின் மறைமுக அரசியல்... உண்மை நிலவரம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 23/05/2020 | Edited on 23/05/2020

 

admk


உச்சநீதிமன்றம் வரை போராடி மதுக்கடைகளைத் திறந்து விட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மதுப்பிரியர்களை மனம் மகிழ வைப்பதில் "போர்க்கால' நடவடிக்கையை எடுத்திருக்கும் எடப்பாடிக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட அதன் தோழமைக் கட்சிகள் வரிந்து கட்டுகின்றன. இதனை எதிர்கொள்ளும் முகமாக தி.மு.க.வுக்கு பதிலடி தந்து வருகிறது அ.தி.மு.க.. கழகங்களின் மது அரசியல் கொடிகட்டிப் பறக்கிறது.
 


இதுகுறித்து அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி.யிடம் கேட்டபோது, ‘மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தவோ, அறிக்கை வெளியிடவோ தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எவ்வித தார்மீக தகுதியும் உரிமையும் கிடையாது. தமிழகத்தில் பாக்கெட் சாராயம் என்றும், மலிவு விலை மது என்றும் மதுக் கடைகளைத் திறந்தவிட்ட சூத்திரதாரி கலைஞர்தான். அது மட்டுமல்லாமல் மதுக்கடைகளை நடத்த தனியாருக்கு அனுமதி தந்து அரசியல் ரவுடிகளை தொழிலதிபர்களாகவும், தி.மு.க.வுக்கு பணம் காய்க்கும் மரமாகவும் வளர்த்து விட்டவர் கலைஞர்.

மேலும், தி.மு.க.வினருக்கும் தி.மு.க. ஆதரவாளர்களுக்கும் மது ஆலை லைசன்ஸ் அதிகளவில் தரப்பட்டதும் தி.மு.க. ஆட்சியில்தான். தற்போதைய நிலவரப்படி, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்களை 11 நிறுவனங்கள் சப்ளை செய்வதாகச் சொல்லப்படுகிறது. இதில், தி.மு.க.வினரிடமும் தி.மு.க.வின் ஆதரவாளர்களிடமும்தான் பல நிறுவனங்கள் இருக்கின்றன.

உண்மை இப்படி இருக்க, மதுக் கடைகளுக்கு எதிராக ஸ்டாலின் போராடுவது என்பதெல்லாம் அரசியல் லாபங்களுக்காகவும் மக்களை ஏமாற்றவும்தான். மக்கள் முட்டாள்கள் கிடையாது. மதுவிலக்கில் தி.மு.க.வின் யோக்கியதைப் பற்றி அவர்களுக்குத் தெரியும். பூரண மதுவிலக்கிலும், மக்களின் ஆரோக்கியத்திலும் உண்மையான அக்கறை இருக்குமானால், தி.மு.க.வினரும் அக்கட்சி அனுதாபிகளும் நடத்தும் மது ஆலைகளை இழுத்து மூட ஸ்டாலின் உத்தரவிடலாமே! செய்வாரா? செய்ய மாட்டார். ஏனெனில், அந்த மது ஆலைகள்தான் தி.மு.க.வின் பொன் முட்டையிடும் கோழிகள். அதனால், மதுக்கடைகளுக்கு எதிராகக் கருத்து சொல்வதற்குக்கூட தி.மு.க.வினருக்கு உரிமை கிடையாது. பூரண மதுவிலக்குதான் அ.தி.மு.க.வின் கொள்கை. காலமும் நேரமும் ஒத்துழைக்கும்போது இதனை அ.தி.மு.க. சாத்தியமாக்கும். மதுக்கடைகளைப் படிப்படியாகக் குறைப்போம் என்ற எங்கள் புரட்சித்தலைவியின் கொள்கையை நிறைவேற்றும் வகையில் ஆட்சி நடத்தி வரும் முதல்வர், அதற்கான முயற்சியில் இருக்கிறார்'' என்கிறார் மிக அழுத்தமாக.

 

dmk


தி.மு.க.வின் தென்சென்னை மா.செ.வும் சென்னையின் முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ.விடம் பேசியபோது, "பூரண மதுவிலக்கு தான் தி.மு.க.வின் உயிர்நாடி! அதனை 2016 தேர்தல் அறிக்கையில் அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறோம். மதுக்கடைகளுக்கு எதிராக, தி.மு.க. மட்டுமே உறுதியாகப் போராடி வருகிறது.

