Skip to main content

"நினைத்து நினைத்து பார்த்தால்" - ‘கேகே’ என்னும் காற்றில் கலந்த காதல் குரல்!

Published on 01/06/2022 | Edited on 03/06/2022

 

singer kk passed away

 

காதலின் குரலாக அறியப்பட்ட பிரபல பாடகர் கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் (53) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற கல்லூரி நிகழ்வு ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருக்கும் போது திடீரென மேடையை விட்டு வெளியேறினார். அங்கு இருந்து, தான் தங்கியிருந்த விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது தீடீரென மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கிருஷ்ணகுமாரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளனர். இவரது மறைவு எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

பாடகர் கேகே திரைத்துறையில் வருவதற்கு முன்பே கிட்டத்தட்ட 3500-க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு பாடியுள்ளார். கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற "ஸ்ட்ராபெரி கண்ணே..." என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கேகே முதல் பாடலே பலரின் கவனத்தை பெற்றார். முதல் பாடலிலே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த கே  தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பாடி அசத்தியுள்ளார். 

 

தமிழில் ஒல்லிக்குச்சி உடம்புக்காரி ( ரெட்), உயிரின் உயிரே (காக்க காக்க), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), காதல் வளர்த்தேன் (மன்மதன்), அப்படி போடு (கில்லி), வார்த்தை ஒன்னு (தாமிரபரணி), என் வெண்ணிலவே (ஆடுகளம்), நீயே நீயே நானே நீயே (எம். குமரன் சன் ஆஃப் மஹாலக்ஷ்மி) என 60-க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். லெஜண்ட் சரவணன் அருள் நடிப்பில் வெளியாகவுள்ள படத்தில் கூட கேகே ஒரு பாடல் பாடியுள்ளார். யுவனின் இசையில் இவரது குரலில் வெளியான ”நினைத்து நினைத்து பார்த்தேன்...” பாடல் 90 களில் காதலர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக காதல் தோல்வி அடைந்த காதலர்கள் மத்தியில் இந்த பாடல் அருமருந்தாய் இன்று வரை உள்ளது.  தேவா, வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா ஹாரிஸ் ஜெயராஜ் என இரண்டு தலைமுறை இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றிய கலைஞன் தற்போது நம்மை விட்டு பிரிந்துள்ளது வருத்தமாகத்தான் இருக்கிறது. 

 

திரையுலகை தாண்டி பலதரப்பட்ட மக்களும் வருத்தத்தில் உள்ளனர். திரைத்துறையில் இவர் ஆற்றிய பணியை கௌரவிக்கும் வகையில், கொல்கத்தாவில் உயிரிழந்ததை அடுத்தும், அவரது உடலுக்கு விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.  

 

எது எப்படியோ கேகே பாடிய "நினைத்து நினைத்து பார்த்தால்..." பாடல்  திரும்ப திரும்ப அவரையே நினைவு கூறும், காதலின் குரல் தற்போது காற்றில் கலந்துள்ளது. 

 

 

Next Story

பக்கா பிளான்; பாதிக்கப்பட்ட பெண்ணை வேட்பாளராக களமிறக்கிய பாஜக!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Sandeshkhali Rekha Patra announced as BJP candidate for parliamentary elections

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் திருவிழா களைக்கட்டி உள்ளது. இதனையொட்டி பாஜக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளது. அதில் மேற்கு வங்க மாநிலம் பாசிர்ஹட் நாடாளுமன்ற  தொகுதி வேட்பாளராக ரேகா பத்ரா அறிவிக்கப்பட்டது, தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில் பட்டியலின பெண்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான (தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்) ஷாஜகான் ஷேக் பாலியல் தொல்லை கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவர்களின் நிலத்தை அபகரித்துத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவங்களை எல்லாம் வெளியே கூறினால் கடுமையான பின் விளைவுகளை சந்திப்பீர்கள் என்று மிரட்டல் விடுத்துள்ளார் ஷாஜகான் ஷேக்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சந்தேஷ்காலி கிராமத்து பெண்கள் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது போலீஸில் புகார் அளித்துள்ள நிலையில், அதனை போலீசார் கண்டுகொள்ளவில்லை.  இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டம் நடத்தினர். ஷாஜகான் ஷேக்கின் கூட்டாளிக்குச் சொந்தமான கோழிப்பண்ணைகளைப் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். இது மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர் போராட்டத்திற்கு பிறகு ஷாஜகான் ஷேக் கடந்த மாத இறுதியில் கைது செய்யப்பட்டார்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற பாதிக்கப்பட்ட பெண்ணான ரேகா பத்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ரேகாவுக்கு பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் பாசிர்ஹட் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சந்தேஷ்காளி கிராமமும் இந்த தொகுதியில்தான் உள்ளது.

பாசிர்ஹட் நாடாளுமன்ற தொகுதியில் ரேகா பத்ராவுக்கு பாஜக சார்பில் வாய்ப்பு கொடுக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. அவருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதே சமயம் ரேகாவுக்கு சந்தேஷ்காளி மக்கள் முழு ஆதரவு கொடுத்துள்ளனர். கடந்த 6 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, சந்தேஷ்காலி கிராமத்தை சேர்ந்த பெண்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் ரேகா பத்ராவும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் ரேகா பத்ராவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில்  ஆளும் கட்சிக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்ணை வேட்பாளராக பாஜக களமிறக்கியுள்ளது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேற்கு வங்கத்தில் புதிய டி.ஜி.பி. நியமனம்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
New DGP in West Bengal Appointment

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) பிற்பகல் நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், ‘சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும். தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது. மாலை, இரவு நேரங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் படங்கள் அகற்றப்பட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது.

அந்த வகையில் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு, முதன்முறையாகத் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்திருந்தது. அதில், மேற்கு வங்க மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக பொறுப்பு வகித்து வந்த ராஜீவ் குமாரை நீக்கி தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இது குறித்து மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரி கூறுகையில், “ராஜீவ் குமார் (டி.ஜி.பி.) ஆட்சியில் இருக்கும் கட்சியின் (திரிணாமுல் காங்கிரஸ்) குறிப்பாக அரசின் முகமாக இருந்தார். அரசின் உத்தரவின்றி அவர் பணிபுரிய மாட்டார் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள, டி.ஜி.பி.யாக இருந்தும் மக்களின் குறைகளை கேட்காததால், பல புகார்களை பதிவு செய்துள்ளோம். இது நல்ல முடிவு. இது எங்களுக்கு மகிழ்ச்சி” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக ஐ.பி.எஸ். அதிகாரியான விவேக் சஹாய் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநில உள்துறை செயலாளர்களையும் மாற்ற உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.