Skip to main content

தர்மயுத்தம் அல்ல! சிவமாகிய சித்தம்! -இது வேற ராஜேந்திரபாலாஜி!

Published on 18/08/2020 | Edited on 18/08/2020

 

உடுத்தியிருந்த மஞ்சள் உடையும், மாலையும் கழுத்துமாக தரையில் அமர்ந்திருந்த விதமும், ‘என்ன இது? தர்மயுத்தத்துக்கு தயாராகிவிட்டாரா ராஜேந்திரபாலாஜி?’ எனக் கேள்வி கேட்க வைத்தது. ‘அப்படியெல்லாம் கிடையாது, இது அரசியலுக்கு அப்பாற்பட்ட அவரது ஆன்மிக ஈடுபாடு..’ என்று பதில் கிடைத்தது.  

 

எடப்பாடி ஆதரவு ட்வீட் மூலம், அதிமுகவில் கலகத்தை ஏற்படுத்திவிட்டு, தனது தொகுதியான சிவகாசிக்கு திரும்பிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தங்கமுலாம் பூசிய கலசம் ஒன்றைக் கையில் ஏந்தியபடி அந்தக் கோவிலை நோக்கிச் சென்றார். வாசலில் அவர் கால் பதித்ததும், மங்கல இசையால் அந்தக் கோவிலே அதிர்ந்தது. அங்கிருந்த இருவர் முணுமுணுத்ததும் கேட்டது. 

 

“அந்தக் காலத்துல கோவில்களைக் கட்டினதெல்லாம் மன்னர்கள்தான். இங்கே என்னடான்னா.. மந்திரியா இருக்கிற ராஜேந்திரபாலாஜி.. கோடிகளைக் கொட்டி ஒரு கோவில் கட்டிருக்காரு. இன்ஜினியரிங் காலேஜ்.. மெடிக்கல் காலேஜ்னு கட்டிய முன்னாள்.. இந்நாள் மந்திரிங்க எத்தனையோ பேரு தமிழ்நாட்டுல இருக்காங்க. ஏன்னா.. கல்விச் சேவைங்கிறது இங்கே பணம் காய்க்கிற மரம். ஆனா.. ஊருக்கு ஒதுக்குப்புறமா.. ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்துல.. மந்திரி ஒருத்தர்  இம்புட்டு செலவழிச்சு  ஒரு கோவிலைக் கட்டியிருக்கிறது  ஆச்சரியமா இருக்கு.” என்று விழிகளை விரித்தனர். 

 

‘இதோ இந்த அமாவாசை.. இல்ல.. அடுத்த அமாவாசை.. நிச்சயமா கட்டம் கட்டிருவாங்க..’ என்று விருதுநகர் மாவட்டத்தில் சிலர் ராஜேந்திரபாலாஜி மீதான நடவடிக்கையை எதிர்பார்த்திருக்க, அவரோ, முழு முயற்சி எடுத்து, பழைய கோவில் ஒன்றை முற்றிலுமாக புனரமைத்து, வரும் 28-ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடத்தவிருக்கிறார்.  

 

சிவகாசியை அடுத்துள்ள ஆமத்தூர் - மூளிப்பட்டியில் அமைந்திருக்கிறது, ஸ்ரீ தவசிலிங்க சுவாமி திருக்கோவில். பல சமூகத்தினரும் வழிபாடு நடத்திவரும் இந்தக் கோவில், ராஜேந்திரபாலாஜிக்கு குலதெய்வக் கோவிலாம். பேட்டியோ, அறிக்கையோ,  ட்வீட்டோ, எதிலும் வம்பிழுப்பதில் வல்லவராக இருப்பதால், சர்ச்சையில் சிக்கிக்கொள்வது அவருக்கு வாடிக்கையாகிப் போனது.  இந்த அரசியல் அக்கப்போர், நிம்மதிக்கு வேட்டு வைக்கும்போதெல்லாம், மனதுக்கு நிறைவையும், அமைதியையும் தருவது ஆன்மிகம் மட்டுமே என்பதை அனுபவ ரீதியாக அவர் உணர்ந்திருக்கிறார். உண்மையைச் சொல்வதென்றால், ரஜினி பயணிப்பது போல்,  ஆன்மிகத் தேடலோடு,  இவரும் சத்தமில்லாமல் அடிக்கடி வடக்கே போய்விடுகிறார். 

 

மஹா கும்பாபிஷேகத்துக்கு முன், கோயில் மூலஸ்தானத்தில் கலசங்களை வைத்து, விக்ரகங்களுக்கு சொர்ணாபிஷேகம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், மூலஸ்தான ராஜகோபுரம், பெரிய அளவில் உயரமாக எழுப்பப்பட்டுள்ள சிவன் சிலை, முருகன், வள்ளி, தெய்வானை சிலைகள், அய்யனார் சிலை போன்றவற்றைக் காட்டி,  “முழுக்க முழுக்க ஆகம விதிகளின்படி கட்டப்பட்டுள்ள கோவில் இது..” என்றார் பரவசத்துடன்.   


 
‘கரோனா காலக்கட்டத்தில் கும்பாபிஷேகமா?’ என்று கேட்டபோது, சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தவறாமல் கடைப்பிடிக்கப்படும்.” என்றார். 

 

இறைவன் வாழுமிடம் என்றும், ஆன்மாக்கள் இறைவனை ஒரு மனதுடன் வணங்குவதற்கான இடமென்றும், கோவிலுக்கு விளக்கம் தரப்படுகிறது. அரசியல் என்பது மக்கள் சேவை! ஆன்மிகம் என்பது தன்னை இயக்கும் சக்தியை தனக்குள்ளே பயணித்து உணர்வது! அப்படியென்றால், ‘ஆன்மிக அரசியல்’ என்பது என்னவாம்? தன்னை உணர்ந்து மக்கள் சேவையாற்றுவதே! ஆம்.. மக்கள் சேவையே மகேசன் சேவை! 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.