Skip to main content

அழகி ஸ்வப்னாவால் ஆட்டம் காணும் கேரள அரசு! முதல்வருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி! 

Published on 09/07/2020 | Edited on 09/07/2020

 

kerala

 

கேரள உயரதிகாரிகள் உடைந்தையுடன் நடந்துள்ள தங்க கடத்தல்களால் கேரள முதல்வர் பினராயி விஜயனின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடத்தலில் தொடர்புடைய அழகி ஸ்வப்னாவுக்கு முதல்வர் அலுவலகத்துடன் தொடர்பு இருப்பதால், கிடுகிடுத்திருக்கிறது கேரள அரசாங்கம். இந்த நிலையில், தங்கம் கடத்தல் விவகாரத்தின் அனைத்து ஆணி வேர்களையும் கண்டறிய அதிவேக புலனாய்வுகளை துவக்கியிருக்கிறது சி.பி.ஐ.! இதனால் கேரள அரசியலில் பரபரப்பும், அதிர்ச்சிகளும் அதிகரித்தபடி இருக்கிறது!

 

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனின் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடந்து வருகிறது. ஜனநாயக நெறிகளுக்கும், சட்டங்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில் ஆட்சி செய்து வருகிறார் பினராயி விஜயன். அப்படிப்பட்டவரின் ஆட்சியில், தங்க கடத்தல் நடந்திருப்பதும் அதற்கு துணையாக பினராயி விஜயனின் முதன்மை செயலாளர் சிவசங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளதாக வரும் தகவல்கள் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

கேரளாவில் திருவனந்தபுரத்தில் இயங்கி வருகிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதரக கிளை அலுவலகம். இந்த தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் உதவியுடன் கேரளாவுக்கு தங்கம் கடத்தப்படுகிறது என  சுங்கத்துறைக்கு கடந்த வாரம் தகவல் கிடைத்ததை அடுத்து, கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பை முடுக்கி விட்டுள்ளது மத்திய அரசின் சுங்கத்துறை. குறிப்பாக, திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வரும் பார்சல்கள் மீதான  கண்காணிப்பை வேகப்படுத்தியிருந்தது.

 

விமான நிலையத்துக்கு வந்த பர்சல்களை கடுமையாக சோதனைக்கு உட்படுத்தினார்கள் கஸ்டம்ஸ் அதிகாரிகள். ஐக்கிய அரபு எமிரேட்சின் தூதரகத்திற்கு வரும் பார்சல்கள் மட்டும் தனியாக ஓரங்கட்டப்பட்டன. தூதரக அதிகாரிகளை வரவழைத்து அந்த பார்சல்கள் உடைக்கப்பட்டபோது, வீடுகளில் கதவுகளுக்குப் பயன்படுத்தும் தாழ்ப்பாள், கைப்பிடிகள், இரும்பு குழாய்கள் உள்ளிட்ட பல பொருட்களில் தங்கம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர் கஸ்டம்ஸ் அதிகாரிகள்.  

 

சுமார் 30 கிலோவுக்கும் அதிகமான தங்கம் பிடிப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிட்டுள்ளனர் அதிகாரிகள். இந்த நிலையில், தங்கம் கடத்தலுக்கு பயன்பட்ட பார்சல்கள் யாருக்கு வந்திருக்கிறது என ஆராய்ந்தபோது, குறிப்பிட்ட தூதரகத்தின் முக்கிய அதிகாரி பெயருக்கு துபாயிலுள்ள அவரது மனைவி அனுப்பி வைத்திருப்பது தெரிந்தது. அந்த அதிகாரியை அழைத்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்த போது, “இந்த பார்சல்கள் எனக்கு வந்தவை அல்ல! என் மனைவியும் இதனை அனுப்பவில்லை” என்று கூறியிருக்கிறார். அதேசமயம், துபாயிலுள்ள அவரது மனைவிக்கு எந்த சந்தேகம் வாராதபடிக்கு சுங்கத்துறையின் ஃபோன் போட்டு விசாரித்தனர் அதிகாரிகள். அவரோ, எந்த பார்சல்களும் என் கணவருக்கு நான் அனுப்பவில்லை என மிக இயல்பாக கூறியுள்ளார்.

