Skip to main content

கருப்பின் அழகைக் கொண்டாடுவோம்; சாதனையுடன் சொல்லித்தரும் கருப்புநிறத்தழகி அலங்கார போட்டி!

Published on 22/04/2022 | Edited on 22/04/2022

 

karuppu nirathazhagi a beauty and makeup contest for dusky women

 

இலக்கிய காலந்தொட்டு இந்த இயந்திர காலம்வரை அழகுக்கான இலக்கணங்கள் பரிணமித்துக்கொண்டே தான் வந்திருக்கின்றன. காலத்திற்கும், அவை நிகழ்த்தும் கண்டுபிடிப்புகளுக்கும் ஏற்ப ஆடைகள், ஆபரணங்கள், அலங்கார உத்திகள்  எனப் புறக்காரணிகளை வைத்து அழகுக்கான இலக்கணத்தை வகுத்த மனிதன், உடலில் அமைந்துள்ள அங்கங்களின் பண்பியலை வைத்தும் அழகை எடைபோட்டான். மனிதனின் கூந்தலில் தொடங்கி பாதம் வரை ஒவ்வொன்றிற்கும் அழகுக்கான வரையறை என்ற ஒன்றை வகுத்தான். காலப்போக்கில் இதில் சில மறைந்துபோனாலும், இன்றளவும் அழகுக்கான அளவுகோலாக அவற்றில் சில நீடிக்கின்றன. அதில் மிக முக்கியமானது மனிதர்களின் நிறம். 

 

நிறத்தின் அடிப்படையில் ஒருவரின் அழகினை மதிப்பிடுவது என்பது காலங்காலமாக நிகழ்த்தப்பட்டு வருகிறது. வெளிர் தோல் உள்ளவர்கள் அழகானவர்கள், கருமையான தோல் உள்ளவர்கள் அழகு குறைந்தவர்கள் என்ற எண்ணம் சாமுத்ரிகா லட்சணம் காலம் தொடங்கி, இன்றைய சாஃப்ட்வேர் கால இளம் தலைமுறையினர் வரை அனைவருள்ளும் விதைக்கப்பட்டிருக்கிறது. என்னதான் இதில் ஆண் பெண் பேதமில்லை என்றாலும், இந்த வரையறையால் அதிகம் சங்கடங்களுக்கு உள்ளாக்கப்படுவது பெண்கள்தான். சுற்றத்தாரால் இப்படி ஏற்படுத்தப்படும் சங்கடங்களையும் அவை ஏற்படுத்தும் பாதுகாப்பின்மையையும் எதிர்கொள்ள சில சமயங்களில் 'நிம்மதி' என்ற பெரிய விலையைப் பெண்கள் கொடுக்க வேண்டியுள்ளது. 

 

ஆனால், இப்பழங்கால அழகு மதிப்பீட்டு வரையறைகளை மெல்ல உடைக்க தொடங்கியுள்ளது இன்றைய இளைஞர் கூட்டம். நிறத்தின் அடிப்படையில் அழகினை அளவிடும் பழக்கம் இன்றளவும் இருந்தாலும், அந்த போக்கு இப்போது மெல்லக் குறையத் தொடங்கியுள்ளது எனலாம். இணைய உலகம் ஏற்படுத்திய விழிப்புணர்வு, வெளிர் தோலுக்கு நிகராக கருமையும் அழகுதான் என்ற எண்ணத்தைப் பரப்பத் தொடங்கியுள்ளது. இக்கருத்தை முன்னிறுத்திப் பல நிகழ்வுகள் உலகம் முழுவதும் அவ்வப்போது நடத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. கருமையின் அழகைப் பறைசாற்றும் வகையில் அழகிப்போட்டிகளும், ஃபேஷன் ஷோக்களும் ஏராளமாக நடக்கத் துவங்கியுள்ளன. அந்தவகையில் தமிழகத்திலும் இப்படியொரு ஒரு நிகழ்வு விரைவில் நடக்கவிருக்கிறது. 

 

பெண்களின் அழகு என்பது அவர்களின் நிறத்திலோ, தோற்றத்திலோ அல்ல, அவர்களின் தன்னம்பிக்கையில் தான் இருக்கின்றது என்ற கருத்தை விதைக்கும் வகையில், NAV FOUNDATION மற்றும் LADDER COMMERCIAL SOLUTIONS ஏற்பாட்டில் 'கருப்புநிறத்தழகி' என்ற நிகழ்வு நடைபெற உள்ளது. கருப்பு மற்றும் மாநிற பெண்களுக்குத் தென்னிந்திய மணப்பெண் அலங்காரம் செய்யும் போட்டி இந்நிகழ்வில் நடைபெற உள்ளது. 75 நிமிட கால அளவில் சிறப்பான அலங்காரத்துடன் ராம்ப் வாக் செய்யும் கலைஞர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இப்போட்டியில் முதல் பரிசாக 25,000 ரூபாயும், இரண்டாவது பரிசாக 15,000 ரூபாயும், மூன்றாவது பரிசாக 10,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளன. இந்த ரொக்கப்பரிசு தவிர்த்து வெற்றியாளர்களுக்கு ஆச்சரிய பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. 

