Skip to main content

கோபத்தைத் தூண்டும் கிரகங்கள்!

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் சராசரி மனிதன் தன் அன்றாட வாழ்க்கையை நடத்துவதென்பது கடினமாக உள்ளது. அதுமட்டுமின்றி வேலைக்காகவும் மற்ற விஷயங்களுக்காகவும் நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. சைக்கிளில் சென்றவர் பைக்கில் செல்கிறார். பைக்கில் சென்றவர் காரில் செல்கிறார். நடைப்பயணம் மேற்கொண்டவர் ஆட்டோவில் பயணிக்கிறார். பொருளாதார நெருக்கடி எனக்கூறிவிட்டு, வாழ்க்கைத்தர உயர்வைக் கூறுகிறேன் என எண்ண வேண்டாம். நேரத்தை மிச்சப்படுத்த, உரிய நேரத்தில் நினைத்த இடத்திற்குச் சென்றடையத்தான் இந்த மாற்றங்கள்.
 

god

தற்போதுள்ள சூழ்நிலைகளில் வாகனங்களின் சத்தமும், அவற்றால் உண்டாகும் மாசுக்களும் மூச்சையே நிறுத்திவிடும்போல இருக்கிறது. யார் எங்கு செல்கிறார்கள்- எதற்காகப் பயணிக்கிறார்கள் என ஒன்றுமே புரியவில்லை. அதுமட்டுமின்றி காலையில் வீட்டைவிட்டுக் கிளம்பும் ஒருவர் நல்லபடியாக வீடுவந்து சேர்ந்தால்தான் அன்றைய தினம் உண்மையாக வாழ்ந்ததற்கு அடையாளமாக இருக்கிறது. எத்தனை விபத்துகள்- எத்தனை உடலுறுப்புகளை இழக்க வேண்டிய சூழ்நிலைகள்... என்ன கொடுமையிது என நினைத்து மனம் பதைக்கத்தான் செய்கிறது. அதிகமாக கோபப்படக்கூடிய ஒருவரிடம் நெருங்கிப்பழகவோ, நட்பு வைத்துக் கொள்ளவோ யாரும் விரும்புவதில்லை. இப்படிப்பட்ட குணநலன்கள் அமைவதற்கு ஒருவரின் ஜாதகத்தில் பாவ கிரகங்களின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதே காரணமாக இருக்கும். ஒருவரின் குணாதிசயங்களைப் பற்றி அறிவதற்கு அவரின் ஜென்ம லக்னமாகிய ஒன்றாம் பாவம் உதவுகிறது. லக்னம் பாவ கிரகங்களால் பாதிக்கப்பட்டால் கோபம் அதிகமாக வரும். நவகிரகங்களில் பாவ கிரகங்கள் என குறிப்பிடப்படுபவை சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது ஆகியவையாகும்.

ஒருவரின் ஜாதகத்தில் பாவ கிரகங்களுக்கு சுபகிரகங்களின் பார்வை இருந்தால் கோபம் இருந்தாலும் நல்ல குணமும் இருக்கும். அதிகாரம் செய்யக்கூடிய ஆற்றலைத் தரும். சூரியனின் ராசியான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கும், சூரியன் ஜென்ம லக்னத்தில் அமையப் பெற்றவர்களுக்கும், சூரிய தசை நடப்பவர்களுக்கும் மேற்கூறிய பலன்கள் பொருந்தும். சூரியன் பாவிகளின் சேர்க்கைப் பெற்று ஜென்ம ராசி மற்றும் லக்னத்தில் பலமிழந்திருந்தால், தேவையில்லாமல் கோபப்படும் நிலை, மற்றவர்களுடன் சண்டை போடக்கூடிய அவலநிலை, சமுதாயத்தில் கெட்ட பெயர். கௌரவக் குறைவு போன்றவை உண்டாகும்.

