Skip to main content

ஜெய்ஷ்-இ-முகமது - நோக்கமும் செயல்பாடுகளும்   

Published on 19/02/2019 | Edited on 19/02/2019
pulwama


இன்னும் மக்கள் சோகம் முழுதாய் நீங்காமல்தான் இருக்கின்றனர். இன்னும் சமூக ஊடகங்களில் விவாதங்கள் ஓயவில்லை. போர் தொடுக்க வேண்டும் என்று இந்தியாவில் பலரும் 'போர் தொடுத்தால் சந்திக்கத் தயார்' என்று இம்ரான்கானும் சொல்லி வருகின்றனர். எப்போதும் போல என்ன நடக்குமோ என்ற பதற்றத்துடன் காஷ்மீர் பொதுமக்கள். இதற்கெல்லாம் காரணம் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதல்.    
 

கடந்த 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.  இந்த சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 30 வருடங்களில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் இது மிகப்பெரிய தாக்குதல் ஆகும். சி.ஆர்.பிஎஃப் வீரர்கள் ஸ்ரீநகர் செல்வதற்காக 70 வாகனங்களில் அணிவகுப்பாக அனந்த் நாகிலிருந்து சென்று கொண்டிருந்தனர். புல்வாமா மாவட்டத்திலுள்ள லெதிபுரா என்னும் பகுதி வழியாக சி.ஆர்.பி.எஃப் அணிவகுப்பு சென்றுகொண்டிருக்கும்போது அஹமது தார் என்ற பயங்கரவாதி எஸ்யூவி வகை கார் ஒன்றில் 200 முதல் 350 கிலோ அளவு இருக்கக்கூடிய வெடிப்பொருட்களை ஏற்றிக்கொண்டு அணிவகுப்பில் வந்த ஒரு பேருந்தில் மோதி தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியுள்ளார். அந்த அணிவகுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் இறந்தனர். 
 

தாக்குதல் நடைபெற்ற ஒரு சில மணிநேரங்களிலேயே ஜெய்ஷ்-இ-முகமது என்ற பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது. இந்தத் தாக்குதலை நடத்திய அஹமது தார் தாக்குதலுக்கு முன்பு பேசிய வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதல் திட்டத்துக்கு தலைமை தாங்கியவர் மௌலானா மசூத் அசார். இவருடைய கொள்கை இந்தியாவிடம் இருந்து ஜம்மு காஷ்மீரை பிரித்து பாகிஸ்தானுடன் இணைப்பதுதான்.
 

masood asar


ஜெய்ஷ் - இ - முகம்மது என்பதன் பொருள் முகம்மதின் ராணுவம் என்பதாகும். மசூத் அசார் பல வருடங்களுக்கு முன்பு காஷ்மீரில் பிடிப்பட்டார். பின்னர் 1999ஆம் ஆண்டு தாலிபன் பயங்கரவாதிகள் காத்மண்டுவிலிருந்து டெல்லி வரவிருந்த இந்திய விமானத்தை கடத்தி பிணைக் கைதிகளை வைத்து மிரட்டியதன் விளைவாக அப்போதைய பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய், வேறு வழியின்றி மசூத் அசார் உட்பட மூன்று பயங்கவாதிகளை விடுதலை செய்தார்.

இதனை அடுத்து வெளியே வந்த மசூத் அசார், 2000 ஆம் ஆண்டில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பின் நோக்கம் இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை பிரித்து பாகிஸ்தானிடம் இணைக்க வேண்டும் என்பதுதான். இந்த அமைப்பை தொடங்குவதற்கு முன்பே மசூத் அசார் தாலிபன் தலைவர் முல்லா ஒமருடனும் அல் கொய்தா தலைவர் ஒசாமாவுடனும் தொடர்பில் இருந்திருக்கிறார்.

காஷ்மீர் வரலாற்றில் கடந்த பல வருடங்களில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மிகவும் மோசமான ஒன்றாக இந்த புல்வாமா தீவிரவாத தாக்குதல்களை கருதுகின்றனர். இந்தியாவில் பல தீவிரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளது இந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு. சமீபமாக நடந்த பத்தன்கோட் விமான இறங்குதள தாக்குதல், உரி தாக்குதல் ஆகியவையும் இவர்கள் நடத்தியதுதான். இந்திய நாடாளுமன்றத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலிலும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பங்கு இருக்கிறது. பாகிஸ்தான் அரசால் இரண்டு முறை கைது செய்யப்பட்டுள்ள மசூத் அசார் பின்னர் விடுவிக்கப்பட்டார். 2002ஆம் ஆண்டில் பாகிஸ்தானால் தடை செய்யப்பட்டது அந்த அமைப்பு. இப்போது மசூத் அசார் எங்கிருக்கிறார் என்பது பாகிஸ்தானுக்கும் தெரியாதாம்.
 

