Skip to main content

ஐ.பி.எல் இளம் வீரர்களுக்கானதா..? எண்ணத்தை மாற்றியமைத்த மாஸ்டர் ப்ளாஸ்டர் - கோல்டன் கிரிக்கெட்டர்ஸ் #1

Published on 31/10/2020 | Edited on 24/04/2021

 

ipl

 

மும்பையில் ஒரு குடியிருப்பு வளாகம். இரண்டு கட்டிடங்களுக்கு இடையே கிரிக்கெட். நேராக அடித்தால்தான் நான்கு ரன்கள் கிடைக்கும் என்பதால், ஒரு சிறுவன் பந்தை தரையோடு தரையாக பவுலரை தாண்டியே ட்ரைவ் ஆடிக்கொண்டிருக்கிறான். களம் மாறுகிறது. 'ரஞ்சி ட்ரோபி'யில் அதே போல் ஒரு ட்ரைவ், அந்த ஸ்ட்ரெயிட் டிரைவ்தான், அன்றைய போட்டியைப் பார்த்தவர்கள் அன்று முழுவதும் பேசிய 'ஹாட் டாபிக்'. பேசவைத்தவர் சச்சின் டெண்டுல்கர்.

 

நான் என்னுடைய மாநில 'ரஞ்சி' அணியில் இடம்பெற போராடிக் கொண்டிருக்கும்போது சச்சின் உலகின் அதிவேக ஆடுகளத்தில் சதம் அடித்துக் கொண்டிருந்தார் என்றார் டிராவிட். மற்றவீரர்கள் மாநில அணிக்கு ஆட காத்திருந்தபோது, இந்தச் சிறுவன் எப்போது ஆட்டமிழப்பான், நாம் போட்டியை வெல்லலாம் என எதிரணியைக் காக்கவைத்தவர் சச்சின். பெர்த்தில் அவரின் முதல் சதத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மெர்வ் ஹியூஸ், இந்தச் சிறுவன் உன்னைவிட அதிக ரன்களை குவிக்கப் போகிறான் என்று தனது கேப்டன் ஆலன் பார்டரிடம் கூறினார். அப்போது பார்டர் தான் டெஸ்ட்களில் அதிக ரன்கள் குவித்திருந்தவர். அப்போதே வயதுக்கு மிஞ்சிய திறமையோடு ஆடினார் சச்சின். 

 

முதல் டெஸ்ட் தொடரிலேயே மூக்கில் அடிவாங்கியதாலோ என்னவோ எப்போதும் வேகப்பந்து வீச்சுக்குப் பணிந்ததில்லை சச்சின். இந்திய பேட்ஸ்மேன்களில் வேகப்பந்து வீச்சை இந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தியவர்கள் யாருமில்லை எனப் புகழ்ந்தார் டிராவிட். அந்தளவிற்கு வேகப்பந்து வீச்சைப் பந்தாடியவர் சச்சின். 'பிரெட் லீ', 'மெக்ராத்', 'அக்தர்' என அவர் காலத்தின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனம் அவர்தான். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமல்ல, சுழற்பந்து வீச்சையும் சச்சின் என்றும் விட்டதில்லை. உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் 'முரளிதரனா', 'வார்னேவா' என்பது வேண்டுமானால் பெரிய விவாதமாக இருக்கலாம். ஆனால், தங்களை எதிர்த்து ஆடியதில் சிறந்த வீரர் யார் என்பதில் இருவருக்கும் எந்த விவாதமும் இல்லை. இருவருமே தங்கள் காலத்தின் சிறந்தவர் சச்சின் என பலமுறை கூறியுள்ளார்கள். சச்சினின் இருபத்தைந்தாவது பிறந்தநாளில், அவரது பேட் வார்னேவின் சுழலைச் சுழற்றி அடிக்க, நான் தூங்கும்போது கூட எனது கனவில் சச்சின் 'சிக்ஸர்' அடிப்பதுதான் நினைவுக்கு வரும் எனக் குறிப்பிட்டார் வார்னே. 

