Skip to main content

உள்ளூர், வெளியூர் மல்லுக்கட்டு! -திருச்சி எம்.பி. வேட்பாளர்?

Published on 14/02/2019 | Edited on 04/03/2019

மே மாதம் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், தமிழகத்தின் பெரிய கட்சிகள், கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிட்டன. எம்.பி. சீட்டைக் கைப்பற்ற, கோதாவில் குதித்துள்ளனர் கட்சிப் புள்ளிகள். யாருக்கு எந்த தொகுதி என்ற பரபரப்பிற்கிடையே, தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் உள்ளூர் வேட்பாளரா, வெளியூர் வேட்பாளரா என பட்டிமன்றம் நடக்கிறது.
 

vaiko

திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர், திருவரங்கம், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதுதான் இப்போதைய திருச்சி எம்.பி.தொகுதி. இத்தொகுதியில் இந்து, கிறிஸ்தவ பிள்ளைமார் ஓட்டுகள் பெரும்பான்மையாகவும் அதற்கடுத்து முறையே தலித், இஸ்லாமியர்கள், கள்ளர், முத்துராஜா, உடையார், பிராமணர் ஓட்டுகளும் இருக்கின்றன.

1980-ல் வெற்றி பெற்ற தி.மு.க.வின் என்.செல்வராஜ், 84, 89, 91, 96-தேர்தல்களில் வெற்றி பெற்ற காங்கிரசின் அடைக்கலராஜ், இந்த இருவரும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 98, 99-ல் சேலத்தைச் சேர்ந்த ரங்கராஜன் குமாரமங்கலம் பா.ஜ.க. சார்பிலும், 2004-ல் தஞ்சையைச் சேர்ந்த எல். கணேசன் ம.தி.மு.க. சார்பிலும் எம்.பி.யானார்கள். 2009, 2014 தேர்தல்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வைச் சேர்ந்த பி.குமாருக்கு சொந்த ஊர்... இத்தொகுதிக்குட்பட்டதும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்ததுமான கந்தர்வக்கோட்டை என்றாலும் தற்போது திருச்சியிலேயே செட்டிலாகிவிட்டார். இந்தமுறையும் தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். அவருடன் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், புதுக்கோட்டை கார்த்திக் தொண்டைமான், அருள்செந்தில் ராம், ராமலிங்கம் உள்ளிட்ட 10 பேர் அ.தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

வருகிற தேர்தலில் பல கட்சிகளிலும் வெளியூர் வி.ஐ.பி.க்கள் திருச்சியை நோக்கி தங்களது பார்வையைத் திருப்பியுள்ளதால், உள்ளூர் வி.ஐ.பி.க்கள், இப்போதே உஷார் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டனர். இந்த முறை விருதுநகர் தனக்கு தோதுப்படாது என நினைத்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தூத்துக்குடியில் களம் இறங்கலாமா என நினைத்தபோது, அங்கே தி.மு.க.வின் கனிமொழி, இப்போதே களப்பணிகளை ஆரம்பித்துவிட்டார். தமக்கு திருச்சி தான் தோதுப்படும் என்ற எண்ணத்துடன், தி.மு.க. தலைமையுடன் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையும் நடத்தி முடித்து, தொகுதி முழுவதும் ஒரு மாதமாக தொடர்ச்சியாக கூட்டங்களையும் நடத்தி முடித்துவிட்டார் வைகோ. 2004-ல் தி.மு.க., ம.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வின் எல்.கணேசன் திருச்சியில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையெல்லாம் கணக்குப் போட்டு, தி.மு.க. மா.செ. கே.என்.நேருவிடம், லோக்கல் ம.தி.மு.க. புள்ளிகள் தெரிவித்தபோது, “""வைகோ எவ்வளவு பெரிய தலைவர், அவருக்கு எதுக்கு அலைச்சல். அதனால எங்க தலைவரிடம் பேசி ராஜ்யசபா சீட்டை வாங்கச் சொல்லுங்க''’என நேரு சொன்னதும் லேசாக ஜெர்க்காகிவிட்டனர் ம.தி.மு.க. புள்ளிகள். அவர்களை சமாதானப்படுத்தி வழியனுப்பும்போது, ""ம.தி.மு.க.வைச் சேர்ந்த நம்மூரு டாக்டரம்மா ரொக்கையாவுக்கு சீட் கொடுத்தா, இஸ்லாமியர்கள் ஓட்டுக்களை மொத்தமா வாங்கி ஜெயிக்க வைக்கலாம்''’’என சொல்லியுள்ளார் நேரு.

