Skip to main content

பா.ஜ.க. முக்கிய தலைவரை போலீஸ் நிலையத்திலேயே சுட்டுக்கொன்ற விகாஸ் துபே யார்? 

Published on 10/07/2020 | Edited on 10/07/2020

 

vikas dubey

 

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் பிரபல ரவுடியான விகாஸ் துபேவை மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் உ.பி. மாநில போலீசார் கைது செய்தனர். விகாஸ் துபே, இன்று காலை கான்பூருக்கு அழைத்து வரப்பட்டபோது, பாதுகாப்புப் பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தைப் பயன்படுத்தி, விகாஸ் துபே தப்ப முயன்றதாகவும் அப்போது நடைபெற்ற என்கவுண்டரில் விகாஸ் துபே சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உத்திரப்பிரதேச மாநிலம் பிக்ரு கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் துபே. சிறு வயதிலேயே சின்னச் சின்ன திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டார். பின்னர் வழிப்பறி, மிரட்டல் விடுப்பது போன்ற சம்பவங்களிலும் ஈடுபட்டார். 1990 இல் முதல் கொலையைச் செய்த விகாஸ் துபே தனக்கென ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டார். இந்தக் கொலைச் சம்பவத்திற்குப் பிறகு அம்மாநிலத்தில் விகாஸ் துபே மிகப்பெரிய ரவுடியாக பேசப்பட்டார். துப்பாக்கிகளுடன் கூடிய கூட்டாளிகள் இவருடனேயே இருப்பார்கள்

 

அரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட விகாஸ் துபேவை, பல கட்சிகள் தங்களது கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தன. இருப்பினும் அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். 1995 - 96 இல் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தனக்கு உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தித் தனது மனைவியையும் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றி பெற வைத்தார்.

 

பகுஜன் சமாஜ் கட்சியில் உள்ள முக்கியத் தலைவர்கள் பலரைச் சந்தித்து ஆதரவுகளைப் பெற்றுக்கொண்ட விகாஸ் துபே, தனது 'தாதா' தொழிலையும் திறமையாகச் செய்து வந்தார். இதனால் பதவி, கட்சியில் செல்வாக்கு போன்றவற்றால் இவர் மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தும் காவல்துறையினரால் இவரை விசாரணை செய்யவோ, கைது செய்யவோ நெருங்க முடியவில்லை. பணம், அரசியல் பின்புலம் என ராஜயோகமாக வாழ்ந்து வந்த விகாஸ் துபே 1999 இல் வெளிவந்த 'அர்ஜுன் பண்டிட்' படத்தைப் பார்த்து தன் பெயரையும் விகாஸ் பண்டிட் என மாற்றிக்கொண்டார்.

 

2001 இல் உத்திரப்பிரச மாநில பா.ஜ.க. முக்கிய தலைவரான சந்தோஷ் சுக்லாவை, ஷிவ்லி காவல் நிலையத்திலேயே வைத்து விகாஸ் துபே சுட்டுக் கொன்றார். காவல் நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்தபோது சுமார் 25 போலீசார் இருந்தபோதும் விகாஸ் துபேவைக் கைது செய்ய முடியவில்லை. மாநிலம் முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதையடுத்து இந்த வழக்கில் 2002 இல் தாமாகவே முன்வந்து விகாஸ் துபே சரண் அடைந்தார். ஆனால் இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த போலீசார் பலரும் விகாஸ் துபேவுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தனர். இதனால் விகாஸ் துபே அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இருப்பினும் பல்வேறு வழக்குகள் அவர் மீது இருந்து வந்தது. 

 

ஒரு கொலை வழக்குக்காக விகாஸ் துபேவைத் தேடி வந்த தனிப்படை போலீசார் குழு, அவரைக் கைது செய்வதற்காக கடந்த 3ஆம் தேதி கான்பூருக்குச் சென்றது. போலீசார் வருவது முன்பே தெரிந்தததால் சாலைகளில் போலீஸ் வாகனங்கள் வர முடியாதபடி பெரிய கனரக வாகனங்களைச் சாலையில் மறித்து நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது போலீசார் அந்தச் சாலையின் குறுக்கே இருந்த வாகனத்தை நகர்த்தி வைத்துவிட்டு உள்ளே நுழைந்துள்ளனர்.

 

அப்போது சற்று உயரமான இடங்களில் இருந்த விகாஸ் துபே கூட்டாளிகள் போலீசாரை நோக்கி சரமாரியாகச் சுடத் தொடங்கினர். சுற்றி வளைத்துச் சுட்டத்தில் ஒரு டி.எஸ்.பி., 3 எஸ்.ஐ.க்கள், 4 கான்ஸ்டபிள் என போலீசார் 8 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவத்தையடுத்து விகாஸ் துபே தலைமறைவானார். 

 

http://onelink.to/nknapp

 

விகாஸ் துபே பற்றி 'துப்பு' கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அந்தத் தொகை இரண்டரை லட்சமாக உயர்த்தப்பட்டது. மேலும் விகாஸ் துபேவைப் பிடிக்க 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் மத்தியப் பிரதேசத்தில் உஜ்ஜைனில் உ.பி. போலீசாரால் கைது செய்யப்பட்டார். ரவுடிகளுக்குத் தகவல் தெரிவித்து துணையாக இருந்ததாக போலீசார் நான்கு பேர் சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ளனர். 

 

 

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.