Skip to main content

மீண்டும் தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி; சந்தோஷ் நாராயணன் பதிவால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Published on 10/04/2023 | Edited on 10/04/2023

 

santhosh narayanan about dhanush mari selvaraj movie

 

பரியேறும் பெருமாள், கர்ணன் என இரண்டு வெற்றி படங்களை கொடுத்த மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

இதனிடையே 'வாழை' என்ற தலைப்பில் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இப்படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்குகின்றனர். இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நான்கு சிறுவர்கள் நடிக்க கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 

 

இந்த படத்தை அடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு மீண்டும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளார்கள் என அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. தனுஷ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் ஒரு படம் இயக்கவுள்ளார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான கர்ணன் படம் வெற்றி பெற்றதால் இப்படத்தின் மீதான ஏதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

 

தனுஷின் 'வொண்டர்பார் ஃபில்ம்ஸ்' கடைசியாக 2018ல் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாரி 2' படத்தை தயாரித்திருந்தது. அதன்பிறகு சில காரணங்களால் எந்தப் படங்களும் தயாரிக்கவில்லை. இந்த சூழலில் மீண்டும் படம் தயாரிக்க தொடங்கவுள்ளதால் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், "இந்த உலகம் உங்களுடையது மாரி செல்வராஜ். வாழை படம் சிறந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும். மாமன்னன் படத்துக்காக காத்திருக்கிறேன். தனுஷ் சார் தொடர்ந்து நல்ல திறமை வாய்ந்த மனிதர்களை கொண்டாடி வருகிறார். இந்தப் படம் நம் அனைவரையும் பெருமைப்படுத்தும்" எனப் பதிவிட்டுள்ளார். 

 

கர்ணன் படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த நிலையில் பாடல்களும் பின்னணி இசையும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இசையமைப்பாளார் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. விரைவில் இசையமைப்பாளர் மற்றும் மற்ற நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்ணன் பட அறிவிப்பு வெளியான சமயத்தில் இதே போல் மாரி செல்வராஜை வாழ்த்தி சந்தோஷ் நாராயணன் ட்வீட் செய்தார் என்பது நினைவுகூரத்தக்கது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தனுஷ் படத்திற்கு எழுந்த சிக்கல்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
dhanush kubera title issue

தனுஷ் தற்போது தனது 50 ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். மேலும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். 

இதில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படம் தனுஷின் 51ஆவது படமாக உருவாகிறது. படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பின்பு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பூஜை நடைபெற்றது. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.  

இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது. முதற்கட்டமாக திருப்பதியில் படப்பிடிப்பு நடந்தபோது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதால் பரபரப்பானது. மேலும் அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, படப்பிடிப்பிற்கு தடை விதிக்கக் கோரி பாஜகவினர் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து படப்பிடிப்பிற்காக வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வேறொரு இடத்தில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பும் மும்முரமாக நடந்து வருகிறது. 

இதனிடையே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் கடந்த மாதம் வெளியானது. குபேரா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த படக்குழு, டைட்டில் லுக் வீடியோவையும் வெளியிட்டது. போஸ்டரில் தனுஷ் முடி கலைந்து, தாடியுடன் அழுக்கான வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர் கர்மிகோண்டா நரேந்திரா என்பவர், தெலுங்கானா ஃபிலிம் சேம்பரில் ஏற்கனவே குபேரா என்ற தலைப்பை பதிவு செய்திருப்பதாகவும், அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தான் தலைப்பை பதிவு செய்த போதிலும் தனுஷ் நடிக்கும் படத்திற்கு தனது படத்தின் பெயரை சேகர் கம்முலா பயன்படுத்தியதாகவும், இது குறித்து தெலுங்கானா பிலிம் சேம்பரிடம் பேச முயற்சித்தும் சரியாக பதில் வரவில்லை என்றும் குற்றம் சாட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் சட்ட நடவடிக்கை மூலம் பிரச்சினையை தீர்க்க முயல்வதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
dhanush aishwarya divorce case update

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து 18 நவம்பர் 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். ஆனால் கடந்த 2022 ஜனவரி 17 அன்று இருவரும் பிரிய முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருந்தனர். இது திரையுலகில் பரபரப்பையும்,  ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.  

இதையடுத்து இருவரும் அறிவித்தது போல், தனித்தனியே வாழ்ந்து வந்தனர். மேலும் அவரவர் திரை பயணங்களில் கவனம் செலுத்தி வந்தனர். இவர்களது இரு மகன்களும் தனுஷ் பட விழா மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பட விழாவிலும் கலந்து கொண்டனர்.  

இந்தச் சூழலில் கடந்த 8ஆம் தேதி, இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 2004ல் நடைபெற்ற திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த மனு சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.சுபா தேவி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரத்த அவர், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அக்டோபர் 7ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தார்.