Skip to main content

மலையாளத்தின் மனோரமா இவர்! 

Published on 26/03/2018 | Edited on 26/03/2018

மார்ச் 26 - நடிகை சுகுமாரியின் நினைவு நாள் 

 

sukumari actor


தமிழகத்தில் பிறந்த நாஞ்சில் நாட்டுப் பெண்மணி, கேரளா சினிமா உலகை ஆண்டார். தமிழகத்தில் ஆச்சி மனோரமா போல இவர் மலையாளத்தின் மனோரமாவாக இருந்தவர். கேரளாவில் இவர் கொண்டாடப்பட்டார். தமிழ் சினிமாவிலும் இவர் நடித்துள்ளார், அவர் நடிகை சுகுமாரி.

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சத்தியபாமாவை திருமணம் செய்துக்கொண்டார் கேரளாவை தாய்வீடாக கொண்டமாதவன்நாயர். மாதவன், நாகர்கோவிலில் இருந்த வங்கி ஒன்றின் அதிகாரியாக பணியாற்றிக் கொண்டு இருந்தபோது 1940 அக்டோபர் 6ந்தேதி தமிழகத்தில் நாகர்கோவிலில் பிறந்தார் சுகுமாரி. சுகுமாரியோடு பிறந்தவர்கள் 4 சகோதரிகள், 1 சகோதரன்.

 

beemsingh with sukumari



கேரளாவில் ஆரம்பக் கல்வியை 2ஆம் வகுப்பு வரை படித்தவர், பின்னர் சென்னை வந்து 4ஆம் வகுப்பு வரை படித்தார். சுகுமாரியின் அம்மா சத்தியபாமாவின் அண்ணன் மனைவி குஞ்சம்மா என்கிற சரஸ்வதி. இவர் நடிகை பத்மினியின் தாயார். சுகுமாரிக்கு அத்தை முறை. பத்மினி சென்னையில் வசித்துக்கொண்டு இருந்தபோது, அந்தக் குடும்பத்தில் ஒருவராக சுகுமாரி வளர்ந்தார். அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் 1951ல் வெளிவந்த 'ஓர் இரவு' திரைப்படத்தில் நாகேஸ்வரராவ் நடித்திருந்தார். அந்தப் படத்தில் 11 வயதான சுகுமாரி குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டார். பின்னர் சுகுமாரியும் முறையாக நடனத்தை கற்றுக்கொண்டார். சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டு இருந்தார்.

சுகுமாரி தனது 19வது வயதில் 1959ல் இயக்குநர் பீம்சிங்கின் இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டார். திருமணம் ஆனாலும் சுகுமாரி நடிக்க விரும்பியதால் பீம்சிங்கும் அனுமதித்தார். எம்.ஜி.ஆர் – சிவாஜி காலம், கமல் – ரஜினி காலம், விஜய் – அஜித் காலம், தற்போது தனுஷ் படங்கள் வரை நடித்துள்ளார் சுகுமாரி. அவர் இறக்கும் வரை நடித்தார். சுமார் 2500 படங்கள் நடித்துள்ளார். அதில் 80 சதவிகித படங்கள் மலையாள திரைப்படங்கள். கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுடனும்  நடித்துவிட்டார் அவர். இதனால் அவரை மலையாளத்தின்  மனோரமா என்றழைத்தனர். அவர் ஏற்று நடித்திராத பாத்திரமில்லை என்கிற அளவுக்கு நடித்துள்ளார்.

