Skip to main content

ரவுடி குழுவுக்கு பயப்படும் அதிபர். – இவ்வளவு மோசமாவயிருக்கு இலங்கை...

Published on 18/10/2018 | Edited on 18/10/2018
sirisena


 

என்னை கொலை செய்ய முயல்கிறது இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரா என்கிற குற்றச்சாட்டை தனது அமைச்சரவை கூட்டத்தில் கூறியுள்ளார் இலங்கை அதிபராக உள்ள மைத்திரிபாலா சிறிசேனா. இந்த தகவல் செய்தியாக வெளியாக தற்போது சர்வதேச அரங்கில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



இலங்கை ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் பணியாற்றும் நாமல்குமாரா என்பவர் ஒரு வாரத்துக்கு முன்பு, கொழும்பில் உள்ள போலிஸ் அதிபரிடம், ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவின் உயர்அதிகாரி நாலகசில்வாவுடன் சிலர் சேர்ந்துக்கொண்டு, அதிபர் மைத்திபாலா சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே ஆகியோரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார் விசாரிக்கவும் என புகார் கூறியுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் தேசிய குற்ற புலனாய்வு பிரிவு விசாரணையை தொடங்கியது. விசாரணை தொடங்கியதும், குற்றம் சாட்டப்படும் அந்த போலிஸ் அதிபர் இடைக்கால பணி நீக்கம் செய்ய வேண்டும்மென சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் மத்துமபண்டாரா, தேசிய போலிஸ் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் அவரை சஸ்பெண்ட் செய்தது போலிஸ் துறை.



இந்த விசாரணை நடந்துக்கொண்டு இருக்கும்போதே இலங்கை போலிஸார் கொழும்புவில் ராஜேந்திரகுமார் என்கிற நபரை கைது செய்தனர். இவர் 2015 க்கு முன்பு இந்தியாவில் இருந்து அரசியல் புகலிடம் தேடி இலங்கைக்கு வந்துள்ளார்.  உண்மையில் அவர் அரசியல் புகலிடம் தேடிவரவில்லை. இந்தியாவின் வெளிநாட்டு உளவுப்பிரிவான ரா வின் ஏஜென்டாக வந்துள்ளார் என தெரிந்து கைது செய்து விசாரித்தபோதுதான், இலங்கை அதிபர், முன்னாள் அதிபர், பாதுகாப்பு செயலாளரை ரா கொலை செய்ய திட்டமிடுகிறது என்கிற தகவல் தெரிந்து அதிபருக்கு தெரியவந்துள்ளது என்கிற தகவலை மீடியாக்களிடம் கூறினார் எம்.பி விமல் வீரவங்சா. அதோடு, அவர் ரா உளவாளி என்னை சந்திக்கவே இரண்டு முறை முயன்றுள்ளார், ஆனால் அவர் என்னை சந்திக்கவில்லை எனச்சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.


 

raw




இந்த பரபரப்புகளுக்கு இடையில்தான் இலங்கை அரசு வாரந்தோறும் அதிபர் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டம் கடந்த அக்டோபர் 16ந்தேதி அதிபர் மைத்திரிபாலாசிறிசேனா தலைமையில் நடந்துள்ளது. அந்தக்கூட்டத்தில் என்னை கொலை செய்ய இந்தியாவின் ரா அமைப்பு சதி செய்துள்ளது என அதிபர் பேசியுள்ளார். மற்ற அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள் என்கிற தகவல் அதிபர் மாளிகையில் இருந்து பத்திரிகைகளுக்கு கசியவிடப்பட்டது. இது மறுநாள் செய்தியாக வெளியாக உலக அரங்கம் பரபரப்பானது. இந்த செய்தியால் அதிர்ச்சியான இந்திய பிரதமர் மோடி உடனடியாக, இலங்கை அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதே நேரத்தில் இலங்கைக்கான இந்திய தூதர் தரம்சித்சிங் இலங்கை அதிபரை நேரில் சந்தித்து பேசிவிட்டு கிளம்பியதும், அப்படியொரு பேச்சை அமைச்சரவை கூட்டத்தில் பேசவில்லை என அமைச்சரவை தொடர்பான செய்திகளை தெரிவிக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜிதசேனாரத்னா அக்டோபர் 17ந்தேதி மதியம் செய்தியாளர்களிடம் மறுத்தார்.


