Skip to main content

காணாமல் போன பெண்; தலைமறைவான டாக்டரை பற்றி பதற வைக்கும் பின்னணி - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம் :75

Published on 11/09/2024 | Edited on 11/09/2024
thilagavathi ips rtd thadayam 75

இந்தியாவையே உலுக்கிய டாக்டர் டெத் என்று சொல்லக்கூடிய சீரியல் கில்லர் செய்த கொலை சம்பவங்களை பற்றி தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

மகாராஷ்டிரா மாநிலம், சத்தாரா மாவட்டம், வை எனும் ஊரில் சந்தோஷ் போல் என்பவர் வசித்து வந்தார். இவரை அந்த ஊரில் டாக்டர் என்று தான் அழைப்பார்கள். 15-06-2016ஆ, ஆண்டில், அங்கன்வாடியில் வேலை பார்க்கும் 49 வயதான மங்களா ஜேதா என்ற பெண்மணியை காணவில்லை என வை போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் வருகிறது. பூனேவில் இருக்கும் தனது மகளை பார்ப்பதற்காக தனது ஊரில் இருந்து கிளம்பிய மங்களா ஜேதா, அங்கு சேரவில்லை என்று தெரிந்துகொண்டு தான் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுக்கிறார். மங்களா ஜேதா இருந்த அசோஷியேசன் கொடுத்த அழுத்தத்தால், போலீசாரும் காணாமல் போன மங்களா ஜேதாவை தீவிரமாக தேடி விசாரிக்கின்றனர். 

மங்களா ஜேதா, கடைசியாக சந்தோஷ் போல் என்ற டாக்டரிடமும், அவருடன் இருந்த ஜோதி என்ற நர்ஸிடமும் பஸ் ஸ்டாண்டில் பேசியிருந்தை பார்த்ததாக சில பேர் போலீசாரிடம் சொல்கின்றனர். அந்த தகவலை வைத்து சந்தோஷ் போலிடம் விசாரிப்பதற்காக போலீசார் செல்கின்றனர். ஆனால், சந்தோஷும், ஜோதியும் அங்கு இல்லாததால் போலீசாருக்கு மேலும் சந்தேகம் ஏற்படுகிறது. இதற்கிடையில், மங்களா ஜேதாவினுடைய போன், பூனேவில் இருப்பதாக தகவல் வந்ததையடுத்து, போலீசார் அங்கு சென்று பார்க்கும் போது நர்ஸ் ஜோதி இருக்கிறார். ஜோதியை அழைத்து வந்து போலீசார் விசாரித்து தகவலை பெறுகின்றனர். அந்த தகவலை வைத்து சந்தோஷ் போல் பற்றி விசாரிக்கின்றனர். சந்தோஷ் போலின் அப்பா குலாப் ராவ், மும்பை பேருந்து நடத்துநராக பணிபுரிந்து வந்துள்ளார். சந்தோஷுக்கு ஒரு அக்காவும், ஒரு தம்பியும் இருக்கின்றனர். பேச்சுலர் ஆஃப் எலெக்ட்ரோபதி அண்ட் சர்ஜரி என்ற படிப்பை சந்தோஷ் படித்து, அந்த தகுதியை வைத்துக்கொண்டு அந்த ஊரில் வித்யாதர் என்பவர் நடத்தி வரும் ஹாஸ்பிட்டலில் வேலைக்கு சேருகிறார் என்று விசாரணையில் தெரிகிறது. இதையடுத்து, வித்யாதரிடம் போலீசார் விசாரிக்கையில், நன்றாக வேலை செய்த சந்தோஷ் போல், ஹாஸ்பிட்டலுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் அவரை வேலையில் இருந்து விலக்கி ஆம்புலன்ஸ் சர்வீஸ் அமைத்துகொடுத்ததாகவும், ஆனால், அந்த ஆம்புலன்ஸையும் சந்தோஷ் போல் திருடிச் சென்றுவிட்டதால் அவரை முழுமையாக நிறுத்திவிட்டதாகவும் போலீசார் நடத்திய விசாரணையில் வித்யாதர் சொன்னார். 

