Skip to main content

"லட்ச லட்சமாக சம்பாரித்தேன், என் தாய் கேட்டதோ..." - இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி நினைவு

Published on 19/03/2019 | Edited on 24/03/2019

இசைஞானி இளையராஜா சமீபகாலமாக கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி வருகிறார். மாணவ மாணவிகளிடம் இசையின் முக்கியத்துவத்தை பற்றியும், அதன் வல்லமை பற்றியும், அவர் கடந்து வந்த பாதை குறித்தும் எடுத்துரைக்கிறார். மாணவர்களிடம் நாட்டுப்புற கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என கட்டாயமாக வலியுறுத்துகிறார். 
 

illayaraja

 

 

அந்த வகையில் சென்னை கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் இளையராஜா 75வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது இளையராஜாவிடம் உங்கள் அம்மாவின் சிறந்த பண்பாக எதை சொல்வீர்கள் என்று ஒரு மாணவி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இளையராஜா,  “என் தாயை போல வேறு எந்த தாயும் இல்லை. நானும் என் அண்ணனும் சென்னை கிளம்ப வேண்டும் என முடிவெடுத்தோம். அம்மாவிடம் சென்னை செல்வதற்கு பணம் தாருங்கள் என்று கேட்டோம். நாங்கள் சென்னை கிளம்புவதற்காக எங்கள் அம்மா வீட்டிலிருந்த விலை உயர்ந்த ரேடியோ பெட்டியை விற்றார்.  ரூ.800 விலையுள்ள ரேடியோ பெட்டியை வெறும் ரூ. 400க்கு விற்று, எங்களிடம் அந்த ரூ. 400 பணத்தையும் கொடுத்தார். அந்த சமயத்தில் வீட்டில் காசு பற்றாக்குறை இருந்தது. ஆனாலும் அவர் ரூ. 400 இல் தனக்கென பணம் எடுத்துகொண்டு எங்களிடம் தரவில்லை. முழு பணத்தையும் கொடுத்துவிட்டு, இது போதுமா? என்று எங்களிடம் கேட்டார். நாங்களும் அவரிடம் ஐம்பது ரூபாய் கூட அதிலிருந்து எடுத்துக் கொடுக்காமல், அந்த பணத்தை முழுதாக வாங்கி வந்துவிட்டோம். அவருக்கும் எங்களிடம் பணம் கேட்க வேண்டும் என்கிற உணர்வு இல்லை. இந்த பண்பை எந்த கல்லூரி கொடுத்துவிடும்! இதுதான் பண்பு. இதுதான் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியது. அது என் அம்மாவிடம் நிறையவே இருந்தது.


அப்படிப்பட்ட தாயை என் மனைவி கவனித்துகொண்டிருந்தபோதும், என் அம்மாவிற்காக லட்ச லட்சமாக சம்பாதித்துகொண்டிருந்த நேரத்தில்கூட அவருக்காக நான் சின்ன நகையோ, நல்லப் புடவையோ எதையுமே எடுத்துக் கொடுக்கவில்லை. அவரும் என்னிடம் கேட்டதுக்கூட இல்லை. 


ஒருமுறை என் அம்மா என்னிடம் வந்து கொஞ்சம் பணம் வேண்டுமேப்பா என்று தயங்கி தயங்கி கேட்டார். நான்கூட பெரிய தொகையாக கேட்க போகிறார்கள் போல என்று மனதிற்குள் நினைத்துகொண்டிருந்தேன். பின்னர், அவர் அவ்வளவு தயங்கி கேட்ட பணம் ரூ.2000 தான். ஆனால், நான் வேண்டும் என்றே அவரிடம் அவ்வளவா என்று பயமுறுத்தினேன். அம்மா உடனே நிறைய கேட்டுவிட்டேனாப்பா என்றார். இல்ல அம்மா என்று சிரித்துகொண்டே பணத்தை கொடுத்தேன். இதுபோல ஒரே ஒருமுறைதான் என்னிடம் அவர் கேட்டிருக்கிறார்.


இதனால் என் மனைவியை குறித்து அவர் ஒருமுறைக்கூட குறை சொல்லியதில்லை. நான் இருக்கும்போது எதற்கு உன் மனைவி வீட்டை பார்த்துக்கொள்கிறார். நானே பார்த்துக்கொள்கிறேன் என்று ஒருமுறை கூட சொல்லியதில்லை. அந்த பண்புதான் என் அம்மா. என் அம்மா உயிருடன் இருந்தபோதே, ஒரு படத்தில் அம்மா மறைந்ததற்கு டியூன் கேட்டார்கள். நான்  ‘உன்னபோல ஆத்தா, என்ன பெத்துபோட்டா’ என்ற பாடலுக்கு இசை அமைத்து, ரெகார்ட் செய்து அவர் உயிருடன் இருக்கும்போதே என் போட்டுக்காட்டினேன். அந்த பாடலை கேட்டு அவர் கண்ணில் கண்ணீராக கொட்டியது. இந்த மாதிரியான தாய் உலகத்தில் எங்கும் பார்க்க முடியாது” என்றார்.