சிறிது நேரத்தில் அதிபரின் மூத்த ஆலோசகர் சிறிரால் லக்திலக் செய்தியாளர்களிடம், தன்னை கொலை செய்ய ரகசிய அமைப்புகள் சதி திட்டம் தீட்டியுள்ளன என பேசினாரே தவிர இந்தியாவின் ரா அமைப்பு பற்றி ஒன்றும் சொல்லவில்லை என மறுத்தார்.


முதலில் இல்லை என்றார்கள், பின்னர் பேசினோம் என மாத்தி மாத்தி பேசி மழுப்பினார்கள். வரும் 20ந்தேதி இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இந்தியா வந்து பிரதமர் மோடி, அமைச்சர் சுஷ்மாசுவராஜ் போன்றோரை சந்திக்கிறார். இந்த சந்திப்பில் இந்தியா சார்பில் அதிபரின் குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் இந்தியா சார்பில் தெரிவிக்கப்படும் எனக்கூறப்படுகிறது.


இந்தியாவுக்கும் – சீனாவுக்கும் இடையில் ஆசிய பிராந்தியத்தில் நடந்துவருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் அதிகாரத்தில் உள்ளவர்களில் இந்தியா ஒருதரப்பை கவர் செய்து வைத்திருந்தால், சீனா ஒரு தரப்பை கவர் செய்து வைத்திருக்கும். அப்படி இலங்கையில் அதிபர் சிறிசேனா சீனா ஆதரவாளராகவும், பிரதமர் ரணில்விக்ரமசிங்கே இந்திய ஆதரவாளராகவும் உள்ளார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.


 

sirisena



கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியை இந்தியாவுக்கு தரவேண்டும்மென பிரதமர் ரணில் விக்ரம்சிங்கே கூறியதாகவும், இதற்கு எதிர் நிலைப்பாடு அதிபர் கொண்டுள்ளார். இதேபோல் பல விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அதிபர் ஈடுபட்டுள்ளதால், அவர் மீது அதிருப்தியில் உள்ளது. இதை அறிந்தே உள்ளார் அதிபர். அதோடு அவருக்கு நாட்டில் எதிர்ப்புகளும் அதிகமாக உள்ளன. இதனால் அச்சத்தில் உள்ள அதிபர், தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாகவும், அதற்காக இலங்கையில் செயல்படும் ஆவா குழுக்களுக்கு இந்தியா ஆயுதம், பணம், பயிற்சி வழங்குகிறது என்கிற குற்றச்சாட்டை முதலில் தனக்கு ஆதரவான எம்.பிக்கள் மூலமாக பேசவைத்து அரசியல் செய்துள்ளார் என்கிறார்கள்.


ரா அமைப்பு.


இந்தியாவின் சார்பில் வெளிநாடுகளில் இயங்கும் புலனாய்வு அமைப்பு தான் ரா. ( ரிசர்ச் அனலைஸ் விங்க் என்பதன் சுருக்கமே RAW) இந்த அமைப்பு இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் மிரட்டல், தீவிரவாத அச்சுறுத்தல், இந்தியாவுக்கு எதிராக உருவாகும் சதித்திட்டங்களை புலனாய்வு செய்வதே இதன் பணி. இந்தியாவுக்கு எதிராக இருப்பவர்களை அடக்குவது, எதிர்த்தால் அழிப்பது என்பது கூடுதல் வேலை. இப்படியொரு அமைப்பு எல்லா நாட்டு உளவுத்துறையிலும் உண்டு. அமெரிக்காவுக்கு சிஐஏ, இஸ்ரேல்க்கு மொஸாட், பாகிஸ்தானுக்கு ஐ.எஸ்.ஐ உள்ளது. இந்தியாவுக்கும் – சீனாவுக்கும் இடையிலான முதல் யுத்தத்தில் இந்தியாவின் தோல்விக்கு பின் உருவானது தான் ரா. அப்போது முதல் பலப்பல வெளிநாட்டு ஆப்ரேஷன்களில் ஈடுப்பட்டுள்ளன. சிலப்பல வெற்றி, சிலப்பல தோல்வி. சமீபத்தில் வெளிநாட்டு தேர்தல் ஒன்றில் கவனம் செலுத்தி இந்தியாவுக்கு சாதகமான ஆட்சியை கொண்டு வந்துள்ளது என்கிற கருத்தும் ஏற்பட்டுள்ளது.


