![Alphonse Puthren](http://image.nakkheeran.in/cdn/farfuture/g4NISknEPrDXfj-OKVSCHhBWDTdzJThV9ipLJBAHBJ8/1621336283/sites/default/files/inline-images/50_12.jpg)
நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்தவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரேமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைடைந்த நிலையிலும், அல்போன்ஸ் புத்திரன் நீண்ட நாட்களாக எந்தப் படத்தையும் இயக்காமல் இருந்தார். இந்த நிலையில், அல்போன்ஸ் புத்திரன் அடுத்தாக 'பாட்டு' என்ற திரைப்படத்தை இயக்கவிருப்பதாகவும், அப்படத்தில் நடிகர் பகத் ஃபாசில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், அல்போன்ஸ் புத்திரனின் ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர் ஒருவர், நடிகர் ரஜினியை வைத்து படம் இயக்க கதை வைத்துள்ளீர்களா எனக் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்துள்ள அல்போன்ஸ் புத்திரன், "ரஜினி சாருக்குக் கதை வைத்திருக்கிறேன். ‘பிரேமம்’ படத்திற்குப் பிறகு அவரை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால், இதுவரை சந்திக்க இயலவில்லை. ரஜினி சாரை வைத்து நான் படம் இயக்க வேண்டும் என இருந்தால் அது நடந்தே தீரும். நாம் பாதி வேலை செய்துவிட்டால் மீதி வேலையைக் கடவுள் பார்த்துக்கொள்வார் என நம்பிக்கை உள்ளது. கடவுள் கரோனாவை அழிப்பதில் பிஸியாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதன்பிறகு திரும்பவும் முயற்சி செய்வேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.