 

ggggg

 

அந்த வகையில் சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு இந்த பார்சல்கள் வரவில்லை என முடிவுக்கு வந்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அப்போது, ஐக்கிய அரசு எமிரேட்சின் தூதரகத்தில் மக்கள் தொடர்பு துறையில் வேலைப்பார்த்த சாஜித் என்பவருக்கு தொடர்பு இருப்பதை கண்டுப்பிடித்தனர் அதிகாரிகள். உடனடியாக சாஜித்தின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அவரிடம் சுங்கத்துறை பாணியில் விசாரித்தபோது, “அந்த பார்சல்கள் எனக்கு வந்தவைதான். தூதரக அதிகாரிகளின் பெயரில் வரவழைத்ததும் நான்தான். பல மாதங்களாகவே இதனை செய்து வருகிறோம்” என ஒப்புதல் வாக்குமூலம் தந்த அவர், கடத்தலின் சூத்திரதாரியாக இருந்த, கேரள அரசின் தகவல் தொழில் நுட்பத் துறையில் மேனேஜராக பணி புரியும் அழகி ஸ்வப்னாவை அடையாளம் காட்டினார்.

 

சாஜித்தை கைது செய்த சுங்கத்துறையினர், சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தகவல் தந்து விட்டு, அழகி ஸ்வப்னாவை பிடிக்க விரைந்தனர். ஆனால், சாஜித் சிக்கிக் கொண்டதையும் தன்னைப் பற்றி அதிகாரிகளிடம் சொல்லி விட்டதையும் அறிந்த அழகி ஸ்வப்னா, அதிகாரிகளுக்கு டாடா காட்டிவிட்டு தலைமறைவானார். இதனால், ஸ்வப்னா தங்கியிருந்த வீட்டுக்கும், அவரது அலுவலகத்துக்கும் சென்ற அதிகாரிகள், வெறுங்கையுடன் திரும்பினர்.

 

 Kerala

 

கேரள அரசில் பணிபுரியும் அழகி ஸ்வப்னாதான் தங்கம் கடத்தலின் பிதா மகள் என்கிற தகவல் றெக்கைக் கட்டி பறக்க கேரளா முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்த நிலையில், சுங்கத்துறையினருடன் இணைந்து புலனாய்வை வேகப்படுத்திய சிபிஐ அதிகாரிகள், அழகி ஸ்வப்னாவுக்கும், முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளர் சிவசங்கருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை கண்டுப்பிடித்தனர். இதனை பின்ராயி விஜயனின் கவனத்துக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் கொண்டு செல்ல அதிர்ச்சியடைந்த அவர், முதன்மை செயலாளர் பதவியிலிருந்து சிவசங்கரை நீக்கினார்.

 

தங்க கடத்தலில் தொடர்புடைய அழகி ஸ்வப்னாவுக்கும், சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதால், இந்த கடத்தலுக்கு முதல்வர் அலுவலகத்துக்கும் தொடர்பு இருக்கும் என்றும், அதனால் முதல்வர் பதவியிலிருந்து பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ், பாஜக தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். இதனால், கேரள அரசு ஆட்டம் காணத் துவங்கியுள்ளது.

 

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் குற்றசாட்டுகளை மறுத்த பினராயி விஜயன், “தங்கம் கடத்தலில் தொடர்புடைய பெண்ணை எனக்கு தெரியாது, அவர் எப்படி அரசு துறையில் பணியில் அமர்த்தப்பட்டார் என்பதும் எனக்கு தெரியாது. குற்றத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விசயத்தில், முதல்வர் அலுவலகத்தின் மீதும், என் மீதும் பழி போடுவது ஏற்புடையதல்ல!” என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

 

இந்த சூழலில் அழகி ஸ்வப்னாவை பிடிக்க பல கோணங்களில் வலையை விரித்துள்ளனர் அதிகாரிகள். இதனையடுத்து, யார் அந்த அழகி ஸ்வப்னா, அவரது பின்னணி என்ன, அவருக்கு உதவிய அதிகாரிகள் யார் என்கிற கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் சி.பி.ஐ.க்கு கிடைத்துள்ளது.

 

ஐக்கிய அரபு எமிரேட்சின் தூதரக அலுவலகத்தில் நிர்வாக செயலாளராக 8 மாதங்களுக்கு முன்புவரை இருந்துள்ளார் ஸ்வப்னா! அலுவலகத்தில் அனைவரிடமும் மிக ஜோவியலாக பழகிய ஸ்வப்னாவின் அழகில் தூதரக அதிகாரிகள் பலரும் மயங்கியிருந்தனர். பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் அழகியாக வலம் வந்துள்ள ஸ்வப்னா, கேரள அரசின் உயரதிகாரிகளுடன் பழகும் வாய்ப்புகளை உருவாக்கி கொண்டார். தூதரக அதிகாரி என்கிற பதவியும், கவர்ந்திழுக்கும் அழகான தோற்றமும் கேரள அரசின் உயரதிகாரிகளை தடையின்றி சந்திக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது.