ரா அமைப்பை பார்த்து இலங்கை அதிபர் பயப்படக்காரணம், ஒருக்காலத்தில் இலங்கை சிங்கள அரசை 25 வருடங்களாக நெருப்பின் மீது நடக்கவைத்த விடுதலைப்புலிகள் என்கிற அமைப்புக்கு பயிற்சி தந்து ஆக்கமும், ஊக்கமும் எல்லா விதத்திலும் தந்தது ரா தான். இலங்கையில் சுமார் 40 ஆண்டுகாலமாகவே ரா அமைப்பினர், துணி வியாபாரியாக, வர்த்தகராக, சுற்றுலாப்பயணியாக பலபல வடிவங்களில் இலங்கையில் தங்கி உளவு வேலை செய்துவருகின்றனர்.  ரா அமைப்பு நினைத்தால் இலங்கையில் ஒருவரை அரியணை ஏற்றும், இல்லையேல் இறக்கிவிடும். உதாரணம் முன்னால் அதிபர் ராஜபக்சே. இதை தெரிந்ததால் தான் தற்போதைய அதிபர் சிறிசேனா அலறுகிறார்.


ஆவாக்குழு ?.


இலங்கையில் செயல்படும் கூலிப்படை ஒன்றின் பெயரே ஆவாக்குழு. மாணிப்பால் கிருஷ்ணா குழு, வட்டுக்கோட்டை தில்லு குழு, சுன்னாகத்தில் சானா குழு என தமிழர்கள் பகுதியில் பல குழுக்கள் உள்ளன. சிங்களர்கள் பகுதியிலும் இப்படிப்பட்ட குழுக்கள் உள்ளன. அரசியல்வாதிகளின் பெரும் பலத்தோடு உள்ளனர். விடுதலைப்புலிகள் கோலோச்சிக்கொண்டு இருந்த காலத்திலேயே யாழ்ப்பானத்தில் தீனா குழு செயல்பட்டு வந்தது. அப்படிப்பட்ட ஒருக்குழு தான் ஆவாக்குழு.


இவர்கள் கையில் கத்தியோடு உலாவருவார்கள். கட்டப்பஞ்சாயத்து செய்வார்கள், ஆள் கடத்தலில் இறங்கினார்கள் அது எதையும் போலிஸ் கண்டுக்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட குழுக்கள் கடந்த தேர்தலில் முன்பு அதிபராக இருந்த ராஜபக்சேவே பயன்படுத்திக்கொண்டு இருந்துள்ளார். இந்த குழுக்கள் இப்போது போலிஸ், இராணுவத்தோடு நேரடியாக மோதுகிறார்கள். இது இலங்கையில் பெரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்திவருகின்றன. இதில் ஆவா குழுவினரின் கைகளில் தற்போது லேட்டஸ்ட் துப்பாக்கிகள் உள்ளனவாம். அதைக்காட்டியும், சுட்டும் மிரட்டுகிறார்களாம். இவர்களை இந்தியாவின் ரா அமைப்பு தன் நாட்டுக்கு அழைத்துச்சென்று பயிற்சி தந்து அனுப்புகிறது, இலங்கையிலும் ரகசியமாக பயிற்சி வழங்குகிறது என இலங்கை புலனாய்வு அமைப்பு அதிபருக்கு தகவல் தந்துள்ளது. அதோடு, உங்களை இந்த குழுவை வைத்தே கொல்லவும் முயல்கிறது இந்தியா எனச்சொல்ல அதுவே இத்தனை பூதாகரத்துக்கும் காரணமாகியுள்ளது.

Next Story

“மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
If Modi comes back to power the country will not stand says CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “உங்களில் ஒருவனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உரிமையோடு கேட்கிறேன். நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள்!. நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். இந்திய நாட்டின் இரண்டாவது விடுதலைப் போர் என்று அழைக்கப்படுகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் ஏப்ரல் 19-ஆம் நாள் நடைபெற இருக்கிறது. ஜனநாயகத்தையும் - மக்களாட்சி மாண்புகளையும் மதிக்கின்ற, கூட்டாட்சித் தத்துவத்தைப் போற்றி இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கின்ற ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க 'இந்தியா' கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பத்தாண்டு கால இருள் சூழ்ந்த ஆட்சியை அகற்றி, புதிய இந்தியாவுக்கான விடியலுக்கு அச்சாரம் இடும் நாள்தான் - ஏப்ரல் 19.

யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி தொடர்ந்துவிடக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் இது. குஜராத் மாடல், வளர்ச்சியின் நாயகன் என்ற முகமூடிகளுடன் இதுவரை தேர்தல் களத்தில் மோடி நின்றார். அவரது குஜராத் மாடல் என்பது போலியானது என்பதும், வளர்ச்சியின் நாயகன் என்பது பொய்யானது என்பதும் பத்தாண்டுகளில் தெரிந்து விட்டது. மக்கள் தெளிந்து விட்டார்கள். இப்போது அனைவருக்கும் தெரிவது, 'ஊழல் மோடி' தான். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி பல்லாயிரம் கோடி பணத்தை பாஜக குவித்திருப்பதை தேர்தல் பத்திர ஊழல் அம்பலப்படுத்திவிட்டது. உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல், சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய முறைகேடு என்று வர்ணிக்கப்படுகிற தேர்தல் பத்திர ஊழல், பாரதிய ஜனதா கட்சியும், நரேந்திர மோடியும் ஊடகங்களின் துணையோடு உருவாக்கி வைத்திருந்த போலி பிம்பத்தைச் சுக்கு நூறாக்கி, முகத்திரையைக் கிழித்துவிட்டன. தேர்தல் பத்திர நடைமுறையே முறைகேடானது, சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், ஊழல் மலிந்த தேர்தல் பத்திரத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நியாயப்படுத்தி பேசி வருவது, இதுவரை பாஜகவை ஆதரித்தவர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. வேறு எந்த நாட்டிலாவது இதுபோன்ற இமாலய ஊழல் அரங்கேறி இருந்தால், அந்த நாட்டின் பிரதமர் பதவி விலகி இருப்பார். 

If Modi comes back to power the country will not stand says CM MK Stalin

தனது சுயநல அரசியலுக்காக ஒட்டுமொத்த இந்தியாவையும் மோடி நாசப்படுத்தி விட்டார். கருப்புப் பணத்தை மீட்பது, ஊழலற்ற ஆட்சியைத் தருவது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, தொழில் வளர்ச்சியை பெருக்குவது, வறுமையை ஒழித்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, சமூகநீதித் திட்டங்களைச் செயல்படுத்தி சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது, பாதுகாப்பை உறுதிசெய்து மகளிர் வாழ்வை மேம்படுத்துவது என்ற எல்லா தளங்களிலும் படுதோல்வியை மோடியின் அரசு சந்தித்து இருக்கிறது. வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம் கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவுகளைச் சிதைத்து விட்டது. விஷம் போல் ஏறிய விலைவாசி உயர்வு ஏழை மக்களின் வாழ்க்கையைப் பாழ்படுத்திவிட்டது. பெட்ரோல், டீசல், சுங்கக் கட்டணக் கொள்ளை நடுத்தர மக்களை வதைத்துவிட்டது. இரக்கமற்ற ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு சிறு, குறு தொழில்களை சிதைத்துவிட்டது. மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைத்து, எப்போதும் மதப் பகையை வளர்க்கும் வெறுப்புப் பேச்சின் மூலம் சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்திக் குளிர்காய நினைக்கிறார்கள்.

அண்ணல் அம்பேத்கர் இயற்றி அளித்த அரசியலமைப்புச் சட்டம், மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநிலங்களின் முதலமைச்சர் பதவியில் இருந்தாலும் கைது செய்து சிறையில் அடைக்கும் கொடுமையும், ஆளுநர்களை வைத்துப் போட்டி அரசாங்கம் நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் முடக்கும் அநியாயம், மாநிலங்களுக்கு வரி மற்றும் நிதிப் பகிர்வில் பாரபட்சம் அரங்கேறாத நாளே இல்லை. இதுவரை இந்தியத் திருநாடு சந்திக்காத அளவு மாநில உரிமைப் பறிப்பு நடவடிக்கைகள் மோடி அரசால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தன. சுதந்திர இந்தியாவில், பெட்ரோல் – டீசல் மீது மிக அதிகமான வரியை செஸ், சர்சார்ஜ் என்ற பெயரில் வசூலித்து, மாநிலங்களுக்குப் பகிர்ந்து தராமல், மக்களிடம் சுரண்டி மாநிலங்களையும் வஞ்சித்த மோசமான ஆட்சி, மோடியின் ஆட்சி!.

வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம், சட்ட மசோதாக்களுக்கு அனுமதி, அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது, துணைவேந்தர்களை நியமனம் செய்வது போன்ற அன்றாட, இயல்பான நிர்வாக நடைமுறைகளுக்குக்கூட உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு மாநிலங்களுக்கு நிர்பந்தம் தருகிற கொடுங்கோல் ஆட்சியாக, மோடி தலைமையிலான ஆட்சி இருப்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். மாநிலங்களின் வயிற்றில் அடிப்பது, மாநில உரிமைகளை நசுக்குவதைப் பெருமையான செயல் என்று கருதிக்கொள்கிற அளவு அதிகார மமதையில் ஆட்டம் போடும் ஆட்சியாளர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவதற்கான தேர்தல் இது.

இந்தியா போன்ற மகத்தான, மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரதமராக, தனது கடமையில் நரேந்திர மோடி தோற்றுவிட்டார். எனவே, அவர் அந்த நாற்காலியில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதை நாடு தாங்காது. நாடாளுமன்ற ஜனநாயகத் தேர்தல் முறையே இல்லாமல் போய்விடும், சர்வாதிகார அதிபர் ஆட்சி முறை கொண்ட நாடாக ஆர்எஸ்எஸ் – பாஜக ஆட்சியாளர்கள் இந்தியா மாற்றிவிடுவார்கள். இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால் இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டி, மாநிலங்களின் எல்லைக் கோடுகளை மாற்றி, ஒற்றையாட்சி நாடாக மாற்றிவிடுவார்கள் என்ற அச்சம் நாடு முழுவதும் மக்கள் மனங்களில் இருக்கிறது. இந்தியாவைப் பாதுகாக்க மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு, தமிழர்களின் வளர்ச்சிக்கு மோடி அரசு தீட்டிய ஒரேயொரு சிறப்புத் திட்டத்தையாவது கூறுங்கள் என்று கடந்த ஒரு மாத காலமாகப் பரப்புரைக் கூட்டங்களில் ஒன்றிய அரசை நோக்கிக் கேள்வி எழுப்பி வந்தேன். தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு பைசா கூட தராமல் தமிழ்நாட்டை வஞ்சிப்பது நியாயமா என்றும் கேட்டு வந்தேன். ஆனால், அதற்கு எந்த நேர்மையான பதிலையும் பிரதமர் மோடியோ, அவரது அமைச்சரவை சகாக்களோ கூறவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் மோடியும் பாஜகவும் எதிரிகள் என்பது இதில் இருந்தே உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் அமைய இருந்த மாபெரும் முதலீட்டை, மிரட்டி குஜராத்துக்கு மடை மாற்றியவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முன்னேறுவதை அனுமதிக்கவே மாட்டார்கள்.  தமிழ்நாட்டின் வளமான எதிர்காலத்துக்கும், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது. 

If Modi comes back to power the country will not stand says CM MK Stalin

இவர்கள் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கத்தில் அடிமை பழனிசாமியின் கட்சியானது பாஜக போட்டுத் தந்த திட்டப்படி கள்ளக் கூட்டணி அமைத்து தனியாக நிற்கிறது. தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக, பாழ்படுத்திய அதிமுக ஆகிய இரண்டு கூட்டணியையும் புறக்கணிக்குமாறு தமிழ்நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பது போல நாடகமாகிக் கொண்டிருந்தாலும், தேர்தலுக்குப் பிறகு கைகோத்து விடுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியை விமர்சிக்காதது மட்டுமல்ல, தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க-வுக்குத் தேவையென்றால் நேரடியாக ஆதரிப்பார்கள். 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியை அமைத்தது திராவிட முன்னேற்றக் கழகம். அன்று முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தொடர் வெற்றிகளைக் குவித்த சிறப்பும் பெருமையும் திமுக கூட்டணிக்கு உண்டு.

