Skip to main content

நான்காவது டெஸ்டில் வெற்றிபெற செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள்!

Published on 29/08/2018 | Edited on 29/08/2018
India

 

 

 

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு விளையாடி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் 1 - 2 என்ற கணக்கில் இருக்கிறது இந்திய அணி. நாளை சவுத்தாம்டனில் நடக்கவிருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டிதான், தொடரின் போக்கை தீர்மானிக்க இருக்கிறது. ஒருவேளை இந்தியா வென்றால் ஐந்தாவது போட்டிதான் தொடரை வெல்வது யார் என்பதைத் தீர்மானிக்கும். அதேபோல், இங்கிலாந்து வெற்றிபெற்றால் தொடரையும் கைப்பற்றி, ஐந்தாவது போட்டியில் கூலாக களமிறங்க முடியும். 
 

அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில், இந்திய அணி கண்டிப்பாக வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்றால், இந்த மூன்று விஷயங்கள் கண்டிப்பாக நடக்கவேண்டும். 
 

டாப் ஆர்டர் நிதானம்

இதுவரை நடந்துள்ள மூன்று போட்டிகளில் இந்திய அணியின் டாப் ஆர்டர் எந்தளவுக்கு மோசமாக விளையாடியது என்பதைப் பார்த்திருக்கிறோம். குறிப்பாக முதல் இரண்டு போட்டிகளில் டாப் ஆர்டரின் நிதானமற்ற ஆட்டத்தால், மொத்த அணிக்கும் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், மூன்றாவது டெஸ்டில் ராகுல், தவான் இணை அந்த நிலையைக் கொஞ்சம் மாற்றியது. அதோடு சேர்த்து சதீஸ்வர் புஜாராவின் ஆட்டமும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களுக்கும் நம்பிக்கை அளித்தது. 
 

 

 

எனவே, குறைந்தபட்சம் 150 ரன்களைக் கடக்கும் அளவுக்கு இந்த மூன்று பேர் அடங்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் விளையாட வேண்டும். அடுத்துவரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களுக்கு இந்த ரன்கள் நிச்சயம் தோள்கொடுக்கும். 
 

அஸ்வின் ஆட்டம்
 

முதல் இன்னிங்ஸில் அஸ்வின் விக்கெட் எடுத்தே ஆகவேண்டும். நாட்டிங்காம் பிட்சில் டாஸ் வெல்வது பற்றி நாம் ஏற்கெனவே பேசியிருந்தது போல, இரண்டாவது இன்னிங்ஸ் கண்டிப்பாக சுழற்பந்துக்கு சாதகமாக மாறும். அதனால், முதல் இன்னிங்ஸில் அஸ்வின் தனது ஆட்டத்தை முழுமையாக வெளிப்படுத்தினால், இங்கிலாந்து வீரர்களைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். மூன்றாவது போட்டியில் அஸ்வின் விக்கெட்டே எடுக்காமல் போனதை இந்த இடத்தில் நினைவுகூரலாம். 
 

 

 

ஸ்லிப் கேட்சுகளின் முக்கியத்துவம்
 

டெஸ்ட் போட்டிகளில்தான் அதிகளவிலான எட்ஜ் கேட்சுகளைப் பார்க்கமுடியும். இந்திய அணியின் ஸ்லிப் ஏரியா மிக மோசமாக இருப்பதாக, முந்தைய காலங்களில் விவாதமே ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், இளம் வீரர்கள் வந்தபிறகு அந்த நிலை கொஞ்சம் மாறியது. முந்தைய போட்டியில் கே.எல்.ராகுல் ஸ்லிப் பொசிஷனில் ஆறு கேட்ச்களைப் பிடித்தது இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது. எனவே, ஸ்லிப் கேட்சுகளில் வீரர்கள் தனி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.
 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; “சென்னையின் மைந்தன்” - தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu Accomplished by cricket player Ashwin

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு வாழ்த்துகள். சாதனைகளை முறியடித்து கனவுகளை நனவாக்கியவர் சென்னையின் மைந்தன் அஸ்வின். அவரின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது. இது உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது. அவரது மாயாஜால பந்துவீச்சு, 500வது விக்கெட்டை கைப்பற்ற உதவியுள்ளது. அவர் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.