Skip to main content

தமிழ் சினிமாவின் புதிய திசை - "யாத்திசை" விமர்சனம்!

Published on 22/04/2023 | Edited on 22/04/2023

 

yaathisai movie review

 

மன்னராட்சி காலத்துக் கதை சொல்லும் படங்கள் என்றாலே வழக்கமான ஸ்டுடியோக்கள், அரண்மனை செட்டுகள், சாமரம் வீசும் பெண்கள், அரியணை, ஏகப்பட்ட ஆபரணங்கள் என இருந்தது அந்தக் காலம். இப்போதோ கோடிகளில் செலவு செய்து கிராஃபிக்ஸ், பிரம்மாண்டமான செட்டுகள், இந்தியா முழுவதுமான மார்க்கெட்டை கவரத்தக்க நடிகர்கள் என வேறு வடிவம் எடுத்துள்ளன இத்தகைய படங்கள். இவை இல்லாமல் கொஞ்சம் சறுக்கினாலும் அப்படங்கள் நகைச்சுவையாகவே தெரிந்தன. இந்த இரண்டு வகைகளிலும் இல்லாமல் வந்து நம்மை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது இயக்குநர் தரணி ராசேந்திரனின் 'யாத்திசை' (தென் திசையிலுள்ள நிலப்பகுதி). இத்தகைய ஒரு படத்தைக் கருவாக, கனவாகச் சுமந்ததற்கும் அதை முயற்சி மேற்கொண்டு நேர்த்தியாக உருவாக்கியதற்கு இயக்குநருக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்த குழு மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் வாழ்த்துகள்.

 

7ஆம் நூற்றாண்டில் இரணதீர பாண்டியன் தலைமையிலான படை சேர - சோழ கூட்டுப்படையை வென்று வெளியேற்றிவிட்டு சோழ அரண்மனையில் மீன் கொடி நாட்டி ஆண்டு வருகிறது. சோழர்களுக்கு ஆதரவாகப் போரிட்ட எயினர்களும் தங்களது நிலத்தை இழந்து பாலை நிலத்தில் வேட்டையாடு பிழைப்பு நடத்தி வருகின்றனர். எயினர் கூட்டத்தின் தலைவனான கொதி பாண்டியர்களுடன் போரிட்டு தாங்கள் இழந்த வாழ்க்கையை மீட்க வேண்டுமென்று விரும்புகிறான். பிறக்கவிருக்கும் தனது மகன் இளவரசனாகப் பிறப்பானென சபதமெடுக்கிறான். 

 

yaathisai movie review

 

பெரும் படை கொண்ட சிறந்த வீரனான இரணதீர பாண்டியனை எதிர்க்கத் துணியும் கொதியின் முயற்சி வெற்றி பெற்றதா என்பது யாத்திசை நேரடியாக நமக்கு சொல்லும் கதை. இதைத் தவிர பல விசயங்களை ஆங்காங்கே பேசுகிறது. யாத்திசையின் மிகப்பெரிய நேர்மறை அம்சம், சாதனை என்பது அது  செயல்படுத்தப்பட்டு (execution) உருவாக்கப்பட்டுள்ள விதம். இயக்குநர் தரணி ராசேந்திரன் மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு 7ஆம் நூற்றாண்டு வாழ்க்கையை, அது நடந்திருக்கக்கூடிய இடங்களை, பேசப்பட்டிருக்கும் மொழியை, உணவு, சடங்குகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, கற்பனை சேர்த்து குறைந்த பொருட்செலவில் நம்பும்படி, ரசிக்கும்படி தரமாக உருவாக்கியுள்ளார். இது பல கதவுகளைத் திறந்து தடைகளை உடைக்கக்கூடிய செயல்பாடு.

 

பாலை நிலம், காடு-மலை-கரடுகள் தாண்டிய கொதியின் பயணம், போருக்கு முன்னான சடங்கு விரிவாகவும் வெளிப்படையாகவும் காட்டுவதின் மூலம் புறத்தையும், அரசர்களின் அதிகார வேட்கை, அத்தகைய வன்முறையும் அரசியலும் நிறைந்த வாழ்வில் பெண்களுக்கான இடம், தேவரடியார்களின் மனநிலை என அகத்தையும் பேசுகிறது யாத்திசை. இதில் புற விசயங்கள் அத்தனையுமே சுவாரசியமாக, புதியதாக அமைந்து பல இடங்களில் நம்மை ஆச்சரியப்படுத்தியிருக்கின்றன. அக விசயங்கள் இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பேசப்பட்டிருக்கலாமோ என்று எண்ண வைக்கின்றன.