 

கிரிக்கெட் வீரர்களுக்கு முப்பது வயது தாண்டினாலே எப்போது ஓய்வு எனக் கேட்கத் தொடங்கிவிடுவார்கள். 35 வயது தொட்டால் என்றைக்கு ஓய்வை அறிவிக்கப் போகிறீர்கள் என வீரர்கள் சொல்லும் முன்பே, மற்றவர்கள் 'வழியனுப்பு விழா'வைத் தொடங்கிவிடுவார்கள். ஆனால், சச்சின் 35 வயதுக்கு மேல் செய்த சாதனைகள் பல. ஒருநாள் போட்டியில் இரட்டை சதம், டெஸ்ட்களில் அதிக ரன்கள் என்ற லாராவின் சாதனையைத் தகர்த்தது என வயது ஒரு நம்பர்தான் என்பதை நடைமுறையில் செய்து காட்டியவர் சச்சின். ஐ.பி.எல் இளம் வீரர்களுக்கானது என்ற எண்ணம் இருந்த காலத்தில், இது இளம் வீரர்களுக்கானது என்றால் நானும் 35 வயதைக் கடந்த இளைஞர்தான் என 37 வயதில் ஆரஞ்ச் கேப், 38 வயதில் சதம் என அதிலும் ஆடிக்காட்டியவர் சச்சின். சச்சின் தனது நாற்பது வயதில் ஓய்வை அறிவித்தார். இறுதியாக ஒரு சர்வதேச தொடரில் மட்டும் விளையாடி விடை பெற்றிருக்கலாம். ஆனால் அதற்கு முன்பு ரஞ்சியில் மும்பைக்கு ஆடி அந்த அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றார் சச்சின். அந்த வயதிலும் எத்தனையோ சாதனைகள் புரிந்த பின்பும், உள்ளூர் போட்டிகளில் விளையாடத் தயங்கியதில்லை. கிரிக்கெட் மீதான காதல் அவரிடம் குறைந்ததில்லை. 

 

nkn

 

சச்சின் ஓய்வை அறிவித்த சிலகாலத்திலேயே மக்கள் அவரை மறந்து விடுவார்கள் எனக் கூறினார் பாகிஸ்தான் வீரர் ஜாவீத் மியாந்தத். ஆனால், அவரின் ஓய்வுக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஏழு வருடம் கழித்து, ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நடந்த ஒரு தொடரில், சச்சின் விளையாடிய, ஒரே ஒரு ஓவர், அடுத்த சில நாட்களுக்கு ட்ரெண்டிங்கில் இருந்து மறையவில்லை. ஒரு ஓவர் ஆடியதே சமூக வலைதள ட்ரெண்டிங்கில் இருந்து மறையாதபோது கால் நூற்றாண்டாக இந்தியாவுக்கு ஆடியவர் மக்கள் மனதில் இருந்து மறைவாரா? நிச்சயம் இல்லை. என்றும் அவர் சாதனைப் பட்டியலிலும் மக்கள் மனதிலும் கிரிக்கெட்டின் மறுபெயராக நிலைத்திருப்பார்...

 

 

சேட்ட பய சார் இந்த சேவாக்... கோல்டன் கிரிக்கெட்டர்ஸ் #2

 

Next Story

சென்னைக்கு மீண்டும் தோல்வி; தனி ஒருவனாக வெற்றியைத் தேடித்தந்த ஸ்டாய்னிஸ்!

Published on 23/04/2024 | Edited on 24/04/2024
Chennai super kings again lost to Lucknow team

ஐபிஎல் 2024இன் 39 ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ரகானேவும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரகானே 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து வந்த டாரியல் மிட்செல் 11 ரன்களும் ஜடேஜா 17 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை சென்னை அணியினர் எடுத்தனர்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டி காக்கும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். 3 பந்துகளில் ரன் எடுக்காமல் குவிண்டன் டி காக் ஆட்டம் இழக்க, அவரைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மறுமுனையில் 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த படிக்கல் 19 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நின்று அபாரமாக, ஆடி 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஸ்டாய்னிஸ் லக்னோ அணியை வெற்றி பெறச் செய்தார். லக்னோ அணி இறுதியாக 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றியைத் தனதாக்கிக்கொண்டனர். கடந்த போட்டியிலும் லக்னோ அணி சென்னை அணியை தோற்கடித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் சென்னை அணியை லக்னோ அணி தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

