Skip to main content

'பிரதமர் டிவியில் பேசுவார்... வானொலியில் பேசுவார்' ஆனால் நாடாளுமன்றத்தில் பேசமாட்டார்! - சீமான் கிண்டல்!

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நடைபெற்ற நாம் தமிழர் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய அரசை கடுமையாக சாடினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " உத்தரபிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்று முதியவர்களை அடித்தே கொன்றீர்களே, அப்புறம் எதற்காக அமெரிக்க அதிபருக்கு ஐந்து விதமான வகையில் மாட்டுக்கறி சமைத்து கொடுத்தீர்கள். அமெரிக்க அதிபருக்கு பக்கத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர், ராணுவ அமைச்சர்களை எல்லாம் பார்க்க வேண்டுமே, எல்லோரும் நேராக நின்றுகொண்டு அவரை பார்த்துக் கொண்டு இருக்கும் காட்சிகளை நாம் பார்த்தோம். இதே அவர்கள் மேடையில் பேச விட்டிருந்தால் மேலேயும், கீழேயும் பார்த்து மக்களை ஏமாற்றி பேசியிருப்பார்கள்.
 

jk


பிரதமர் தொலைக்காட்சியில் பேசுவார், வானொலியில் பேசுவார், ஆனால் நாடாளுமன்றத்தில் மட்டும் அவர் பேசவே மாட்டார். நாட்டில் ஆதிகுடிகள் எனப்படும் மலைவாழ் மக்கள் எந்த குடியுரிமை சான்றிதழை கொடுப்பார்கள். நாட்டில் லட்சக்கணக்கான பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் என்ன சான்றிதழை கொடுக்கப்போகிறார்கள். தில்லியில் மட்டும் 13,000 ஆயிரம் பிச்சைகாரர்கள் இருக்கிறார்கள். அதாவது காமன் வெல்த் போன்ற விழாக்கள் நடைபெறும் போது அந்த பிச்சைக்காரர்களை எல்லாம் லாரிகளில் ஏற்றி வேறு இடத்திற்கு கொண்டுபோய் விட்டுவிடுவார்கள். வெளிநாட்டினர் வரும்போது குடிசை பகுதிகளை பதாதைகள் வைத்து மூடி விடுகிறார்கள். இப்போது எப்படி ட்ரம்பு வருகையின் போது வீடுகளை எல்லாம் சுவர் வைத்து மறைத்தார்களோ? அதை போல செய்வார்கள். குஜராத் மாடல் என்றால் என்ன? குடிசைகள் தெரியாமல் 7 அடிக்கு சுவர் எழுப்புவதுதான் குஜராத் மாடல். 

தாஜ்மஹாலை சுற்றுலா பட்டியலில் இருந்தே தற்போது அந்த மாநில அரசு எடுத்துள்ளது. அமெரிக்க அதிபருக்கு என்ன காட்டுவது என்றே அவர்களுக்கு தெரியவில்லை. அவசர அவசரமாக வெள்ளை அடித்து அவரை அங்கு அழைத்து சென்றுள்ளார்கள். அதுவும் பெரிய ஐயா அங்கே செல்ல மாட்டார். ட்ரம்புடன் யோகி ஆதித்யநாத்தை அனுப்புகிறார். அவர் அவருக்கு தாஜ்மகால் பற்றி எடுத்துரைக்கின்றார். மற்றொரு நாட்டிற்கு நாம் செல்லும் போது அந்நாட்டின் பெருமைகளை, அரசியல் தலைவர்களை அறிந்திருக்க வேண்டும் என்ற குறைந்த பட்ச அறிவு இருக்க வேண்டும். ஆனால், அங்கே இருந்த லெட்டர் பேடில் ட்ரம்ப் மோடி, மோடி என்று பத்து முறை எழுதி வைக்கிறார். எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் அவர் இருக்கின்றார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒன்றே போதுமானதாக இருக்கின்றது. அவருக்கு காந்தியே தெரியவில்லை. அவருக்கு நீங்கள் ஏன் தாஜ்மகாலை காட்டினீர்கள், 3000 கோடியில் கட்டிய வல்லபாய் பட்டேல் சிலையை காட்டியிருக்கலாமே? ஏன் காட்டவில்லை. மூவாயிரம் கோடியில் சிலை, அதன் காலடியி்ல் பிச்சைக்காரன் என்பதுதான் இன்றைய நிலை. காவலர்கள் கண்முன்னே தான் மசூதிகள் தீக்கிரையாக்கப்படுகின்றது. காவலர்களே சிசிடிவி கேமராக்களை உடைக்கிறார்கள். ஒரு தேசத்தின் பெருந்த அவமானம், தலைகுனிவு இது. அப்துல் கலாமுக்கு அவர்கள் தானே குடியரசு தலைவர் பதவி கொடுத்தார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள். குஜராத் கலவரத்தால் உலக அரங்கில் ஏற்பட்ட கெட்ட பெயரை நீக்குவதற்காக அவர் குடியரசுத்தலைவர் ஆக்கப்பட்டாரே தவிர விரும்பி ஆக்கப்படவில்லை. 

தமிழர்கள் என்றாலும், இஸ்லாமியர்கள் என்றாலும் தீவிரவாதியாக பார்க்கப்படுகிறார்கள். என்னை பல நாடுகளுக்கு எதற்காக செல்லவிடாமல் பாஸ்போட்டை பிடுங்கி வைத்துள்ளார்கள். இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானுக்கு ஆதரவாக உளவு பார்த்ததாக 14 பேரை கைது செய்துள்ளார்கள். அதில் ஒருவர் கூட முஸ்லிம் மக்கள் அல்ல. 2014ம் ஆண்டு தேர்தலில் இந்த நாட்டிற்கு காவலாளியாக இருப்பேன் என்று நம்மிடம் வாக்கு கேட்ட பிரதமர், தற்போது நம்முடைய வீட்டிற்கு நாம் தான் உரிமையாளரா என்று நம்மிடம் சான்று கேட்கிறார். விடுதலை பெற்ற 72 ஆண்டு காலத்தில் யார் இந்தியர் என்று தெரியாமல்தான் நம்மை ஆண்டுகொண்டு இருக்கிறார்களா? நான் இந்தியனா இல்லையா என்று தெரியாமலா எனக்கு ரேசன் அட்டை கொடுத்தீர்கள். வாக்காளர் அடையாள அட்டை கொடுத்தீர்கள், ஓட்டுநர் உரிமம் கொடுத்தீர்கள்? அதனால்தான் நாட்டின் முதல் குடிமகனிடம் முதலில் குடியுரிமை கேளுங்கள், பிறகு குடிகளிடம் கேளுங்கள் என்று கூறினேன். பிரதமரிடம் முதலில் குடியுரிமை சான்றிதழை கேளுங்கள். அதை தற்போது யாரோ ஆர்டிஐ-யில் கேள்வி கேட்க 1955ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தின்படி அவரிடம் ஆவணம் இல்லை, அதனால் அவர் காட்ட தேவையில்லை என்று கூறுகிறார்கள்.  அதைத்தான் நாங்களும் சொல்கிறோம். ஆவணம் இருந்தாலும் காட்டப்போவதில்லை" என்றார்.

 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்