Skip to main content

அரசியலில் நுழையும் சத்யராஜ் மகள்... கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகிறாரா? திவ்யா சத்யராஜ் அதிரடி!

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

பிரபல ஊட்டச்சத்து நிபுணரான நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, தொடர்ந்து சமூகக் களத்திலும் செயல்பட்டு வருகிறார். மருத்துவத் துறையில் நடந்து வரும் முறைகேடுகள் மற்றும் நீட் தேர்வினால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறிப்பிட்டு இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம், சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால், அவர் பிரச்சனைகளையும் எதிர்கொண்டார். உலகின் மிகப்பெரிய மதிய உணவுத் திட்டமான அக்ஷய பாத்திராவின் விளம்பரத் தூதுவர். சமீபத்தில் அரசியலில் அடியெடுத்து வைப்பதாக திவ்யா அறிவித்திருக்கிறார். அவரைச் சந்தித்து நடத்திய உரையாடல்.…

முன்னணி ஊட்டச்சத்து நிபுணராக உங்கள் பயணம் எப்படி இருக்கிறது? 

தமிழ்நாட்டில் குறைந்த ஊதியத்தில் வாழ்க்கை நடத்துபவர்களின் ஆரோக்கிய மேம்பாடுக்காக, அரசு மருத்துவமனைகளில் ஆராய்ச்சிகளைத் தொடங்கினேன். மருத்துவக் கட்டமைப்பில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு பரவாயில்லை என்றாலும், அது போதாது. களப்பணிகளைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஐந்தில் இரண்டு பெண்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு இருக்கிறது. ஐந்து வயதுக் குட்பட்ட 39.4 சதவீதம் குழந்தைகளிடம் போதுமான வளர்ச்சி இல்லை. 12 முதல் 23 மாதங்கள் ஆன 62 சதவீதம் குழந்தை களுக்கு மட்டுமே தடுப்பூசி போடுகிறார்கள். ஆபரேஷன் தியேட்டர் போன்ற இடங்களில் தூய்மையில்லை. போதுமான தலையணை, போர்வை இருப்பதில்லை. மருத்துவர்கள் குழுவோடு இணைந்து நடத்திய ஆராய்ச்சியில்தான் இதையெல் லாம் தெரிந்துகொண்டேன். ஈழத்தமிழர் களின் நலன் அப்பாவின் கனவு. அதை நனவாக்க, பல வைட்டமின் ஒர்க்-ஷாப் களை நடத்தி வருகிறேன்.

sathya



சுகாதாரத்துறையில் எதை மாற்றினால் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்று கருதுகிறீர்கள்? 

சுகாதாரத்துறையில் பல மாற்றங்கள் தேவை. காலாவதியான மருந்துகளை அப்புறப் படுத்த ஒரு சிஸ்டம் தேவை. மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்தினால் இன்னும் தரமான மருத்துவர்களை உருவாக்க முடியும். தனியார் மருத்துவக் கல்லூரிகள் வருவாய் ஈட்டித்தரும் இயந்திரங்களாக மக்களை நடத்துவதைத் தடுக்க கடுமையான விதிகள் வேண்டும். கொரோனா போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் தாக்கத்தின் தீவிரத்தை உணர்ந்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் முழுமையான கவனம் இருக்கவேண்டும்.


உங்களின் அரசியல் வருகைக்கு என்ன காரணம்? 

சுகாதாரத்துறை மட்டுமல்ல. நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக பல பிரச்சனைகள் இருப்பதை உணர் கிறேன். சமூக அமைப்பை மேம்படுத்த, வெளியில் இருந்து பேசிக்கொண்டே இருக்காமல், நேரடி அரசியல்தான் தீர்வு என்று முடிவு செய்திருக்கிறேன். அரசியல் வாதிகள் பேனர் கட்டவும், போஸ்டர் ஒட்டவும் காட்டும் அக்கறையை, மக்கள் சேவையில் காட்டினால் மாற்றம் பிறக்கும். என் அப்பாவுக்கும், எனக்கும் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு எப்போதுமே கிடைத்திருக்கிறது. ஒரு அமெரிக்க நிறுவனம் என் கிளினிக்கில் தகராறு செய்தபோது, மக்கள் எனக்கு ஆதரவளித்தார்கள். என் அரசியல் பயணத்திலும் அது தொடரும் என்று நம்புகிறேன்.