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் அகில இந்திய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. நண்பர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் நம் அணியில் இணைந்துள்ளது. திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை உட்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள், சமுதாய இயக்கங்கள் நமது அணிக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளன. இந்தத் தொண்டர்களின் சலிக்காத உழைப்பைத் தமிழ்நாடு முழுவதும் நான் பார்த்தேன். அவர்களது முகங்களில் தெரிந்த நம்பிக்கை, என்னை மேலும் மேலும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக நான் வெளியிட்ட அறிக்கையில், ‘புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும் யார் வேட்பாளர், எந்தச் சின்னம் என்பதை மறந்து விட்டு, ‘வேட்பாளர் மு.க.ஸ்டாலின்' என்பதை மனதில் வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும். அனைத்துத் தொகுதியிலும் நானே போட்டியிடுகிறேன் என்பதை உள்ளத்தில் தாங்கி அனைத்து உடன்பிறப்புகளும் பணியாற்ற வேண்டும்’ என்று உரிமையோடு நான் கேட்டுக் கொண்டேன். அந்தச் சொல்லுக்கு கட்டுப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து உடன்பிறப்புகளும் தேர்தல் பணியாற்றி வரும் காட்சியை நான் பார்த்தேன். 'இவர்களைத் தொண்டர்களாகப் பெற என்ன தவம் செய்துவிட்டேன்' என்ற பெருமித உணர்வை நான் அடைகிறேன்.

If Modi comes back to power the country will not stand says CM MK Stalin

இதே ஆர்வமும், சுறுசுறுப்பும் தேர்தல் முடியும் வரை இருந்தாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களை வாக்குச்சாவடிக்கு வர விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதல், வாக்குப் பெட்டிகள் உரிய பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவது வரையிலும் கண்துஞ்சாது கண்காணிக்க வேண்டும் என்று கழக உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன். உங்களது உழைப்பின் பயன்தான் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் காக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். தமிழ்நாட்டில் தனக்கு பிடித்த ஊர்ப் பெயர்களில் ஒன்று 'எப்போதும் வென்றான்' என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்கள். திராவிட முன்னேற்றக் கழகமும் எப்போதும், எல்லாத் தேர்தல்களிலும் வென்றான் என்பதை மெய்ப்பிக்கும் தேர்தல் இது.

ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளைக் கண்டு நம் கவனம் துளியும் சிதறிவிடக்கூடாது. அவற்றைக் கடந்த காலங்களிலும் நாம் பொருட்படுத்தியது இல்லை. கடைசி வாக்கு பதிவாகி, வெற்றிக் கனி நம் கைகளில் வந்து சேரும் வரை, கண் துஞ்சாது – பசி நோக்காது – கருமமே கண்ணாயினர் என நாம் கவனத்தோடும் உற்சாகம் குன்றாமலும் உழைத்திட வேண்டுகிறேன். கருத்துக்கணிப்புகளை எல்லாம் விஞ்சுகிற, நாடே தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கிற வெற்றியாக நம் வெற்றி இருக்க வேண்டும். தேர்தல் விதிகளை முறையாகப் பின்பற்றி, வாக்காளப் பெருமக்கள் ஒவ்வொரையும் மீண்டும் தேடிச் சென்று சந்தித்து, அவர்களிடம் மோடி ஆட்சியில் நாடு எதிர்கொண்டுள்ள ஆபத்துகளை விளக்கிச் சொல்லி, திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்ற மகத்தான மக்கள் நலத்திட்டங்களையும் சாதனைகளையும் எடுத்துரைத்து, நம் அணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

இரண்டு முறை இருண்ட காலத்தைக் காட்டிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இந்தியா கூட்டணியின் வெற்றியில்தான் இந்திய நாட்டின் சிறப்பான எதிர்காலமும் தமிழ்நாட்டின் முன்னேற்றமும் இருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையும், அதை வழிமொழிந்தும் வலு சேர்த்தும் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையும் திட்டங்களாக மாற வேண்டும். தமிழ்நாட்டின் வாக்காளப் பெருமக்களுக்கு பணிவான வேண்டுகோளை கரம் கூப்பி முன்வைக்கிறேன். இந்தியா என்றென்றும் மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும் சகோதரத்துவமும் கொண்ட நாடாகத் திகழ, தமிழ்நாட்டின் தனித்தன்மையை நிலைநாட்டுவதற்கு நம் முன் உள்ள ஒரே வாய்ப்பும் ஆயுதமும் உங்கள் வாக்குதான். உங்கள் பொன்னான வாக்குகள், இந்தியாவைக் காக்கட்டும், சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை மீட்கட்டும். தமிழ்நாட்டின் தனித்தன்மையை உறுதி செய்யட்டும். 

