![Aishwarya rajinikanth directing film after 7 years](http://image.nakkheeran.in/cdn/farfuture/RiH8rgQhqap_gYPTbl-sxhZ8BPOeNm5Lol1v-hq3M0c/1650535348/sites/default/files/inline-images/334_7.jpg)
தனுஷுடனான விவாகரத்தை அறிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பயணி என்ற ஆல்பம் பாடலை இயக்கி வெளியிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்தி படம் ஒன்றை இயக்கவுள்ளார். ஏற்கனவே இவர் இயக்கத்தில் வெளியான ’3’, ’வை ராஜ வை’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'ஓ சாத்தி சால்' என்ற இந்திப் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் முதல் முறையாக பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். உண்மையான காதல் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கவுள்ளது.
இந்நிலையில் இத்தனை ஆண்டுகளாக ஏன் படத்தை இயக்கவில்லை என்ற காரணத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "வை ராஜா வை படம் இயக்கிய பிறகு தமிழ், தெலுங்கு இந்தி படங்களை இயக்க வாய்ப்புகள் வந்தது. ஆனால் எனது குழந்தைகள் சிறியவர்களாக இருந்ததாலும், அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டியதாலும் என்னால் படம் இயக்க முடியவில்லை. எனது குழந்தைகள் தற்போது வளர்ந்து விட்டதால் மீண்டும் படம் எடுக்க வந்துள்ளேன். இதனால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி" எனத் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்காலத்தில் ஹிருத்திக் ரோஷன், ரன்வீர் சிங் படங்களை இயக்க ஆர்வம் தெரிவித்துள்ளார்.