Skip to main content

20 ரூபாய் டோக்கன்! தயங்கும் தினகரன்! ஆர்.கே.நகர் யாருக்கு?

Published on 06/03/2021 | Edited on 06/03/2021

 

ddd

 

ஜெயலலிதா போட்டியிட்டு ஜெயித்ததால் வட சென்னையிலுள்ள ஆர்.கே.நகர் தொகுதி தமிழகத்தின் வி.வி.ஐ.பி. தொகுதிகளில் ஒன்றாக மாறியது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அத்தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களை தோற்கடித்து சுயேட்சையாக வெற்றிபெற்றவர் அ.ம.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன். சிட்டிங் எம்.எல்.ஏ.வான தினகரன், ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் களமிறங்க தயக்கம் காட்டி வருகிறார்.

 

இத்தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த வெற்றிவேல், சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்திலிருந்த ஜெயலலிதா விடுதலையானதும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இடைத்தேர்தலில் ஜெ. வென்றார். அவரது ஆணைப்படி, தொகுதியின் பொறுப்பாளராக இருந்த வெற்றிவேல், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, ஜெ. மூலம் நிவர்த்திசெய்து, மக்களிடம் செல்வாக்குடன் இருந்தார்.

 

ஜெ. மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்பட்டபோது, சசிகலாவின் விசுவாசியாக இருந்த வெற்றிவேலின் செல்வாக்கும் களப்பணியும்தான், இடைத்தேர்தலில் சுயேச்சை சின்னத்தில் நின்ற தினகரனை வெற்றிபெறச் செய்தது. ஆளுங்கட்சி பிறகு தங்கியது. எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கு டெபாசிட் போனது.

 

கரோனா பெருந்தொற்றில் வெற்றிவேல் இறந்துவிட்டார். வெற்றிவேல் இல்லாததும், இடைத்தேர்தலின்போது 20 ரூபாய் டோக்கன் கொடுத்து உறுதியளித்ததை நிறைவேற்றாததும், கரோனா நெருக்கடி காலத்திலும் தொகுதிக்குள் எட்டிப் பார்க்காததும் தினகரன் மீது தொகுதிக்குள் கடும் அதிருப்தியாக மாறி இருக்கிறது. இதனால் மீண்டும் போட்டியிடத் தயக்கம் காட்டுகிறார் தினகரன். "முக்குலத்தோர் அடர்த்தியாக உள்ள தேனி மாவட்டத்துக்கு இந்தமுறை தாவிவிடலாம்' எனக் கூட்டிக்கழித்துக் கணக்குப் போடுகிறது அவரது தரப்பு.

 

தி.மு.க.வில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன், தினகரனை எதிர்த்துப் போட்டியிட்ட மருதுகணேஷ் ஆகியோர் மீண்டும் சீட் கேட்டு மல்லுக் கட்டுகிறார்கள். இவர்களுக்குப் போட்டியாக, சீட் கேட்டு களமிறங்கியிருக்கிறார் வட சென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எபினேசர். உதயநிதியின் ஆதரவும் சிபாரிசும் இவருக்கு அதிகமாக இருக்கிறது. கட்சியின் மாவட்டச் செயலாளர் இளைய அருணா, ராயபுரம் தொகுதியைக் குறி வைப்பதால் இத்தொகுதியில் அவர் களமிறங்கவில்லை.

 

அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் மதுசூதனன் தனது உறவினரும், மா.செ.வுமான ராஜேஷுக்கு சீட் கொடுக்க ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்.சிடம் அழுத்தம் கொடுத்துள்ளார். இதனால் சீட் உறுதி செய்யப்பட்டுவிட்டதாகச் சொல்லி தொகுதியில் வலம் வந்துகொண்டிருக்கிறார் ராஜேஷ். ஆனால், மதுசூதனனின் ஜென்ம எதிரியான அமைச்சர் ஜெயக்குமார், ராஜேஷுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். அ.தி.மு.க.வில் அண்மையில் இணைந்த காங்கிரசின் வடசென்னை மாவட்ட முன்னாள் தலைவர் ராயபுரம் மனோ மற்றும் நடிகை விந்தியா ஆகியோரை எடப்பாடியிடம் சிபாரிசு செய்திருக்கிறார் ஜெயக்குமார். ஆர்.கே.நகர் சீட்டுக்கு அ.தி.மு.கவில் பலத்த போட்டி நடக்கிறது.

 

 


 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.