Skip to main content

நித்தி, ரஞ்சிதா வீடியோவை தாண்டி பல விஷயங்கள் நித்தி ஆசிரமத்தில்... வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 13/01/2020 | Edited on 13/01/2020

நித்தியானந்தாவின் பிடியில் இருக்கும் மா நித்திய தத்வ பிரியானந்தா மரண பயம் கலந்த குரலில் வெளியிட்ட வீடியோ பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

"எப்ப எங்களுக்கு ஆபத்து வரும் அப்படின்னு தெரியாது? அந்த மாதிரி சிச்சுவேஷன்ல மாட்டிண்டு இருக் கோம். அடுத்த வீடியோ பண்றவரைக்கும் இருப்பேனான்ட்டு... எனக்கு அந்த அளவுக்கு பயமா இருக்கு...' என கதறிய மகளின் குரலை கேட்டு அப்பா ஜனார்த்தன சர்மா உடைந்து போனார்.

 

priya



அந்த வீடியோ நள்ளிரவு வெளியானது. அதில் சொல்லப்பட்ட வார்த்தைகள் என்னைத் தூங்க விடவில்லை. இரவு முழுவதும் அழுதேன். உடனடியாக எனது மகள் கடத்தப்பட்ட குஜராத் மாநில உயர்நீதிமன்றத்திற்கு மறுநாள் காலை சென்றேன். அந்த வீடியோவையும் அதில் எனது மகள் உயிர் பயத்துடன் கதறியதையும் நீதிபதிகளிடம் சமர்ப்பித்தேன். அந்த நீதிமன்ற உத்தரவுப்படி எனது மகளை தேடி வரும் குஜராத் மாநில போலீசாரிடம் சென்று வீடியோவை காண்பித்தேன். அவர்கள் அதிர்ந்து போனார்கள். மரண பயத்துடன் எனது மகள் பேசிய பேச்சுக்கு என்ன எதிர்வினை செய்ய முடியும் என ஆலோசித்தார்கள். அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் என்னிடம் "நித்தி ஆசிரமத்தில் நடப்பது என்ன' என்று 164 சட்ட பிரிவுப்படி வாக்குமூலம் வாங்கினார்கள். அதில் "நித்தியும் ரஞ்சிதாவும் இணைந்து காட்சி தந்த வீடியோவை தாண்டி பல விஷயங்கள் நித்தி ஆசிரமத்தில் நடக்கின்றன. குருகுலப் பள்ளி என நித்தி நடத்தும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுடன் காமக் களியாட்டத்தில் ஈடுபடும் அளவிற்கு நித்தி மனநோய் முற்றிய ஒரு கிரிமினல் என ஆதாரத்துடன் விளக்கினேன். அவர் எந்த மோசமான நடவடிக்கையும் செய்வார்.

 

sharma



பல கொலைகளை செய்தவர் என்றேன். அடுத்த நாளே இந்த வீடியோ வெளியானது. இந்த வீடியோ உண்மையான வீடியோ. அதில் பேசிய என் மகளின் பேச்சு உண்மையானது. ஒரு தகப்பனான எனக்கு எனது மகளின் முக பாவங்கள் நன்றாக தெரியும். இந்த வீடியோ பற்றி நக்கீரனில் செய்தி வெளிவந்தவுடன் எனது மகள் பேசியதாக மற்றொரு வீடியோ அவளது முகநூல் பக்கத்தில் வெளியானது. அதில் "உயிருக்கு ஆபத்து' என அவள் பேசி வெளிவந்த வீடியோ முன்பு ஒரு சந்தர்ப்பத்தில் பேசிய வீடியோ என சொன்னார்.
 

nithy



எனது மகள் உயிருக்கு ஆபத்தில்லை என சந்தோஷப்படுவதா? முன்பு பேசிய "உயிருக்கு ஆபத்து' என்கிற வீடியோவில் எந்த சந்தர்ப்பத்தில் அவர் பேசினார் என கண்டுபிடிப்பதா? என்று குழம்பிப் போனேன். உயிருக்கு ஆபத்து என சாதாரணமாக யாரும் பேச மாட்டார்கள். முன்பொரு சந்தர்ப்பத்தில் என் மகள் பேசினாள் என வாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும் பதினான்கு வயதிலிருந்து நித்தியின் கட்டுப்பாட்டில் இருக்கும் அவருக்கு முன்பு உயிருக்கு பாதுகாப்பில்லை என்கிற ஒரு சந்தர்ப்பம் உருவாகி இருக்குமானால் அதுவும் தவறு தானே என என் மனம் யோசித்தது.