 

வருகின்ற மே 1 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஒரு உலக சாதனை நிகழ்வாக மயிலாப்பூர் சாந்தோம் மேல்நிலைப்பள்ளி அரங்கில் நடைபெற உள்ள இந்த கருப்புநிறத்தழகி நிகழ்வில், திரை நட்சத்திரங்கள், முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொள்ள உள்ளனர். வெற்றியாளர்கள் மட்டுமின்றி இந்நிகழ்வில் பங்கேற்கும் அனைவருக்கும் உலக சாதனை சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் 9363324086 மற்றும் 9003192593 ஆகிய எண்களுக்குத் தொடர்புகொண்டு பதிவுசெய்துகொள்ளவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Next Story

சங்க இலக்கிய ஓவியப் போட்டிக்கான அறிவிப்பு வெளியீடு

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

Publication of notification for Sangam Literary Painting Competition

 

தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ்ப் பண்பாடு, இலக்கண இலக்கியங்கள் சார்ந்த முன்னெடுப்புகளையும் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சங்ககால மக்களின் வாழ்வைப் படம்பிடித்துக் காட்டும் சங்க இலக்கியப் பாடல்களை ஓவியங்களாக வரைந்து, விளக்கவுரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் நாட்காட்டியாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்குத் தேவைப்படும் ஓவியங்களுக்கு "சங்க இலக்கிய ஓவியப் போட்டியை" தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தவுள்ளது.

 

இப்போட்டியில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களும், அனைத்து கல்லூரி மாணவர்களும், ஓவியர்களும் www.tamllvu.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்து பங்கேற்கலாம். மாணவர்கள் பட்டியலிடப்பட்ட பாடல்களுள் தங்களுக்குப் பிடித்தமான பாடலைத் தேர்வு செய்து ஓவியமாக வரைந்து பத்து நாட்களுக்குள் www.tamilvu.org என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அஞ்சலில் அனுப்ப வேண்டும். (ஒரு பாடலை 5 நபர்கள் மட்டுமே தேர்வு செய்ய முடியும்). இந்தப் போட்டிக்கான இணைப்பு 27-11-2023 வரை செயல்பாட்டில் இருக்கும்.

 

மேலும், வண்ண ஓவியத்தின் அசலை (Original) அஞ்சலிலோ அல்லது நேரிலோ இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், கோட்டூர், சென்னை என்ற முகவரிக்கு உறையின் மேல் சங்க இலக்கிய ஓவியப்போட்டி என்று குறிப்பிட்டு 09-12-2023 க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் ஓவியங்களுக்குத் தலா ரூ.2000  ஊக்கத்தொகையும் சான்றிதழும் வழங்கப்படும். மேலும் அவற்றில் சிறந்த ஓவியங்களுக்கு, பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஓவியர்கள் என மூன்று பிரிவுகளில் முதல் பரிசாக ரூ.25,000, இரண்டாம் பரிசாக ரூ.15,000, மூன்றாம் பரிசாக ரூ.9,000 வழங்கப்படும்.

 

Publication of notification for Sangam Literary Painting Competition

 

இப்போட்டிக்கான விதிமுறைகள் www.tamilvu.org என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், கோட்டூர், சென்னை - 25, என்ற  முகவரியிலோ, 044-2220 9400, +91 86678 22210 என்ற தொலைபேசி எண்ணிற்கோ, tpktva@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தொடர்பு கொள்ளலாம் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

Next Story

கடலூரில் கலைத் திருவிழா; வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டிய எம்.எல்.ஏ 

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

Art festival in Cuddalore; MLA felicitated the successful students

 

கடலூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சனிக்கிழமை நடந்த விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பழனி தலைமை தாங்கினார். மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) சங்கர், உதவி திட்ட அலுவலர் சரவணகுமார், வட்டாரக் கல்வி அலுவலர்கள் இளஞ்செழியன், புவனேஸ்வரி, கலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் நசியான் கிரகோரி வரவேற்றார்.

 

தொடர்ந்து 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும், 9 மற்றும் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும், 11 மற்றும் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் என 3 பிரிவுகளாக கவின் கலை, நுண்கலை, இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

 

இதையடுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஐயப்பன் எம்எல்ஏ சிறந்த முறையில் கலை நிகழ்ச்சிகளை நடத்திய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில் தலைமை ஆசிரியர் எல்லப்பன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜவேல் மணி, மேற்பார்வையாளர் மோகன் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்த மாதம் (நவம்பர் ) 21-ந் தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வர். மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பரிசுகளும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

 

மேலும் கலைத் திருவிழா தனி போட்டிகளில் கலந்து கொண்டு அதிகப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கலையரசன் விருதும், மாணவிகளுக்கு கலையரசி விருதும் வழங்கப்படும். இவ்விருதுகள் 3 பிரிவுகளில் தனித்தனியே வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன் ஊக்கப்படுத்தப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.