Skip to main content

“ஆளுமைகளுக்குத் தான் கோபம் வரும்; அடிமைகளுக்கு கோபம் வராது” - அலிம் அல் புகாரி 

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

 Alim Al Buhari  interview

 

பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மையினர் அணி துணைத் தலைவர் அலிம் அல் புகாரி விரிவாகப் பேசுகிறார்

 

ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற திட்டத்தை இப்போது பாஜக கையில் எடுத்திருப்பதற்கு காரணம் இந்தியா கூட்டணியின் மீது அவர்களுக்கு உள்ள பயம் தான். இதுவே இந்தியா கூட்டணிக்கான வெற்றி. மக்களுக்கு நல்லது செய்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வர வேண்டும் என்கிற எண்ணம் எப்போதுமே மோடிக்கு இருக்காது. அதானிக்கு நல்லது செய்வது தான் அவருடைய நோக்கம். இந்தியா கூட்டணியின் பெயரை தீவிரவாதிகளோடு ஒப்பிடும் அளவுக்கு மோடிக்கு பயம் ஏற்பட்டுவிட்டது. எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற முடிவும் பயத்தில் எடுக்கப்பட்டது தான். 

 

சுதந்திரம் கிடைத்த பிறகும் சில ஆண்டுகள் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் ஒன்றாகவே நடைபெற்றன. அதன் பிறகு நடைபெற்ற மாற்றங்களால் தேர்தல்கள் தனித்தனியாக நடத்தப்பட்டன. இப்போது இதை மீண்டும் கொண்டுவருவதற்கான காரணம் என்ன? தேர்தலுக்கு முன்பு இது ஏன் இவர்களுக்குத் தோன்றுகிறது? இதையே காரணம் காட்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உங்களுடைய ஆட்சியை நீங்கள் ஏன் கலைத்திருக்கக் கூடாது? ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற பேச்சு அதிமுக ஆட்சியில் எழுந்தபோது அதை அவர்கள் எதிர்த்தனர். இப்போது விஷமத்தனமாக ஆதரிக்கின்றனர். 

 

தாங்கள் இனி ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்று அதிமுக முடிவு செய்துவிட்டது. கூட்டாட்சி தத்துவத்திற்கு ஆபத்து வரும்போது ஆளுமைகளுக்குத் தான் கோபம் வரும். அடிமைகளுக்கு கோபம் வராது. நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தது அதிமுக ஆட்சி தான். ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கொண்டுவந்தால் மாநிலக் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கும் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் வரும். அதனால் அவர்களுக்குள் சிக்கல் வர வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் தங்களுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்கும் என்று பாஜக எதிர்பார்க்கிறது. வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரிலேயே இதற்கான மசோதாவைத் தாக்கல் செய்வார்கள். 

 

சர்வாதிகாரம் என்பது உச்சத்தை அடைந்து, அதன் பிறகு தான் வீழும். பாஜக இந்த நாட்டுக்கு செய்த அட்டூழியங்களை ஒருநாள் முழுவதும் பேசலாம். நீதிபதி லோயாவைக் கொலை செய்தது யார்? 2500 இஸ்லாமியர்களைக் கலவரம் மூலம் கொன்றது யார்? மக்களுக்கு இது எதுவும் தெரியாதா? கர்மாவை நம்பும் பாஜகவுக்கு இதெல்லாம் தங்கள் மீதே திரும்பும் என்று தெரியாதா? ஜெயலலிதாவைக் கொன்றது யார்? அவர் மருத்துவமனையில் இருந்தபோது ஏன் பிரதமர் நேரடியாக வரவில்லை? மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவே மணிப்பூராக மாறும் என்று பாஜகவால் ஆளுநராக நியமிக்கப்பட்ட சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். 

 

மணிப்பூர் மக்கள் பற்றி பாராளுமன்றத்தில் பேசும்போது மோடி நக்கல் செய்தார். இது ஆணவத்தின் உச்சம். இது இன்னும் உச்சத்தை அடைய வேண்டும். அப்போதுதான் அவர்கள் வீழ்வார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அவர்கள் அறிவிக்கும்போது, அவர்களுடைய முடிவின் ஆரம்பத்தை அவர்கள் அடைவார்கள்.
 

கீழே உள்ள லிங்கில் பேட்டியை முழுமையாகக் காணலாம்...

 

 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.