அதன் பின்னர், சந்தோஷ் போல், ஊர் ஊராக சென்று ஹாஸ்பிட்டல் போன்ற ஒரு செட்டப் அமைத்து அங்குள்ள கிராம மக்களுக்கு டீரிட்மெண்ட் செய்து வந்துள்ளார். கைராசியான மருத்துவர் என அவரை அங்குள்ள மக்கள் பாராட்டி தான் பேசுகின்றனர். அப்பா அம்மா இறந்ததற்கு பின்னால், அவர்களுடைய பூர்வீக இடமான தோம் என்ற இடத்தில் சந்தோஷ் போல் தன்னுடைய மனைவி, இரண்டு குழந்தைகளோடு தங்குகிறார். இது தவிர இவருக்கு, ஆர்.டி.ஐ ஆட்டிவிஸ்ட் என்ற பெயரும் அங்கு இருக்கிறது. காவல்துறையே பயப்படும் அளவுக்கு இவர் இருந்திருக்கிறார். 3 காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்பு துறையிடம் கொடுத்திருக்கிறார். இது மாதிரியாக 54 ஊழல் வழக்குகளை கண்டுபிடித்து கொடுத்திருக்கிறார். இதை சொல்லியே, மற்ற அதிகாரிகளை மிரட்டி பணம் வாங்கி வந்திருக்கிறார். 2015ஆம் ஆண்டில், சந்தோஷ் போல், அதிகாரிகளை மிரட்டி பணம் வாங்குகிறார் என்ற வழக்கே போலீஸ் ஸ்டேசனில் இருந்திருக்கிறது. காவல்துறையும் இவர் மீது பயப்பட்டதால், அந்த வழக்கை அவர்கள் கண்டுக்கொள்ளாமல் இருந்துவிட்டனர். வை என்ற ஊரில் இதற்கு முன்னாடி காணாமல் போன நபர்களை பற்றி விசாரிக்கும் போது கடைசியாக சந்தோஷ் போலிடம் தான் நிற்கும். அந்த வழக்குகளை விசாரிக்கும் அதிகாரிகள் மீதும் இவர் மிரட்டி பணம் வாங்கி வந்துள்ளார். இவர் செய்யும் அவ்வளவு வேலைகளும், அவருடன் இருந்த ஜோதி என்ற பெண்மணிக்கு தெரியும். 

அப்படியாக காணாமல் போன மங்களா, கடைசியாக சந்தோஷ் மற்றும் ஜோதியிடம் தான் பேசியிருக்கிறார்கள் என்பதை வைத்து தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர். இதனையடுத்து, 13-08-2016 அன்று சந்தோஷ் போலை, தாதர் என்ற இடத்தில் போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர். ஆரம்பத்தில், விசாரணைக்கு ஒத்துழைப்பு தராததால், அவரை கிடுக்குபிடி விசாரணை நடத்துகின்றனர். பூனேவில் இருக்கும் மகளின் பிரசவத்துக்கு உதவ வேண்டும் என்று மங்களா, சந்தோஷிடம் கூறி பஸ் ஸ்டாண்டில் சந்தோஷுக்காக காத்துக் கொண்டிருந்தார். அன்றைக்கு, தன்னால் பூனேவுக்கு வர முடியாது என்று சொல்லி, மங்களாவை ப்ரைன் வாஷ் செய்து சந்தோஷும், ஜோதியும் மங்களாவை சந்தோஷ் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு சென்ற சந்தோஷுக்கும், மங்களாவுக்கு கடுமையான வாக்குவாதம் வருகிறது. இவ்வழக்கு குறித்த மேலும் விவரங்களை அடுத்த தொடரில் காணலாம்..