 

அந்த வகையில், ஸ்வப்னாவின் அழகில் மயங்கி அவரை நட்பாக்கி கொண்டார் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவசங்கர். தகவல் தொழில் நுட்ப துறையின் செயலாளராக இருக்கும் சிவசங்கருக்கு, முதல்வரின் முதன்மை செயலாளார் என்ற பொறுப்பு கூடுதலாக கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் முதல்வர் அலுவலகத்தில்தான் அவருக்கு அதிக நேர பணி! சிவசங்கரின் நட்பு மூலம் முதல்வர் அலுவலகத்திற்குள் மிகச்சாதாரணமாக வந்துள்ளார் ஸ்வப்னா! இந்த நிலையில், 8 மாதங்களுக்கு முன்பு, தூதரக பணியில் இருந்து விலகி கேரள அரசின் தகவல் தொழில் நுட்பத் துறையில் மேனேஜராக நியமிக்கப்பட்டார். சிவசங்கரின் சிபாரிசில்தான் இந்த நியமனம் நடந்துள்ளது என சுங்கத்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  மேலும், சிவசங்கர் மட்டுமல்லாமல் கேரள அரசின் உயரதிகாரிகள், அரசியல்வாதிகள் பலருக்கும் ஸ்வப்னாவுடன் நட்பு இருப்பதையும், அவர்களுடன் விருந்து நிகழ்வுகளில் கலந்து கொண்டதையும் கண்டுப்பிடித்துள்ளனர்.

 

தனது நண்பரான சாஜித்துக்கு வெளிநாடுகளில் இருந்து திருவனந்தபுரம் தூதரக கிளை அலுவலகத்துக்கு வரும் பார்சல்களை விமான நிலையத்தில் சேகரிக்கும் காண்ட்ராக்ட் வேலையை அதிகாரிகள் துணையுடன் ஸ்வப்னாதான் வாங்கி தந்துள்ளார். அதன்மூலம், வெளிநாடுகளில் இருந்து, கேரளாவில் உள்ள தூதரகத்தின் அதிகாரிகளின் பெயரில் பார்சல்கள் அனுப்பி வைக்கப்படும். தங்கம் கடத்தப்படும் அந்த பார்சல்களை மட்டும் தனியாக பிரித்து அதனை ஸ்வப்னாவுக்கு அனுப்பி வைத்துவிடுவாராம் சாஜித். அந்த வகையில், வீட்டு உபயோக பொருட்கள் மூலம் தங்கத்தை வெளிநாடுகளில் உள்ள ஸ்வப்னாவின் ஏஜெண்டுகள் கேரளாவுக்கு அனுப்பி வைப்பர். இப்படித்தான் தங்கம் கடத்தல் கடந்த பல மாதங்களாக நடந்து வருகிறது  என சுங்கத்துறை கண்டறிந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன!

 

 Kerala

 

இதற்கிடையே, கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னாவை தனக்கு தெரியாது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ள சூழலில், பினராயி விஜயன் கலந்து கொண்ட ஒரு விருந்து நிகழ்ச்சியில், அவருக்கு பின்னால் ஸ்வப்னா நிற்கும் புகைப்படமும், விருந்து நிகழ்வு முடிந்து ஸ்வப்னாவுடன் இணைந்து அவர் வெளியேறும் புகைப்படமும் வெளியாகி கேரள அரசை பரபரப்பாக்கியிருக்கிறது.

 

இந்த நிலையில், சிவசங்கர் மீதான பார்வையை தீவிரப்படுத்தியுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், ஸ்வப்னாவை பிடிக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள், மாடல் அழகிகள் யார், யார் என்கிற பட்டியலை தயாரித்து வருகின்றனர். மேலும், கேரளாவுக்குள் நுழைந்த தங்கத்தை ஸ்வப்னா என்ன செய்தார் என்கிற தேடுதல் வேட்டையையும் முடுக்கி விட்டுள்ளது சி.பி.ஐ. ! அழகி ஸ்வப்னா கைதாகும்போது, இன்னும் பல கூடுதல் அதிர்ச்சிகளை எதிர்கொள்ளவிருக்கிறது கேரள அரசு என்கின்றன கேரளாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள். கேரள அரசு தலைமைக்கு எப்போதுமே அழகான பெண்கள் மூலம்தான் ஆபத்து உருவாகிறது. முன்பு சரிதா நாயர்! இப்போது ஸ்வப்னா!

