Skip to main content

போன வருஷம் உடையைக் கிழித்தார்கள், இந்த வருஷம் உலையை வைக்கிறார்கள்! - நீட் அநீதிகள்!    

Published on 04/05/2018 | Edited on 04/05/2018

'நீட்' என்ற மருத்துவ நுழைவுக்கான தேர்வு தன் அதிகாரத்தை தமிழகத்தில் நீட்டிகொண்டே இருக்கிறது. இந்தத் தேர்வுக்காக தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு விதமாக எதிர்ப்புகள், விமர்சனங்கள், போராட்டங்கள், அனிதா என்ற நல்ல மதிப்பெண் பெற்ற மாணவியின் மரணம், என்று துயரங்கள் நீண்டுகொண்டேதான் இருக்கின்றன. இந்த வருடமும் அது நீடித்திருக்கிறது. கடந்த வருடமாவது எம்பிபிஎஸ் படிக்கப்போகும் மாணவர்களுக்கு மட்டும் தான் இந்த நுழைவுத் தேர்வு இருந்தது. இந்த வருடத்தில் இருந்து அது சித்தா, யுனானி என்று எல்லா மருத்துவ படிப்புகளுக்கும் கட்டாயமாக எழுதப்பட உள்ளது. இதனால் தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் இத்தேர்வில் கலந்து கொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது. வரும் மே 6ஆம் தேதியில் நடக்க இருக்கும் இந்தத் தேர்வுக்கு, லட்சம் மாணவர்கள் எழுத இருக்கும் நிலையில் வெறும் பத்தே பத்து நகரங்களில் மட்டும் நீட் தேர்வு மையம் அமைத்து நம்மையெல்லாம் முட்டாள்களாக்க உள்ளது, சிபிஎஸ்இ. 

neet atro

 

 

லட்சம்  பேருக்கு வெறும் பத்து நகரங்களில் மையம் என்றால் எந்த மூலைக்குப் பத்தும்? யோசித்துப் பாருங்கள். எண்ணிக்கைக்கு ஏற்றவாறுதானே மையங்கள் அமைத்திருக்க வேண்டும். ஆனால், இவர்களோ மாற்று மையங்களை வெளி மாநிலங்களில் அமைத்திருக்கிறார்கள். ஏன் இங்கு மையங்கள் அமைக்க போதுமான வசதியில்லையா என்ன? அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தாலும் சிபிஎஸ்இக்கு ஏற்றவாறே கடைசியில் முடிக்கிறீர்கள். நீட் தேர்வு மைய அநீதி குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில், "தமிழக மாணவர்களுக்கு, தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்க வேண்டும்" என்றது. இதனைத் தொடர்ந்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அங்கு அவர்கள், "தற்போது கால நேரம் மிகவும் கம்மியாக இருப்பதனால் இந்த வருடம் வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டவர்கள் அங்கேயே எழுதட்டும், அடுத்த வருடம் இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று அறிவுரை சொல்லப்பட்டிருக்கிறது. 

 

neet atro2

 

தமிழக மாணவர்களுக்கு வெளிமாநில தேர்வு மையங்கள், கேரளா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? மருத்துவம் படிக்க வேண்டும் என்று மட்டுமே நினைத்தார்கள். அவர்கள் அனைவருக்கும், பிற மாநிலங்களுக்குச் சென்று தன் மையத்தைக் கண்டுபிடிப்பதிலிருந்து, பயணம், செலவு, புதிய இடம், மொழியால் ஏற்படும் மன உளைச்சல் என எத்தனை சிக்கல்கள் இருக்கின்றன? அனைவராலும் விமானப் பயணமா மேற்கொள்ள முடியும்? 'பாகிஸ்தானை சேர்ந்தவருக்கு இந்தியாவில் இருதய சிகிச்சை', 'உறுப்பு மாற்று சிகிச்சையில் மருத்துவர்கள் சாதனை' என்று சென்னையில் நிகழும் மருத்துவ சாதனைகளை எதிர்காலத்தில் பெருமை கொண்டாட விருப்பமில்லை போல.    
 

