Skip to main content

மாஸ் பேட்டிங், சூப்பர் கேப்டன்ஷிப்... ஒரு போட்டி, பல சாதனைகள்... கலக்கும் ரோஹித் ஷர்மா

Published on 07/11/2018 | Edited on 07/11/2018

2018-ஆம் ஆண்டு ரோஹித் ஷர்மாவின் கிரிக்கெட் வாழ்வில் மிகசிறந்த ஆண்டுகளில் ஒன்று. இதற்கு முந்தைய ஆண்டுகளில் பேட்டிங்கில் சிறப்பாக ஆடி இருந்தாலும், இந்த வருடம் மாஸ் பேட்டிங் உடன் சேர்த்து கிடைத்த கேப்டன்ஷிப் பொறுப்பிலும் அசத்தி இருக்கிறார். ரோஹித் இந்த ஆண்டில் கேப்டனாக இருந்த 5 ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆண்டு 8 டி20 போட்டிகளில் ரோஹித் கேப்டனாக இருந்துள்ளார். இதில் 7 வெற்றிகளை கண்டுள்ளது. 

 

rr

 

 

விராட் கோலியின் ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் அணுகுமுறைக்கு முற்றிலும் நேர்மாறான அணுகுமுறை கொண்டவர் ரோஹித். பெரும்பாலும் கூலான அணுகுமுறையை கொண்டு அணியை வெற்றிக்கு அழைத்து செல்பவர் ரோஹித். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் கேப்டனாக இருந்து 3 முறை ஐபி.ல். கோப்பையை பெற்று கொடுத்துள்ளார். அந்த அனுபவம் அவருக்கு மிகவும் உதவுகிறது. பவுலிங் மாற்றங்களை மிகவும் சிறப்பாக செய்கிறார். 

 

அணி இக்கட்டான நிலையில் உள்ளபோது கூல் அணுகுமுறையுடன் ரோஹித் முடிவு எடுக்கும் திறன் சிறப்பான ஒன்று. இதுவரை 11 டி20 போட்டிகளுக்கு இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ளார். இதில் 10 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதேபோல 8 ஒரு நாள் போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்று தந்துள்ளார். கேப்டனாக உள்ளபோது பேட்டிங் பாதிக்கப்படும் என்பற்கு முற்றிலும் மாறானவர்  ரோஹித். கேப்டனாக அதிக பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பெற செய்கிறார்.

 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 61 பந்துகளில் 8 பவுண்டரிகள், 7  சிக்ஸர்கள் உட்பட  111 ரன்கள் குவித்தார். போட்டியின்போது வர்ணனையாளர்கள், பந்து பேட்டிற்கு சரியாக வருவதில்லை எனவும், மிகவும் பெரிய அளவில் பேட்டிங்க்கு சாதகமானது இல்லை என்றும் கூறினார்கள். ஆனால் மற்ற வீரர்கள் ரன் எடுக்க தடுமாறிய போது அந்த மைதானத்திலும் அசத்தினார் ரோஹித். இந்தப் போட்டியில் பல்வேறு உலக சாதனைகளை புரிந்தார் ரோஹித். அதிக ரன்கள் எடுத்த வார்னர்-வாட்சன் இணையின் 1154 ரன்கள் சாதனையை முறியடித்தது ரோஹித்-தவான் இணை. நேற்று 123 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் எடுத்ததன் மூலம் 1268 ரன்கள் எடுத்து உலகின் நம்பர் 1 பார்ட்னர்ஷிப்பாக உள்ளது ரோஹித்-தவான் இணை. 

 

rr

 

 

இரண்டாவது டி20 போட்டியில் சதம் அடித்ததன் மூலம் உலகில் முதல் முறையாக சர்வதேச டி20-யில் 4 சதம் அடித்தவர் என்ற பெருமையை பெற்றார் ரோஹித். இவருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்து  வீரர் காலின் முன்ரோ 3 சதம் அடித்துள்ளார். டி20-யில் கேப்டனாக இருந்து 2 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார் ரோஹித்.

 

சமீபத்தில் நடந்து முடிந்த ஒரு நாள் தொடரில் பல சிக்சர்களை விளாசி, ஒரு நாள் போட்டிகளில் 200 சிக்சர்கள் என்ற மைல்கல்லை தாண்டினார். தற்போது 2-வது டி20-யில் 7 சிக்சர்கள் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 96 சிக்சர்கள் அடித்து இரண்டாவது இடத்தில் ரோஹித் உள்ளார். பிரன்டன் மெக்கல்லமின் 91 சிக்சர்கள் சாதனையை முறியடித்தார். 103 சிக்சர்களுடன் மார்டின் குப்தில், க்ரிஸ் கெயில் ஆகியோர் முதல் இடத்தில் உள்ளனர்.