மதுஆலைகளில் தி.மு.க.மீது குற்றம்சாட்ட அ.தி.மு.க. தலைவர்களுக்கு யோக்கியதை கிடையாது. 'மிடாஸ்' மது நிறுவனத்தை சசிகலா மூலம் நடத்தியவர் ஜெயலலிதா. சசிகலாவை போயஸ்கார்டனிலிருந்து வெளியேற்றியபோது, அந்நிறுவனத்தின் நிர்வாகப் பதவியில் ‘சோ-வை நியமித்தவரும் ஜெயலலிதாதானே! அந்த நிறுவனத்திடமிருந்து தான் அதிகப்படியான மதுபானங்களைக் கொள்முதல் செய்கிறது எடப்பாடி அரசு. படிப்படியாக மதுக்கடைகளைக் குறைப்போம் என்றார்களே, குறைத்தார்களா? குறைப்பதாக பாவ்லா காட்டி விட்டு கடைகளை அதிகரித்தே வருகின்றனர். அ.தி.மு.க. அரசின் இந்த லட்சணத்தைச் சட்ட மன்றத்திலேயே அம்பலப்படுத்தியிருக்கிறேன்.
 


தி.மு.க.வில் இரண்டு பேர் மட்டுமே மது ஆலை வைத்திருக்கிறார்கள். வெளிநாடுகளுக்கும் வெளிமாநிலங்களுக்கும் சப்ளை செய்யவே அவை இயங்குகின்றன. மேலும், எங்களிடம்தான் வாங்க வேண்டும் என தி.மு.க.வினர் தமிழக அரசைக் கட்டாயப்படுத்தவில்லை. மதுக்கடைகளுக்கு எதிராகத் தமிழகமே போராடும்போது, சென்னை உயர்நீதி மன்றத்தில் எடப்பாடி அரசு தாக்கல் செய்த மனுவைப் பார்த்த தலைமை நீதிபதி, "உங்களுக்கு மக்களின் உயிர் மீது அக்கறையில்லையா?' எனக் கேட்டதற்குப் பிறகும், உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து மதுக்கடைகளைத் திறந்திருக்கும் எடப்பாடி அரசை என்னவென்று சொல்வது?
 

 

senthil


மக்கள் மீது அக்கறை இல்லாத மனிதநேய மற்ற கொடுங்கோல் அரசுதானே இது ? அதனால் தி.மு.க.வை குற்றம்சொல்ல அ.தி.மு.க. தலைவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? இதையெல்லாம் மறைக்கத்தான் தி.மு.க.வினர் மதுஆலை நடத்துவதாகக் கூக்குரலிடுகிறார்கள். இந்த நெருக்கடி காலத்தில் மது குடிக்காமல் திருந்த நினைத்தவர்களைக் கூட, நீங்கள் எப்படித் திருந்தலாம் என அவர்களை மீண்டும் குடிக்க வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. மக்களிடமிருந்து இவர்கள் தப்பிக்கவே முடியாது'' என்கிறார் ஆவேசமாக.

மதுக்கடைகளுக்கு எதிராகவும், முழுமையான மது விலக்கை வலியுறுத்தியும் பல ஆண்டுகளாக போராடி வரும் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகத்திடம் பேசியபோது, ’’மது ஆலைகள், மதுக்கடைகள் (டாஸ்மாக்), மதுக்கூடங்கள்(பார்கள்) ஆகிய மூன்றும் ஒரு முக்கோணம். இதன் ஒரு முனையைக்கூட மழுங்கடித்துவிடமுடியாது. அந்தளவுக்கு அரசியல் பின்னிப் பிணைந்திருக்கிறது. மதுஆலைகள் உயர்மட்ட அரசியல் வாதிகளுக்கு, மதுக்கடைகள் அரசாங்கத்துக்கு, பார்கள் கீழ்மட்ட அரசியல்வாதிகளுக்கு எனப் பணம் தரும் அட்சயப்பாத்திரம்.

அதனால் இதை எதற்காக உடைக்க வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க., தி.மு.க. தலைமைகளின் விருப்பம். ஆனால், இதனைத் தங்களுக்குச் சாதகமாக மறைத்துக்கொண்டுவிட்டு, அரசியல் செய்வதில் இரு கட்சிகளுக்கும் ஏக திறமை உண்டு. மதுவிலக்கை 2016-க்கு முன்பும் பின்பும் என இரண்டாகப் பிரித்துப் பார்க்கலாம். 2016-க்கு முன்பு வரை தேர்தல் அரசியலில் விவாதிக்கிற அளவுக்கு இருந்ததில்லை. காந்தியவாதி சசிபெருமாளின் மரணம் மற்றும் எங்களைப் போன்ற சமூக அமைப்புகளின் வலிமையான போராட்டங்கள்தான் மது விலக்கு மக்கள் பிரச்சனையாக மாறியது.