இறுதியாக கல்லூரியில் சிறப்புரையை கேட்டுக்கொண்டிருந்த மாணவிகளை பார்த்து, “ மாணவிகளே நீங்கள் அனைவருமே எனக்கு தாய்தான். நீங்களும் ஒருநாள் தாயாக போகிறீர்கள் அல்லவா? ” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"மோடியே முன்வந்து இளையராஜாவை நியமித்திருக்கிறார்... அதனால் தமிழ்நாட்டில்..." - கவிஞர் முத்துலிங்கம்

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

muthulingam speech at sivaji ganesan book release function

 

நடிகர் சிவாஜி கணேசன் குறித்து மருது மோகன் என்பவர் 'சிவாஜி கணேசன்' என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று(18.12.2022) நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிவாஜிக்கு நெருக்கமானவர்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில் இசையமைப்பாளர் இளையராஜா  'சிவாஜி கணேசன்' புத்தகத்தை வெளியிட, சிவாஜி கணேசனின் மகன்களான ராம்குமார், பிரபு ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

 

நிகழ்ச்சியில் பேசிய முத்துலிங்கம், "ஒரு நடிகரைப் பற்றி இவ்வளவு ஆய்வு செய்து 1600 பக்கங்களில் ஒரு புத்தகத்தை எழுதியவர் இந்தியத் துணைக் கண்டத்தில் உலக வரலாற்றில் எவரும் கிடையாது மருது மோகன் மட்டும்தான்.  இந்த விழாவிற்கு இளையராஜாவை அழைக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார் மருது மோகன். அதற்காக மூன்று மாதம் காத்திருந்து இளையராஜாவிடம் தேதியைப் பெற்றிருக்கிறார். 

 

சிவாஜி பற்றி எல்லாருக்கும் தெரியும். தமிழ் சிறந்த மொழி என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்ல வேண்டும் என்றால் சிவாஜி படத்தைத் திரையிட்டுக் காண்பித்தால் போதும். தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்குக் கிடைத்த பெருமை வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. மத்திய அரசே, அதாவது மோடியே முன்வந்து மாநிலங்களவை உறுப்பினராகச் சேர்த்திருக்கிறார். இதை விட வேறு என்ன சிறப்பு வேண்டும். இதற்காகவே மோடி அவர்களை நான் பாராட்டுகிறேன். மத்திய அரசையும் போற்றுகிறேன். 

 

அதே நேரத்தில் மொழிக் கொள்கை என்று வரும்போது, என்னதான் செய்தாலும் திராவிட இயக்கங்கள் செல்வாக்கு பெற்றிருக்கிற காலம் வரையிலும் தாமரை கட்சி தமிழ்நாட்டில் தலை நிமிர முடியாது என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இளையராஜாவுக்கு இசைஞானி என்ற பட்டத்தை வழங்கியவர் கலைஞர்தான்." என்றார். மேலும் தொடர்ந்து இளையராஜாவைப் பற்றிப் புகழ்ந்து தள்ளினார் கவிஞர் முத்துலிங்கம். 

 

 

Next Story

23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் எவர்க்ரீன் கூட்டணி

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

after 23 years ilaiyaraja composing music for ramarajan movie samaniyan

 

80களில் 'எங்க ஊரு காவல்காரன்', 'கரகாட்டக்காரன்', 'தங்கமான ராசா' என பல ஹிட் படங்களைக் கொடுத்து டாப் ஹீரோவாக வலம் வந்தவர் ராமராஜன். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகிய ராமராஜன் தற்போது 'சாமானியன்' படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். இப்படத்தை ராகேஷ் இயக்க ராதாரவி மற்றும் எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மதியழகன் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. 

 

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராமராஜன் படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். இது தொடர்பாக இளையராஜாவை நேரில் சந்தித்துள்ளது படக்குழு. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

இவர்கள் கூட்டணியில் வெளியான 'செண்பகமே...செண்பகமே', 'சொர்கமே என்றாலும்...', 'மதுர மரிக்கொழுந்து...' உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும் ரசிகர்களின் பிளே லிஸ்டில் உள்ளது. அதிலும் சில பாடல்கள் ராமராஜன் குரலுக்கு இளையராஜாவின் குரல் அப்படியே பொருந்தியிருக்கும். இப்படி நீங்கா நினைவுகளாகப் பல பாடல்களைத் தந்த இந்த எவர் க்ரீன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.