தமிழ்நாட்டின் மக்கள் நலத் திட்டங்கள் தொய்வின்றித் தொடர, எங்கும் எதிலும் தமிழ்நாடு முன்னோடி என்ற பெருமை நிலைத்திட, தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற அரசு டெல்லியில் அமைந்தாக வேண்டும். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு, ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு. தமிழ்நாட்டின் பகைவர்களை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் எதிரிகளை வீழ்த்துவோம். ஜனநாயகத்தைக் காக்கும் போர்க்களத்தில், நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வரலாறு காணாத வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் தேடித் தர வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“ஊழலின் நாயகன் பிரதமர்...” - ராகுல் காந்தி விளாசல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Prime Minister is the hero of corruption Rahul Gandhi 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி இந்தியா கூட்டணி சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யும், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதில் ராகுல் காந்தி எம்.பி. பேசுகையில், “இந்த தேர்தல் சித்தாந்தத்தின் தேர்தல். ஒருபுறம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவும், அரசியலமைப்பையும் ஜனநாயக அமைப்பையும் அழிக்க முயற்சிக்கின்ற. மறுபுறம், இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க முயற்சிக்கின்றன. தேர்தலில் 2-3 பெரிய பிரச்சனைகள் உள்ளன. முதலாவது வேலையில்லாத் திண்டாட்டம், இரண்டாவது  பணவீக்கம் ஆகும். ஆனால் பாஜக மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் ஈடுபட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, பிரதமர் ஏ.என்.ஐ.க்கு பேட்டி அளித்தார். இது ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட நிகழ்ச்சி. அதில் தேர்தல் பத்திரங்கள் குறித்து பிரதமர் விளக்க முயன்றார். வெளிப்படைத்தன்மைக்காகவும் தூய்மையான அரசியலுக்காகவும் தேர்தல் பத்திரங்கள் கொண்டுவரப்பட்டதாக பிரதமர் கூறுகிறார். இது உண்மையாக இருந்தால் ஏன் அந்த திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இரண்டாவதாக, வெளிப்படைத் தன்மையை கொண்டு வர விரும்பினால், பாஜகவுக்கு பணம் கொடுத்தவர்களின் பெயர்களை ஏன் மறைத்தீர்கள். மேலும் அவர்கள் உங்களுக்கு பணம் கொடுத்த தேதிகளை ஏன் மறைத்தீர்கள்?. தேர்தல் பத்திரங்கள் திட்டம் உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் திட்டம். இந்தியாவின் அனைத்து தொழிலதிபர்களும் இதைப் புரிந்துகொண்டு அறிந்திருக்கிறார்கள். இது குறித்து பிரதமர் மோடி எவ்வளவு தெளிவுபடுத்த விரும்பினாலும், அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால், பிரதமர் ஊழலின் நாயகன் என்பது  நாட்டிற்கும் தெரியும். 

Prime Minister is the hero of corruption Rahul Gandhi 

கடந்த 10 ஆண்டுகளில் பணமதிப்பு நீக்கம், தவறான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்ற மக்களை இன்னலுக்கு ஆளாக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளார். அதானி போன்ற பெரும் கோடீஸ்வரர்களுக்கு ஆதரவு அளித்து வேலைவாய்ப்பு உருவாக்கத்தை பிரதமர் மோடி குறைத்துள்ளார். மீண்டும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை வலுப்படுத்துவதுதான் எங்கள் முதல் பணி. வேலைவாய்ப்பு அளிப்பதற்கு நாங்கள் 23 யோசனைகளை வழங்கியுள்ளோம், ஒரு யோசனை புரட்சிகர யோசனை - உத்திரபிரதேசத்தின் அனைத்து பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோதாரர்களுக்கும் பயிற்சி பெறும் உரிமையை வழங்குவோம். மேலும், இளைஞர்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் டெபாசிட் செய்வோம். இந்த உரிமையை கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வழங்குகிறோம். போட்டித் தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிவுக்கு எதிராக சட்டம் இயற்றுவோம்” எனத் தெரிவித்தார்.