Skip to main content

வாழ்வை முடக்கிய உ.பி. அரசு; வாழவைக்கும் தமிழ்நாடு அரசு! 

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

Dr. Kafeel khan tamil version book

 

கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை. மருத்துவர் கஃபீல்கான் எழுதிய 'The Gorakhpur Hospital Tragedy: A Doctor's Memory of a Deadly Medical Crisis' என்ற நூலின் தமிழாக்கமான 'கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம்: ஒரு மருத்துவரின் நினைவலைகள்’ நூல் வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

 

இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் மோடியின் ஒன்றிய அரசு, பல்வேறு குளறுபடிகளைச் செய்தது. சர்வதேச விமானப் போக்குவரத்தை நிறுத்தாமல் கொரோனா பரவலுக்கு வழிவகுத்தது, இஸ்லாமியர்களின்மீது பழியைத் தூக்கிப்போட்டது, திடுதிப்பென லாக்டௌனை அறிவித்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நாடுமுழுக்க நடக்கவிட்டுப் பலர் மரணிக்கக் காரணமானது.. என அடுக்கிக்கொண்டே போகலாம். கொரோனா காலத்தில் மட்டுமல்ல, 2017-லும், பா.ஜ.க.வின் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரப்பிரதேசத்தில், கோரக்பூர் நகரிலுள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரியின், நேரு மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் இல்லாத காரணத்தால், 63 குழந்தைகள், 18 முதியோர் பரிதாபமாக இறந்தனர். அப்போது உடனடியாக செயல்பட்டு, சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி, ஏராளமான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியவர் மருத்துவர் கஃபீல்கான். அவர் அங்குதான் மருத்துவராகப் பணியாற்றிவந்தார். மருத்துவமனைக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்குவதில் முறைகேடு செய்ததால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதை கஃபீல்கான் அம்பலப்படுத்தினார்.

 

Dr. Kafeel khan tamil version book
சிறையில் இருந்து மருத்துவர் கஃபீல் கான் வெளியே வந்தபோது

 

யோகி அரசோ, தனது தவறை மறைப்பதற்காக இஸ்லாமியரான மருத்துவர் கஃபீல்கான் மீதே பழியைத் தூக்கிப் போட்டு, அவரைக் கைது செய்து சிறையிலடைத்தது. ஏன் அவ்வளவு பதட்டம்? இதே கோரக்பூர் மக்களவை தொகுதியில் தான் தொடர்ச்சியாக 5 முறை யோகி ஆதித்யநாத் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அப்படிப்பட்டவரின் தொகுதியிலுள்ள மருத்துவமனையில் குழந்தைகள் கொத்துக்கொத்தாக உயிரிழந்தால் அவருக்குத்தானே அசிங்கம்? அதனால்தான் இவ்வளவும்! நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின், கஃபீல் கான் விடுதலையானார். குழந்தைகள் உயிரிழப்பில் இவருக்கு எந்தத் தொடர்பும் இல்லையென்று விசாரணை கமிஷன் தெரிவித்த போதிலும், அரசுப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட கஃபீல்கானுக்கு மீண்டும் பணி வழங்க மறுத்தது யோகி அரசு. அதையடுத்து தமிழ்நாட்டில் குடிபெயர்ந்தார்.

 

Dr. Kafeel khan tamil version book

 

இந்நிலையில், மருத்துவர் கஃபீல்கான், தனது சிறை அனுபவங்களைத் தொகுத்து நூலாக்கினார். அதன் தமிழாக்கம்தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விழாவில், ஓய்வுபெற்ற நீதியரசர் அரிபரந்தாமன் நூலை வெளியிட்டார். இந்நிகழ்வில் சி.பி.எம். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 

Dr. Kafeel khan tamil version book
கோப்புப் படம்

 

நிகழ்ச்சியில் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், "சிறைக்கு செல்லும்போது கஃபீல்கான் டாக்டராக இருந்தார். சிறையிலிருந்து வெளியே வரும்போது எழுத்தாளராகவும் மாறியுள்ளார். ஆக்சிஜன் இல்லாததால் நிகழ்ந்த மரணத்தை யோகி அரசு மறைக்க முயன்றது. அதை கஃபீல்கான் வெளிக்கொண்டு வந்தார்'' என்று பாராட்டினார்.

 

Dr. Kafeel khan tamil version book
கோப்புப் படம்

 

பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, "கஃபீல்கான் நூலை ரஜினி படித்திருந்தால், யோகி ஆதித்யநாத் காலில் விழுந்திருக்கமாட்டார். ஊழலற்றவர்கள் என்னும் பா.ஜ.க.வினரை அம்பலப்படுத்தவேண்டும்'' என்றார். நீதியரசர் அரிபரந்தாமன், "போராட்டத்தின் அடையாளமாக இந்த புத்தகம் திகழ்கிறது. மோடி வீழ்த்தப்படுவார். ‘இந்தியா’ அவரை தோற்கடிக்கும்” என்றார் சூசகமாக.

 

விழாவில் ஏற்புரை நிகழ்த்திய டாக்டர் கஃபீல்கான், "2017ஆம் ஆண்டில் கோரக்பூர் மருத்துவமனை சோகம் பற்றி கேட்கும்போது மக்களின் மனதில் இரண்டு முகங்கள் மட்டுமே நினைவுக்கு வரும். எல்லோரும் யோகி ஆதித்யநாத், டாக்டர் கஃபீல்கான் பற்றி மட்டும் நினைக்கிறார்கள். ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த 63 குழந்தைகள், 18 பெரியவர்கள் பற்றி யாரும் பேசுவதில்லை. அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போனதற்காக வருந்துகிறேன். என்னை கைது செய்தபோது உணவு, தண்ணீர் கொடுக்காமல் கடுமையாகத் தாக்கினார்கள். என் உடலில், தோல் பல இடங்களில் உரிந்ததால், என்னால் மல்லாக்க படுக்கக்கூட முடியவில்லை. உணவு மயக்கம் போக்க, சிறைக்கு வெளியே வளர்ந்திருந்த புல்லைப் பறித்து சாப்பிட்டேன். 2018, ஜூன் 10ஆம் தேதி என் சகோதரர் காசிப்ஜமீல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தற்போதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. உ.பி.யில் பாதுகாப்பற்றவனாக உணர்ந்தேன்” என்றார்.

 

Dr. Kafeel khan tamil version book

 

தொடர்ந்து தமிழ்நாட்டில் தனது அனுபவம் குறித்து கூறிய மருத்துவர் கஃபீல்கான், "நான் தமிழ்நாட்டில் தான் தற்போது வேலை பார்த்துவருகிறேன். இங்குள்ள மக்களிடம் எந்த வெறுப்புணர்வும் இல்லை. இங்கு எல்லா வீட்டிலும் சாமி அறை சிறிய அளவிலாவது இருந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் என்னை ஒரு இஸ்லாமிய மருத்துவராக பார்த்ததில்லை. குழந்தைகள் நல மருத்துவராக மட்டுமே பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் மருத்துவமனைக் கல்லூரிகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் மிகச்சிறப்பாக செயல்படுகின்றன. பொதுத் தேர்வில் 80% மதிப்பெண் பெற்ற ஒருவர் மருத்துவராக முடியாது, அதே சமயம், 20% மதிப்பெண் நீட் தேர்வில் பெற்றாலே மருத்துவராக முடியும் என்பது அநீதி இல்லையா?. இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டிருக்கிறது'' எனக் குறிப்பிட்டது தற்போது வைரலாகியுள்ளது.

 

தெ.சு.கவுதமன்

 

 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.