Skip to main content

வாரிசு என்பதாலேயே திமுகவில் தலைவர் பதவிக்கு வந்துவிடலாமா? திமுக எம்.பி. செந்தில் பேட்டி

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

தருமபுரியில் திமுக வேட்பாளராக களமிறங்கி அன்புமணியை எதிர்த்து வெற்றிபெற்றவர் மருத்துவர் செந்தில். அவர் நக்கீரனுக்கு அளித்த பேட்டியின் தொடர்ச்சி...
 

முந்தைய பேட்டி: "திருமாவளவனை மட்டுமல்ல அன்புமணியையும் கட்டியணைப்பேன்" - திமுக எம்.பி தடாலடி!  
 

senthil dharmapuri


உங்கள் தாத்தா காங்கிரஸ் கட்சியில் பொறுப்புகளில் இருந்துள்ளார். அப்படி இருக்கிற நிலையில், நீங்கள் எப்படி திமுகவில்?

அவர் கட்சியில் இருந்த போதும் கூட என்ன செய்தார்கள், செய்யவில்லை என்று எனக்கு தெரியாது. நான் அரசியலுக்கு வரும்போதே ஒரு முடிவோடுதான் வந்தேன். வெற்றியோ, தோல்வியோ அது என்னை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். அதையும் தாண்டி நான் ஒரு பெரியாரிஸ்ட். தற்போது பெரியார் கொள்கைகளை பேசும் ஒரே கட்சி திமுகதான். அந்த வகையில் எனக்கு திமுக மீது ஈர்ப்பு வந்தது.மேலும் சமூக நீதியை பேசும் ஒரு கட்சியாக திமுக இருப்பதால் இயல்பாகவே எனக்கு திமுக பிடித்திருந்தது.


பாமகவிலும்தான் சமூக நீதி பற்றி பேசுகிறார்கள். மாநாடுகளை நடத்துகிறார்களே?

இருக்கலாம்... எனக்கு கலைஞர் மீது உள்ள ஈர்ப்பு... தலைவர் ஸ்டாலினின் உழைப்பு பிடித்திருந்தது. ஏன் எனக்கே பல நேரங்களில் சந்தேகம் வரும். காலையில் தலைவர் தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்கிறார். மாலையில் தருமபுரியில் பிரச்சாரம் செய்கிறார். மருத்துவ ரீதியாகவே இது சாத்தியமில்லை. இந்த இடைப்பட்ட நேரத்தில் தலைவரின் பாதுகாவலர்கள் மாறுவார்கள். கார் ஓட்டுபவர்கள் கூட மாறுவார்கள். ஆனால், அவர் மட்டும் எப்படி இதனை சாத்தியப்படுத்துகிறார். தலைவர் போல 6, 7 பேர் இருப்பார்களோனு நான் கூட விளையாட்டா நினைச்சது உண்டு. இந்த நாடாளுமன்ற வெற்றி கூட தலைவரின் உழைப்புக்குக் கிடைத்த பரிசுதான். இந்த மாதிரியான அணுகுமுறையே திமுகவின் மீது எனக்கு ஈடுபாடு ஏற்பட காரணமாக அமைந்தது.


சமூக நீதிக் கொள்கைதான் உங்களை திமுகவை நோக்கி ஈர்த்ததுனு சொல்றீங்க. ஆனா அன்புமணியை எதிர்த்து அதே சமூகத்தை சேர்ந்த உங்களைத்தானே திமுக வேட்பாளரா போட்டு இருக்காங்க?

அப்படி இல்லை. மற்ற சிறுபான்மை இனத்தை சார்ந்தவர்களைக் கூட தருமபுரி சட்டப்பேரவை தொகுதியில திமுக நிறுத்தி வெற்றிபெற வைத்துள்ளார்கள். அதையும் தாண்டி என்னை நான் குறிப்பிட்ட சமூதாயத்தை சேர்ந்தவன் என்று கருதவில்லை. நான் அனைவருக்கும் பொதுவானவன். தொகுதி மக்களும் என்னை அவ்வாறே என்னை கருதினார்கள்.


பல சீனியர்கள் இருக்கும் போது உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது சரினு நினைக்கிறீர்களா?

திமுக ஜனநாயக கட்சி. விருப்ப மனு, நேர்க்காணல் என்று வேட்பாளர்களை தேர்வு செய்ய பல்வேறு வழிமுறைகளை திமுக பின்பற்றுகிறது. எனக்கு கட்சிக்கு அப்பாற்பட்டு வாக்குகள் வரும் என்றுகூட தலைமை நினைத்திருக்கலாம். 

 

 

senthil dharmapuri



உங்களை வேட்பாளராக்க உதயநிதி ஸ்டாலின் அதிக அக்கறை காட்டியதாக செய்திகள் வெளிவந்ததே?

எனக்கு தனிப்பட்ட முறையில் உதயநிதி அவர்களை தெரியாது. அவரின் பிறந்த நாள் விழாக்களின் போது ஆயிரக்கணக்காணவர்களில் ஒருவனாக அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கலாம். அவர் எனக்காக காட்டிய அக்கறைக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். 


அப்படி என்றால் திமுகவில் உதயநிதியின் கை ஓங்கியுள்ளதாக எடுத்துக்கொள்ளலாமா?

அப்படி இல்லை... தொகுதியில் இருந்து ஏராளமான மக்கள் என்னை வேட்பாளராக்க தலைமைக்கு ஃபேக்ஸ் அனுப்பியிருந்தனர். இதை பரிந்துரை என்ற அளவில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். உதயநிதி அவர்களும் திமுக தொண்டர்தான். அதைத்தாண்டி வேறு எதையும் சிந்திக்க தேவையில்லை.


உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி தலைவராக வரப் போறதா தகவல் வெளியாகி வருகிறதே... திமுகவுல வாரிசா இருந்தாலே தலைவர் பதவிக்கு வரலாம்னு மற்ற கட்சிகாரர்கள் பேசுவது உண்மையாகாதா?

இந்தத் தேர்தல்ல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திமுகவிற்கு வாக்களித்துள்ளனர். அவர்களை முறையாக வழிநடத்த வேண்டும். நாங்களும் கூட உதயநிதி இளைஞர் அணிக்கு வர வேண்டும் என்று கோரியிருந்தோம். அருமையாக பிரச்சாரம் செய்திருந்தார்.


கொள்கை சார்ந்து என்ன பேசினார்?

இப்ப அவரு வந்தது தேர்தல் பிரச்சாரத்துக்காக. இதனுடைய நோக்கமே வாக்குகளை கவர வேண்டும் என்பதே. அவர் ஒரு நடிகரும் கூட. அந்த பலமும் எங்களுக்கு உதவியது. இன்னும் வரும் காலங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போது கொள்கை ரீதியாகவும் தன்னுடைய செயல்பாடுகளை அமைத்துக் கொள்வார்.
 

 

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.