 

yaathisai movie review

 

அகிலேஷ் காத்தமுத்துவின் ஒளிப்பதிவு - மகேந்திரன் கணேசனின் படத்தொகுப்பு - சக்ரவர்த்தியின் இசை - ரஞ்சித் குமாரின் கலை - ஓம் சிவப்ரகாஷின் சண்டைக்காட்சிகள் உள்ளிட்ட அத்தனை துறைகளும் இயக்குநரின் கனவைச் செயல்படுத்தப் பேருதவி புரிந்திருக்கின்றன. தங்கள் உடலைத் தயார்ப்படுத்தி உழைத்துள்ள நடிகர்களின் பங்கும் முக்கியம். ஓரிரு இடங்களில் காட்சிப் பொலிவு குறைவாகத் தெரியும் VFX வேலை, பல காட்சிகளில் எயினர்கள் மொழிக்காக சப்-டைட்டில் கவனிக்க வேண்டிய சங்கடம், புதிய நடிகர்களின் நடிப்பு உள்ளிட்ட சில குறைகள் மட்டுமே. இத்தகைய முயற்சியில் படம் நமக்குக் கொடுக்கும் அனுபவத்தில் அவை மறந்துவிடுகின்றன.

 

 யாத்திசை - தமிழ் சினிமாவில் திறக்கப்பட்டுள்ள புதிய திசை!

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் நடிகர்கள் இறக்கிறார்கள்” - ‘உழைப்பாளர் தினம்’ பட இயக்குநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
uzaippaalar dhinam movie director speech in his movie audio launch

சந்தோஷ் நம்பிராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உழைப்பாளர்கள் தினம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூர், தயாரிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். சந்தோஷ் நம்பிராஜன் பேசுகையில், “இந்த படத்தின் கதையை நான் பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால், வெளிநாட்டு உழைப்பாளர்களைப் பற்றிய படம் இங்கு எப்படி ஓடும், வெளிநாடுகளில் ஓடிடி வந்துவிட்டதே, அவர்கள் இதை எப்படி பார்ப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால், உழைப்பாளர் தினம் என்ற தலைப்பை சொன்ன உடன் சிங்கப்பூர் துரைராஜ், ராஜேந்திரன், எங்க அண்ணன் நம்பிராஜன், கடலூர் ஜான், பொண்ணுசாமி புருஷோத்தமன், பாண்டுதுரை, சரஸ் என அனைவரும் குழுவாக சேர்ந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம்.

தற்போதைய தமிழ் சினிமா எப்படி இருக்குனா, ஒரு நகைச்சுவை நடிகரோட ஒரு நாள் சம்பளம் 10 லட்சம், அவரோட உதவியாளருக்கு 30 ஆயிரம் ரூபாய், அதில் 2 ஆயிரத்தை மட்டுமே அவருக்கு கொடுத்துவிட்டு, மீதியை அந்த நடிகரே எடுத்துக்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம், 10 ஆயிரம் ரூபாய் இல்லாமல் சேசு என்ற நகைச்சுவை நடிகர் இறந்து போகிறார். கடந்த ஆண்டு போண்டா மணி என்ற ஒரு நடிகர் இறந்து போகிறார். ‘அங்காடித் தெரு’ பட நடிகைக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது. இது மிகவும் வருத்தமளிக்கிறது. நடிகர் சங்கம் இருக்கிறது, இன்று சங்கத்திற்கான கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபடுகிறார்கள். செங்கலையும், சிமெண்டையும் கொண்டு எழுப்பும் கட்டிடத்தை விட மனித உயிர் தான் முக்கியம், ஒரு நடிகரின் வாழ்க்கையை காப்பாற்றாத சங்கம் எதற்கு. இது மிகவும் வருத்தப்படக்கூடிய விசயம். 