 

 

Next Story

தி ரியல் கேரள ஸ்டோரி... இளைஞரின் உயிரைக் காக்க ஒன்று திரண்ட மலையாளிகள்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
People who saved Kerala youth's life by collecting blood money in Saudi Arabia
அப்துல் ரஹீம்

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது கோடம்புழா. இப்பகுதியைச் சேர்ந்த தம்பதி முல்லா முஹம்மது - பாத்திமா. இவர்களது மகன் அப்துல் ரஹீம். இவரின் தந்தை இறந்த நிலையில், அப்துல் ரஹீம் கடந்த 2006-ஆம் ஆண்டு ஹவுஸ் டிரைவர் விசாவில் சவூதி அரேபியா சென்றார். அப்போது அவரது வயது 26. வேலை தேடிச்சென்ற அப்துல் ரஹீமுக்கு சவூதியின் ஒரு வீட்டில் வாகனம் ஓட்டும் பணியுடன், அந்த வீட்டு முதலாளியின் மாற்றுத்திறனாளி சிறுவனைப் பராமரிக்கும் பணியும் கொடுக்கப்பட்டது. சிறுவனின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த சிறப்பு கருவி மூலம் உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. அவ்வப்போது வீல் சேர் மூலமும், காரிலும் சிறுவனை மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்று தேவையான பொருட்களை வாங்கிவிட்டு வீடு திரும்புவது அப்துல் ரஹீமின் வேலையாக இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி எப்போதும் போல மாற்றுத்திறனாளி சிறுவனை அப்துல் ரஹீம் காரில் மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, ட்ராபிக் சிக்னல் விழுந்ததால் கார் சிறிது நேரம் நின்றுள்ளது. ஆனால், காரின் பின் பகுதியில் அமர்ந்திருந்த சிறுவன் காரை இயக்க சொல்லி அடம்பிடித்துள்ளார். உடனே, கார் ஓட்டுனர் அப்துல் ரஹீம் சிக்னல் மீறிச் செல்ல கூடாது என சிறுவனிடம் எடுத்துக்கூறியுள்ளார். ஆனாலும், சிறுவன் பின் சீட்டில் இருந்தபடி சத்தம்போட்டு பிரச்சனை ஏற்படுத்தியிருக்கிறார். மீண்டும் சிக்னலை மீறக் கூடாது எனக் கூறி புரியவைப்பதற்காக திரும்பியபோது அப்துல் ரஹீமின் முகத்தில் சிறுவன் பலமுறை எச்சில் துப்பியிருக்கிறார். அதை தடுப்பதற்காக அப்துல் ரஹீம் கையை நீட்டியபோது சிறுவனின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த உபகரணத்தில் தெரியாமல் கை பட்டதாக கூறப்படுகிறது. இதனால், சிறுவன் மயக்க நிலைக்குச் சென்றுள்ளார். ஆனால், அதனைக் கவனிக்காத அப்துல் ரஹீம் மறுபடியும் வண்டியை ஒட்டிச் சென்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் சிறுவனின் பேச்சு சத்தம் கேட்காத நிலையில், அப்துல் ரஹீம் பின்பக்கம் திரும்பி பார்த்து அதிர்ந்து போயுள்ளார். சிறுவன் காரிலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அப்துல் ரஹீம் நடந்த சம்பவத்தைக் கூறி, அரேபியாவில் வேலை செய்துவந்த கோழிக்கோட்டைச் சேர்ந்த முஹமது நசீர் என்பரிடம் உதவிக்கேட்டுள்ளார். அவர் கொடுத்த ஐடியாவின் படி பணம் பறிக்க வந்த கொள்ளைக்காரர்கள் அப்துல் ரஹீம்மை கட்டிப்போட்டு சிறுவனை தாக்கியதாக முதலாளியிடம் நாடகம் ஆடினார். ஆனால், போலீஸ் விசாரணையில் உண்மை தெரிய வர இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், முஹம்மது நசீர் பத்து ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

ஆனால், அப்துல் ரஹீம் குற்றவாளி என அறிவித்த கோர்ட் அவருக்கு மரண தண்டனை விதித்தது. கடந்த 18 ஆண்டுகளாக சவுதி அரேபியாவின் அல் ஹைர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே மனம் இறங்கி வந்த சிறுவனின் பெற்றோர்  இழப்பீடாக பிளட் மணி என்ற வகையில் ஒன்றரை கோடி ரியால் கேட்டனர். அதன் இந்திய மதிப்பு 34 கோடி ரூபாய் ஆகும். அதனையும் குறிப்பிட்ட காலத்தில் கொடுத்தால் அப்துல் ரஹீம் உயிர் தப்பிக்கலாம் என்ற நெருக்கடி ஏற்பட்டது.