எந்தக் கட்சியில் சேரத் திட்டமிட்டுள்ளீர்கள்? 

சிறுவயதில் இருந்தே கம்யூனிச கருத்துகளால் ஈர்க்கப்பட்டவள் நான். அப்பாவின் அரசியல் பாடமும் நிறையவே கிடைத்திருக்கிறது. அதனால், சாதி மதத்தை ஆதரிக்கும் கட்சிகளில் சேர மாட்டேன். ரஜினி அங்கிள், கமல் அங்கிள் இருவர் மீதும் எனக்கு மிகுந்த மரியாதையும், அன்பும் உண்டு. ஆனால், அவர்கள் கட்சியில் சேரும் எண்ணமில்லை. எனது அரசியல் பாதை புதிய பாதையாக இருக்கும்.

மத அமைப்பான இஸ்கானின் அக்ஷய பாத்திரா திட்டத்தின் விளம்பரத்தூதுவர் நீங்கள். அப்படியானால் இந்துத்வத்தை ஆதரிப்பவரா நீங்கள்? 

அரசுப்பள்ளி மாணவர்களின் வைட்டமின் குறைபாடு தொடர்பாக ஆராய்ச்சியில் இருந்த போதுதான், அக்ஷய பாத்திரா சார்பில் என்னைத் தொடர்புகொண்டார்கள். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு கிடைப்பதால், நான் அவர்களை ஆதரிக்கிறேன். அதேசமயம், மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக ஒப்பந்தம் போட்டதற்கு நான் விளக்கம் சொல்ல முடியாது. நான் என்னை ஒரு இந்துவாக ஒருபோதும் உணர்ந்ததில்லை. எனக்கு மதம் கிடையாது.

அரசியலில் உங்களை ஈர்த்த தலைவர்? 

தன்னலமற்ற அரசியல் தலைவர் மூத்த தோழர் நல்லகண்ணு அய்யா. தனது அளப்பரிய போராட்டங்கள், தியாகங்களுக்காக போஸ்டர், பேனர் என்று விளம்பரம் தேடாத உண்மையான தலைவர் அவர்தான். அவரைத் தவிர புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் பிடிக்கும். உலகத் தலைவர்களில் பராக் ஒபாமா.

சமூக வலைத்தளங்களில் உங்கள் செயல்பாடுகள் இருப்பதில்லையே? 

Twitter தான் அரசியல் களமென்று புதிய அரசியல்வாதிகள் நினைக்கலாம். ஆனால், Twitter Politician-ஆக இருப்பதில், எனக்கு விருப்பம் கிடையாது. மக்களோடு நேரடியாக உரையாடாமல், அவர்களின் கண்ணீரையும், சந்தோஷத்தையும் புரிந்து கொள்ள முடியாது. சமூக மாற்றத்திற்கான அடிப்படை வேலைகளை களத்திற்கு சென்று செய்ய நினைக்கும் எனக்கு, ட்விட்டரோ, இன்ஸ்டாகிராமோ தேவைப் படவில்லை.

சத்யராஜின் மகள் என்பதால் உங்கள் அரசியல் முடிவு கவனம் பெற்றிருக்கிறதா? 

