Skip to main content

பாஜக ஆட்சியில் முக்கிய அமைச்சர்... விடுதலைப் புலிகளை ஆதரித்த தலைவர்... ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் முகங்கள்

Published on 29/01/2019 | Edited on 29/01/2019

முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரான ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் இன்று காலை காலமானார். இவருக்கு 88 வயது ஆகிறது. இவர் கடந்த பல வருடங்களாகவே நோயுற்றிருந்தார், நியாபக மறதியால் அவதிப்பட்டார். கடந்த சில நாட்களாக பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். 
 

george fernandes


அடல் பிஹாரி வாஜ்பாய், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்தபோது ஃபெர்னாண்டஸ் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகத் திறம்பட செயலாற்றியுள்ளார். இவர் 1930 ஜூன் 3ஆம் தேதி மங்களூருவில் பிறந்தவர். கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்த இவரை பெங்களூருக்கு பாதிரியார் படிப்பிற்காக 1946ஆம் ஆண்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். பின்னர், அந்தப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு 1949ஆம் ஆண்டு பம்பாயில் சோஷியலிஸ்ட் ட்ரேட் யூனியன் இயக்கத்தில் சேர்ந்துள்ளார். இதன் பின்னர் இரயில்வேயில் வேலை பார்த்துக்கொண்டே படிப்படியாக அந்த அமைப்பிற்கே தலைவராகி பல போராட்டங்களை 1950-1960 கால கட்டத்தில் முன் நின்று நடத்தியிருக்கிறார். தொழிலாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவராக இருந்த இவர், நேரடி அரசியலில் இறங்கினார். இவருடைய முதல் வெற்றியே மிகவும் வலிமையானது. காங்கிரஸ் கட்சியில் அப்போதிருந்த மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த எஸ்.கே.பாட்டீலை எதிர்த்து முதன் முதலாக தெற்கு மும்பை தொகுதியில் 1967ஆம் ஆண்டில் சம்யுக்தா சோஷியலிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றார். காங்கிரஸின் மிகப் பெரிய செல்வாக்குடைய வேட்பாளரைத் தோற்கடித்து வென்றதால் இவர், ஜெயண்ட் கில்லர் என்று அழைக்கப்பட்டாராம்.
 

படிப்படியாக அரசியலில் உயர்ந்து வந்த இவருக்கு தொழிலாளர்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது. அகில இந்திய ரெயில்வே மென்ஸ் ஃபெடரேஷனின் தலைவராக இருந்திருக்கிறார். 1974ஆம் ஆண்டில் வரலாறு காணாத ஒரு ஸ்ட்ரைக் இந்தியா முழுவதும் உள்ள ரயில்வே ஊழியர்களால் நடத்தப்பட்டது. அதற்கு தலைமை தாங்கியவர் ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ்தான். ஆங்கிலேயர்கள் ஆட்சியில் ஒரு ரயிலில் வேலை பார்க்கும் ஊழியர்கள், அந்த ரயில் ஒரு இடத்தில் தொடங்கி இறுதி ஸ்டேஷனில் போய் சேரும் வரை வேலை பார்த்தாக வேண்டும் என்கிற விதிமுறை இருந்தது. அதையே சுதந்திரம் பெற்றும் இந்திய ரயில்வேதுறை பின்பற்றி வந்தது. அந்த வேலை அளவை 12 மணிநேரங்களாக குறைக்க வேண்டும் என்று முதலில் கோரிக்கை வைக்க தொடங்கி, இறுதியில் 8 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று அகில இந்திய ரெயில்வே மென்ஸ் ஃபெடரேஷன் கோரிக்கை வைத்தது. மேலும், மற்ற அரசுத்துறை ஊழியர்களுக்கு தரப்படும் ஊதியம்போன்று ரெயில்வேவுக்கும் தரவேண்டும் என்று இரண்டாவது கோரிக்கை வைத்து இந்தியா முழுவதும் உள்ள ரெயில்வே துறை ஊழியர்கள் பந்த்தில் இறங்கினார்கள். மே8 ஆம் தேதி தொடங்கிய இந்த போராட்டத்தில் 17 லட்சம் ஊழியர்கள் பங்கேற்று, 20 நாட்களுக்கு பின் இந்த போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டது. அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் மீது மிகவும் கோபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
 

