Skip to main content

தென் ஆப்பிரிக்காவிலும் வெற்றியைத் தொடர்வாரா சூர்யகுமார்?

Published on 10/12/2023 | Edited on 11/12/2023
 T20 cricket match South Africa vs India score update

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் 4-1 என்று வெற்றி பெற்ற புத்துணர்ச்சியுடன் இந்திய அணி இந்த தொடரில் களமிறங்க உள்ளது. முதலில் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த டி20 தொடரின் முதல் ஆட்டம் இன்று தொடங்க உள்ளது. 

ரோஹித் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால், இந்த தொடரிலும் சூர்யகுமார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரவிந்திர ஜடேஜா அணிக்கு திரும்பியுள்ளார். அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கில் மற்றும் சிராஜ் ஆகியோரும் அணிக்கு திரும்பி உள்ளனர். கில்லும் அணிக்கு திரும்பி உள்ளதால் தொடக்க ஆட்டக்காரர்களாக யார் இரண்டு பேர் களமிறங்க போகிறார்கள் என்பது போட்டி தொடங்கும் முன்பே தெரிய வரும். பெரும்பாலும் யசஸ்வி மற்றும் கில் ஆகியோரே களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. ஸ்ரேயாஸ், ஜடேஜா, ரிங்கு சிங் ஆகியோருக்கே மிடில் ஆர்டரில் வாய்ப்பு கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. கீப்பராக இஷான் அல்லது ஜித்தேஷ் இருவரில் யாருக்கு முன்னுரிமை என்பதும் ரசிகர்களிடையே ஆவலைக் கூட்டி உள்ளது. பவுலிங்கைப் பொறுத்தவரை சிராஜ், முகேஷ், அர்ஸ்தீப், பிஷ்னோய் என்று களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை கேப்டன் மார்க்ரம் தலைமையில் களமிறங்க உள்ளது. டி காக் இல்லாத நிலையில், லுங்கி இங்கிடியும் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். மார்க்ரம், மில்லர், மஹராஜ், ஷம்சி, கிளாசென், பெலுக்வாயோ என அனுபவ வீரர்களும் புதிய இளம் வீரர்களும் என சரிசமமாக தென் ஆப்பிரிக்க அணி களமிறங்க உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 24 டி20 போட்டிகளில் எதிர்த்து விளையாடியுள்ளனர். இதில் இந்திய அணி 13 முறையும், தென் ஆப்பிரிக்க அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவு கிடைக்காமல் முடிந்துள்ளது. இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் ஒரு டி 20 போட்டியாக இரண்டு முறையும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒரு முறையும் என மூன்று முறை தொடரைக் கைப்பற்றியுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி ஒரு முறை தொடரைக் கைப்பற்றியுள்ளது. 

இந்நிலையில் உலககோப்பை டி20 தொடருக்கு ரோஹித் மற்றும் கோலி தேர்வு செய்யப்படுவார்களா என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் ரோஹித், கோலி ஃபார்மை பொறுத்தே தேர்வு செய்யப்படுவார்கள் என்கிற கருத்தும் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில், தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் இந்த தொடரில் வீரர்களின் செயல்பாடு உலகக்கோப்பை அணியின் தேர்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் உள்ள கிங்ஸ்மெட் மைதானத்தில் இன்று முதல் டி20 நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்க உள்ளது.

- வெ.அருண்குமார்

சார்ந்த செய்திகள்

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.