“ரோஹித்துக்கு பிறகு இந்திய அணிக்கு கேப்டனாக இவரே தகுதியானவர்” - ஹர்பஜன் சிங் கருத்து

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

ஐபிஎல் 2024 இன் 38 வது லீக் ஆட்டம் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று (22-04-24) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பாண்டியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்த அணியில் புதிதாக துஷாரா, நெகல் வதீரா சேர்க்கப்பட்டனர்.

மும்பை அணிக்கு தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் இஷான் களமிறங்கினர். ரோஹித் 6 ரன்களிலும், இஷான் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். பின்னர், வந்த முகமது நபி 23 ரன்கள் அடித்து ஓரளவு கை கொடுக்க, அதன் பிறகு திலக் வர்மாவும், நெகல் வதீராவும் பார்ட்னர்ஷிப் அமைத்து 99 ரன்கள் சேர்த்தனர். இதன் காரணமாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் சிறப்பாக வந்து வீசிய சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

பின்னர், 180 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. பட்லரும், ஜெயிஸ்வாலும் இணைந்து அதிரடியாக ஆடத் தொடங்கினர். சிறப்பாக ஆடிய பட்லர் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர், வந்த கேப்டன் சஞ்சு சாம்சனுடன் உடன் இணைந்து ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடத் தொடங்கினார். மும்பை அணியின் பந்துவீச்சை பதம் பார்த்த அவர், 60 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். அவருக்கு துணை நின்ற கேப்டன் சஞ்சு சாம்சங், 38 ரன்கள் எடுத்தார். 18. 4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்த ராஜஸ்தான் அணி 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் ஜெய்ஸ்வாலுக்கு இது ஐ.பி.எல்.லில் இரண்டாவது சதம் ஆகும். இந்த இரண்டு சதங்களும் மும்பை அணிக்கு எதிராக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 14 புள்ளிகள் பெற்று தர வரிசை பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

இதற்கிடையில், இந்திய உலகக் கோப்பை டி 20 அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். உலகக் கோப்பை டி20 அணிக்கு ரோஹித் கேப்டனாக செயல்பட இருக்கிறார். இந்த உலகக் கோப்பை டி20க்குப் பிறகு ரோஹித் டி20 விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், இந்திய அணியின் டி20 அணிக்கு யார் கேப்டனாக வருவார் என்ற பேச்சு எழுந்தும் வருகிறது. இடையில் பாண்டியா டி20 அணிக்கு கேப்டனாக சில போட்டிகளுக்கு நியமிக்கப்பட்டார். ஆனால், தற்போது கேப்டனாக அவரின் செயல்பாடுகள் மற்றும் வீரராக அவரின் செயல்பாடுகள் மந்தமாக உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், காயத்தால் அடிக்கடி அவதிப்படுகிறார் என்பதாலும் இந்திய அணிக்கு வேறு கேப்டனை தேர்வு செய்ய பி.சி.சி.ஐ யோசிப்பதாக கூறப்படுகிறது.

Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

இந்த நிலையில், தற்போது இந்திய அணிக்கு அடுத்து யாரை டி20 கேப்டனாக நியமிக்கலாம் என்று ஹர்பஜன்சிங் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே பார்ம் என்பது தற்காலிகம் தான். அவரின் திறமை தான் நிரந்தரம். மேலும், இந்திய டி20 அணிக்கு சஞ்சு சாம்சனை நிச்சயம் எடுக்க வேண்டும். மேலும் இந்திய அணிக்கு ரோஹித்துக்குப் பிறகு டி20 அணிக்கு கேப்டனாக சஞ்சு சாம்சனை வளர்த்தெடுக்க வேண்டும்” என்றார். இது சரிதான் என்கிற வகையில் ரசிகர்களும் அவருடைய பதிவில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.