george


இதனையடுத்து 1975ஆம் ஆண்டில் அவசரக்கால கட்டம் இந்திராகாந்தியால் அமல்படுத்தப்பட்டபோது, இவர் அதை முழுமையாக எதிர்த்திருந்தார். அந்த காலகட்டத்தில் சீக்கியர் போன்ற மாறுவேடத்தில் அலைந்ததாகவும் கூறப்படுகிறது. ரயில்வே பாலங்களை டைனமைட் வைத்து தகர்த்தார் என்று 1976ஆம் ஆண்டு அவர் தேசதுரோக வழக்கில்  கைது செய்யப்பட்டார். 1977 ஆண்டில் இந்திரா காந்தி அவசரக்கால பிரகடணத்தை திரும்ப பெற்றுக்கொண்டபோதிலும் ஜார்ஜ் சிறையிலேயே இருந்தார். அந்த நிலையிலும் பிஹார் முஜாஃபார்பூர் தொகுதியில் சிறையிலிருந்துகொண்டே போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார். 

அதன்பின், ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும்போது, அதாவது மொராஜிதேசாய் பிரதமராக இருந்தபோது தொழில்துறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். 1989-1990 கால கட்டத்தில் விபி சிங் பிரதமராக இருந்தபோது ரயில்வேதுறை மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார். அப்போது மங்களூர் முதல் பாம்பே வரை போடப்பட்ட ரயில்வே வழிபாதை திட்டம் மிகவும் பேசப்பட்ட ஒன்று. ஜனதா தள் கட்சியிலிருந்து பிரிந்து ஜார்ஜும், நிதிஷ் குமாரும் இணைந்து சமதா கட்சியை 1994ஆம் ஆண்டு உருவாக்கினர். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவாராக இருந்திருக்கிறார். அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமாரக இருந்தபோது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், மேலும் பல துறைகளில் அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.
 

george fernandes


இவர் பாதுகாப்புதுறை அமைச்சராக இருந்தபோதுதான் கார்கில் போர் மற்றும் பொக்ரான் நியூக்ளியர் சோதனை முயற்சி நடைபெற்றது. இதுமட்டுமல்லாமல் அந்த கால கட்டத்தில், வெளிப்படையாகவே விடுதலை புலிகளுக்காக ஆதரவு தெரிவித்தார். விடுதலை புலிகளுக்கு நிதி சேகரித்தவர், அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியவர் போன்ற பல குற்றச்சாட்டுகள் இவர் மீது இருக்கிறது. விடுதலை புலிகளுக்கு தனது ஆதரவை காட்டியதை போன்றே திபெத் கிளர்ச்சியாளர்களுக்கும், ஆன்ட்டி பர்மா அமைப்புகளுக்கும் ஆதரவு தெரிவித்திருந்தார். இதுபோல சோஷியலிஸ்ட் தாக்கத்தை ஏற்படுத்தி வந்த இவருடைய அரசியல் வாழ்கையின் கறுப்புப்புள்ளியாக  2004ஆம் ஆண்டு பல ஊழல் குற்றச்சாட்டுகள் வந்தன. ஜார்ஜுக்கு மிகவும் அரசியலில் நெருங்கிய நண்பராக இருந்த ஜெயா ஜெட்லீ இவரது  பெயரை பயன்படுத்தி பலரிடம் கமிஷன்கள் வாங்கியது வெளியுலகத்துக்கு தெரியவந்தது. தன்னுடைய கட்சியின் துணைத்தலைவராக இருந்த நிதிஷ் குமாருக்கும் இவருக்கும் வருத்தம் ஏற்பட்டதால் கட்சிக்குள்ளே பல பிரச்சனைகள் வந்தது. மேலும் கார்கில் போரில் இறந்தவர்களுக்கு வாங்கிய சவப்பட்டியில் ஊழல் என்று அதிலும் இவருடைய பெயர் அடிபட்டது. இதனால் தனது பதவியை ராஜினாமா செய்தார் ஜார்ஜ் பெர்னாண்டஸ். இவருடைய சமதா கட்சியை மீண்டும் 2003ஆம் ஆண்டில் ஜனதா தள்(யுனைடட்) கட்சியுடன் இணைத்தார். ஆனாலும், அவருக்கு முஜாஃபார்பூர் தொகுதியில் சீட்டு கொடுக்கவில்லை. இதனால் அவர் சுயேட்சையாக போட்டியிட்டார். ஆனால் அந்தத் தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார். பின்னர், 2009 ஆகஸ்ட் 4ஆம் தேதி ராஜ்யசபா உறுப்பினரானார். 
 