இதனை அறிந்த அப்துல் ரஹீமின் குடும்பத்தினர்கள் நண்பர்கள் சவுதி அரேபியால் பணிபுரியும் மலையாளிகள் என அனைவரும் இணைந்து “சேவ் அப்துல் ரஹீம்’ என்ற செயலியை உருவாக்கி நிதி திரட்டினர். அத்துடன், சிறுவனின் மரணத்திற்கு அப்துல் காரணம் இல்லை எனவும் அது தற்செயலான ஒன்று எனவும் விளக்கமளித்திருந்தனர். இதனிடையே, குறுகிய நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி 34 கோடிக்கும் கூடுதலாகவே நிதி வந்தடைந்துள்ளது.

இதையடுத்து, இந்தியா தூதரகம் மூலம் சவுதியில் உள்ள சிறுவனின் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன் மகனுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்றும், 18 ஆண்டுகளுக்கு பிறகு மகனை காண இருப்பதாக அப்துல் ரஹீமின் தாய் பாத்திமா உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்த நற்செய்தியைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “இது ஒரு உண்மையான கேரளக் கதை. இதன்மூலம் வகுப்புவாதத்தால் உடைக்க முடியாத சகோதரத்துவக் கோட்டை கேரளா என்பது உறுதியாகி உள்ளது. உலகத்தின் முன் கேரளாவை பெருமைப்படுத்திய இந்த நோக்கத்திற்காக அனைத்து நல் உள்ளங்களையும் நாங்கள் மனதார பாராட்டுகிறோம். வெளிநாடுவாழ் மலையாளிகளின் பங்கு, இந்த முயற்சியின் பின்னணியில் இருப்பது பாராட்டுக்குரியது. இந்த ஒற்றுமைக்காக நாம் ஒருமனதாக முன்னோக்கிச் செல்வோம்..” எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை உமிழும் `தி கேரளா ஸ்டோரி' போன்ற படத்தைக் கொண்டாடும் பாஜகவிற்கு கேரள முதல்வர் பதிலடி கொடுத்திருப்பதாக கேரள மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ரியல் கேரள ஸ்டோரி இதுதான் என அப்துல் ரஹீமுக்கு மக்கள் செய்திருக்கும் உதவியைக் கொண்டாடி வருகின்றனர்.

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீமை மீட்க கேரள மக்கள் ஒன்றிணைந்து 34 கோடியைத் திரட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

ரயிலில் புகுந்த பாம்பு; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A snake that entered the train; Tragedy befell the young man


கேரளாவில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து மதுரை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் தென்காசியைச் சேர்ந்த கார்த்திக் சுப்பிரமணியம்(21) என்ற இளைஞர் பயணித்தார். ரயிலின் 7ஆம் நம்பர் கோச்சில் அவர் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, ரயில் எட்டுமானூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார்த்திக் சுப்பிரமணியம் தன்னை ஏதோ கடித்தது போல் உணர்ந்துள்ளார். உடனடியாக அந்தப் பகுதியைச் சோதனையிட்டு பார்த்ததில் அங்கு ஒரு நாகப்பாம்பு சுருண்டு கிடந்தது கண்டு அதிர்ந்துபோனார்.

தன்னை பாம்பு கடித்ததை உணர்ந்த கார்த்திக் மற்ற பயணிகளிடம் இதனைச் சொல்ல உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, கோட்டயம் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அந்த ரயில் பெட்டிக்குள் எலிகள் அங்கும் இங்குமாக ஏராளமாக ஓடிக் கொண்டிருந்ததாக பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக எலிகளை உணவாக சாப்பிட பாம்பு அங்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், கோட்டயம் ரயில் நிலையத்திலேயே அந்தப் பெட்டி மட்டும் தனியாக கழட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ரயிலில் பயணித்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.