நித்தி செய்த செக்ஸ் லீலைகள் எல்லாம் அவர் உபயோகித்த செல் போன்களில் இருக்கின்றன. அதை அழிப்பதற்கே நாலரைக் கோடி ரூபாய் நித்தி செலவு செய்திருக்கிறார். அவர் ஒரு மோசமான கிரிமினல். அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள எதையும் செய்வார். அவருக்கு எதிரான போராட்டத்தை எனது குழந்தைகளை காப்பாற்றத்தான் நான் தொடங்கினேன். இன்று அது நித்தியின் சாம்ராஜ்யத்தையே நிலைகுலைய செய்யும் போராட்டமாக மாறிவிட்டது. அதனால் அதற்குக் காரணமான என் குழந்தைகளை அழிக்க நித்தி முயல்வார். அப்படி ஒரு முயற்சி நடந்தபோது எனது மகள் "உயிருக்கு ஆபத்து' என பேசி வீடியோ வெளியிட்டார். அது வைரலானது. இந்தியா முழுவதும் ஊடகங்கள் அதை வெளியிட்டன.

அதை நான் எனது மகள் காணாமல் போன புகாரை விசாரிக்கும் நீதிமன்றத்திலும் சமர்ப்பித்ததால் எனது மகள்களை விட்டே மறுப்பு வெளியிட்டுள்ளார் நித்தி. நித்தி இதுபோல ஏகப்பட்ட கிரிமினல் வேலைகளை செய்பவர். உண்மையில் எனது மகள்களின் உயிருக்கும் வாழ்வுக்கும் பெரிய ஆபத்து உள்ளது' என்கிறார் ஜனார்த்தன சர்மா.


"இந்த வீடியோவில் பேசியது நாங்கள் அல்ல' என நித்தியின் மறுப்பு வீடியோவில் ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் சொல்லவில்லை. முன்பு நித்தி-ரஞ்சிதா வீடியோ வெளியானபோது "அது நான் அல்ல' என்றார் நித்தி. அது அவரும் ரஞ்சிதாவும்தான் என போலீசார் நிரூபித்தனர். அதனால் இம்முறை "அந்த வீடியோவில் இடம்பெற்றது நான்தான்; அது முன்பொரு சந்தர்ப்பத்தில் பேசியது' என்கிறார்கள் ஜனார்த்தன சர்மாவின் மகள்கள்.

"ஏன் இந்த அவசர மறுப்பு' என நித்தியின் பக்தர்களிடம் கேட்டோம். "ஜனவரி 16-ம் தேதி குஜராத் உயர் நீதிமன்றத்தில் நித்திக்கு எதிராக ஜனார்த்தன சர்மாவின் மகள்களை கடத்திய வழக்கு வருகிறது. ஜனார்த்தன சர்மா தனது மகள் உயிர் பயத்துடன் பேசிய வீடியோவை சமர்ப்பித்துவிட்டார்.

அந்த வழக்கில் முதல் குற்றவாளியான நித்தியைப் பிடிக்க கோர்ட் வாரண்ட் பிறப்பித்தால் தற்பொழுது மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள ப்ளூ கார்னர் நோட்டீஸ், ரெட் கார்னர் நோட்டீஸாகிவிடும். அந்த பயம்தான் காரணம்'' என்கிறார்கள். தன்னை ஆக்டிவ் ஆக காட்டிக்கொள்ள நித்தி விநாயகர் சதுர்த்திக்கு பேசிய வீடியோவை "விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்' என நேரடி ஒளிபரப்பில் ஒளிபரப்புகிறார் நித்தி'' என்கிறார்கள்.

கர்நாடக, குஜராத் என உயர்நீதிமன்றங்களுக்கு பயந்து தப்பு மேல் தப்பு செய்து கிரைம் ரேட்டைக் கூட்டுகிறார் நித்தி.