 

 

Next Story

புல்வாமா தாக்குதல் விவகாரம்; பிரதமர் மோடியை விமர்சித்த முன்னாள் ஆளுநர் வீட்டில் சி.பி.ஐ அதிரடி சோதனை

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
CBI raids house of ex-governor who criticized PM Modi who Pulwama incident issue

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2018 முதல் 2019 வரை ஆளுநராக பதவி வகித்து வந்தவர் சத்யபால் மாலிக். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். 

முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், தனியார் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் கூறியதாவது, “மத்திய ரிசர்வ் போலீஸ் படை(CRPF) வீரர்களின் மீதான தாக்குதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மையின் காரணமாகவே ஏற்பட்டது. அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ்நாத் சிங். ராணுவ வீரர்களை அழைத்துச் செல்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து விமானம் கேட்கப்பட்டது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் விமானத்தை தர மறுத்து சாலை மார்க்கமாக செல்லும்படி உத்தரவிட்டது. இதன் காரணமாகவே சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சாலை மார்க்கமாக சென்றார்கள். சாலை மார்க்கமாக அவர்கள் சென்றபோதும் அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் திறம்படச் செய்யப்படவில்லை.

அன்று மாலையே பிரதமரிடம் இது குறித்து கூறினேன். ‘இது நம் தவறு, விமானம் வழங்கப்பட்டு இருந்தால் இது நடந்திருக்காது’ என்று தெரிவித்தேன். ஆனால் பிரதமர் ‘இது குறித்து வெளியில் யாரிடமும் கூற வேண்டாம் என்றும் அமைதியாக இருக்கும்படியும்’ கூறினார். தேசிய பாதுகாப்பு செயலாளரும் அமைதியாக இருக்கும்படியே கூறினார். வெடி மருந்துகளுடன் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வந்த வாகனம் 10 முதல் 12 நாட்கள் சுற்றித் திரிந்ததை உளவுத்துறையினர் சரிவர கவனிக்கவில்லை. இது உளவுத்துறையினர் தோல்வி” எனக் கூறினார். இவர் பேசியது, அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இதனிடையே, முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் பதவி வகித்தபோது, அரசு ஊழியர்களுக்கு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் நீர்மின் திட்டம் ஆகியவற்றிற்கான ஒப்பந்தங்கள் வழங்குவதில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆண்டு இது குறித்து வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ சத்யபால் மாலிக்கிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் இன்று (22-02-24) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீட்டில் சி.பி.ஐ சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Next Story

புல்வாமா தாக்குதல் விவகாரம்: அமித்ஷாக்கு சத்யபால் மாலிக் பதிலடி!

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

sathyapal malick versus amithsha related pulvama incident

 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2018 முதல் 2019 வரை ஆளுநராக பதவி வகித்து வந்த சத்யபால் மாலிக் அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்களின் மீதான தாக்குதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மையின் காரணமாகவே ஏற்பட்டது. அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ்நாத் சிங். ராணுவ வீரர்களை அழைத்துச் செல்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து விமானம் கேட்கப்பட்டது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் விமானத்தை தர மறுத்து சாலை மார்க்கமாக செல்லும்படி உத்தரவிட்டது. இதன் காரணமாகவே சிஆர்பிஎஃப் வீரர்கள் சாலை மார்க்கமாக சென்றார்கள்.

 

சாலை மார்க்கமாக அவர்கள் சென்ற போதும் அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் திறம்படச் செய்யப்படவில்லை. அன்று மாலையே பிரதமரிடம் இது குறித்து கூறினேன். ‘இது நம் தவறு. விமானம் வழங்கப்பட்டு இருந்தால் இது நடந்திருக்காது’ என்று தெரிவித்தேன். ஆனால், பிரதமர் ‘இது குறித்து வெளியில் யாரிடமும் கூற வேண்டாம்’ என்றும், அமைதியாக இருக்கும்படியும் கூறினார். தேசிய பாதுகாப்பு செயலாளரும் அமைதியாக இருக்கும்படி கூறினார். வெடி மருந்துகளுடன் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வந்த வாகனம் 10 முதல் 12 நாட்கள் சுற்றித் திரிந்ததை உளவுத்துறையினர் சரிவர கவனிக்கவில்லை. இது உளவுத்துறையினர் தோல்வி” எனப் பேசியிருந்தார். இவரின் இந்த பேச்சானது மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்தது.

 

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவிக்கையில், "சத்யபால் மாலிக் ஆளுநராக பதவி வகித்த போது இது குறித்து எதுவும் கூறாமல்  தற்போது குற்றம் சாட்டுகிறார்" என்று கூறி இருந்தார். இந்நிலையில் அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சத்யபால் மாலிக், "நான் ஆளுநர் பதவியில் இருந்து விலகிய பிறகு தான் இந்த பிரச்சனையை எழுப்புகிறேன் என்று கூறுவது தவறானது. தாக்குதல் நடந்த அன்றே இதைப் பற்றி பேசி இருந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.