தி.மு.க. நின்றாலும் கூட்டணிக் கட்சிகள் நின்றாலும் உள்ளூர் வேட்பாளர்தான் என்பது கே.என்.நேருவின் கணக்கு.

congressநேருவின் எண்ண ஓட்டம் இப்படி இருக்க, தனது மாவட்டமான புதுக்கோட்டை, திருச்சி தொகுதிக்குள் வருவதால், தமிழக காங்கிரசின் மாஜி தலைவரான திருநாவுக்கரசருக்கும் திருச்சி மீது ஆசை வந்துவிட்டது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவி இல்லாவிட்டாலும் எம்.பி. சீட் வாங்கிவிடும் நம்பிக்கையில் உள்ள திருநாவுக்கரசர், கடந்த வாரம் நேருவிடம் பேசியிருக்கிறார். "மொதல்ல சீட்டை வாங்குங்க, அப்புறம் பார்த்துக்கலாம்'’என்றிருக்கிறார் நேரு.

1999 எம்.பி. தேர்தலில் லோக்கல் காங்கிரஸ் வேட்பாளர் அடைக்கலராஜை வீழ்த்தி தி.மு.க. கூட்டணியில் நின்ற பா.ஜ.க. வேட்பாளர் ரங்கராஜன் குமாரமங்கலத்தை ஜெயிக்க வைத்தார் நேரு. அதற்குப் பரிகாரமாக இந்தமுறை அடைக்கலராஜின் மகன் ஜோசப்லூயியை காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கினால், ஜெயிக்க வைக்கலாம் என்பது நேருவின் வியூகம். எந்த சர்ச்சையிலும் சிக்காத ஜோசப்லூயியை திருச்சியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், ஸ்டாலினிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார் நேரு. ஏற்கனவே ஸ்டாலின் குடும்பத்திற்கு அறிமுகமானவர், ராகுல்காந்தியை தலைவராக முன்மொழிந்த, தமிழகத்தைச் சேர்ந்த 11 பேரில் ஒருவர். இதெல்லாமே ஜோசப்லூயிக்கு சீட் கிடைக்க வாய்ப்பு பிரகாசமா இருக்கு என்கிறார்கள் திருச்சி காங்கிரஸ் புள்ளிகள். வேறு கட்சிகளின் நிலைமை இப்படி இருக்க, எம்.பி.வேட்பாளர்களுக்கு கட்சித் தலைமையிலிருந்து 15 சி தரப்போவதாக தகவல் வெளியானதால், தி.மு.க.வைச் சேர்ந்த அன்பழகனும் இன்னும் சிலரும் வேட்பாளர் ரேஸில் குதித்திருக்கிறார்கள்.

இதற்கிடையே திருச்சியை குறிவைக்கும் வைகோ எந்தத் தொகுதியில் நின்றாலும் அவரைத் தோற்கடிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளது பா.ஜ.க. தி.மு.க. பற்றியும் கலைஞர், ஸ்டாலின், கி.வீரமணி குறித்தும் வைகோ பேசிய பழைய பேச்சுக்கள் அடங்கிய மீம்ஸ்களை ரெடியாக வைத்துள்ளனராம் பா.ஜ.க.வினர்.



 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.