Skip to main content

தோல்வி என்பதே என் அகராதியில் கிடையாது... ஆயிரம் விளக்கில் தாமரை மலரும் - குஷ்பு உறுதி!

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

ேோ


பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பு நேற்று (18.03.2021) வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார் அதில், "முதல்முறையாக தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். பெரிய அளவில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எங்களுக்கு கூட்டணி கட்சியினர் உற்சாகமான வரவேற்பை கொடுத்துள்ளார்கள். கூட்டணி வெற்றிதான் முக்கியம் என்று அனைத்து கூட்டணிக் கட்சி தோழர்களும் இங்கே வந்து எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்" என்றார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு, 

 

சில நாட்களுக்கு முன்பு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி பாஜக தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாது என்று கருத்து தெரிவித்துள்ளார். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இது நான்கு ஐந்து நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம். இதைப் பற்றி தற்போது கருத்து கூற எதுவுமில்லை. புதிய செய்தி ஏதாவது இருந்தால் கேளுங்கள்.

 

சிறுபான்மையினர் வாக்கு பாஜகவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா? 

ஏன் கிடைக்க கூடாது. நிச்சயமாக அவர்களின் வாக்கு முழுவதும் பாஜகவுக்கு கிடைக்கும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோடிக்கணக்கான மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளார்கள். தனி மெஜாரிட்டியாக 303 நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் எங்களுக்கு கொடுத்தார்கள். அதில் சிறுபான்மையினர் வாக்குகள் இல்லையா? இது எதிர்க்கட்சிகள் பாஜக மீது தொடர்ந்து கூறும் குற்றச்சாட்டுகள். அதில் சிறிதளவு கூட உண்மையில்லை. அவர்களின் வாக்குகளும் எங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். 

 

திமுக உங்களுக்கு எதிராக எழிலனை நிறுத்தியுள்ளது. இதை சவாலாக பார்க்கிறீர்களா?

வாழ்க்கையில் பல சவால்களை நான் சந்தித்துள்ளேன். அதில் போராடி வெற்றியும் பெற்றுள்ளேன். எனவே இதிலும் நான் வெற்றிபெறுவேன்.

 

உங்களுக்கு தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

நான் வேட்புமனு தாக்கல் செய்தபோது எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை பார்த்திருப்பீர்கள். மக்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். என்னை கண்டிப்பாக வெற்றி அடையச் செய்வார்கள். அதில் சந்தேகம் சிறிதும் இல்லை. 

 

நீங்கள் சேப்பாக்கம் தொகுதியில் கள வேலை செய்ய ஆரம்பித்திருந்தீர்கள். அங்கே தோல்வி பயம் காரணமாகவே தற்போது இந்த தொகுதியில் நிற்கிறீர்களா? 

என் அகராதியில் தோல்வி என்ற வார்த்தைக்கே இடமில்லை. நான் இங்கே கண்டிப்பாக வெற்றிபெறுவேன். எனவே இந்த கேள்வி தற்போது தேவையில்லாத ஒன்று. 

 

அதிமுக தேர்தல் அறிக்கையில் சிஏஏ சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

அதிமுக தேர்தல் அறிக்கையில் அவ்வாறு தெரிவித்திருந்தால், அதற்கு டெல்லி பாஜக உரிய பதிலை தெரிவிக்கும். இன்னும் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படவில்லை. எனவே தற்போது அதுபற்றி பேச வேண்டிய அவசியமில்லை. 

 

ஆயிரம் விளக்கு திமுக கோட்டை என்று சொல்லப்படுகின்ற தொகுதி, இங்கே தற்போது களம் இறங்குகிறீர்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அப்படி என்று யார் கூறினார்கள், இது அவர்களாகவே கூறிக்கொள்ளும் கற்பிதம். ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை என்றால் ஸ்டாலின் எதற்காக கொளத்தூர் தொகுதிக்குச் செல்ல வேண்டும். இங்கேயே போட்டியிடலாமே? பொய் தகவல்களை அவர்கள் வேண்டுமென்றே பரப்புவார்கள். இங்கே என்னுடைய வெற்றி வாய்ப்பு என்பது பிரகாசமாக இருக்கிறது. இவர்களுடைய பொய் பிரச்சாரத்தால் அதனைத் தடுக்க முடியாது.

 

 

Next Story

“கையெழுத்து போடுங்கள் என்றால் போடுவேன்” - வெளிப்படையாகப் பேசிய குஷ்பு

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
kushbu sundar about aranmanai 4

2024 ஆம் ஆண்டு நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான பா.ஜ.க.வை சார்ந்த குஷ்பு, வேலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இயக்குநர் சி.சுந்தர் இயக்கத்தில் வெளியாகவுள்ள அரண்மனை 4 திரைப்படத்தை பற்றிப் பேசினார். அவர் பேசியதாவது, “நாங்கள் அரண்மனை 4 பார்த்து விட்டோம். படம் பிரமாதமாக வந்துள்ளது. இதுவரையில் வந்த அரண்மனை படங்களை விட இது வித்தியாசமானதாக இருக்கும். நிறைய உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் கமர்சியல் வேல்யூ முழுவதும் ஆக உள்ளது. யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள் இடம் சிறப்பாக நடித்துள்ளனர்” என்றார்.  

அவரிடம், அரண்மனை திரைப்படம் சீரிஸ் இன்னும் தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்குமா, எப்போதுதான் அது முடியும் என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில், “அதை நான் முடிவு செய்ய முடியாது. இயக்குநர், எழுத்தாளர் தான் முடிவு செய்வார்கள். இது தான் கதை. கையெழுத்து போடுங்கள் என்றால் போடுவேன் அவ்வளவுதான், எல்லாமே இயக்குநர் தான் முடிவு செய்வார் நான் அல்ல” என பதிலளித்தார். 

அவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்துள்ள படம் அரண்மனை 4. இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். அரண்மனை பட வரிசையில் நான்காவது படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. சமீபத்தில் ட்ரைலர் வெளியாகியிருந்தது. 

Next Story

குஷ்பு மீது போலீசில் புகார்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Police complaint against Khushbu

மகளிர் உரிமை திட்டப் பயனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மீது புகாரும், கண்டனமும் எழுந்துள்ளது. அந்த வகையில் திமுக மகளிர் அணி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சென்னை, திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர் ,சேலம், ஈரோடு, எடப்பாடி என தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புதுச்சேரியிலும் 'குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்' என வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் அவரது உருவப்படங்கள் எரிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறாக பேசிய நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.