Skip to main content

ஓரினச்சேர்க்கை... தொடரும் விவாதம், என்ன சொல்கிறது நீதிமன்றம்?

Published on 11/07/2018 | Edited on 11/07/2018

உலகில் சுமார் எழுபத்தி இரண்டு நாடுகளில் ஓரினச்சேர்க்கை என்பது இன்னும்  குற்றமாகத்தான் இருக்கிறது. அதில் பன்னிரெண்டு நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பாலியல் உறவு வைத்துக்கொண்டால் மரணதண்டனையும் அளிக்கப்படுகிறது. ஓரினச்சேர்க்கையை குற்றம் என்று சொல்லும் எழுபத்தி இரண்டு நாடுகளில் ஒன்றுதான் இந்தியா. நேற்று (10 ஜூலை 2018) இந்த ஓரினச்சேர்க்கை குறித்த வழக்கின் விசாரணையை உடனடியாக எடுத்து விசாரித்தது உச்சநீதிமன்றம். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான இந்த அமர்வில், நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், பி.எப்.நாரிமன், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இடம்பெற்றனர். 

 

lgbt

 

குற்றம் என்று சொல்லப்படும் இந்த ஓரினச்சேர்க்கை, குற்றமற்றது என்பது அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும்  ஆதரிப்பவர்களின் கருத்து. மத்திய அரசும் இன்னும் சில தரப்பினரும் இந்த விஷயத்தை எதிர்த்துதான் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


ஓரினச்சேர்க்கை இந்தியாவில் எப்படி குற்றமானது என்பதைப் பார்ப்போம். பிரிட்டிஷ் ஆட்சி காலகட்டத்தில் சட்டதிட்டங்கள் ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டு நீதிமன்றங்கள் செயல்படுத்தப்பட்டன, அதில் பலவற்றை இந்திய சட்டம் இணைத்துக்கொண்டு பின்பற்றுகிறது. இந்திய சட்டத்தில் செக்ஷன் 377 ஓரினச்சேர்க்கை என்பது குற்றம் என்று சொல்கிறது. செக்ஷன் 377, இயற்கைக்கு மாறான குற்றங்கள் மற்றும் இயற்கைக்கு மாறாக எந்த ஆணுடனும், பெண்ணுடனும் மற்றும் விலங்குங்களிடம் உடலுறவு வைத்துக்கொள்பவர்களுக்கு தண்டனையாக ஆயுள் தண்டனை அல்லது குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு சிறை போன்ற தண்டனைகள் வழங்கப்படும். இல்லையென்றால் அபராதம் கட்ட நேரிடும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

 

lgbt
 
உலக அளவில் பார்த்தால் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த பல நாடுகள் ஓரினச்சேர்க்கையை ஆதரித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அங்கெல்லாம் இது இயற்கைக்கு விரோதமானதல்ல, ஓரினச்சேர்க்கை என்பதும் இயற்கையானதுதான் என்று சொல்லப்படுகிறது. இன்னும் பலர் குற்றம் என்பதைத் தாண்டி இதை ஒரு கலாச்சார சீர்கேடாகவே பார்க்கின்றனர். கடந்த 2009ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் காலத்திக்கேற்ப சில சட்டங்கள் மாற்றப்பட வேண்டுமென்ற கருத்துடன் செக்ஷன் 377இல் சொல்லப்பட்டது போல் ஓரினச்சேர்க்கை என்பது குற்றமல்ல தெரிவித்தது. இதை எதிர்த்து அரசும் சில அடிப்படைவாத அமைப்புகளும் இதை எதிர்த்தன. மீண்டும் உச்சநீதிமன்றம், 'நீதிமன்றங்கள் சட்டத்தைத்தான் கருத முடியும், தர்மங்களை நிர்ணயிக்க முடியாது' என்று கூறி தடை தொடருமென அறிவித்தது. பல்வேறு அமைப்புகளும் செயல்பாட்டாளர்களும் இதற்காக பல்வேறு தளங்களில் போராடிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

 

 


பிரிவு 377ன் கீழ் வெகு சில வழக்குகளே பதியப்படுகின்றன என்றாலும் அந்த சட்டம் வெளிப்படைத்தன்மையை குறைத்து நோய், சுதந்திரமின்மை, மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறதென்று செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் சமீப காலமாகத்தான் LGBT அமைப்புகள், ஓரின சேர்க்கை விருப்பம் உடையவர்கள் ஊர்வலம், கூட்டங்களை நடத்தி தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்திவருகின்றனர். இது குறித்த குறும்படங்கள், திரைப்படங்கள் வெளிவர தொடங்கியிருக்கின்றன.

