Skip to main content

ரஜினி எதிர்பார்த்த புரட்சி... சர்வே முடிவில் வெளிவந்த தகவல்... எதிர்பார்க்காத ஆதரவால் உச்சகட்ட மகிழ்ச்சியில் ரஜினி! 

Published on 16/03/2020 | Edited on 16/03/2020

பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினி எந்த ஒரு குறிப்பையும் வைத்துக் கொண்டு பேசவில்லை. அவர் மனதில் இருந்ததை அப்படியே வெளிப்படையாக பேசினார்.

"கட்சி வேறு ஆட்சி வேறு என நான் சொன்னதை பலர் எதிர்க்கிறார்கள். இளைஞர்கள் சிலர்தான் அதை ஆதரிக்கிறார்கள்' என ரஜினி சொன்னது ஒரு இளைஞர் படையை பற்றியது. அந்த இளைஞர் படை தமிழகம் முழுவதும் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா என்பதுதான் முதல் கேள்வி. அதற்குப் பதில் அளித்தவர்களில் பெண்கள் அதிகம் இடம் பெற்றிருந்தார்கள்.

 

rajini



இளைஞர்களும் உற்சாகமாக ஆதரித்தார்கள். இது ரஜினியை மிகவும் உற்சாகப்படுத்தியது. "ரஜினி முதல்வராகாமல் ரஜினி கைகாட்டுபவர் முதல்வரானால் ஏற்பீர்களா' என்கிற கேள்வி பொது மக்களுக்கு புரியவில்லை. யார் முதல்வர் ஆனால் என்ன சார்... எங்களுக்கு 100 நாள் திட்டத்தில் காசு வரணும் போன்ற தங்களது பிரச்சினைகளை மக்கள் சொன்னார்கள்.

அதற்குப் பிறகு சர்வே எடுத்த இளைஞர்கள் விளக்கமாக "ரஜினி முதல்வராக மாட்டார் அவரது கட்சி ஜெயித்தால் ஒரு நல்லவரை முதல்வராக்குவார். அவர் தவறு செய்தால் ரஜினி மாற்றிவிடுவார். ரஜினி கட்சி நிர்வாகிகள் ஆட்சியில் தலையிட மாட்டார்கள். அதுதான் கட்சி வேறு ஆட்சி வேறு என்கிற சித்தாந்தம்' என சொன்னார்கள். கட்சி வேறு ஆட்சி வேறு என்பது தமிழகத்திற்கு சரிப்படாது என 15 சதவிகிதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ரஜினி சொல்வது சரி என 85 சதவிகிதத்துக்கு மேலானவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதன் உண்மையை அறிய தமிழகத்தின் கிராமப்புற வாக்காளர்கள் அதிகமுள்ள திருவள்ளூர், புதுக்கோட்டை மாவட்ட சாம்பிள்களை ரஜினியே நேரில் கொண்டு வரவைத்து பார்த்து, அதை எடுத்தவர்களுக்கு வாட்ஸ் அப்பில் நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

 

rajini



இளைஞர்களுக்கு 60% வாய்ப்பு மற்ற கட்சியிலிருந்து வந்தவர்கள், திறமையான சமூக சேவகர்கள், நீதிபதிகள், அதிகாரிகள் போன்றவர்களுக்கு 40 சதவிகித வாய்ப்பு. கட்சி பதவியில் இருக்கும் 50,000 பேருக்கும் வாய்ப்பு தரப்பட மாட்டாது. தேர்தல் நேரத்தில் பணியாற்றும் அவர்களுக்கு ஆட்சியில் மரியாதை கிடையாது என்பதெல்லாம் மா.செ.க்கள் கூட்டத்தில் ரஜினி பேசிய பேச்சுகளின் ரிப்பீட்டுதான் என்கிறார்கள் மா.செ.க்கள்.


"அண்ணா, கலைஞர், ஜெ. ஆகி யோருக்கு மரியாதை, விவேகானந்தர், காந்தியடிகள் ஆகியோரை குறிப்பிட்டது எல்லாம் ஒவ்வொரு காரணத்துக்காகத்தான்' என்கிறார்கள். "சோ என்னை பாசிஸ்டு என கூப்பிடுவார். எடுத்த முடிவை மாற்ற மாட்டேன் என்பதால்தான் சோ என்னை அப்படி அழைப்பார்' என்கிற ரஜினி, ஸ்டாலினுக்கு கலைஞரின் வாரிசு என நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தையும், எடப்பாடி ஏகப்பட்ட செல்வத்துடன் தேர்தலை சந்திக்க தயாராகியுள்ளதையும் குறிப்பிட்ட ரஜினி "இதை மாற்ற 2021 தேர்தல்தான் ஒரே சந்தர்ப்பம். எனக்கு மறுஜென்மம் கிடைத்துள்ளது'' என உடல்நிலை பிரச்சினைகளையும் குறிப்பிடத் தவறவில்லை.

 

 

rajini



இதில் பலவற்றையும் மா.செ.க்கள் கூட்டத்தில் ரஜினி பேசினார். சிலவற்றை தன்னை சந்திக்க வந்தவர்களிடம் பேசினார். அதை கோர்வையாக்கி ஒரு உரையாக்கி பேசியுள்ளார். இதை வெளிப் படையாக ரஜினி பேச முன் வந்ததற்குக் காரணம். ரஜினி கட்சி வேறு ஆட்சி வேறு என்கிற கொள்கையை கட்சிக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால்தான். ரஜினியின் வெளிப்படையான அந்தப் பேச்சில், பெண்கள் 30 சதவிதத்தினருக்கு அறிவு கிடையாது.

தலைவர்கள் சொன்னால் தொண்டர்கள் கேட்கணும்.

எனக்கு உடல்நிலை சரியில்லை வயது 71 நான் மறு ஜென்மம் எடுத்துள்ளேன் எனச் சொன்னதெல்லாம் விமர்சனத்தை எதிர்கொள்கிறது.


இதற்கிடையே ரஜினியுடன் சேர ஒரு படை தயாராகியுள்ளது. முன்னாள் காவல்துறை அதிகாரியான சிவனாண்டியும் ஜாபர் சேட்டும் ரஜினியின் மனைவி மூலம் ரஜினியுடன் இணைந்திருக்கிறார்கள். ரஜினிக்காக அவரது பிரச்சாரங்களை சிவனாண்டி ஒருங்கிணைக்கிறார். அதற்காக பல லட்ச ரூபாய் செலவில் ஒரு பெரிய அலுவலகத்தையே திறந்திருக்கிறார்.

இதில் ரஜினி மா.செ. கூட்டத்தில் பேசி பத்திரிகையாளர்களிடம் பேசாதது கூட்டணி பற்றி மட்டுமே. பா.ம.க., கமலின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் ரஜினியிடம் பேசி வருகின்றன. ஆனால் ரஜினி எதிர் பார்ப்பது- காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம்., வி.சிக. ஆகிய கட்சிகளையும் அழகிரி தலைமையில் தி.மு.க.வை உடைப்பதையும்தான். இதுதான் ரஜினி எதிர்பார்க்கும் "புரட்சி' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.