Skip to main content

உள்ளாட்சி தேர்தலுக்கு அமித்ஷா... பாஜக போடும் பலே பிளான்!

Published on 27/11/2020 | Edited on 27/11/2020
gh

 

 

ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்தியாவில் பல்வேறு மாநில கட்சிகள் ஆச்சரியதக்க வகையில் வளர்ந்து தேசிய கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகின்றன. 60களின் மத்தியில் திமுக தொடங்கி வைத்த அந்த அதிரடி பாணி அரசியலை தற்போது ஜெகன் மோகன் ரெட்டி வரை தொடர்ந்து செய்து வருகிறார்கள். சில நேரங்களில் தொடர்ந்து செய்ய முடியாமல் தேர்தல் தோல்விகள் இடையிடையே வந்தாலும் மக்கள் மனதில் அவர்கள் அசைக்க முடியாத இடத்தை பெற்றிருந்தார்கள். தமிழகத்தில் கலைஞர், ஆந்திராவில் என்டிஆர், ஒரிசாவில் பிஜி பட்நாயக், கர்நாடகாவில் தேவகவுடா, பீகாரில் லாலு, நிதீஷ், மேற்கு வங்கத்தில் மம்தா, மராட்டியத்தில் சரத் பவார் போன்ற தலைவர்கள் இவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள். இவர்கள் அனைவருமே காங்கிரஸ் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்திலேயே அந்த கட்சிக்கு எதிராக அரசியல் புரிந்தார்கள், வெற்றியும் பெற்றார்கள். அவர்களுடன் சிலர் கூட்டணியும் வைத்தார்கள். ஆனால் ஒத்துவராதவர்களை அரசியல் களத்தில் இருந்து அவர்களால் அப்புறப்படுத்த முடியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு என்று மக்கள் ஆதரவு தொடர்ந்து இருந்து வந்தது. 

 

ஆனால் தேசிய கட்சிகள் என்று பார்த்தால் காங்கிரஸ் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்து வருந்தது. கிட்டதட்ட 50 ஆண்டுகாலம் இந்தியாவை ஆட்சி செய்தது. தற்போது காங்கிரஸ் கட்சி நூறு ஆண்டுகாலத்தை கடந்ததாலோ என்னவோ ஒரு பெரிய தேக்கம் ஏற்பட்டு, 40 வயதுடைய பாஜக ஒவ்வொரு மாநிலமாக சென்று மாநில கட்சிகளை சூறையாடிவிட்டு தென் இந்தியாவில் தற்போது பார்வையை செலுத்தியுள்ளது. கட்சி தொடங்கி 40 ஆண்டுகளுக்கும் குறைவாக உள்ளாதால் அதன் வேகத்துக்கும், பாய்ச்சலுக்கும் பழம் தின்று கொட்டை போட்ட காங்கிரசாலும் ஈடுகொடுக்க முடியவில்லை, மாநில கட்சிகளாலும் தடை போட முடியவில்லை. தற்போது அவர்களின் பார்வை தென் இந்தியாவின் எல்லையான தெலுங்கானா மாநிலத்தை நோக்கி திரும்பியுள்ளதை சில தேர்தல்  முடிவுகளின் பார்த்தால் நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியும். 

 

h

 

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முன்பு வரை மாநில பாஜக என்பது காண கிடைக்காத ஒரு கட்சியாகவே இருந்தது. தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு இந்த விவகாரம் அமித்ஷா காதுக்கு எட்டியது. புதிய பொறுப்பாளர்கள் போட்டார். அவருக்கே உரிய சில அரசியல் சடுகுடுகளை ஆடினார். விளைவு கேசிஆரின் கோட்டையான அங்கு நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக தன்னுடைய உறுப்பினர்கள் நாடாளுமன்றம் அனுப்பியது. இதைக்கூட மோடி அலை என்று சொல்லி மனசை தேற்றிக்கொள்ள டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முயலும். ஆனால் கடந்த வாரம் துபக் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் டிஆர்எஸ் கட்சியிடம் இருந்து தொகுதியை வென்றது பாஜக. இதை சற்றும் எதிர்பாராத டிஆர்எஸ் அதிர்ந்து கிடக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மைதானத்திற்குள்ளே அனுமதிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டது. இடைத்தேர்தலில் அதுவும் ஆளும் கட்சி தொகுதியில் பாஜகவின் வெற்றியை அரசியல் தெரிந்த யாரும் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். 

 

அதேபோன்று ஒரு மாயாஜலத்தை இன்னும் மூன்று நாட்களில் நடைபெற இருக்கின்ற ஹைத்ராபாத் மாநகராட்சி தேர்தலில் செய்து காட்ட தயாராக இருங்கள் என்று டெல்லி பாஜக தலைமை மாநில பாஜகவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். விளைவு மாநிலம் முழுவதும் தற்போது பாஜக கூட்டங்கள், பேரணிகள் என்று கடந்த ஒரு வாரமாக தலைநகரை கலக்குகிறார்கள் தாமரைவாசிகள். இதையும் தாண்டி ஒரு மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே நேரடியாக களத்திற்கு வர இருக்கிறார். தெலுங்கானாவில் இருந்து காவி கோடு போட பாஜக தயாராகிவிட்டதாகவே தெரிகிறது. அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தடை போடுமா அல்லது வழக்கம் போல் வழிவிடுமா என்பதை சில காலம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.