Skip to main content

இந்த ஆண்டின் பிரம்மாண்ட கல்யாணம்!!!

Published on 29/06/2018 | Edited on 29/06/2018

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவின் கல்யாணம்தான் ஹைலைட், அதே போன்று இந்த வருடமும் ஒரு பிரமாண்ட கல்யாணம் நடக்க இருக்கிறது. உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் மூத்த மகனுக்குதான் இந்த வருட இறுதியில் திருமணம். முகேஷ் அம்பானியின் மூத்த மகன் பெயர் ஆகாஷ் அம்பானி.  ஐபிஎல் பார்ப்பவர்களுக்கு அவர் நன்கு பரிச்சயமானவர். மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் முகேஷ் அம்பானியின் மனைவி  நீத்தா அம்பானி, மும்பை அணி விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும்  அந்த மைதானத்தில் குடும்பத்துடன் அமர்ந்திருப்பார்கள். ஆகாஷ் அம்பானி, தற்போது ரிலையன்ஸ் குழுமத்தின் இன்னொரு நிறுவனமான ஜியோவில் புதிதாக வியூகங்கள் அமைக்கும் தலைவராக இருக்கிறார். ஜியோ என்ற புது நிறுவனத்தை தெரியாதவர்கள் இந்தியாவில் உண்டோ?
 

 

ambani

 

 

 


ஆகாஷ் திருமணம் செய்ய போகும் பெண்ணின் பெயர் ஸ்லோகா மேத்தா. ஆகாஷின் அம்மா நீத்தி அம்பானி, முகேஷ் அம்பானியை திருமணம் செய்வதற்கு முன்பு ஒரு சதாரண குடும்பத்தை சேர்ந்தவர்தான். அதனால், ஆகாஷுக்கு மணமுடிக்க இருக்கும் ஸ்லோகாவும் மிடில் கிளாஸ் குடும்பம் என்று நினைத்துவிட வேண்டாம். ஸ்லோகாவின் அப்பா ரஸ்ஸல் மேத்தா, பி. அருண்குமார் என்ற வைர வியாபாரியின் மகனாவார். 1960 ஆம் ஆண்டில் பி. அருண்குமார் என்ற வைர நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். பின்னர்  இந்த நிறுவனத்தின் பெயர் “ரோஸி ப்ளூ டைமண்ட்ஸ்” என்று மாற்றப்பட்டது. இந்த நிறுவனத்தின் தலைமையிடம் பெல்ஜியத்தில் உள்ளது. உலகளவில் பனிரெண்டு நாடுகளில் இதன் கிளைகள் உண்டு. ஸ்லோகாவின் தாயாரும், நீரவ் மோடியும் தூரத்து சொந்தம். 

 

sloka

 

 

 


ஸ்லோகா மேத்தாவும், ஆகாஷும் பள்ளி பருவத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள். திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில்தான் இருவரும் உயர்நிலை பள்ளி படிப்பை படித்திருக்கிறார்கள். பின்னர் ஆகாஷ் கல்லூரி படிப்பை அமெரிக்காவிலுள்ள பிரவுன் பல்கலைக்கழத்தில் படித்தார். ஸ்லோகா பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆன்த்ரோபாலஜி படித்துவிட்டு, மேலும் சட்டப்படிப்பில் முதுகலை பட்டத்தை லண்டன் பொருளாதாரம் மற்றும் அரசியல் பள்ளியில் பயின்றிருக்கிறார். இதனைத்தொடர்ந்து தன் அப்பாவின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ரோஸி ப்ளூ டைமண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார், என்ஜிஓ நிறுவனமான கனக்ட் பார் என்ற சங்கத்தில் இணை உரிமையாளராகவும் இருக்கிறார். 
 

 

goa sloka

 


கடந்த மார்ச் மாதம் கோவாவிலுள்ள ஒரு ஃபைவ் ஸ்டார் ரிசார்ட்டில் அம்பானியின் நெருங்கிய குடும்பத்தார்களையும், ரஸ்ஸலின் நெருங்கிய குடும்பத்தார்களையும், இருவரின் நெருங்கிய நண்பர்களையும் வரவேற்று, நிச்சயம் செய்வதற்குமுன் பார்ட்டிபோல் வைத்து வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.  இதில் ஆகாஷும், ஸ்லோகாவும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகியது. இந்த பார்ட்டிக்கு பின்னர், அவர்களின் ஆன்டிலியா என்னும் பிரமாண்ட வீட்டில் மற்றவர்களையும், பாலிவுட் பிரபலங்களையும் அழைத்து விருந்து வைத்தனர். இதில் ஷாருக் முதல் கத்ரினா வரை அனைவரும் கலந்து கொண்டனர். அந்த மாதத்தில் இராம நவமி ஞாயிற்றுக்கிழமையில் வந்ததால், இரண்டு குடும்பமும் சேர்ந்து   கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவந்தனர். இவர்கள் இருவரின் திருமணம் உறுதியான பிறகு மிஞ்சி இருக்கும் ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தைக்கும் திருமணம் நடத்த போவதாக செய்திகள் வந்தன. முகேஷ் அம்பானி தன் குழந்தைகள் அனைவருக்கும் ஒரே மேடையில் திருமணம் நடத்த ஆசை படுகிறார் என்றும் சொல்லப்பட்டு வந்தது.


 

ambani family

 

 

 


இந்நிலையில், இவர்களின் நிச்சயத்தார்த்தம் நாளை கோலாகலமாக அன்டிலியா வீட்டில் கொண்டாட இருக்கிறது. பாலிவுட் நட்சத்திரங்களை அழைத்து நேற்று ஒரு பார்ட்டி நடத்தப்பட்டது. இதில் ஷாருக்கான், அலியா பாட், பிரியங்கா சோப்ரா உட்பட பலர் கலந்துகொண்டனர். இதில் முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா அம்பானி நடனம் ஆடினார். மேலும், இஷா அம்பானிக்கு விரைவில் திருமணம் நிச்சயிக்க போகிறோம் என்றும் கூறியிருக்கிறார். இந்த வருடத்தின் கோலாகல, பிரமாண்ட திருமணமாக இவர்களின் திருமணம் இருக்கப்போகிறது.