navakiragam god

ஜென்ம லக்னத்தில் பாவிகள் சேர்க்கை மற்றும் பார்வையுடன் செவ்வாய் அமையப்பெற்றிருந்தால் கோபம் அதிகம் வரும். அதன் தசாபுக்திக்காலங்களில் தேவையற்ற சிக்கல்களையும், சண்டை, சச்சரவுகளையும் சந்திக்க நேரிடும். அதுவே செவ்வாய் பலமாக அமைந்து சுபர் சேர்க்கை, பார்வையுடன் இருந்தாலோ, 10-ஆம் வீட்டில் பலமாக அமையப்பெற்றாலோ- கோபம் கொண்டவ ராகவும், அதிகாரம் செய்யக் கூடியவராகவும் இருந்தாலும் சிறந்த நிர்வாகத்திறமையும் அதிகாரப் பதவிகளை வகிக்கும் ஆற்றலும் இருக்கும். சனியின் ஆதிக்க ராசிகளான மகர, கும்ப ராசிகளில் பிறந்தவர்களுக்கு ஒரு மாறுபட்ட குணாதிசயம் இருக்கும். இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கும், சனி ஜென்ம லக்னத்தில் அமையப் பெற்றவர்களுக்கும், சனி சுபர் சேர்க்கை பெற்றிருந்தால் கோபமிருந்தாலும் நியாயவாதியாகவும், குணசாலியாகவும் காரியவாதியாகவும் இருப்பர். சனி பாவகிரகச் சேர்க்கைப்பெற்று ஜென்ம லக்னத்தில் அமைந்தால் முரட்டுத்தனம், பிடிவாத குணம், தவறான செயல்களில் ஈடுபடக்கூடிய அமைப்பு உண்டாகும். அதிலும் சனி, ராகு 10-ஆம் வீட்டில் அமையப்பெற்று, சனியின் தசாபுக்தி நடைபெற்றால் சட்டவிரோத செயல்களைச் செய்யக்கூடிய நிலை உண்டாகும்.

நவகிரகங்களின் கோபத்திற்கு அதிக காரணகர்த்தா யாரென்று பார்த்தால் ராகுதான். ஜென்ம லக்னம் அல்லது ஜென்ம ராசியில் ராகு அமையப் பெற்றால் அதிகம் கோபப்படக்கூடிய குணம் இருக்கும். முரட்டுத்தனம், ஆணவ குணம், அசட்டு தைரியம், அகங்கார குணம் யாவும் உண்டாகும். சுபர் பார்வை, சேர்க்கை பெற்றாலும், ராகு நின்ற வீட்டு அதிபதி சுபராக இருந்தாலும் காரியத்தில் கண்ணாக செயல்படும் அமைப்பு, பல்வேறு வகையில் வாழ்வில் உயர்வுகளை சந்திக்கக்கூடிய யோகம் உண்டாகும். பாவகிரகச் சேர்க்கை பெற்றாலும், ராகு நின்ற வீட்டு அதிபதி அசுபராக இருந்தாலும் அதிக முரட்டுத் தனம், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடக்கூடிய அமைப்பு, தன்னிலை மறந்து செயல்படும் சூழ்நிலை, பல தவறான செயல்களில் ஈடுபடும் நிலை உண்டாகும். கேது ஞானகாரகன் என்பதால் எதிலும் நிதானமாகச் செயல்படும் அமைப்பு உண்டாகும். சுபர் சேர்க்கை பெற்றிருந்தால் ஆன்மிக, தெய்வீகக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். அதுவே கேது, சனி அல்லது சந்திரன் சேர்க்கை பெற்றால் தேவையற்ற மனக்குழப்பங்களால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

ஒருவரது குணநலன்களை அவர்கள் பேசும் விதத்தைக்கொண்டு தெரிந்து கொள்ள முடியும். பேச்சுத்திறனைப்பற்றி அறிய உதவுவது 2-ஆம் பாவமாகும். 2-ஆம் பாவத்தில் சூரியன், செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் இருந்தால் பேச்சில் அதிகார குணமும், சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் இருந்தால் பேச்சில் வேகமும், மனதைப் புண்படுத்தக்கூடிய அளவுக்குப் பேசும் குணமும் உண்டாகும். மனிதராய்ப் பிறந்த நாம் முடிந்தவரை கோபத்தைக் குறைத்துக் கொள்வதும், மற்றவர் மனதைப் புண்படுத்தாமல் நடந்துகொள்வதும் நல்லது. உரிய தியானங்கள், தெய்வப்பரிகாரங்கள் ஆகியவற்றை மேற்கொண்டு கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டால் எல்லாம் நன்மையே.

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.