 

2102 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலியின் சாதனையை முறியடித்து இந்தியாவின் அதிக டி20 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை அடைந்தார். இதுவரை 78 இன்னிங்ஸ்களில் 15 அரை சதம், 4 சதம் உட்பட 2203 ரன்களை விளாசியுள்ளார். உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் மார்டின் குப்தில் 2271 ரன்களுடன் உள்ளார். இன்னும் 68 ரன்கள் எடுத்தால் அந்த சாதனையையும் ரோஹித் முறியடிப்பார்.


 

Next Story

“ரோஹித்துக்கு பிறகு இந்திய அணிக்கு கேப்டனாக இவரே தகுதியானவர்” - ஹர்பஜன் சிங் கருத்து

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

ஐபிஎல் 2024 இன் 38 வது லீக் ஆட்டம் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று (22-04-24) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பாண்டியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்த அணியில் புதிதாக துஷாரா, நெகல் வதீரா சேர்க்கப்பட்டனர்.

மும்பை அணிக்கு தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் இஷான் களமிறங்கினர். ரோஹித் 6 ரன்களிலும், இஷான் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். பின்னர், வந்த முகமது நபி 23 ரன்கள் அடித்து ஓரளவு கை கொடுக்க, அதன் பிறகு திலக் வர்மாவும், நெகல் வதீராவும் பார்ட்னர்ஷிப் அமைத்து 99 ரன்கள் சேர்த்தனர். இதன் காரணமாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் சிறப்பாக வந்து வீசிய சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

பின்னர், 180 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. பட்லரும், ஜெயிஸ்வாலும் இணைந்து அதிரடியாக ஆடத் தொடங்கினர். சிறப்பாக ஆடிய பட்லர் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர், வந்த கேப்டன் சஞ்சு சாம்சனுடன் உடன் இணைந்து ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடத் தொடங்கினார். மும்பை அணியின் பந்துவீச்சை பதம் பார்த்த அவர், 60 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். அவருக்கு துணை நின்ற கேப்டன் சஞ்சு சாம்சங், 38 ரன்கள் எடுத்தார். 18. 4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்த ராஜஸ்தான் அணி 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் ஜெய்ஸ்வாலுக்கு இது ஐ.பி.எல்.லில் இரண்டாவது சதம் ஆகும். இந்த இரண்டு சதங்களும் மும்பை அணிக்கு எதிராக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 14 புள்ளிகள் பெற்று தர வரிசை பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

இதற்கிடையில், இந்திய உலகக் கோப்பை டி 20 அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். உலகக் கோப்பை டி20 அணிக்கு ரோஹித் கேப்டனாக செயல்பட இருக்கிறார். இந்த உலகக் கோப்பை டி20க்குப் பிறகு ரோஹித் டி20 விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், இந்திய அணியின் டி20 அணிக்கு யார் கேப்டனாக வருவார் என்ற பேச்சு எழுந்தும் வருகிறது. இடையில் பாண்டியா டி20 அணிக்கு கேப்டனாக சில போட்டிகளுக்கு நியமிக்கப்பட்டார். ஆனால், தற்போது கேப்டனாக அவரின் செயல்பாடுகள் மற்றும் வீரராக அவரின் செயல்பாடுகள் மந்தமாக உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், காயத்தால் அடிக்கடி அவதிப்படுகிறார் என்பதாலும் இந்திய அணிக்கு வேறு கேப்டனை தேர்வு செய்ய பி.சி.சி.ஐ யோசிப்பதாக கூறப்படுகிறது.

Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

இந்த நிலையில், தற்போது இந்திய அணிக்கு அடுத்து யாரை டி20 கேப்டனாக நியமிக்கலாம் என்று ஹர்பஜன்சிங் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே பார்ம் என்பது தற்காலிகம் தான். அவரின் திறமை தான் நிரந்தரம். மேலும், இந்திய டி20 அணிக்கு சஞ்சு சாம்சனை நிச்சயம் எடுக்க வேண்டும். மேலும் இந்திய அணிக்கு ரோஹித்துக்குப் பிறகு டி20 அணிக்கு கேப்டனாக சஞ்சு சாம்சனை வளர்த்தெடுக்க வேண்டும்” என்றார். இது சரிதான் என்கிற வகையில் ரசிகர்களும் அவருடைய பதிவில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

RCB vs SRH: ஒன் மேன் ஷோ காட்டிய தினேஷ் கார்த்திக்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Dinesh Karthik who showed one man show!