நான் வசதியான வீட்டில் பிறந்தவள் என்பதால், உழைக்கத் தெரியாது என்று தோன்றலாம். உண்மையில் பென்ஸ் காருக்கும், சில்வர் ஸ்பூனுக்கும் அடிமையாக வளர்க்கப்படவில்லை. சுயமாகவும், சுதந்திரமாகவும் என்னைச் செதுக்கிக் கொண்டவள் நான். கடினமாக உழைக்கக் கற்றுத்தந்தவர் அப்பாதான். அவர்தான் என் உயிர்த்தோழர். அப்பாவின் புகழையோ, பணத்தையோ சொந்த வளர்ச்சிக்காக ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. இது என் அரசியலுக்கும் பொருந்தும். சத்யராஜின் மகளாக மட்டுமின்றி, ஒரு தமிழ்மகளாக தமிழர் நலன்காக்க உழைப்பேன்.

 

 

Next Story

'இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன்'-விஷால் பேட்டி

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'It is because of the lack of all this that I am coming to politics' - Vishal interview

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், ''அரசியலுக்கு வருகிறேன் என்று நான் ஏன் ஓப்பனாக சொல்கிறேன் என்றால் நான் எதையுமே மூடி மறைத்தது கிடையாது. எதற்கு விஷால் அரசியலுக்கு வரவேண்டும். நிறைய பேர் இருக்காங்களே. இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்பார்கள்.

மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த குறையும் இல்லை. கிராமத்தில் குடிநீர் பிரச்சனை  இல்லை. ரோடு நல்லா போட்டிருக்கிறார்கள், தூர்வாரி இருக்கிறார்கள், மெட்ரோ இருப்பதால் டிராபிக் நெரிசல் இல்லாமல் நல்லாவே இருக்கிறது, சாலை எல்லாமே கரெக்டா இருக்கும்போது இவன் அரசியல் எதுக்கு தேவையில்லாமல் வரான் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய பதில். நல்லவேளை விஜயகாந்த் சார் மாதிரி என்கிட்ட கல்யாண மண்டபம் இல்லை. இல்லைன்னா இதை நான் சொன்னதனால் இடிச்சு தள்ளியிருப்பாங்க. டைம் வரும்போது சொல்கிறேன்'' என்றார்.

Next Story

'பாஜகவைப் புறக்கணியுங்கள்' - குஜராத்தில் வார்னிங் !

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
'Ignore BJP' - Warning to BJP in Gujarat

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்தநிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா பேசிய பேச்சு ஒரு சமூக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த வேட்பாளரை மாற்ற வேண்டும் என ராஜ்புத் சமூக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா அண்மையில் பேசும் போது, 'ராஜ்புத் சமூக ராஜாக்கள் ஆங்கிலேயர்களுக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு அவர்களிடம் நெருக்கமாக இருந்தனர்' என பேசியது அந்த சமூக மக்களிடையே சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இதற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

NN

இது சர்ச்சையான நிலையில் பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்ததால் தனது பேச்சுக்கு ரூபாலா மன்னிப்பு கோரி இருந்தார். இருப்பினும் ரூபாலாவின் மன்னிப்பை ஏற்க மறுத்த ராஜ்புத் மக்கள் அவரை மாற்றி விட்டு வேறு ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என பாஜகவிற்கு வலியுறுத்தல் கொடுத்துள்ளனர்.

ராஜ்புத் சமூகத்தின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று பாஜக தலைவர்களுடன் பலமணி நேரம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில் பாஜகவின் சமரசத்தை ஏற்க ராஜ்புத் சமூக சங்கங்களின் நிர்வாகிகள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனர். பாஜக வேட்பாளர் ரூபாலாவை மாற்றாவிட்டால் நாடு முழுவதும் பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளதோடு, அவரை மாற்றாவிட்டால் நாடு முழுவதும் வசிக்கும் 22 கோடி ராஜ்புத் பிரிவினர் பாஜகவை புறக்கணிப்பார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் சுமார் 25 லட்சம் மக்கள் ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் அவர்களது எச்சரிக்கை பாஜகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மட்டுமின்றி ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களிலும் கணிசமாக ராஜபுத் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அதனால் அங்கும் பாஜகவுக்கு நெருக்கடி முற்றும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.