இப்படி தொழிலாளர்களுக்காக பாடுபட்டவரும், எமர்ஜென்ஸியை எதிர்த்தவருமான ஜெயண்ட் கில்லர் ஜார்ஜ் பெர்னாண்டஸின் மறைவு இந்தியாவிற்கு பெரும் இழப்பாகும்.
 

 

 

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

மோடியின் சர்ச்சை பேச்சு; பரப்படும் மன்மோகன் சிங்கின் விடியோ - தகிக்கும் தேர்தல் களம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Congress accuses BJP of misrepresenting Manmohan Singh's video and spreading it

ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் செல்வத்தை இந்துக்களிடமிருந்து முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் எனக் கூறி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். அதற்கு நாடு முழுவதம் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. சர்வாதிகாரியின் உண்மை முகம் வெளிவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, '‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா?’ என்றார். இதில், இஸ்லாமியர்களைப் பிரதமர் மோடி ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் எனவும் சித்தரித்து பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, ''பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது. எனக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவொரு பிரதமரும், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது கிடையாது என்றும், முதல் பிரதமாராக மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் எனக் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் நாட்டின் பிரதமர் வெறுப்பு பிரச்சாரம் செய்து இருப்பதால் மோடியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடி வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தன்னாட்சியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் வெறுப்பு பேச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் என்று முத்திரை குத்தி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் நீட்சியாக பிரதமர் மோடி தொடர்ந்து இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் நிலையல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுள்ளதாக குற்றம் சாற்றியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வெளிவந்துள்ளதாக சாடியுள்ளார். 

ஆனால், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சை நியாப்படுத்தும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பிரதமர் மன்மோகன் சிங் பேசும் பழைய வீடியோவை கட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால், மன்மோகன் சிங் உண்மையில் பேசியது குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில்,  கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசத்தின் பல்வேறு வளர்ச்சிகள் சார்ந்த முன்னுரிமைகளை விளக்குகிறார். “பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள், குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் வளங்களில் மத்திய அரசுக்கு எண்ணற்ற பிற பொறுப்புகள் உள்ளன. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். என மன்மோகன் சிங் பேசியுள்ளார்.

அப்போதே அவரது பேச்சு பொதுவெளியில் வேறாக புரிந்துகொள்ளப்பட்டதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விளக்கமும் கொடுத்ததாக சொல்லப்படுப்படுகிறது. ஆனால், பாஜகவினர், 'குறிப்பாக முஸ்லிம் மக்கள்' என  மன்மோகன் சிங் பேசுவதை மட்டும் கட் செய்து சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர். நாட்டில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக ஆட்சிகால சாதனைகளைக் கூற முடியாமல் 18 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை திரித்து வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மோடி பேசியது எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர். ஆனால், இதனிடையே உத்திரபிரதேசத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற மோடி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். முன்னதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இடத்திற்கு இடம் பிரதமர் மோடி மாற்றி பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது