Skip to main content

பற்றி எரியும் வங்கதேசம்; இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Students struggle against quota in Bangladesh

வங்கதேசம் - பாகிஸ்தான் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணியில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதற்கு  வங்கதேசம் முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மாணவர்களின் போராட்டத்திற்குப் பிறகு அந்த இட ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வங்கதேசத்தில் மீண்டும் போரில் உயிரிழந்தவர்களில் குடும்பத்தினருக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது நடைமுறைப்படுத்தப்படும் என அந்நாட்டின் அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  இது தொடர்பான வழக்கு அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

இந்த நிலையில், இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதே சமயம் ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர்கள் அமைப்பினர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த போராட்டத்தில் மாணவர்களுக்கும், காவலர்களுக்கும் வன்முறை வெடித்துள்ளது. இதில் மாணவர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Students struggle against quota in Bangladesh

வன்முறையைக் கட்டுப்படுத்தும் வகையில், வங்கதேசம் முழுவதும் பல்கலைக்கழங்கள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து விடுதிகளையும் மாணவர்கள் காலி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டாக்கா உள்ளிட்ட வங்கதேசத்தின் முக்கிய நகரங்களில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பெரும் பதற்றமான சூழல் நாடு முழுவதும் நிலவி வருவதால், இந்தியர்கள் அத்தியாவசிய தேவைகளைத் தவிர, மற்றவற்றிற்கு  யாரும் வெளியே வரவேண்டாம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அவசர உதவி எண்களையும் வெளியிட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்