40 ஓவர்கள் 549 ரன்கள்.. கிரிக்கெட் வரலாற்றில் பந்து வீச்சாளர்கள் வாழ்க்கையில் மறக்க நினைக்கும் நாளாகவும், பேட்ஸ்மேன்கள் வாழ்க்கையில் பசுமையான நினைவுகளாக மனதில் நிறுத்தும் நாளாகவும் ஏப்ரல் 15 இருக்கும் என்றால் அது மிகையாகாது.

ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவால் 434 அடிக்கப்பட்ட போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தூங்கச் சென்று விட்டனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் அந்த 434 ஐயும் துரத்திப் பிடித்து வரலாறு படைத்தனர், தென் ஆப்பிரிக்க அணியினர். முக்கியமாக கிப்ஸின் ஆட்டமானது கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று.

அந்த ஆட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆட்டம். கிப்ஸ் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு கிடைத்த வெற்றி போல ஆர்.சி.பிக்கும் கிடைக்க வேண்டியது. ஆனால் மிடில் ஆர்டர் சொதப்பலால் வெற்றிக்கனியின் அருகில் போய் தவறவிட்டுள்ளது ஆர்.சி.பி.

ஐபிஎல்2024 இன் 30ஆவது லீக் ஆட்டம் பெஙகளூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஏன் பவுலிங்கை தேர்வு செய்தோம் என்று நினைக்கும் அளவுக்கு ஹைதராபாத் அணி பேட்டிங் இருந்தது. ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் தங்களது அலட்சியமான அதிரடியால் எதிரணி பவுலர்களை நிலைகுலைய வைத்தனர்.

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியர்களின் தூக்கத்தைக் கெடுத்த ஹெட், நேற்று பெங்களூரு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தார். ஒரு மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக பார்க்கப்பட்ட ஹெட், இப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 40 பந்துகளி சத்தைக் கடந்தார். கடந்த சில ஆட்டங்களாகவே ஃபயர் மோடில் இருக்கும் கிளாசன், ஹெட்டின் அதிரடிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 31 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்தார். மார்க்ரமும் தான் எதிர்கொண்ட பந்துகளை மைதானத்தில் சுழல விட்டு 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

இவர்களின் அதிரடியை அலேக்காக தூக்கி சாப்பிட்டார் அப்து சமத். 10 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஹைதராபாத் முந்தைய சாதனையான 277 ஐ முறியடித்து 287 ரன்கள் எனும் புதிய வரலாற்றைப் பதித்தது. பெங்களூரு சார்பில் பந்து வீசிய அனைவரின் எகானமியும் 10.00 க்கு மேல் இருந்தது.

பின்னர் 288 என்ற வரலாற்று இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு மோசமான தோல்விதானோ என்று ரசிகர்கள் அஞ்சிய வேளையில், நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று கோலி மற்றும் டு பிளசிஸ் அதிரடி காட்டினர். கோலி 20 பந்துகளில் 42, டு பிளசிஸ் 28 பந்துகளில் 62 என ரன் ரேட்டை அதிகரித்து இலக்கைத் துரத்தினாலும் அடுத்து வந்த இளம் வீரர்கள் வில் ஜேக்ஸ் 7, பட்டிதார் 9, செளகான் 0 என ஏமாற்றினர்.

பின்னர் வந்த பினிஷர் கார்த்திக், அதிரடியின் உச்சம் காட்டினார் என்று சொன்னால் அது மிகையாகாது. நடராஜன் பந்தில் அடித்த ஒரு இமாலய சிக்சர் 108 மீட்டர் எனும் புதிய உச்சத்தை ஐபிஎல் 2024இல் எட்டியது. 7 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். அனுஜ் ராவத்தும் 14 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். வரலாற்று வெற்றியாக இருந்திருக்க வேண்டிய ஆட்டம் மிடில் ஆர்டர் சொதப்பியதால், வெற்றிக்கு அருகே வந்து கை நழுவியது. 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியைத் தழுவியது.

பெங்களூரு தோல்வியைத் தழுவினாலும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி பேட்டிங் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. மும்பை அணியுடனான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிய போது ரோஹித், தினேஷ் கார்த்திக்கை கிண்டல் செய்யும் வகையில் உலகக்கோப்பை தேர்வு உள்ளது என்றார். தற்போது உண்மையிலேயே உலகக்கோப்பை அணிக்கு தன்னை தேர்வாளர்கள் உற்றுநோக்கும் வகையில் ஒரு இன்னிங்சை ஆடியுள்ளார் டி.கே என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.