கடந்த வருடம் தமிழகத்தில் எந்த லட்சணத்தில் தேர்வு நடைபெற்றது என்று உலகம் அறிந்ததே. மாணவர்கள் தேர்வு அறைக்கு செல்லும் போது முழுக்கை சட்டை அணிந்திருந்தால் அனுமதியில்லை, பெண்கள் காதில் தோடு அணிந்திருந்தால் அனுமதியில்லை, மாணவர்கள் பிட்டு வைத்திருக்கிறார்களா என்பதை சோதிக்க என்னமோ வெடிகுண்டு வைத்திருக்கும் தீவிரவாதியை சோதிப்பதை போன்று அல்லவா சோதித்தார்கள்? தற்போது வெளிமாநிலங்களில் இவ்வாறு தேர்வுக்காகச் செல்லும் மாணவர்களுக்கு என்ன நேரிடுமோ? சரி இதையெல்லாம் விடுங்கள். தேர்வுக்காக நன்றாகப் படித்தும், அங்கு செல்ல பொருளாதார வசதியில்லாமல் இருந்தால் என்ன செய்வது?  இப்படி பல கேள்விகளை உள்ளடக்கிக்கொண்டு பல மாணவர்கள் தற்போது தமிழகத்தில் விரக்தியுடன் சுற்றுகிறார்கள்.

 

neet exam

 

இந்த 'நீட்' என்ற மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றதாக இருந்திருந்தால் கூட இதை சகித்துக்கொள்ளலாம். ஆனால் இதுவோ அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான ஒன்றாக இருக்கிறது. நீட், அறிவை, திறமையை சோதிக்க சரியான அளவீடு இல்லையென்பதை பல கல்வி அறிஞர்கள் விளக்கிவிட்டார்கள். இந்நிலையில் எதற்கும் தன்னை தயார்படுத்திக் கொள்ளும் தமிழகம், ஒரு வேளை நீட் தேர்வுக்கும் தயாராகினாலும், மாணவர்கள் அதை நல்ல முறையில் எழுதவிடாமல் தடுக்க எல்லா வகையிலும் ஏற்பாடு செய்கிறார்கள், இந்த அரசும் அதிகாரிகளும். இவர்கள் கொடுக்கும் அசால்ட்டான, ஆணவமான பதில்கள்தான் நம்மை இன்னும் சோதிக்கின்றன.

 


கல்வியால், பொருளாதார ரீதியாக முன்னேறலாம் என்ற கனவில் வரும் மாணவர்களுக்கு, பொருளாதாரம் இருந்தால்தான் கல்வியே பெற முடியும் என்று சொல்லிக்கொடுப்பது மிக மோசமான பாடம். ஒன்று நன்றாய் புரிகிறது, 'நீட்' தேர்வே வேண்டாமென்று போராடிய நம்மை நம் மாநிலத்திலேயே தேர்வை நடத்துங்கள் என்று போராட வைக்கிறார்கள். இப்படித்தான்  மக்களை  எல்லா விஷயங்களையும் மறக்கடிக்கிறார்கள். அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒன்றை மறக்கக் கூடாது, உங்களுக்கு அது யுக்தி, மாணவர்களுக்கு அது வாழ்க்கை. தமிழக அரசு என்று ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம் ஒவ்வொரு துன்பத்தின் போதும் வருகிறது.  மக்களுக்கான அரசாக இல்லாத எந்த அரசும் ஒரு நாள் மக்களாலேயே அகற்றப்படும்.                                   

 

       

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Next Story

தமிழகத்தில் பா.ஜ.க., அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Announcement of constituencies contested by BJP and its allies in TN

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (21.03.2024) வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி யுள்ளது. அதன்படி திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. அதே சமயம் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.