![Alphonse Puthren protest in internet by not showing face for gold movie trolls](http://image.nakkheeran.in/cdn/farfuture/DvOE_FLabVNeO2EfEsq84wPSZS_XAa5EcneqLn2n70A/1674474204/sites/default/files/inline-images/17_69.jpg)
நேரம் படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். அப்படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய பிரேமம் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து பிரித்திவிராஜ் மற்றும் நயன்தாராவை வைத்து 'கோல்ட்' படத்தை இயக்கினார். கடந்த மாதம் இப்படம் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இதையடுத்து தற்போது அல்போன்ஸ் புத்திரன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் கோல்ட் படத்திற்கு தொடர் எதிர்விமர்சனங்கள் வருவதாகக் கூறி தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உங்கள் திருப்திக்கு என்னைப் பற்றியும், என் படத்தைப் பற்றியும் தொடர்ந்து கிண்டலடித்து வருகிறீர்கள் என்றால், அது உங்களுக்குத் தான் நல்லது. எனக்கு இல்லை. அதனால் எனது முகத்தை சமூக வலைத்தளத்தில் காட்டாமல் எதிர்ப்பை பதிவு செய்கிறேன்.
பொது இடத்தில் என்னைக் கேலி செய்யவோ அல்லது தவறாகப் பேசவோ நான் யாருக்கும் உரிமை கொடுக்கவில்லை. எனவே, என் படைப்புகள் பிடித்திருந்தால் பாருங்கள். அதற்காக என் வலைத்தள பக்கத்தில் உங்கள் கோபத்தைப் பதிவு செய்யாதீர்கள். அப்படிச் செய்தால், இணையத்தில் நான் இருக்க மாட்டேன். நான் முன்பு போல் இல்லை. நான் முதலில் எனக்கு உண்மையாக இருப்பேன். அதன் பிறகு தான் என் மனைவி மற்றும் குழந்தைகள். நான் கீழே விழுந்த போது உங்கள் முகத்தில் வந்த சிரிப்பை என்றும் மறக்க மாட்டேன். யாரும் வேண்டுமென்றே வீழ்வதில்லை. இயற்கையால் இது நடக்கிறது. எனவே, அதே இயற்கை என்னைக் காக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.