அரசியல் கட்சிகளும் இதன்மீது கவனம் செலுத்தின. பூரண மதுவிலக்கை தி.மு.க.வும் பா.ம.க.வும் வலியுறுத்தின; அ.தி.மு.க.வோ படிப்படியாக என சொன்னது. ஆக, 2016-க்குப் பிறகுதான் மது விலக்கு கொள்கை அரசியல் வடிவமாக மாறுகிறது. ஆனால், தி.மு.க.-அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்குமே மக்கள்மீது உண்மையான அக்கறை இல்லை என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

மதுக்கடைகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது வாதாடிய அரசு வழக்கறிஞர், "அரசுக்கு வருவாய் இழப்பு இருக்கிறது; உடனடியாக நிறுத்த முடியாது; நாலைந்து வருசம் இருந்தால்தான் முழுமையாக நிறுத்த நாங்கள் திட்டமிட முடியும்' எனச் சொன்னார். படிப்படியாக நிறுத்துவோம்னு 2016-லேயே அறிவித்த இவர்கள், கடந்த 4 வருசத்தில் திட்டமிட்டிருக்கலாமே? வருவாய் பெருக்கத்துக்கு மாற்று வழிகளை ஆராய்ந்திருக்கலாமே! கரோனா விவகாரத்திற்கு ஏகப்பட்ட கமிட்டிகளை போட்டவர்கள், அதுபோல மதுக்கடைகளைப் படிப்படியாகக் குறைக்க அனைத்துத் தரப்பு வல்லுநர்களையும் அடங்கிய ஒரு கமிட்டியை அமைத்து திட்டமிட்டிருந்தால் இந்நேரம் மதுவிலக்கு மற்றும் மாற்று வாருவாய்க்கான இலக்கில் 90 சதவீதம் எட்டியிருக்க முடியும். ஆனா, எதுவும் நடக்கவில்லை. படிப்படியாக என்றவர்கள், மது விலக்கை அமல்படுத்த எத்தனை படிகள் இருக்கிறது? எந்தப் படியில் அரசு நிற்கிறது? எனத் தெரியவில்லை. ஆக, மதுவிலக்கிலும் மக்கள் ஆரோக்கியத்திலும் உண்மையான அக்கறை எடப்பாடி அரசுக்கு இல்லை.
 

http://onelink.to/nknapp


தி.மு.க.வோ பூரண மதுவிலக்கு என அறிவித்திருந்தது. மதுவிலக்கில் தி.மு.க.வுக்கு அக்கறையிருக்குமானால், மதுக்கடைகள் மூடப்படும் வரையில் மதுக்கடைகளை முற்றுகையிட்டு தமிழகம் முழுவதும் தினமும் தி.மு.க. தொண்டர்கள் போராட்டம் நடத்தியிருந்தால் நிச்சயம் இந்தப் பிரச்சனை தேசிய அளவில் எதிரொலித்து ஒரு முடிவு கிடைத்திருக்கும். அப்படிப்பட்ட போராட்டத்தை தி.மு.க.வின் முன்னாள் தலைவர் கலைஞரோ, இந்நாள் தலைவர் ஸ்டாலினோ வடிவமைக்க வில்லை. வெறும் அறிக்கைவிடுவதையும், 2 மணி நேரம் அடையாள போராட்டம் நடத்துவதையும் கடைப்பிடித்தார்களே தவிர, இவர்களுக்கும் உண்மையான அக்கறை கிடையாது. இருந்திருந்தால் தி.மு.க.வினரின் ஆலைகளை மூடி எதிர்ப்பைக் கூர்மைப்படுத்தியிருப்பார் ஸ்டாலின். தற்போதைய நெருக்கடியான நேரத்திலாவது குறைந்தபட்சம் 6 மாசம் ஆலைகளை மூட வைக்கிறேன் என்கிற நடவடிக்கையாவது அவர் எடுத்திருக்க வேண்டும். செய்யவில்லை. கண்துடைப்பு போராட்டங்களால் பயனில்லை.

தி.மு.க. ஆட்சியில் தி.மு.க.வினரின் மது ஆலைகளுக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க. மது ஆலைக்கும் பிஸினஸ் அதிகப்படியாகக் கொடுக்கப்பட்டது. இதுதவிர எதிர்க்கட்சியினரின் ஆலைகளில் கொள்முதல் செய்வதை அ.தி.மு.க.- தி.மு.க. நிறுத்தவில்லை. இன்று வரையிலும் அப்படித்தான். கழகங்களின் மது அரசியலை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களை எளிதாக நினைத்தால் கழக தலைவர்களின் கணக்குகள் தவறாகும்'' என்கிறார் மிக இயல்பாக.



 

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுப்பதில்லை” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 EPS alleges Centre government never gives the requested funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார்.