"இதற்கெல்லாம் இந்தியா இன்னும் தயாராகவில்லை. இது பெருமையல்ல, நோய். இந்த மனநிலையை சரி செய்வதற்கான வழியை மருத்துவர்களைக் கொண்டு ஆராய வேண்டும்" என்று பாஜகவின் சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார். 

விவாதங்கள் தொடருகின்றன... உணர்வுகள் வெடித்து வெளியே வருகின்றன...  விடுதலை கிடைக்குமா? விடை வரும்வரை காத்திருப்போம்...              
 
 
 
 
 

Next Story

‘உங்க ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?’-வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
What is your governor doing?- The Supreme Court asked

பொன்முடி வழக்கில் தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. இதன் காரணமாக மீண்டும் பொன்முடி அமைச்சர் பதவி ஏற்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் பொன்முடி பதவி ஏற்பதாக இருந்த 14 ஆம் தேதி ஆளுநர் திடீரென டெல்லி புறப்பட்டார்.

இதனால் பதவியேற்பு காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 17 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், “பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. அவரை குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை வழங்கியிருக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பொன்முடி அமைச்சராக மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுத்ததால், அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், ‘அரசியல் சாசனத்தில் 164(1) பிரிவை ஆளுநர் ஆர்.என். ரவி அப்பட்டமாக மீறுகிறார். தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ஆர்.என். ரவி முயற்சிக்கிறார். எனவே, பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

What is your governor doing?- The Supreme Court asked

ஆளுநருக்கு எதிரான இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ‘பொன்முடியை அமைச்சராக்க முடியாது என ஆளுநர் கூறுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பத்து மசோதாக்களை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை’ உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதங்களாக வைத்தது.

அதனைத் தொடர்ந்து, 'தான் என்ன செய்கிறோம் என்று ஆளுநருக்கு தெரியாதா?' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக தெரிவித்ததோடு, தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகும் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பாகும். உச்சநீதிமன்றத்துடன் ஆளுநர் விளையாட வேண்டாம். ஆளுநருக்கு பதவியேற்பை நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை. ஆளுநர் மறுத்தால் நீதிமன்றம் உத்தரவிடும்' என காட்டமாக தெரிவித்தார்.

மேலும், ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்சநீதிமன்றம் தனது கண்டிப்பை தெரிவித்துள்ளது. 'உங்கள் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்' என்று ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞரிடமும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளதோடு, இந்த விவகாரத்தில் நாளைக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கெடு விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

Next Story

பொய் விளம்பரம்; மன்னிப்பு கேட்ட பதஞ்சலி

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
false advertising; Patanjali apologized

பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், சர்ச்சைக்குரிய சாமியார் பாபா ராம்தேவால் நடத்தப்படுகிறது. முழுக்க முழுக்க சுதேசி பொருட்களுக்கான விற்பனை என்ற பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனம், சிம் கார்டு மற்றும் கிம்போ எனும் குறுஞ்செய்தி செயலியையும் அறிமுகம் செய்து உணவு மற்றும் மருத்துவ பொருட்களை விற்று வருகிறது. இந்நிலையில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் பதஞ்சலி உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது.

உரிய அறிவியல்பூர்வ ஆதாரங்கள் இல்லாத நிலையில், பதஞ்சலி நிறுவனம் தனது தயாரிப்புகள் பல நோய்களைக் குணப்படுத்தும் என விளம்பரம் செய்யப்படுவதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. அதேநேரம் அலோபதி மருத்துவம் குறித்து அடிக்கடி சர்ச்சையாகப் பேசி வரும் ராம்தேவ்க்கு கண்டங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கம் பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பொய் விளம்பரங்களைப் பரப்புவதற்கு பதஞ்சலி நிறுவனத்திற்கு நீதிமன்றம் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பதஞ்சலி மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் விளம்பரங்களில் மீண்டும் தவறான தகவல்களை வெளியிட மாட்டோம் என பதஞ்சலி நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஏப்ரல் இரண்டாம் தேதி பாபா ராம்தேவ் மற்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.