Skip to main content

ஐஐடி மெட்ராஸில் தீண்டாமையா???

Published on 15/12/2018 | Edited on 15/12/2018
veg


ஐஐடி மெட்ராஸில் சைவ, அசைவ, சுத்த சைவ உணவு சாப்பிடுவோர் என்று மூன்று வகையான உணவு நடைமுறையை நிர்வாகம் பின்பற்றி வருகிறது. இதில் சுத்த சைவம் என்பது வெங்காயம், பூண்டு உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துகொள்ளாத மாணவர்கள். இதில் சைவ உணவு உண்பவர்களுக்கு என தனி விடுதி, உணவுக்கூடம் உள்ளது. அதே நேரத்தில் பொது உணவுக்கூடமும் உள்ளது. பொது உணவுக்கூடத்தில் அனைத்து மாணவர்களும் அமர்ந்து உணவு சாப்பிடலாம்.
 

சில மாதங்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த சூரஜ் என்ற ஆராய்ச்சி மாணவர் மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக கடுமையாக தாக்கப்பட்டார். ஐஐடி நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு பதிலாக அந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது கண்டனத்தை தெரிவித்த அம்பேத்கர் பெரியார் ஸ்டடி சர்கில் அமைப்பிற்கு ஐஐடிக்குள் செயல்பட தடைவிதிக்கப்பட்டது. 
 

non veg


இந்நிலையில், ஐஐடி மெட்ராஸிலுள்ள பொது உணவவுக்கூடம் ஒன்றில் சைவம் சாப்பிடுபவர்களுக்கு ஒரு வழியும், அசைவம் சாப்பிடுபவர்களுக்கு வேறு வழியும் அமைக்கபப்ட்டுள்ளது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் சைவம் சமைக்க தனி பாத்திரங்களும், அசைவம் சமைக்க தனி பாத்திரங்களும் பயன்படுத்தியுள்ளனர். சைவம் சாப்பிடுபவர்கள் கை கழுவ தனி இடம், அசைவம் சாப்பிடுபவர்களுக்கு தனி இடம் என்று வித விதமான முறையில் பாகுபாட்டுடன் அந்த ஆர்ஆர் வட இந்திய உணவகம் செயல்படுத்தியுள்ளது. மேலும் கதவுகளில், கைகழுவும் இடங்களில் சைவர்களுக்கு, அசைவர்களுக்கு என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. 
 

ஹிமாலயன் உணவக கட்டிடத்தில் இரண்டாவது தளத்தில் ஆர் ஆர் என்னும் இந்த பொது உணவகம் செயல்பட்டு வருகிறது. ஐஐடி வளாகத்தில் உள்ள அம்பேத்கர் பெரியார் ஸ்டடி சர்கில் என்னும் மாணவர்கள் அமைப்பு, இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டிருப்பதை முழுவதுமாக மொபைலில் புகைப்படம் எடுத்து, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
 

handwash


“ஐஐடி மெட்ராஸில் தீண்டாமை தொடர்கிறது. இந்தியாவிலுள்ள உயர்சாதி வீடுகளில் இரண்டு நுழைவுவாயில் இருக்கும். அதில் ஒன்று முன்வாசல், உயர்சாதியினர்களுக்கு மற்றொன்று பின்வாசல், தாழ்த்தப்பட்ட சாதியினர்களுக்கு. ஐஐடி மெட்ராஸிலுள்ள உணவுக்கூடத்தில் தற்போது அதை செயல்படுத்திகொண்டு இருக்கிறது. இந்த உணவகத்தில் இரண்டு வழிகள் உள்ளது. சைவம் சாப்பிடுபவர்களுக்கு என்று ஒன்றும், அசைவம் சாப்பிடுபவர்களுக்கு என்று மற்றொன்றும் உள்ளது. தனி தனியே பாத்திரங்கள், வாஷ் பேசின் என்று உள்ளது. எந்த கோரிக்கையால் சைவ உணவகம் ஒரு தீண்டாமைக்கு உள்ளானது?. ஐஐடி மெட்ராஸ் உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனமாக முயற்சி செய்கிறது, ஆனால் உள்ளே உள்ள கலாச்சாரத்தால் பல அம்சங்களில் பின்னடைவை சந்திக்கிறது” இவ்வாறு அந்த பதிவில் புகைப்படத்துடன் பதிவிடப்பட்டிருந்தது.
 

இதனை அடுத்து இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக ஆரம்பித்தது. பல விவாதங்களை மாணவர்களிடம் எழுப்பியது. ஐஐடி மெட்ராஸிலுள்ள மற்றொரு மாணவர்கள் அமைப்பான சிந்தாபாரும் இந்த பாகுபாட்டை கண்டித்தது. இதனையடுத்து ஹாஸ்டல் நிர்வாக செயலாளர் ஐஐடி மெட்ராஸ் ஹாஸ்டல் மாணவர்களுக்கு, ஒட்டப்பட்ட நோட்டீஸ்கள் எங்களுக்கு தெரியாமல் ஒட்டப்பட்டிருக்கிறது. ஒட்டப்பட்ட நோட்டீஸ்களை விரைவில் எடுக்கப்படும். மாணவர்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம். இதை நீக்கியபின்னர், இதுகுறித்து  அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று மெயில் செய்யப்பட்டுள்ளது.
 

normal


இந்த மெயிலை அடுத்து ஒட்டப்பட்ட நோட்டீஸுகள் அனைத்தும் நீக்கப்பட்டும், சைவர்களுக்கு ஒரு வழி அசைவர்களுக்கு ஒரு வழி என இரு வழியாக இருந்ததை அனைவருக்கும் ஒரு வழியாக மாற்றியும் அமைக்கப்பட்டுள்ளது. 

 

 

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.