 

jeya visits suku



சுகுமாரிக்கு 38 வயதாகும் போது கணவர் பீம்சிங் இறந்துவிட்டார். இதனால் அதிகம் கவலைப்பட்டார். திரைப்படங்களில் நடிப்பதையும் குறைத்துக்கொண்டார். ஆனால், சக திரைத்துறை நண்பர்களின்  வற்புறுத்தலுக்கு பின் மீண்டும் நடிக்கத் துவங்கினார். இவர்களது ஒரே மகன் மருத்துவர் சுரேஷ். இவரும் தற்போது திரைத்துறையில் உள்ளார். தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலத்தின் சார்பில் வழங்கப்படும் அரசு விருதுகள் உட்பட நூற்றுக்கும் அதிகமான  விருதுகளை பெற்றுள்ளார். உச்சமாக 2003ல் சுகுமாரிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது இந்திய அரசு.

சென்னையில் உள்ள அவரது வீட்டில் விளக்கு ஏற்றும்போது ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நடிகையும், தமிழகத்தின் முன்னால் முதல்வருமான ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சுகுமாரி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா சந்தித்து நலம் விசாரித்துவிட்டு சென்றார். சிகிச்சை பலனளிக்காமல் 2013 மார்ச் 26ந்தேதி மறைந்தார்.

Next Story

திரைப்படமாகும் உண்மை சம்பவம் - நடிகைக்கு கொலை மிரட்டல்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
raime sen maakaali poster issue

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ரைமா சென். இப்போது இந்தியில் மாகாளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் 16 ஆகஸ்ட் 1946 அன்று கல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் யேலகண்டி இயக்கும் இப்படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க அனுராக் ஹல்டர் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின் போஸ்டர் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் இந்து மதத்தை குறிக்கும் வகையில் காளி தோற்றத்தில் ஒரு புறமும் முஸ்லீம் மதத்தை குறிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்த தோற்றத்தில் ஒரு புறமும் இணைந்து இருக்கும் முகம் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரை தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக தனக்கு மிரட்டல் வருவதாக ரைமா சென் தெரிவித்துள்ளார். 

raime sen maakaali poster issue

இது தொடர்பாக அவர் கூறுகையில், “மர்ம நபர்களால் பெங்காலி மற்றும் இந்தியில் அலைபேசி கால்கள் வருகிறது. சுசித்ரா சென்னின் பேத்தியாக இருந்த நான் எப்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பதைப் பொறுத்து மிரட்டல்கள் வந்தன. எதிர்காலத்தில் கொல்கத்தாவில் தான் நீ இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள் என்கிறார்கள். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 

Next Story

புடவைகளை விற்று உதவி செய்த பிரபல நடிகை

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
navya nair helped charity people with his saree sold

மலையாள திரையுலகில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை நவ்யா நாயர். மேலும் தமிழ் மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் பிரசன்னா நடிப்பில் வெளியான 'அழகிய தீயே', சேரனின் 'மாயக்கண்ணாடி', முன்னாள் முதல்வர் கலைஞர் எழுதிய 'பாசக்கிளிகள்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார். இப்போது மலையாளத்தில் மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்த நிலையில் தனது சமூக வலைதளப்பக்கத்தில், தான் ஒரு முறை அணிந்த மற்றும் புதிதாக வாங்கி அணிய முடியாத புடவைகளை ஆன்லைனில் விற்பனை செய்வதாக அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் கைத்தறி, காஞ்சிபுரம், பனாரஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான புடைவைகள் இருப்பதாகவும் நியாயமான விலையில் அவை கிடைக்குமெனவும் கூறியிருந்தார். இது விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பியிருந்தனர். 

navya nair helped charity people with his saree sold

இதையடுத்து நவ்யா நாயர் விற்பனையை தொடங்கினார். அதன் மூலம் கிடைத்த லாபத்தை கேரள பத்தனாபுரத்தில் உள்ள காந்திபவனுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார். அங்கு வசிப்பவர்களுக்கு புதிய ஆடைகள் மற்றும் பயனுள்ள பொருட்களை வாங்கிக் கொடுத்து அருகில் இருக்கும் காந்தி பவன் சிறப்பு பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடையையும் கொடுத்துள்ளார். இவரது செயல் தற்போது பாராட்டை பெற்று வருகிறது.