Skip to main content

தினகரனுடனேயே சேர்ந்து அ.தி.மு.க.வை ஒற்றுமைப்படுத்தலாம் எனக் கூறிய ஓபிஎஸ்!

Published on 01/07/2019 | Edited on 01/07/2019

ஒருவழியாக,  அ.ம.மு.க.வை விட்டு தங்க.தமிழ்ச் செல்வனை நீக்கிவிட்டேன். இனி அவர் பற்றி பேச ஒன்றுமில்லை'' என அறிவித்துள்ளார் டி.டி.வி. தினகரன். கடந்த ஒரு வாரமாக மீடியாக்களில் பெரிய அளவில் விவாதத்தை கிளப்பிய விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்துள்ளது. ஆனால் "டி.டி.வி. தினகரனின் இந்த அறிவிப்போடு தங்க.தமிழ்ச்செல்வன் விவகாரம் முடிந்துவிடாது' என்கிறார்கள் அ.ம.மு.க. மற்றும் அ.தி. மு.க.வைச் சேர்ந்தவர்கள்.

 

ops



தங்க.தமிழ்ச்செல்வன் டி.டி.வி.தினகரனை அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளில் திட்டும் ஆடியோ ஒன்று மீடியாக்களில் வெளியானது. தினகரனின் செயலாளர்களில் ஒருவரான தொழிற்சங்கத்தை சேர்ந்த செல்ல பாண்டியன் என்பவரிடம் பேசிய பேச்சு என சொல்லப்பட்ட அந்த ஆடியோவை வெளியிட்டது அ.ம.மு.க.வினர்தான். "ஏன் இந்த கோபம்' என அ.ம.மு.க.வின் முன்னணி தலைவர்களில் ஒருவரான வெற்றி வேலை கேட்டோம். "தங்க .தமிழ்ச்செல்வன் எனக்கும் நண்பராக இருந்தவர்தான். அவர் ஜெ. காலத்திலேயே தேனி மா.செ. வானவர். ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர் என்பதால் டி.டி.வி. உள்பட நாங்கள் அவருக்கு மதிப்பு கொடுத்தோம். யாரையும் எகத்தாளமாக பேசும் இயல்பு உடையவர் தங்க. தமிழ்ச்செல்வன். தி.மு.க.வுடன் சேர்ந்து எடப்பாடி ஆட்சியை கவிழ்ப்பேன் என்றார். 18 எம்.எல். ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதியை பற்றி அவதூறாக பேசினார். "இப்படி வாய்க்கு வந்ததை மீடியாக்களில் பேசாதீர்கள்' என எங்கள் பொதுச்செயலாளர் எச்சரித்தார். உடனே அவரை அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளில் பேசுகிறார். அதனால்தான் அவரது தரத்தை எடுத்துச் சொல்ல அவர் பேசிய ஆடியோவை வெளியிட்டோம்'' என்றார்.

 

admk



இதுபற்றி நம்மிடம் பேசிய தங்க.தமிழ்ச்செல்வன், "எனக்கு நேர்ந்த அவமானம் பற்றி உணர்ச்சிவசப்பட்டு நான் பேசு வதை வெளியிடுவது என்ன வகையிலான தலைமைப் பண்பு என தெரியவில்லை. ஓ.பி.எஸ்., விஜயபாஸ்கர், பொன்னார் என யார் இவர்களிடம் பேசினாலும் அதை பதிவு செய்து வெளியிடு கிறார்கள்'' என வெடித்தார்.


உண்மையான பிரச்சினை என்ன என்று அ.ம.மு.க. வட்டாரங்களில் கேட்டோம். "தங்க.தமிழ்ச்செல்வனை அனுமானிக்க முடியாது. திடீரென தினகரனின் தீவிர விசுவாசியாக மாறுவார். திடீரென தினகரனை திட்டுவார். கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் தேனி எம்.பி. தொகுதியில் ஓ.பி.எஸ். மகனை தோற்கடிப்பேன் என களமிறங்கினார். அதற்கு 25 கோடி ரூபாய் வேண்டுமென கோரிக்கை வைத் தார். ஆனால், இளவரசி மகன் விவேக் அவரிடம் தேர்தல் செலவுக்காக கொடுத்த 25 கோடி ரூபாயை செலவு செய்யவில்லை. தேர்தல் முடிந்ததும் செந்தில் பாலாஜி மூலம் தி.மு.க.வுக்கு வலைவிரித்தார். அவர்கள் ஏற்கவில்லை. உடனே அ.தி.மு.க.விடம் பேரம் பேசினார். ராஜ்யசபா எம்.பி. சீட்டுடன் வெயிட்டான விஷயங்களையும் தங்கமணி, வேலுமணி மூலம் எடப்பாடியிடம் பேசினார். அது செட் ஆகவில்லை. அதற்குப் பிறகு வாரிய தலைவர் பதவி என அவர் நடத்திய பேரம் எடப்பாடியிடம் படிந்தது. ஓ.பி.எஸ்.சிடம் செல்ல வில்லை. "தங்க.தமிழ்ச்செல்வனை சேர்ப்பதைவிட, தினகரனுடனேயே சேர்ந்து அ.தி.மு.க.வை ஒற்றுமைப்படுத்தலாம்' என தன்னை சந்தித்த ஜெயக்குமாரிடம் ஓ.பி.எஸ். கூறிவிட்டார். அதனால் திரிசங்கு சொர்க்கத்தில் தங்க.தமிழ்ச்செல்வன் தொங்கிக் கொண்டு இருக்கிறார். அந்த கோபத்தில்தான் தினகரனை திட்டுகிறார்'' என்கிறார்கள் கூலாக.

தங்க.தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்களை கேட்டோம். "டி.டி.வி. அ.ம.மு.க.வை உருவாக்கும் போதே அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அவர் அ.ம.மு.க.வை தொடங்கியதோடு அதை தனி அரசியல் கட்சியாக பதிவு செய்த டி.டி.வி. மனைவி மற்றும் அவரது நண்பர்கள் அடங்கிய குழுவாக மாற்றிவிட்டார். மாணிக்கராஜா என்பவரை நெல்லை மண்டல பொறுப்பாளராக நியமித்தார். "சேலஞ்சர்' துரை என்பவரை கோவை மண்டல பொறுப் பாளராக நியமித்தார். யார் இந்த மாணிக்கராஜா என்றால் அவர் ஒரு ஜமீன்தார் பரம்பரையை சேர்ந்தவர். தினகரனின் நெருங்கிய நண்பர் என்கிறார்கள். அவர் ஒருமுறை விருதுநகர் நகரசபை சேர்மனாக இருந்தார். அதுதான் அவரது அரசியல் அனுபவம். சென்னையில் வெற்றிவேல் பொறுப்பாளராக வந்ததும் கலைராஜன் தி.மு.க.வுக்கு சென்றார். சேலஞ்சர் துரை வந்ததும் செந்தில் பாலாஜி தி.மு.க.வுக்கு போனார். அதே போல் மாணிக்கராஜா நெல்லை மாவட்ட அ.ம.மு.க.வை அப்படியே அ.தி.மு.க.விற்கு அனுப்பி வைத்தார்.

சசிகலா, டி.டி.வி. தினகரனுக்கு நாடாளுமன்றத் தேர்தல் செலவுகளுக்காக 1,500 கோடி ரூபாய் கொடுத் தார். அதை யாருக்கும் தர வில்லை. அதைப் பற்றி கேள்வி கேட்டால் மாணிக்கராஜா போன்றவர்களை வைத்து எங்களது மாவட்டத்திலேயே எங்களுக்கு எதிராக கூட்டம் நடத்துகிறார். அதைத்தான் தங்க.தமிழ்ச் செல்வன் தட்டிக் கேட்டார். உடனே அவரது பேச்சை ஆடி யோவாக வெளியிடுகிறார்கள். தங்க.தமிழ்ச்செல்வன் பதினோரு கோடி ரூபாய் கடனில் இருக்கிறார். காசு வைத்திருப்பவர் களைத் தான் தினகரன் மதிப்பார். செந்தில்பாலாஜி தினகரனுக்காக செலவு செய்து கடனாளியாக போனதால்தான் அவரை மதிக் காமல் சேலஞ்சர் துரையை வைத்து அவரை அவமானப் படுத்தி தி.மு.க.வுக்கு அனுப்பி வைத்தார்கள்'' என்கிறார்கள் விரிவாக.

இந்த விவகாரம் பற்றி நம்மிடம் பேசிய சசிகலாவின் உறவினர்கள்,  தினகரனின் செயல்பாடுகள் பற்றி சசியிடம் தினமும் புகார் கடிதம் சென்று கொண்டி ருக்கிறது. 1500 கோடியை செல வழித்தும் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்கிற கோபம் சசிகலாவிற்கு இருக்கிறது'' என்கிறார்கள். அதே நேரத்தில், ஓ.பி.எஸ்.சை எதிர்த்த தங்க.தமிழ்ச்செல்வனை கட்சியில் சேர்த்தால் தனக்கு வலுச்சேர்க்கும் என நினைக் கிறார் இ.பி.எஸ். அதை தனது பழைய தொடர்புகள் மூலம் ஓ.பி. எஸ்.சை தூண்டி தடுக்க பார்த் தார் தினகரன். இந்த முக்கோண ஆடு-புலி ஆட்டம் நீடித்த நிலையில், அ.தி.மு.க.வில் கிளம்பிய எதிர்ப்பையும், சசியை ஜெயிலில் சந்திக்க நேரம் கிடைக்காத சூழலை யும் உணர்ந்து ஐ.பெரியசாமி மூலம், சபரீசனுக்கு தகவல் அனுப்பி, தி.மு.க.வில் ஐக்கியமாகும் முடிவை தங்க.தமிழ்ச்செல்வன் எடுத்தார் என்கிறார்கள் அவரது தரப்பினர்.
 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.