லோகேஷ் கனகராஜ், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ், பா.இரஞ்சித், வெற்றிமாறன் போன்ற திறமையான இயக்குநர்கள் அனைவரும் சிறிய படங்கள் மூலம் தான் தங்களை நிரூபித்துக்காட்டினார்கள். ஆனால், அவர்களுடைய அடுத்தடுத்த படங்களில் சிறிய நடிகர்களுடன் பணியாற்றாமல் பெரிய பெரிய நட்சத்திர ஹீரோக்களுடன் பயணிக்கிறார்கள். இது சொம்பு தூக்குற மாதிரி, பல்லக்கு தூக்குற மாதிரி இருக்கிறது. வசூல் பின்னால் போனால் அவர்களுடைய வாழ்க்கை நிலையாக இருக்க முடியாது. இதே பாரதிராஜா சாதாரண ஒரு வளையல் கடையில் இருந்தவரை ஹீரோவாக்கினார். தமிழ் தெரியாமல் கர்நாடகாவில் இருந்து வந்தவரை பாலச்சந்தர் நடிக்க வைத்து சூப்பர் ஸ்டாராக்கினார். அதனால் தான் இவர்கள் பற்றி இன்னமும் பேசப்படுகிறது. இந்த விசயத்தை நான் இங்கு பேசுவதற்கு காரணம் என்னுடைய இயக்குநர் தான். அவர் எந்தவித பொருளாதார நிலையையும் எதிர்பார்க்காமல் என்னை ஹீரோவாக்கினார்.  இங்கு ஹீரோவுக்கு தான் அதிகம் செலவு செய்கிறார்கள். இதே நிலை நீடித்தால் தமிழ் சினிமா இதைவிட மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும். 

இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அது தவறில்லை. ஆனால், சினிமாவில் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிட்டு, சக நடிகர்களுக்காகவோ, கலைஞர்களுக்காகவோ எந்தவித சமூக சீர்திருத்தங்களையும் செய்யாமல், அரசியலுக்குள் நுழைகிறார்கள் என்றால், 1000 கோடி ரூபாய் நோக்கி அவர்கள் நகர்கிறார்கள் என்று தான் அர்த்தம். 500 கோடி ரூபாயில் திரையரங்க நகரம் தேவையில்லை, அதற்கு பதில் 50 நகரங்களை தேர்ந்தெடுத்து 50 திரையரங்கங்களை உருவாக்க வேண்டும். சிறிய அளவிலான திரையரங்கங்களை திறக்க வேண்டும். திரையரங்கு மூலமாக அரசுக்கு ரூ.10 முதல் ரூ.12 கோடி வரை வருவாய் கிடைக்கும். பேருந்து நிலையங்களில் வைக்கலாம், பேருந்துக்காக காத்திருப்பவர்கள் படம் பார்ப்பார்கள். பார்க்கிங், கேண்டீன் என மிகப்பெரிய வியாபாரம் இருக்கிறது. இப்படி அரசு திரையரங்கம் திறக்க வேண்டும் என்று சொன்னதும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பயப்பட வேண்டாம். பிறகு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து இதுபோன்ற திட்டங்களை கிடப்பில் போட்டுவிடுவார்கள். அரசுப் பள்ளியால் தனியார் பள்ளிக்கு பாதிப்பில்லை, சமூக நலக்கூடங்களால் திருமண மண்டபங்களுக்கு பாதிப்பில்லை, ரேஷன் கடைகளினால் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பாதிப்பில்லை, அப்படி தான் அரசு திரையரங்கத்தால் மற்ற திரையரங்கிற்கு எந்த பாதிப்பும் வராது” என்றார். 

Next Story

குழந்தைகளைக் கவர்ந்த டபுள் டக்கர்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
double takkar response update

நடிகர் தீரஜ் ஹீரோவாகவும் ஸ்ம்ருதி வெங்கட் கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் டபுள் டக்கர்.  இப்படத்தில், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன்,முனிஷ்காந்த், சுனில் ரெட்டி, ஷாரா ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இரண்டு அனிமேஷன் கதாபாத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சேது ராமலிங்கம் நிர்வாக தயாரிப்பாளராக தயாரிக்கும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படமாக வெளியான இப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து தற்போது வெற்றிகரமாக 2வது வாரத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.